புதன், 24 டிசம்பர், 2014

சின்னக் குடிலில் சூரியன்!!



கன்னி மரியாள் வயிற்றினிலே
    கருவாய் உருவாய் ஆகிவந்தே
மண்ணில் போற்றும் மாமணியாய்
    மாலைப் பொழுதில் உதிப்பாயே!
விண்ணில் வாழும் தெய்வம்நீ
    மண்ணில் வந்து பிறப்பதைநான்
கன்னித் தமிழில் பாட்டெழுதிக்
    கவிதை படைத்து மகிழ்கின்றேன்!

நெஞ்சம் காய்ந்த மக்களெல்லாம்
    நீதி எதையும் மறந்துவிட்டார்!
கொஞ்சம் கூட இரக்கமின்றிக்
    கொள்கை மறந்து திரிகின்றார்!
பஞ்சம் இன்றிப் பணமிருந்தும்
    பாதை மாறி போகின்றார்!
நஞ்சை நனைத்த வார்த்தையினால்
    நன்றாய்ப் பேசி மகிழ்கின்றார்!

என்னே வாழ்க்கை இதுவென்றே
    ஏங்கித் தவிக்கும் நல்லவர்க்கு
முன்னே உள்ள நல்வழிகள்
    முள்ளால் மூடி உள்ளதென்று
கண்ணை நன்றாய்த் திறந்துவைத்துக்
    கருணை மனத்துள் கொண்டுநட
என்றே சொல்லி வழிநடத்த
    இறையே வந்து பிறப்பாயே!

துன்பம் எல்லாம் அகன்றுவிடத்
    தூய்மை மனத்தில் பதிந்துவிட
இன்பம் இல்லில் நிறைந்துவிட
    இனிமை பொங்கி ஒளிபரப்ப
பொன்னாய் வாழ்க்கை வாழ்ந்தாலும்
    போற்றும் வழியைக் காட்டிடவே
சின்னக் குடிலில் சூரியனாய்ச்
    சிந்தை மகிழப் பிறப்பாயே!!

அருணா செல்வம்.

25.12.2009

13 கருத்துகள்:

  1. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு


  2. வணக்கம்!

    சின்னக் குடிலுக்குள் தேவன் பிறந்திட்டான்!
    கன்னல் தமிழில் கவிபடிப்போம்! - மன்னும்
    துயா்நீங்கும்! துாய செயல்ஓங்கும்! உற்ற
    உயிர்ஓங்கும் என்றே உணர்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை பாராட்டுக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

    பதிலளிநீக்கு
  4. பொல்லாதவர்களைச் சாடியதோடு, நல்லவர்களுக்கு நல்வழி காட்டுமாறு இறைவனை வேண்டுகிறீர்கள். உங்களுக்கென்று எதுவும் கேட்கவில்லை.

    நீங்கள் நல்ல மனதுடன் படைத்த மிக நல்ல கவிதைகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
  5. அருமை! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான கிறிஸ்மஸ் தினச்
    சிறப்புக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
    இனிய கிறிஸ்மஸ்தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை.
    இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் தோழி !

    கன்னி மரியாள் அருள்புரிவாள்
    கருணை மழையாம் கவிகண்டு !
    மண்ணில் தவழும் துயரனைத்தும்
    மறையும் ஒருநாள் கலங்காதே
    எண்ணில் அடங்கா வலியுற்றோம்
    எனினும் அவளே மருந்தாவாள்
    பண்ணில் வடித்த பொருள்கண்டு
    பணிந்தேன் அருமை எனநானும் !

    பதிலளிநீக்கு
  9. கவிதை அருமை சகோதரி! தாமதாமாக வருவதற்கு மன்னிக்கவும்! வேலைப்பளு, குறும்பட வேலைப்பளு அதனால்தான்...

    பதிலளிநீக்கு