திங்கள், 2 ஏப்ரல், 2012

சோலைக்குயிலின் சோக கீதம்!




மாலை மயங்கும் நேரமது
    மஞ்சள் குளித்த வானத்தில்
வேலை முடித்தக் கதிரவனோ
   வீடு தேடிப் புறப்பட்டான்.
பாலை வனமாய்க் காய்ந்திருந்த
   பாச நெஞ்சை நெகிழவைத்தச்   
சோலை குயிலின் கானத்தால்
   சொக்கி நுழைந்தேன் சோலைக்குள்!

ஏற்றம் கொண்ட குரலினிலே
    இதயம் வருடும் மெல்லிசையாய்
காற்றில் கரைந்த குயிலோசைக்
    காதில் புகுந்து எனைமயக்க
ஊற்றின் குளிரின் இதமென்று
    உட்கார்ந் திருந்த வேலையிலே
சீற்றம் கொண்ட கருங்குயிலோ
    சினந்து என்னை முறைத்தனென்னை!

சோக கீதம் பாடுகிறேன்
    சுகமாய் அதைநீ ரசிப்பாயா?“
வேக மாகக் கேட்டதென்னை !
    வெறித்தே அதனை நோக்கினேன்நான்!
தாகம் கொண்ட பாபொருளைத்
    தமிழில் சொல்வேன் கேள்அதைநீ!“
ஏக வசத்தில் சொல்லியதை
    எடுத்து கவியில் எழுதுகிறேன்!

சீதை இருந்த தீவதுதான்!
    சீரும் சிறப்பாய் வாழ்ந்தோமே!
கீதை வழியில் நிலம்கேட்க
    கீழோர்க் குணத்தைக் கண்டாமே!
போதைக் கொண்டு போர்புரிய
    பேதைப் பெண்கள் என்செய்வோம்!
பாதை முழுதும் குண்டிருக்கப்
    பதுங்கு குழியில் இருந்துவந்தோம்!

கொஞ்சம் கூட இரக்கமின்றிக்
    குஞ்சு மூப்பு பாராமல்
அஞ்சி நின்ற அனைவரையும்
    அழித்தார் அந்த அரக்கர்கள்.
கெஞ்சி அழுத பெண்ணினத்தைக்
    கெடுத்து மேலும் அழவைத்தார்.
மிஞ்சி இருந்த உயிர்காக்க
    மேலை நாட்டிற்(கு) ஓடிவந்தோம்.

உண்டும் உறங்கி வாழ்ந்தயிடம்
    உயிர்கள் துடித்தக் கொலைக்களமாய்  
குண்டு பொழியும் நிலமெல்லாம்
    குருதி பாயும் வயல்வெலியாய்
வண்டு பாடும் சோலையெல்லாம்
    வாசம் நாறும் பிணக்கிடங்காய்க்
கண்டு மனமோ துடித்தாலும்
    கனத்தை இரக்கும் இடமேது?“

என்று நானோ பாடுகிறேன்!
    இனிக்கும் சுவையா இதிலுள்ளது?“
என்றே கேட்ட கருங்குயிலின்
    ஏக்கம் எனக்கு புரிகிறது!
என்ன சொல்லி என்னபயன்?
    எல்லாம் இழந்தும் நின்றாலும்
என்றும் எனதே எனநினைக்கும்
    எழுச்சி அவருள் வேண்டுமன்றோ!!

4 கருத்துகள்:

  1. //உண்டும் உறங்கி வாழ்ந்தயிடம்
    உயிர்கள் துடித்தக் கொலைக்களமாய்
    குண்டு பொழியும் நிலமெல்லாம்
    குருதி பாயும் வயல்வெலியாய்
    வண்டு பாடும் சோலையெல்லாம்
    வாசம் நாறும் பிணக்கிடங்காய்க்
    கண்டு மனமோ துடித்தாலும்
    கனத்தை இரக்கும் இடமேது?//

    குயில் பாட்டில்
    ஈழத்தின் வாழ்க்கை

    எழுச்சியுடன் போராடுவோம்
    இந்த நிலையை மாற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும்
      எழுச்சியுட்டும் கருத்துரைக்கும்
      மிக்க நன்றிங்க செய்தாலி.

      நீக்கு
  2. மகாகவியின் குயில்பாட்டு போல
    உணர்வுகளை அள்ளித் தெளித்திருக்கும்
    அழகிய கவிதை நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் மகேந்திரன் அவர்களே
      உங்கள் முதல் வருகைக்கும்
      வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு