திங்கள், 12 அக்டோபர், 2020

காதல் வந்தது பொய்மையோ!

 


கண்கள் மின்னிடும் கன்னிப் பார்வையில்
    காந்த சக்திதான் உள்ளதோ!
எண்ணம் துள்ளிட ஏக்கம் சேர்ந்திட
    இன்னல் பூத்துடன் ஈர்க்குதே!
விண்ணில் சுற்றிடும் வெப்பச் சூரியன்
    விஞ்சிப் பார்வையில் வந்ததோ!
மண்ணில் என்னுடல் மங்கித் தொங்கிட
    வண்ணம் பெற்றுடன் வேர்க்குதே!
 
கன்னம் என்பது கன்னல் சாற்றினில்
    கட்டிப் போட்டஓர் அங்கமோ!
மின்னும் பற்களில் மேன்மை வெண்ணிலா
    மெச்சி அவ்விடம் நின்றதோ!
தென்னங் கீற்றெனத் தீண்டுங் கூந்தலில்
    திங்கள் பூவெனப் பூத்ததோ!
பொன்னில் தட்டிய பொத்தல் பொற்சிலை
    பொங்கிப் பொன்னுடல் பெற்றதோ!
 
சுற்றி வந்தவள் சுற்ற வைத்தது
    சொக்கும் கட்டுடல் பெற்றதோ!
உற்று நோக்கிய ஊழ்மை என்னிலை
    உந்தித் தள்ளிய உச்சமோ!
முற்றும் போக்கிய முத்தி யற்றதால்
   முந்தி நின்றதே உண்மையோ!
கற்றுப் பெற்றதைக் காற்றில் விட்டிடக்
   காதல் வந்தது பொய்மையோ!
.
பாவலர் அருணா செல்வம்
12.10.2020

1 கருத்து: