வெள்ளி, 25 நவம்பர், 2022

திரையிசைப் பாடலில் “நேரொன்றாசியத் தளை“!

 



.
     திரையிசைப் பாடலில் “நேரொன்றாசியத் தளை“ யின் இலக்கணத்தில் வந்த அழகிய பாடல் இந்தப் பாடல்.
    நேரொன்றாசியத் தளை என்பது நேர் முன் நேர் வருவதாகும். ஆனால் இப்பாடலில் வெகு சில இடங்களில் நிரை அசை அருகி வந்திருந்தாலும் பாடலின் இசையில் எந்தக் குறையும் தெரியவில்லை.
.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள (கண்ணன்)
.
தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக் கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன (கண்ணன்)
.
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சைச் சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம் (கண்ணன்)
.
பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
படம் வெண்ணிற ஆடை (1965)

செவ்வாய், 15 நவம்பர், 2022

பெண்ணின் உள்மனப் பேறு !

 


(கலிவிருத்தம்)

.
அன்பாய் பேசிய அன்றைய நினைவெல்லாம்
இன்றும் நெஞ்சினுள் இருந்தே இனித்திருக்கும்!
துன்பப் பொழுது தோழியர்ச் சூழ்ந்துவர
நின்று போயிடும் நெகிழ்ந்த கனவலைகள்!
.
சொல்லச் சொக்கிடும் சுவையாய்க் கவிகளையும்
மெல்லப் பேசிடும் மென்மொழி இனிமையையும்
நல்ல நேரமும் நிறைந்து கிடைத்தாலும்
மல்லுக் கட்டிடும் மனத்தைக் குழப்பிவிடும்!
.
கற்றோர் காட்டிய காலமெ னும்நிகழ்வோ
உற்றுக் கடக்கும் ஊழ்வினை என்றரிந்து
பற்று வைத்தலே படைப்பின் நிறைவென்றே
முற்றும் அன்பினால் முயன்று நெகிழ்ந்துவிடும்!
.
பெண்ணின் உள்மனப் பேற்றினைக் கண்டவளின்
கண்கள் நோக்கிடக் கவிகள் பிறந்துவிடும்!
வண்ணங் கூட்டிடும் வடிவில் கலந்துவிட்டால்
எண்ணந் தீட்டிடும் இதயம் இனிதுறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2022

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

தீபாவளி வாழ்த்து!

 



.
பட்டாசின் ஒளியில் மின்ன,
     பலகாரச் சுவையைத் தின்ன,
பட்டாடை கட்டிக் கொள்ள,
   பகட்டாக உள்ளஞ் செல்ல,
ஒட்டாத உறவுஞ் சேர
     ஒன்றாக தீபா வளியை
இட்டாட வேண்டும் என்றே
     இன்போடு வாழ்த்து கின்றேன்!
.
தோழ தோழியர் அனைவருக்கும் என்
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
24.10.2022

 
(அனைவருக்கும் பலகாரம் அனுப்பி இருக்கிறேன்.
“சும்மா“ எடுத்துச் சாப்பிட்டு மகிழுங்கள்)

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

மயூர வெண்பா!

 


.

அமுது கொடுக்கும் அழகும் அறிவும்  8
குமுத மலர்போல் குளிர்ந்து கமழ்ந்தும்  8
வரைந்து வகுக்கும் வளமை புரிந்தும்  7
விரைந்தறிவார் நம்மொழியுள் வீழ்ந்து!  10
.
பாவலர் அருணா செல்வம்
02.08.2022

 
(மற்ற அடிகளைவிட ஈற்றடி எழுத்துக்கள் மிக்கு வரவேண்டும். புள்ளியும், ஆய்தமும், குற்றுகரமும் நீக்கி எழுத்தெண்ண வேண்டும்.(குற்றுகரம் என்பது கு சு டு து பு று ஆகும்)


சனி, 23 ஜூலை, 2022

தாப்பிசைப் பொருள்கோள் வெண்பா!

 


குற்றமும் இல்லை! குறையும் இதிலில்லை!
முற்றும் அறிய முடியாது! - நற்றமிழில்
கற்றோர் களிப்படைவார்! காதல் உணர்வறிவார்!
பற்றுடையோர் காண்பார் பயன்!

.
பாவலர் அருணா செல்வம்
24.07.2022

வியாழன், 21 ஜூலை, 2022

விற்பூட்டுப் பொருள்கோள் வெண்பா !

 


குடியுயர்த்தும் போதை குலமழிக்கும் நேர்மை
படியளக்கும் பொய்மை பகைவளர்க்கும் சான்றோர்
வழியுயர்த்தும் தீமை மதியழிக்கும் வாய்மை
அழியா உயர்த்திடும் அன்பு!
.
பாவலர் அருணா செல்வம்
22.07.2022

 
விற்பூட்டுதல்!
.
அன்பு குடியுயர்த்தும்
போதை குலமழிக்கும்
நேர்மை படியளக்கும்
பொய்மை பகைவளர்க்கும்
சான்றோர் வழியுயர்த்தும்
தீமை மதியழிக்கும்
வாய்மை அழியா உயர்த்திடும்.

புதன், 20 ஜூலை, 2022

ஏனிப்படி ஆனாள் ?

 


ஆனிப்பொன் தேர்போல் அசையுங் கொடியிடை!
தேனிக்கள் மொய்த்திடும் தேனரும்பும் பூவிதழ்!
வானிருக்கும் மீன்போல வண்ணமிடுங் கண்ணுடையாள்!
ஏனிப் படியானாள்? என்றுரைப்பாய் தோழியே!
.
பாவலர் அருணா செல்வம்
20.07.2022

(வெண்டளையால் அமைந்த கலிவிருத்தம்)


செவ்வாய், 12 ஜூலை, 2022

எளியோர்க்கு ஈதல் !

 


ஞான முள்ள மனிதரெல்லாம்
        ஞாலந் தன்னில் பிறந்தாலும்
ஈனப் பிறவி நம்பிறப்பில்
       இனிமை கொஞ்சம் சேர்வதற்கு
தானம் செய்தால் பலநன்மை
      தானாய் வந்து சேருமென்று
வானம் சென்ற முன்னோர்கள்
     வாழ்வின் வகையாய்ச் சொன்னார்கள்!
 
உண்டு நன்றாய் உடல்வளர்த்தோம்!
      உதவி செய்தார் உரியோர்கள்!
கண்டு கேட்டும் உயிர்வளர்த்தோம்!
      கருத்தாய்ச் சொன்னார் உயர்ந்தோர்கள்!
பண்பு கொண்ட மனமிருந்தும்
      பாவம் விதியாய் நுழைந்துவிட்டால்
தொண்டு செய்த உன்னுடனே
      துணையாய் வந்து தலைக்காக்கும்!
 
பணமும் பொருளும் நிறைந்திருக்க
       பாலும் பழமும் மிகுந்திருக்க
உணவோ உண்ண அழைத்திருக்க
       உன்னைப் பசித்தோன் பார்த்திருக்க
குணமாய்க் கொஞ்சம் கொடுத்திட்டால்
       குறைந்தி டாமல் பெருகிவிடும்!
கணக்காய் எண்ண முடியாமல்
       கடிதில் கூடும் மனநிறைவு!
 
பதவி பெயரும் புகழெல்லாம்
       பகட்டாய் நம்மைக் காட்டிவிடும்!
நிதமும் தேவை எனச்சேர்த்தால்
       நெஞ்சோ பயமாய் அதைக்காக்கும்!
முதலும் முடிவும் அறியாத
        மோகம் கொண்ட வாழ்வினிலே
உதவி செய்ய பழகிவிட்டால்
        உன்னை அதுவே காத்துநிற்கும்!
  
இல்லை என்று கேட்காமல்
        ஏங்கி பார்க்கும் சிலவிழிகள்!
தொல்லை என்றே எண்ணாமல்
        துளியாய்க் கொஞ்சம் கொடுத்துப்பார்!
சொல்லில் சொல்ல முடியாமல்
        சொல்லும் பார்வை உன்னுருவைக்
கல்லில் இல்லாத் தெய்வமெனக்
       கண்முன் கண்ட மனம்நெகிழ்வார்!
    
தெய்வம் எங்கே எங்கென்று
       தேடித் தேடி அலைகின்றார்!
உய்யும் வாழ்வில் உன்னெதிரில்
       ஒளியைப் பொங்கி வரமாட்டார்!
மெய்யும் மனமும் வாடிவிட்ட
       மெலியோக் கொஞ்சம் கொடுத்துப்பார்!
வைய்யம் நிறைந்த தெய்வமெல்லாம்
       வந்தே அமர்வார் உன்னுருவில்!
 
எடுக்க எடுக்கக் குறைந்துவிடும்
        ஏற்ற மில்லாப் பெருஞ்செல்வம்!
அடுக்க அடுக்க ஏக்கந்தரும்
        ஆசை அடங்காத் துயர்வெள்ளம்!
கொடுக்கக் கொடுக்க வளர்கின்ற
        குணமே உயிரின் மனநிறைவு!
தடுக்கத் தடுக்க எவர்வந்தும்
        தகர்க்க முடியா நிறைவன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
13.07.2022

செவ்வாய், 5 ஜூலை, 2022

ஒன்றில் ஐந்து!



பாடி அழைத்தால்!
அறுசீர் விருத்தம்!

.
பாடி அழைத்தால் பணிந்தே
    பண்பாய் முந்தி வெறுப்பின்றி
ஓடி வருவாள் உடனே! 
         ஒன்ற உள்ளம் விருப்பின்றி
மூடி மறைத்தால் முகத்தை
    முற்றும் தீபோல் அடர்வின்றி
ஊடி நகர்வாள் ஒதுங்கி
    ஓய்ந்தே நன்றே மகிழ்வின்றி! 
.
கலித்துறை!
.
பாடி அழைத்தால் பணிந்தே பண்பாய் முந்தி
ஓடி வருவாள் உடனே ஒன்ற உள்ளம்!
மூடி மறைத்தால் முகத்தை முற்றும் தீபோல்
ஊடி நகர்வாள் ஒதுங்கி ஓய்ந்தே நன்றே!
.
கலிவிருத்தம்!
.
பாடி அழைத்தால் பணிந்தே பண்பாய்
ஓடி வருவாள் உடனே ஒன்ற!
மூடி மறைத்தால் முகத்தை முற்றும்
ஊடி நகர்வாள் ஒதுங்கி ஓய்ந்தே!
.
வஞ்சி விருத்தம்!
.
பாடி அழைத்தால் பணிந்தே
ஓடி வருவாள் உடனே!
மூடி மறைத்தால் முகத்தை
ஊடி நகர்வாள் ஒதுங்கி!
.
வஞ்சித்துறை!
.
பாடி அழைத்தால்
ஓடி வருவாள்!
மூடி மறைத்தால்
ஊடி நகர்வாள்!
.
பாவலர் அருணா செல்வம்
06.07.2022

ஞாயிறு, 3 ஜூலை, 2022

கடவுள் வணக்கம்! (கலிவிருத்தம் 1)

 



(கலிவிருத்தம் 1)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
உலகம் பாடிடும் ஓமெனும் நாதமும்
புலரும் காலையின் பூவதன் வாசமும்
உனது நல்லருள் உற்றிடும் நன்மையில்
எனது பண்ணிலும் இன்பினை நல்கவே!
.
(கலிவிருத்தம் 2)
(விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம்)
.
கற்றவர் கூடிடும் காலம் மின்னிடும்!
பற்றினை விட்டவர் பாதை பண்பிடம்!
பெற்றவர் கூறிடும் பெருமை ஏற்றிடும்!
உற்றிடும் அன்பினில் உயிரைச் சேர்த்திடு!

.
(கலிவிருத்தம் 3)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
மானின் துள்ளலாய் மாதவள் ஓடவும்
மீனின் மேனியாய் மெல்லிடை ஆடவும்
தேனின் இன்புடன் செவ்விதழ் பேசவும்
வானின் தூரலாய் வஞ்சியோ பாடினாள்!

.
பாவலர் அருணா செல்வம்
04.07.2022