திங்கள், 25 நவம்பர், 2019

சிலேடை வெண்பா!



செம்மொழிச் சிலேடை!

    பாடலில் வந்திருக்கும் ஒவ்வொரு சொல்லும் பல பொருளைக் குறித்துப் பாடுவதுசெம்மொழிச் சிலேடைஎனப்படும்.
சொற்கள் ஒவ்வொரு பொருள் படும் பொழுதும் பிரிவதில் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று வேறு வேறு பொருளைத் தருவது செம்மையான மொழி ஆகும்.

. ம்
துடியிடைக் கச்சிட்டுத் துள்ளிடும் போது
முடியடியும் ஆடவைத்த மோக வடிவழகே!
கண்ணரும்மை போகவெனைக் காதலுடன் பார்க்குமுனை
எண்ணிடவே நெஞ்சேங்கும் இங்கு!

பாடலில் கொண்டுள்ள சொற்கள் நடனமாடும் பெண்ணைக் குறிப்பது போல் திருவண்ணா மலை இறைவனைச் சிலேடையாக குறிக்கப்பட்டுள்ளது.

பெண்ணைக் குறிப்பிடும் பொழுது - உடுக்கை போன்ற இடையுடன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு துள்ளி ஆடிடும் பொழுது பார்ப்பவனை முடிமுதல் அடிவரையும் ஆடவைத்த மோகத்தைத் தரும் வடிவம் கொண்ட அழகே. உன்றன் கண்ணில் அரும்பி வழியும் மையானது அலைந்து போக என்னை அன்புடன் பார்க்கும் உன்னை நினைப்பதற்கே என் நெஞ்சானது ஏங்கும் இங்கு.

திருவண்ணாமலையாரைக் குறிப்பிடும் பொழுதுஉடுக்கையுடன் இடையில் புலிக்கச்சையும் அணிந்து தாண்டவம் ஆடும் பொழுதும், பிரமனுக்காகவும் திருமாலுக்காகவும் நீண்டு வளர்ந்து அடிமுடியைக் காணாது ஆடவைத்த பஞ்சமாயையில் ஒன்றான நெரும்பின் வடிவழகே, முக்கண் கொண்டருளும் அருணாசலனே, தீவினைப் பொங்கிவரும் வாழ்வில் அதனைப் போக்கும் அன்புடன் பார்க்கும் உன்னை நினைத்தாலே என் நெஞ்சமானது ஏங்கும் இங்கு.
   திருவண்ணாமலை அருணாசலத்தை நினைத்தாலே முக்தி பெறலாம் என்பது உலக வழக்கு.

துடிஉடுக்கை, பெண்ணின் உடுக்கைப் போன்ற இடை,
கச்சுமார்புத்துணி, இடையில் கட்டுதல்
துள்ளல்ஆடல், குதித்தல்
முடிதலைமயிர், தலை (குடுமி)
அடிகாலடி, ஆதி
ஆடல்நடனம், வெற்றி
மோகம்காம மயக்கம், பஞ்சமாயையில் ஒன்றான நெருப்பு
கண்விழி, ஞானம் உணர்த்துவது (முன்றாவது கண்)
அரும்முகைத்தல், முளைத்தல்
மை - , கண்மை, தீவினை

பொருள்இப்பாடலில் உள்ள தொடர்கள் நடனமாடும் பெண், திருவண்ணாமலையில் உறையும் ஈசன் ஆகிய இருவருக்கும் பொருந்துவதாக இருப்பதால் இதுசிலேடை அணிஆகியது. இத்தொடரில் இருவருக்கும் சொற்களின் பொருள் ஒரே நிலையில் இருந்து பொருள் படுவதால் இதுசெம்மொழிச் சிலேடைஆகியது.

    செம்மொழி என்பது, சொற்களைப் பிரித்தாலும் இரு பொருளுக்கும் பொருந்தும் வகையில் சொற்களின் தன்மை ஒரே நிலையில் மாறுபடாமல் இருப்பது ஆகும்.
.
பாவலர் அருணா செல்வம்
26.11.2019

வியாழன், 14 நவம்பர், 2019

காணி நிலம் வேண்டும்!



.
தேனாற்றின் கரையினிலே
   தென்னைமரச் சூழலிலே
கானாறு கவிபடைக்க
   காணிநிலம் வேண்டுமம்மா!

நீரோடி நிலமிளக
   நேராக வரப்பமைத்து
ஏரோட்டித் தினமுழைத்து
   இன்னிசைக்க வேண்டுமம்மா!

பாத்திகட்டி விதைவிதைத்துப்
பருவமுடன் நாத்துநட்டுக்
காத்திருந்து களைபறித்துக்
கண்நிறைய வேண்டுமம்மா!

பாட்டுப்பாடி நீரிரைக்க
   பருவமங்கை அருகிருந்து
காட்டுகின்ற கண்ணசைவால்
   களைப்பாற வேண்டுமம்மா!

கதிர்சாயும் வேளையிலே
   காவலுடன் காத்திருந்து
குதிர்மூழ்க பயிர்சேர்ந்து
   குதுகலிக்க வேண்டுமம்மா!

விற்றுவிட்டு மீதியுள்ள
   விதைநெல்லைத் தனிவைத்து
மற்றவர்க்குப் பகிர்ந்தளித்து
   மறுவிளைச்சல் காணவேண்டும்!

மாடுகன்றும் உணவருந்தி
   காடுகழனி காக்கவேண்டும்!
வீடுமனைப் பிள்ளையுடன்
   நாடுகாத்து வாழவேண்டும்!

மனம்மகிழ்ந்து தினம்வாழ
   மண்மகளை வேண்டுகிறேன்!
கனவுகளை நினைவாக்க
   காணிநிலம் வேண்டுமம்மா!
.
பாவலர் அருணா செல்வம்

புதன், 6 நவம்பர், 2019

காதல் நிலவு!



.
ஆற்றங்கரை ஓரம்
அமைதியாய் அமர்ந்திருந்தேன்!
அழகிய வானில்
அலைகழித்தாள் என்னை!
பளிங்குபோல் மின்னிய
அவளழகைப்
பாசமுடன் பார்த்தேன்.
பாவையவள்
வெண்பல் காட்டி
வெள்ளையாய்ச் சிரித்தாள்.
ஆசை அளவுமீற
அவளிடத்தில்
வார்த்தையால் கொட்டினேன்.
அமைதியுடன் கேட்டதே
அவள்மேல் என்
ஆசை அதிகமானது.
தொட முயன்றேன்.
மிக உயரத்தில் இருந்தாள்.
எம்பிக் குதித்தேன்.
எள்ளி நகைத்தாள்.
ஏமார்ந்து தலை குனிந்தேன்
என் காலடி
நீரில் கிடந்தாள்.
தொட்டுப் பிடித்தேன்.
துள்ளி ஓடினாள்.
கோபத்துடன்
எட்டி உதைத்தேன்.
கலங்கி அழுதாள்.
எழுந்து நடந்தேன்
என்னுடனே வருகின்றாள்.
என்செய்வேன் ?
அவளோ வெகு உயரத்தில்…. !
ஆனால்
ஒன்று தெரிந்தது
என் விடியல்
வெகு தூரத்தில் இல்லைஎன்று! 
.
பாவலர் அருணா செல்வம்
06.11.2019

திங்கள், 4 நவம்பர், 2019

தமிழுடைமை!




.
உயர்ந்தோருக்(கு) உன்னத ஓர்உருவம் தந்தே
வியந்திட வைத்திருந்த வீரம்பயம்தரப்
பொன்மொழிகள் எங்கேனும் போய்விடும் என்றதைத்
தன்னுடைமை ஆக்கினார் தாழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
04.11.2019

புதன், 30 அக்டோபர், 2019

புல்வெளியில் பூஞ்சிலை!



.
கயலெடுத்து வைத்தானோ
  காரிகையின் கண்ணென்றே!
அயலிருக்கும் மூக்கென்ன
  ஆழ்ந்தெடுத்த சிப்பிதானோ!

கார்கூந்தல் வண்ணத்தைக்
   கண்ணனவன் தந்தானோ!
நேர்வகிட்டுக் கோலமதை
   நெடுநேரம் அளந்தானோ!

தேன்மொழியும் வாயழகைத்
  தெளிதமிழால் செய்தானோ!
கூன்பிறையைக் காதாக்கிக்
  கழுத்தருகில் வைத்தானோ!

வெண்ணிலவைப் பொடியாக்கிப்
  பெண்வாயில் புதைத்தானோ!
பண்ணொலியைக் குரலாக்கிப்
  பைந்தமிழைக் கலந்தானோ!

கல்லெடுத்துச் செய்தானோ
  கட்டழகின் மேனியினை!
வில்லெடுத்து வரைந்தானோ
  வேல்விழியாள் புருவமதை!

என்னவென்று பாடிடுவேன்
  எடுத்தெழுத வார்த்தையில்லை!
பொன்னழகே! என்னவளே!
  புல்வெளியில் பூஞ்சிலையே!
.
பாவலர் அருணா செல்வம்
30.10.2019

செவ்வாய், 29 அக்டோபர், 2019

முட்டுக்கட்டை!




ஊரே கூடிச் சேர்ந்திழுக்க
   ஓடும் அழகாய் ஊர்வலமாய்!
ஈரேழ் உலகத் தலைவியவள்
   இன்பம் பொங்க அமர்ந்திருப்பாள்!
பாரே பக்திப் பரவசமாய்ப்
   பார்த்தும் பணிந்தும் வணங்கிடவே
தேரே நகரும் அழகுடனே
   தேனாய் நன்மை செய்திடவே!

இழுத்த இழுப்புக்(கு) அதுவோடும்!
   என்றே இருந்தால் என்னாகும்?
தொழுத உயிர்க்கும் தொடர்பவர்க்கும்
   தொல்லைக் கண்டே துவண்டிடுமே!
நழுவி யோடா திருந்திடவும்
   நடக்கும் செயலை நிறுத்திடவும்  
பொழுதில் வைப்பார் காலின்கீழ்
   பொதிக்கும் முட்டுக் கட்டையாகும்!

முட்டுக் கட்டை எடுத்தாலே
   முறையாய்ச் செல்ல முடிந்தாலும் ,
தட்டுத் தவறும் நேரத்தில்
   கட்டிப் போட்டு விடுவதற்கே
முட்டுக் கட்டைப் போட்டிடுவார்!
   முந்திச் செல்ல் மட்டுமின்றிக்
கட்டுக் கொப்பாய்ச் செல்வதற்கும்
   முட்டுக் கட்டைத் தேவையன்றோ! 

ஒருவர் செய்யும் செயலுக்கோ
   உந்தும் திறனே உயர்த்திவிடும்!
கருத்தில் தொண்டாய்ச் சேர்ந்தோர்க்கோ
   கருத்தும் பலவும் நின்றாடும்!
ஒருசொல் முட்டுக் கட்டையாக
   ஒடுக்க வந்து நின்றாலும்
பொருத்தே அதனின் இடம்நகர்த்த
   பொதுமை தேரோ நகர்ந்திடுமே!
.
பாவலர் அருணா செல்வம்
28.10.2019

வியாழன், 17 அக்டோபர், 2019

தரணி யாளும் தமிழ்!



(கும்மி)

பண்டைய மாந்தர்கள் பேசிய தேஉயர்
    பண்பினில் மின்னிடும் செந்தமி ழே!
விண்ணவர் எழுதி விட்டுச்சென் றனரோ
    வியக்க வைத்திடும் செம்மொழி யே!

இன்பத்தின் சாற்றினில் ஊறிய தால்பேச
    இனிப்பை உண்கின்ற சுவையன் றோ! 
பின்னிடும் பாக்களின் பொருளைக் கேட்டிட
    பெருமை பெற்றிடும் செவியன் றோ!

செம்மையாய் மொழியின் இலக்க ணத்தைமுன்
    செய்துவைத் தவர்தொல் காப்பிய ரே!
மும்மொழி வாழ்வதன் விளக்க மதைத்தன்
    முப்பாலில் செய்தவர் வள்ளுவ ரே!

பற்பல வளமை பெற்றதி னால்நலம்
    பயக்கின் றநூல்கள் பலபெற் றோம்!
கற்சிலை அழகாய்ச் செதுக்கி யதால்முற்
    காலமும் வாழும்நல் வரம்பெற் றோம்!

எண்ணத்தில் தோன்றிடும் கருத்தை எல்லாம்நல்
    இசையின் வண்ணத்தில் பாடிடு வோம்!
பெண்னெனும் சக்திகள் வட்டமிட் டேஅதைப்
    பெற்றதோர் பேறென்றே ஆடிடு வோம்!

ஆதியில் தோன்றிய அந்தமிழ் மொழியை
    அனைவ ரும்கற்றால் பலனுண் டே!
ஓதிடும் ஆசானின் புகழிவ் உலகில்
    உயர்ந்தி டும்வண்ணம் நலனுண் டே!

தேனுக்கு மட்டும்இ னிப்பில்லை நமது
   தெள்ளுத மிழ்ச்சுவை இனிப்பா கும்!
வானுக்கு மட்டும்ம ழையினைப் போல்சுய
   வளமே தமிழில் தனியா கும்!

நாட்டினில் செல்வங்கள் பலவுண் டேஅதில்
    நற்றமிழ்ப் போலொரு செல்வமுண் டோ!
ஊட்டிடும் தாய்போல்உ றவென்றே மொழியை
    உலகில் எங்கேனும் சொல்வதுண் டோ!
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2019

திங்கள், 8 ஜூலை, 2019

நுட்பவணி!



குறிப்பு நுட்பம்!

ஒரு செயலின் நுட்பமானத் தன்மையைக் குறிப்பால் வெளிப்படுத்துவதுகுறிப்பு நுட்பம்எனப்படும்.

. ம்
பகலவனால் நீரைப் பருகியோர் ஓய்வாய்
அகலாமல் அங்கிருக்க, மேலே - முகம்காட்டும்
தாமரையின் தண்டெனத் தண்ணீருள் நின்றிருந்தாள்
கோமகள் நெஞ்சுள் குறித்து!

பொருள் வெயிலின் தாக்கத்தால் குளத்து நீரைப் பருகியவர்கள் ஓய்வுக்காக அவ்விடத்தை விட்டு அகலாமல் நின்றிருந்ததால், நீரின் மேல் பகுதியில் முகத்தைக் காட்டும் தாமரையின் தண்டுபோல் நீருக்குள்ளேயே உடலை மறைத்து அழகான அந்தப் பெண் நின்றிருந்தாள்.
    பாடலில், குளத்தில் தாமரை மலரானது தண்ணீருக்கு மேலே முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும். அதன் தண்டானது நீருக்குள் மறைந்து இருக்கும். குளத்து நீரைப்பருகிய அயலோர் அங்கிருந்து செல்லும் வரையில் அந்தப் பெண் தண்ணீருக்குள் நின்றிருந்தாள் என்பதால் அவள் தன்னுடலை மற்றவர்களுக்குக் காட்டவிரும்ப வில்லை என்ற எண்ணக்கருத்து நுட்பமாக உள்ளதாலும், தன்னவனுக்கு மட்டுமே தன் அழகு சொந்தமானது என்ற குறிப்பும் உணர்த்தப் படுவதால் இதுகுறிப்பு நுட்பவணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.07.2019

சனி, 6 ஜூலை, 2019

உடுக்கைப் பந்தம்!


என் “சித்திர கவி தீட்டுவோம்“ என்ற புத்தகத்தில் இருந்து.....
.
பாவலர் அருணா செல்வம்
06.07.2019