செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஏனென்று குழம்பினேன்!



(இசைப்பாடல்)
.
ஏனென்று குழம்பினேன் மானே – அச்சம்
தானென்(று) உணர்ந்துடன் மாறினேன் நானே!
.
அன்பு கவியொன்றை வரைவான் – அதில்
அழகென்ற உவமையை அடுக்கியே வைப்பான்!
துன்பம் வருமென்று எண்ணி – நான்
தொடராத இடத்திலே வைத்ததை மறைப்பான்!
.
கூடிக் களித்திட உழைப்பான்  - இதயக்
குளமொன்றைத் தீட்டிக் கூவியே அழைப்பான்!
தேடிக் குளித்திடச் சென்றால் – அதைத்
தேனான தமிழுக்கே தோண்டினேன் என்பான்!
.
யாருக்கும் பயமில்லை என்பான் – எதிராய்
எவரேனும் வந்தாலும் வீழ்த்துவேன் என்பான்!
நேருக்கு நேர்சென்று நின்றால் – பேயின்
நிகராக எனைக்கண்டு அஞ்சியே செல்வான்!
.
உள்ளத்தில் ஆசையை வைத்தான் – அதை
உருவான கருகொண்ட கவிதையில் புதைத்தான்!
துள்ளிடும் குதிரைபோல் ஆசை – அதைத்
தூயதமிழ் சொல்லாலே கடிவாள மிட்டான்!
.
காதலை நினைத்திடும் நெஞ்சம் – அதைக்
கவிதையாய் எழுதியே உயர்த்திட மிஞ்சும்
போதனை செய்திட விஞ்சும் – உயிர்
போகிடும் வேதனை தனக்கென அஞ்சும்!
.
அவனுயிர்த் தமிழாலே இசைப்பேன் – காதல்
அச்சத்தை அதனுள்ளே ஆழப் புதைப்பேன்!
தவறல்ல காதல் மலைத்தேன்! – அதைத்
தழைத்திடும் தமிழாலே அஞ்சாது குடிப்பேன்!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2020

(பாரதியின் “தீராத விளையாட்டுப் பிள்ளை“ என்ற இராகத்தில் பாடிப்பாருங்கள்)

1 கருத்து: