வியாழன், 30 ஏப்ரல், 2020

கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு!



(இசைப்பாடல்)
.
(எடுப்பு)
கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு - எனைக்
கண்டதும் முகமூடிப் போவதேன் விட்டு!
.
(தொடுப்பு)
பொன்னான பொழுதினில் தொடர்ந்திட்டப்
பொலிவான காலங்கள் நினைவில்லையோ!
அன்றாடிய இனிமையை எடுத்தோத
அழகான தமிழிலே சொல்லில்லையோ!
.
எண்ணத்தில் உருவான இனிமையை
எழுதிய அடியெல்லாம் கவியில்லையோ!
அன்பாக அதைக்கூட்டிப் பாடிட
அருளான நெஞ்சிலே இடமில்லையோ!
.
துள்ளாமல் வளர்ந்திட்ட காதலால்
துணிவாகக் கரம்பிடித்த உறவில்லையோ!
தள்ளாத வயதாகி விட்டதனால்
தளர்வாயில் சொல்லுரைக்கப் பல்லில்லையோ!
.
என்னென்றும் ஏதென்றும் அறியாமல்
இளமையினைப் பேசுதல் சரியில்லையோ!
உன்னுயிர் இங்கிருப்பதை உள்ளாடும்
உணர்வெலாம் உன்மனதைக் கொல்லலையோ!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2020

1 கருத்து: