வெள்ளி, 13 டிசம்பர், 2019

உதாத்தவணி – 22




வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்.   ----- 73

பொருள்ஓர் இடத்தில் உள்ள செல்வத்தின் உயர்ச்சியையும், உயர்ந்த உள்ளத்தில் ஏற்கப்பட்ட உயர்ந்த உணர்ச்சியையும் மிகுத்து அழகு பொருந்தக் கூறுவதுஉதாத்தவணிஎனப்படும்.

1, செல்வ மிகுதி

    பாடலில் ஓர் இடத்தில் அல்லது ஒருவரிடத்தில் உள்ள செல்வத்தின் மிகுதியை அல்லது அதன் பெருமையை அழகு பொருந்தப் பாடுவது செல்வ மிகுதி உதாத்தம் எனப்படும்.

. ம்
மண்வளமும் இன்ப மழைவளமும் உள்ளுயர்
பெண்வளமும் வீரப் புகழ்வளமும்தண்டமிழ்
ஊட்டிடும் சொல்வளமும் ஒன்றாக எங்களின்
நாட்டிலுண்டே செல்வ நயம்!

பொருள்செல்வங்கள் எனச்சொல்லும் மண்ணின் வளமும், இன்பத்தை நல்கும் மழைவளமும், உயர்ந்த உள்ளத்தைக் கொண்டிருக்கும் பெண்களும், வீரம் கொண்ட ஆண்களால் புகழ்வளமும், தாய்த்தமிழால் எங்களிடம் உள்ள மொழிவளமும் ஒன்றாக எங்களின் நாட்டினில் நிறைய உண்டு.
    ஓர் இடத்தில் இருக்கும் செல்வ மிகுதியைப் பாடி இருப்பதால் இதுசெல்வ மிகுதி உதாத்த அணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
13.12.2019

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாரதியைப் போற்றுவோம்!





பூட்டில்லா வீட்டில் நுழைவதுபோல்வந்து
புண்ணிய பூமியில் வாழ்ந்தவரை - வாலை
ஆட்டியே நம்மை அடிமைசெய்துவேற்று
நாட்டவர் எம்மை ஆளுவதோ?

காட்டுக்கே அரசன் சிங்கமன்றோஅதைக்
காப்பதே அதனின் திறனன்றோ - சின்னக்
கூட்டுப் புழுவாக இருந்தாலும்தம்மின்
கூண்டினில் வாழ்வதே நன்றாகும்!

வாட்டிய கொடுமை வஞ்சனைங்கள்கண்டு
வாடி வதங்கிய பாரதியேதீமை
ஓட்டிட வேண்டும் என்றெண்ணியேநாளும்
ஓதிய தெல்லாம் உயர்வாகும்!

நாட்டுக்கு நன்மையைச் செய்திடவேநல்ல
பாட்டினில் கருவைச் சேர்த்துவைத்தான் ! – கவி
தீட்டிய தெல்லாமே உயர்வாகும்வீரம்
ஊட்டிய சுவை உணர்வாகும்!

மூட்டிய வீரச் சொற்களாலேநெஞ்சை
மூடி நடுக்கிய பயமெல்லாம்தீயில்
காட்டிய பஞ்சாய் மறைந்ததுவேஉடன்
கடமை சூட்டை ஏற்றியதே!

ஏட்டினில் உள்ள இலக்கணத்தையாரும்
ஏற்றிடும் வண்ணம் எளிமையாக்கிப்புதுப்
பாட்டென்ற எண்ணம் ஏற்றிவைத்தஉயர்
பாரதியை நாம் போற்றிடுவோம்!
.
(கும்மி)
பாவலர் அருணா செல்வம்
11.12.2019

சனி, 7 டிசம்பர், 2019

தூது போ வண்ணமலரே !



.
அல்லி குளத்தில்
நீராடுகிறாள் என்
நெஞ்சிற்கினியாள்!
ஆம்பலும் அவள் முகத்தைக்
காண நாணும்!
கயல்களும் அவள் கண்ணழகில்
மயக்கம் கொள்ளும்!

நீரைவிட்டு வெளிவரும்
நிலா போன்ற அவளின்
உருவைக் காண அன்னங்கள்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்!

அவளின் மேனியைத்
தொட்டிடும்
குளத்து நீருக்கும் குளிரெடுக்கும்!

அவள் முகத்தைக் கண்ட
வண்டுகள் பூந்தாதின்
மதுவருந்த வட்டமிடும்!

இயற்கை அவளைத்
தொட்டே தழுவினாலும்
சிணுங்காத சின்னவள்
என்பார்வை பட்டதும்
நாணங்கொள்வாள்!

வண்ணமலரே….
நானும் உங்களைப் போலவே
அவளிடம் மயங்கி இருப்பதைத்
தூதாக போய் சொல்லிவிடு!
உன்னிடத்தில் நான்
கொடுத்த முத்தத்தை
உனைத் தூக்கி அவள் முகரும் போது
நீ கொடுத்து,
என் நினைவைக் காட்டிவிடு!
.
பாவலர் அருணா செல்வம்
07.12.2019

வியாழன், 28 நவம்பர், 2019

இதயச் சிறகு !



.
ஆசைகொண்டு காத்திருந்தேன்
அத்தைமகன் வரும்நாளை!
நேசநெஞ்சை அறிவானோ
நினைவவனைச் சுழல்கிறதே!

வண்ணமயில் போல்நானே
வானத்தைப் பார்த்திருக்க
வளம்கொழிக்கும் மழையாக
வந்தாலே ஆடிடுவேன்!

வழிமேலே விழிவைத்தே
வந்தவழி காக்காமல்
வானத்து மேகமதை
வகையென்றே தூதுவிட்டேன்!

என்நினைவில் உள்ளதெல்லாம்
புன்னகைக்கும் உன்முகமே!
பொன்னிறத்துத் தாவணியும்
உன்நினைவைச் சொல்கிறதே!

எழுத்தாணி இங்கில்லை
எழுதிவிட ஓலையில்லை!
இதயத்தைச் சிறகாக்கி
உன்திசையில் பறக்கவிட்டேன்!
.
பாவலர் அருணா செல்வம்
28.11.2019

திங்கள், 25 நவம்பர், 2019

பிரிமொழிச் சிலேடை!



    ஒரு பாடலில் வந்திருக்கும் பொருளானது, அப்பொருளின் தன்மைக்கும், அதனின் எதிரான தன்மைக்கும் பொருந்தும் படி வருவதுபிரிமொழிச் சிலேடைஎனப்படும்.
. ம்
கார்நிறைவா தாரமுகைக் காற்றடித்துத் தொட்டணைக்க
சேர்முறைமா மன்மேனிச் சீண்டிருக்கும்! – கூர்காற்றால்
ஆடுமுடைத் தேடும்புள் ஆவலிக்கக் கட்டவிழும்
கூடும் குளிர்காலக் கூற்று!

குளிர்காலத்தில் நடக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு பாடலிலேயே ஒருவகையானச் சொற்களாலேயே அமைந்துள்ளது. இப்பாடலில் குளிர்கால இன்பத்தைச் சொல்லும் போது ஒருவிதமாகவும், துன்பத்தைச் சொல்லும் போது வேறு விதமாகவும் பிரிந்து பொருள் படுவதால் இது பிரிமொழிச் சிலேடைஆகியது.


குளிர்கால இன்பத்தைச் சொல்லுங்கால்,… அழகு நிறைந்த உடலை மழையில் மலரும் பருவத்து அரும்பாக, வாடைக் காற்றானது தொட்டு அணைக்க, சேரும் முறையுள்ள மாமன் மேனியைத் தீண்டிவிட மகிழ்ச்சிதரும். மிகுதியான காற்றால் உடலானது ஆடுவதால் உடையைத் தேடும். மதுபானத்தால் ஆசை அதிகமாக மனக்கட்டானது அவிழ்ந்து திரும்பவும் கூடி மகிழ்வது தான் குளிர்காலத்தில் நடப்பது.

குளிர்காலத்தில் துன்பத்தைச் சொல்லுங்கால் --- அச்சம் நிறைந்ததும், வன்மையான சத்தமுடைய மழைக்கூட்டமும், பேய்க்காற்றும் தொட்டு அணைக்க, நெற்குதிரில் உள்ள கருவண்டானது மந்திரம் ஓதுவது போல மேனிதனில் ஆரவாரித்துத் தொந்தரவு செய்யும். கூர்மையான குளிர் காற்றால் உடல் ஆட போர்த்திக்கொள்ள துணியைத் தேடும். காற்றால் பறவைகள் புலம்ப அதன் கூடுகளின் கட்டுகள் அவிழ்ந்து மண்ணில் விழுவது தான் குளிர்காலத்தில் நடப்பது.

கார்- கரியது, அச்சம், அழகு,
ஆதாரம்பற்றுக்கோடு, ஆதாரம், நிலை, உடல்
தாரம்வல்லிசை, மழை,
முகைகூட்டம், மலரும் பருவத்து அரும்பு
காற்றுவாடை, பேய்,
சேர்நெற்குதிர், சேருதல்,
மாஅழகு, வண்டு,
மன்கணவன், மந்திரம்
மேனிஉடல்
சீண்டுதல்தொந்தரவு செய்தல், தீண்டியுணர்த்துதல்,
கூர்கூர்மை, மிகுதி,
புள்பறவையினம், மதுபானம்
ஆவலிக்கஆசைப்படுதல், புலம்பல்,

இப்பாடலில் குளிர்கால இன்பத்தைச் சொல்லும் போது ஒருவிதமாகவும், துன்பத்தைச் சொல்லும் போது வேறு விதமாகவும் பிரிந்து பொருள் படுவதால் இது “பிரிமொழிச் சிலேடைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.11.2019

சிலேடை வெண்பா!



செம்மொழிச் சிலேடை!

    பாடலில் வந்திருக்கும் ஒவ்வொரு சொல்லும் பல பொருளைக் குறித்துப் பாடுவதுசெம்மொழிச் சிலேடைஎனப்படும்.
சொற்கள் ஒவ்வொரு பொருள் படும் பொழுதும் பிரிவதில் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று வேறு வேறு பொருளைத் தருவது செம்மையான மொழி ஆகும்.

. ம்
துடியிடைக் கச்சிட்டுத் துள்ளிடும் போது
முடியடியும் ஆடவைத்த மோக வடிவழகே!
கண்ணரும்மை போகவெனைக் காதலுடன் பார்க்குமுனை
எண்ணிடவே நெஞ்சேங்கும் இங்கு!

பாடலில் கொண்டுள்ள சொற்கள் நடனமாடும் பெண்ணைக் குறிப்பது போல் திருவண்ணா மலை இறைவனைச் சிலேடையாக குறிக்கப்பட்டுள்ளது.

பெண்ணைக் குறிப்பிடும் பொழுது - உடுக்கை போன்ற இடையுடன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு துள்ளி ஆடிடும் பொழுது பார்ப்பவனை முடிமுதல் அடிவரையும் ஆடவைத்த மோகத்தைத் தரும் வடிவம் கொண்ட அழகே. உன்றன் கண்ணில் அரும்பி வழியும் மையானது அலைந்து போக என்னை அன்புடன் பார்க்கும் உன்னை நினைப்பதற்கே என் நெஞ்சானது ஏங்கும் இங்கு.

திருவண்ணாமலையாரைக் குறிப்பிடும் பொழுதுஉடுக்கையுடன் இடையில் புலிக்கச்சையும் அணிந்து தாண்டவம் ஆடும் பொழுதும், பிரமனுக்காகவும் திருமாலுக்காகவும் நீண்டு வளர்ந்து அடிமுடியைக் காணாது ஆடவைத்த பஞ்சமாயையில் ஒன்றான நெரும்பின் வடிவழகே, முக்கண் கொண்டருளும் அருணாசலனே, தீவினைப் பொங்கிவரும் வாழ்வில் அதனைப் போக்கும் அன்புடன் பார்க்கும் உன்னை நினைத்தாலே என் நெஞ்சமானது ஏங்கும் இங்கு.
   திருவண்ணாமலை அருணாசலத்தை நினைத்தாலே முக்தி பெறலாம் என்பது உலக வழக்கு.

துடிஉடுக்கை, பெண்ணின் உடுக்கைப் போன்ற இடை,
கச்சுமார்புத்துணி, இடையில் கட்டுதல்
துள்ளல்ஆடல், குதித்தல்
முடிதலைமயிர், தலை (குடுமி)
அடிகாலடி, ஆதி
ஆடல்நடனம், வெற்றி
மோகம்காம மயக்கம், பஞ்சமாயையில் ஒன்றான நெருப்பு
கண்விழி, ஞானம் உணர்த்துவது (முன்றாவது கண்)
அரும்முகைத்தல், முளைத்தல்
மை - , கண்மை, தீவினை

பொருள்இப்பாடலில் உள்ள தொடர்கள் நடனமாடும் பெண், திருவண்ணாமலையில் உறையும் ஈசன் ஆகிய இருவருக்கும் பொருந்துவதாக இருப்பதால் இதுசிலேடை அணிஆகியது. இத்தொடரில் இருவருக்கும் சொற்களின் பொருள் ஒரே நிலையில் இருந்து பொருள் படுவதால் இதுசெம்மொழிச் சிலேடைஆகியது.

    செம்மொழி என்பது, சொற்களைப் பிரித்தாலும் இரு பொருளுக்கும் பொருந்தும் வகையில் சொற்களின் தன்மை ஒரே நிலையில் மாறுபடாமல் இருப்பது ஆகும்.
.
பாவலர் அருணா செல்வம்
26.11.2019