திங்கள், 3 டிசம்பர், 2012

சின்ன வீடு!! (நிமிடக்கதை)



     
 “மணி... உங்கிட்ட என்ன சொன்னேன்...? ஐயாவை ஆபிசில் இறக்கியதும் உடனே வீட்டுக்கு வான்னு தானே சோன்னேன். ஆபிசிலிருந்து வர உனக்கு ரெண்டு மணிநேரமா...?“ பானுமதி கோபத்தில் கார் ஓட்டுநரிடம் கத்தினாள்.
    “ஐயாவை இறக்கிவிட்டு வர்ற வழியில திருத்தாண்டவர் கோயில் கிட்ட ஒரு ஆக்ஸிடென்டுமா. டிராபிக் ரொம்ப ஆயிடுச்சி... அதனால தான்ம்மா லேட்...“ என்றான் மணி பவ்வியமாக.
   “திருத்தாண்டவர் கோயிலா...? அது வானவில் நகர் கிட்டல்ல இருக்குது...?“
    “ஆமாம்மா... ஐயாவை அங்கத்தான் இறக்கினேன்...“ என்று சொன்னவன் சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டு உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
     பானுமதி யோசனையுடன் தொலைபேசியை எடுத்துக் கணவரின் ஆபிஸ் எண்களைச் சுற்றினாள்.
    எதிர் முனையில் அவரின் பி.ஏ. விடம் கேட்க “சார் இங்க வரலைம்மா. அவர் இப்பொழுதெல்லாம் ஆபிசுக்கே வர்றதில்லை. நேரா அந்த வானவில் நகர் வீட்டுக்குப் போயிடுறார். ஏதாவது அவசரம் என்றால் மட்டும் இங்க வந்து தலையைக் காட்டுறார். இந்த வயசுல இன்னும் எதுக்குமா இதெல்லாம்...?“ என்றார் பி.ஏ.
    அதிர்ச்சியுன் முகம் வெளுத்து அருகில் இருந்த தன் தோழி வாணியைப் பார்த்தாள். “நான் தான் சொன்னேனே... உன் வீட்டு வண்டியை அடிக்கடி அந்தப் பக்கம் பார்த்தேன் என்று... நீ தான் நம்பவில்லை... நீ இப்போவாவது டிரைவரை அழைச்சி மிரட்டிக் கேளு...என்றாள். அவள் முகத்தில் ஒருவித பெருமிதம் படர்ந்தது.
     தன் கணவரைப்பற்றி அடுத்தவர் எதிரில் கேட்பதா...? பானுமதி முகத்தில் இருள் படர்ந்ததையும் மறைத்து “அவருக்கு அங்கே ஏதாவது வேலையாக இருக்கும்...“ என்றாள்.
    “க்கும்... இருக்கும். இருக்கும்...! எப்படியாவது போ...“ என்று சற்று கேவலமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னவள்..“சரி சரி... வா மணியாகிறது “ என்று சொல்ல இருவரும் கிளம்பி போனார்கள்.

    பானுமதிக்கு இறுப்புக்கொள்ளாமல் வழியிலேயே வாணியை அவள் வீட்டில் விட்டு விட்டு வந்ததும் மணியிடம் கேட்டாள். “ஐயாவை எவ்வளவு நாளா அங்க இறக்கிவிடுறே...?“
   மணி நெலிந்தான்... பிறகு பொறுமையாக  “வந்தும்மா... எனக்கு தெரியாம்மா... என்றான்.
   “என்ன ... தெரியாதா...? உங்கப்பா டிரைவரா இருந்த வரைக்கும் அவர் என்னிடம் ஒரு பொய் கூட சொன்னது இல்லை.... நீ என்னென்னா... இப்படி பேசுற... ம்... இருக்கட்டும். வீட்டிற்குப் போனதும் வண்டி சாவியை எங்கிட்ட கொடுத்துட்டு வேற எங்கையாவது வேலைக்குப் போ.“ என்றாள் பானுமதி கோபமாக.
    ஐயோ அம்மா... என்னம்மா நீங்க போய் இப்படி பேசுறீங்க... ஐயா தான் உங்க கிட்ட இது பற்றி சொல்லக்கூடாது என்றார்.“ என்றான்.
    “வேற என்ன சொல்லக்கூடாது என்றார் உன்ஐயா...கோபத்தைக் கட்டுப்படுத்தினாள். அவன் பேசாமல் கார் ஓட்டினான்.
    “சரி எவ்வளவு நாளா நடக்கிறது இந்த வேலை...?“
    “அது ஒரு ஆறேழு மாசம் இருக்கும்மா.... அது மட்டும் இல்லைம்மா... இன்னும் ரெண்டு மாசத்துல அங்கேயே போய் தங்கிட போவதாக ஐயா சொன்னார்ம்மா...“ என்றான் மணி தனக்குத் தெரிந்ததை.
    பானுமதி தலையில் இடியே விழுந்தது போல் இருந்தது. வீட்டில் நுழைந்ததும் நேரே தன் அறைக்குள் நுழைந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
   
   அறைக்குள் நுழைந்த அவள் கணவன் “என்ன பானு... உடம்பு சரியில்லையா...?“ என்று அவள் நெற்றியைத் தொட சட்டென்று கோபத்துடன் அவன் கையைத் தள்ளிவிட்டு ஆவேசமாக எழுந்து அமர்ந்தாள்.. தென்னவன் புரியாமல் விழித்தான்.
   “சொல்லுங்க... நான் உங்களைக் கல்யாணம் பண்ணிய இந்த முப்பது வருஷத்துல ஏதாவது குறை வச்சேனா...?
     “நீ குறை வச்சியா...? என்ன பேசுற...? எனக்கு ஒன்னும் புரியலை...“ என்றான் நெற்றியைச் சுறுக்கியபடி தென்னவன்.
    “நெஜமாலுமே புரியலையா...? சரி நேராகவே கேட்குறேன். எதுக்காக அந்த வானவில் நகர் வீட்டிற்குப் போறீங்க...?“
     அவன் முகத்தில் அதிர்ச்சி! “உனக்கு எப்படி இது தெரியும்...?“ இழுத்தான்.
    “ஏன்... எனக்குத் தெரியாமலே போயிடும்ன்னு நெனச்சிங்களா...?“
     “அது வந்து பானு... உங்கிட்ட பொறுமையா சொல்லி உன்னைச் சமாதானப்படுத்திட்டு போகலாம்ன்னு இருந்தேன்.“
    அவன் சொன்னதும் முட்டிக்கொண்டு வந்த கண்ணீர் கன்னத்தில் வழிய சத்தம் வராமல் அழுதாள். அவன் மனம் அவள் கண்ணீரில் கரைந்து விட்டது.
    “சரிம்மா... உனக்கு அந்த வீடு பிடிக்கலைன்னா இங்கேயே இருந்திடலாம். இதுக்காக இப்படி அழனுமா...?“ என்று அன்புடன் அவள் தலையை வருடியபடிச் சொன்னக் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
    “நீங்க என்ன சொல்லுறீங்க...?“   
    “இந்த வீடு ரொம்ப பழைய வீடு. ஆனால் நம்ம முன்னோர் வாழ்ந்த வீடு என்று நீ இந்த வீட்டைவிட்டு வரமாட்டேன்னு எனக்குத் தெரியும். அதனால தான் அந்த வீட்டைக் கட்டி முடிச்சதும் உன்னை நேராக அழைச்சிக்கினு போய் காட்டினால் நீ புது வீட்டிலேயே இருக்க சம்மதிப்பேன்னு தான் எல்லா வேலையும் முடிச்சிட்டு சொல்லலாம் என்று இருந்தேன். அதற்குள் உனக்கு தெரிஞ்சிடுச்சி.“ என்றான் சற்றுக் கவலையாக.
    பானுமதி, தன் கணவன் சொன்னதைக் கேட்டதும் இப்படிப்பட்ட நல்லவரையா சந்தேகித்தோம் என்று தன்னைத் தானே நொந்துக்கொண்டு மன்னிப்பு வேண்டுவதுபோல் தன் கணவன் மார்பில் சாய்ந்தாள்.


அருணா செல்வம்.
    

32 கருத்துகள்:

  1. கதையை நல்லா விறுவிறுப்பாகக் கொண்டுபோய் கடைசியில் டிவிஸ்டு கொடுத்து, சுபமாக முடிச்சிட்டீங்க. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  2. இறுதியில் எதிர்பார்த்த ஒரு முடிவுதான்....
    ரசித்தேன் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன வீடு என்றதும்.... சிறிய வீட்டை மட்டும் நினைத்த உங்கள் ஆத்மா உயர்ந்தது சிட்டுக்குருவியின் ஆத்மா.
      நன்றி.

      நீக்கு
  3. அட நல்லா இருக்கு.. ஒவ்வொரு நாளும் வித்தியாசமா யோசிக்கிறிங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப கஷ்டப்பட்டு யோசித்து எழுதியும்
      மற்றவர்களின் யோசனைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை ஹாரி..
      நன்றி.

      நீக்கு
  4. சொல்லிச் சென்ற விதம் அருமை
    நிமிடக் கதைகள் மனம் கவருகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  5. அட அட......நல்லாவே ஜிந்திகிரீங்களே...சபாஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிந்திக்கிறது தான் எனக்கு வேலையே மனசாட்சி முத்தரசு.
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. முடித்த விதம் சிறப்பு. பெண்ணுக்கு பின் புத்தி என்பதை அழுத்தமா சொன்ன மாதிரி இருக்கோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... இதைத் தான் பின் புத்தி என்பதா...? நான் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்...

      நன்றி சசிகலா.

      நீக்கு
  7. முடிவை முன்னமே கணிக்க முடிந்தாலும் நல்ல கதை ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு

  8. நிமிடக் கதை முதலில் சின்னவீட்டுக் கதையோ என்று நினைக்க வைத்தது. நன்றாயிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்படி தாங்க நினைத்து எழுதினேன். கடைசியில் சிலர் கண்டுபிடித்து விட்டார்களாம்...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. நல்லா இருக்கு! ஆனா முடிவு முதல்லேயே ஊகிச்சிட்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... நான் இன்னும் சஸ்பென்சா சொல்லி இருக்கனும்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  11. கதை நன்றாக இருக்கிறது, அருணா. வித்தியாசமான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  12. நறுக்கென்று முடித்த விதம் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அரசன்.

      நீக்கு
  13. நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை . இவர் இரண்டாம் மனைவி என்பதாக நகைச்சுவையாக முடிப்பீர்களென நினைத்தேன். வித்தியாசம்தான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் முடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் பானுமதி பாவமாகத் தெரிந்தாள்.
      முடிவை மாற்றிவிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  14. குட்டிக் கதைகளுக்குள் இப்படி த்ரில் கொண்டு வருவது அசத்தல்....எல்லாராலும் முடியாது.வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  15. எதிர்பார்த்த முடிவு! ஆனால் சுவரிசயமான நடை! வாழ்த்துக்கள்

    http://www.thottarayaswamy.net/archives/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு