வியாழன், 24 ஏப்ரல், 2014

முரண்!! (சிறுகதை)





“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்த்தி உயர்த்திச் சொல்ல் பாவம்என்றான் பாரதி. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றங்காய் என்றும் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்றும் ஔவை பாட்டி பாடினாள்.
    சாதி மதம் என்பது மக்களைப் பிரிப்பது. இந்தச் சாதி மதம் என்பது மக்களின் உயிர் கொல்லி நோய். இதற்கு மருந்து நம்மிடையே தான் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் மதத்தைத் துறந்தாலே அவன் கடவுளாகி விடுவான். அவனே கடவுள் என்றானப் பிறகு சாதியாவது மதமாவது?
    சாதியும் மதமும் ஒழிந்தாலே உலகில் வாழும் நாம் அனைவருக்குமே நாமே கடவுள் என்ற உணர்வு வந்துவிடும். அதனால் ஒற்றுமை வளரும்..... என்று கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.“

    அந்தப் பெரியமனிதர் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கும் பொழுது மக்களின் கைத்தட்டலின் ஒலி வானைப்பிளந்த்து. நெஞ்சு நிமிர்த்தி நடந்தார்.
     அவர் பின்னால்....
    “எப்படி பேசுறான் பாரு.... அவன் இப்படி சாதி மதம் இல்லைன்னு மேடையில பேசி பேசியே நிறைய சம்பாதிச்சிட்டான். பணம் இருக்கிறவா எது சொன்னாலும் இந்த உலகம் ஏத்துக்குமோ இல்லையோ.....“
    ஒருவர் இப்படி சொல்ல, “ஆமாவோய். நீர் சொல்வதும் வாஸ்த்தவம் தான்“ தலையாட்டி ஆமோதித்தவாரே நடந்தான் மற்றொருவன்.

    அந்த மேடைப் பேச்சாளர் தன் டிரைவரிடம், “இன்னைக்கி என் பேச்சி எப்படி...? என்று கேட்டார் சற்று கர்வமாக. “ம்... எப்போதும் போல அருமைங்க ஐயா...“ என்றான் எப்பொழுதும் போல டிரைவர்.
    “நேத்து... பெண்ணடிமைத் தனத்தைப்பற்றி ஒரு பெண் பேசினாளாமே... பேரு என்ன...?
    “சாரதாங்க....“
    “ம்... சாரதா.... அவ வீட்டுக்குப் போ. ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு வந்திடலாம். பெண் சமுதாயம் எப்படியெல்லாம் முன்னேறி இருக்குன்னு புரட்சியா பேசினாளாம். இன்னைக்கித் தட்டிக்கொடுத்தா நாளைக்கி நமக்கு உதவியா இருப்பா... அவ வீட்டுக்குப்  போப்பா....“

    வண்டி சாரதா வீட்டு எதிரில் நின்றது. சாரதா ஓடிவந்து உபசரித்தாள். வாழ்த்துக்கள் பரிமாறியப் பிறகு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த தன் மருமகளை அவர் காலில் விழுந்து வணங்கச் சொன்னாள்.
    அவர், “வேண்டாம்மா.... எதுக்கு இதெல்லாம்....?“ என மறுத்ததும் நீங்க பெரியவங்க. பொறக்கப் போறது ஆம்பளைப்பிள்ளையா பொறக்கனும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்க...“ என்றாள் கெஞ்சளாக. அவரும் சிரித்துக்கொண்டே ஆசீர்வாதம் பண்ணிவிட்டு கிளம்பினார்.

    வீட்டில் நுழையவும், அவர் மனைவி தூக்க முடியாத அளவு நகைகளை மாட்டிக்கொண்டு அசைந்து வந்தாள்.
    “என்னங்க... நம்ம பையன் லவ் பண்ணுற பொண்ண பத்தி விசாரிச்சேன். அவ அப்பா ஏதோ மில்லுல சூப்பரேசராம். நல்ல குடும்பம் தானாம். நீங்க என்ன சொல்லுறீங்க....?
    “மில்லுல சூப்பரேசரா...?  அதெல்லாம் நம்ம அந்தஸ்த்துக்கு ஒத்து வராது. வேற நானே பாக்குறேன்னு உன் பையன்கிட்ட சொல்லிடு....“

   அவர் படுக்கப் போய்விட்டார். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த டிரைவர் தன்னிடம் வந்து கொஞ்சிய நாயைத் தடவிக்கொடுத்தார். தடவிக்கொடுக்கும் பொழுது படிந்த அதன் வால் கையை எடுத்ததும் மீண்டும் சுருட்டிக் கொண்டது.

அருணா செல்வம்
25.04.2014

13 கருத்துகள்:

  1. படிப்பது ராமாயணம்
    இடிப்பது பெருமாள் கோவில் என்பதுபோல்
    பலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்
    மனம் கவர்ந்த அருமையான கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சோக்கான "சாதி"நாயா இர்க்கும்போல கீதே...!

    ஆமா டீச்சர்... அந்தப் படம் நீங்கள் வரைந்ததா...? மிகவும் அருமை...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு

  3. வணக்கம்!

    சாதியை நீக்கிச் சமத்துவம் ஏற்பட்டால்
    நீதியைக் காணும் நிலம்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  4. இப்படிப் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை வாழ்த்துக்கள் தோழி .
    த.ம 7

    பதிலளிநீக்கு
  6. பேச்சு ஊருக்காக தான் போலிருக்கு.....

    பதிலளிநீக்கு
  7. நாய் வாலை நிமிர்த்த முடியாது...
    இது மேடையில் பேசும் சாதி நாய்...
    அருமை...

    பதிலளிநீக்கு
  8. பேச்சில் ஒன்று செயலில் ஒன்றாக இருக்கும் வீரர்கள் போல! நல்ல கதை!

    பதிலளிநீக்கு
  9. பேச்சு பேச்சாகத்தான் இருக்கணும் என்று நினைப்பவர்கள்.... பேசுவதும் செய்வதும் வேறுவேறு... :(

    பதிலளிநீக்கு