.
தேடிய
காதல் திகட்டியதோ என்றழுது
வாடி
வதங்கியதும், வந்துநின்று - பாடினான்!
கூடிக்
குழைவதிலும் ஊடுதல் இன்பமென்றே
மூடி
மறைத்தாள் முகம்!
.
பாவலர்
அருணா செல்வம்
02.03.2021
.
தேடிய
காதல் திகட்டியதோ என்றழுது
வாடி
வதங்கியதும், வந்துநின்று - பாடினான்!
கூடிக்
குழைவதிலும் ஊடுதல் இன்பமென்றே
மூடி
மறைத்தாள் முகம்!
.
பாவலர்
அருணா செல்வம்
02.03.2021
என் ஆசிரியர் பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்கள், என் “அணி இலக்கணம்“ என்ற நூலுக்காக அளித்த பாராட்டுக் கவிதையை உங்கள் முன் படைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
.
அணிமேல் ஆசை அகமேவி
அருணா செல்வம் இந்நூலைப்
பணிமேல் பணிகள் சிறப்பனபோல்
பாங்காய்ப் படைத்தார்
வாழ்த்துகிறேன்!
மணிமேல் காணும் நல்லழகாய்
மனத்தை மயக்கும்
வெண்பாக்கள்!
அணைமேல் அணையாய்த்
தமிழ்காக்கும்!
அறிஞர் போற்றும்
புகழ்சேர்க்கும்!
அருமைத் தண்டி ஆரமுதை
அருணா செல்வம் தினம்பருகிப்
பெருமை பெருகும்
இந்நூலைப்
பேணிப் பெற்றார்
வாழ்த்துகிறேன்!
கருணை கமழும் கோவிலெனக்
கருத்தைக் கவரும்
வெண்பாக்கள்
அருணை அப்பன் அடிகாட்டும்!
அகிலம் போற்றும்
அறமூட்டும்!
அல்லும் பகலும் தமிழழகை
அருணா செல்வம் தலைசூடி
வெல்லும் வல்ல திறமேந்தி
விளைத்தார் இந்நூல்
வாழ்த்துகிறேன்!
சொல்லும் பொருளும்
சுவையேந்திச்
சுரக்கும் தூய வெண்பாக்கள்
செல்லும் இடத்தில்
சீர்மீட்டும்!
சிறப்பே மின்னும்
பேர்கூட்டும்!
அன்னைத் தமிழின்
திருவடியை
அருணா செல்வம் கைப்பற்றிப்
பொன்னை நிகர்த்த
இந்நூலைப்
புனைந்தார் நன்றே!
வாழ்த்துகிறேன்!
முன்னைப் புலவர்
புலமைநலம்
முற்றி மணக்கும்
வெண்பாக்கள்
தென்னை நீராய்க்
குளிரூட்டும்!
பின்னை உலகுக் கெழிற்சூட்டும்!
அறமே ஓங்கும் வண்ணத்தில்
அருணா செல்வம் கவிகற்றுத்
திறமே ஓங்கும் இந்நூலைத்
தீட்டித் தந்தார்
வாழ்த்துகிறேன்!
மறமே ஓங்கும் வண்டமிழின்
மாண்பை வார்க்கும்
வெண்பாக்கள்
நிறமே ஓங்கும் மொழிசூட்டும்!
நிலமே ஓங்கும் வழிகாட்டும்!
.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம்
பிரான்சு
07.05.2020
.
மனம்படைத்த மாந்தரெல்லாம்
அமைத்த வீடு
…………மற்றவர்க்கும் உதவிடவே
கட்டி வைத்தார்!
இனம்செழிக்க வேண்டுமென்றே
நெஞ்சம் கொண்டே
…………இருபக்கத் திண்ணைவைத்தே
உதவி செய்தார்!
தினம்நடக்கும் நிகழ்ச்சியாவும் ஓய்வு கொள்வோர்
…………திரைக்காட்சி போல்சொல்லி
மகிழ்ந்து போவார்!
கனம்நெஞ்சில் இல்லையன்று ! திண்ணை வீட்டைக்
…………காட்டுகின்ற ஒற்றுமையின்
உயர்வாய்க் கொள்வோம்!
.
பாவலர் அருணா
செல்வம்
18.01.2021
காணும் பொங்கலோ
காளை அடக்குதல்
கலைகள் உயர்வதற்கும்,
நாணும் பெண்களை
நலமாய் மணஞ்செய
நல்லோர் நடத்திவைத்தார்!
ஆணும் பெண்ணுமாய்
அமைந்த வாழ்விலே
ஆன்றோர் வகுத்துவைத்த
பேணும் நன்மையைப்
பேசும் உலகெலாம்
பெருமை தரும்செயலே!
பொன்னும் புதுஉடை
பூவும் அணிந்திடப்
பூத்த மனத்துடனே
அன்பில் மூழ்கிடும்
அறிஞர் முதியவர்
அவரைத் தேடிநின்று
இன்பம் பொங்கிட
இனிமை விளைந்திட
இன்சொல் பேசிவந்தால்
என்றும் மகிழ்வுடன்
எண்ணம் மிளிர்ந்திட
ஏற்றம் பொங்கிடுமே!
பாவலர் அருணா செல்வம்
16.01.2021
உழைப்பின் உயர்வென
உணர்த்தும் சொல்லினை
உடையது மாடுஅன்றோ!
தழைக்கும் வயலினைத்
தாங்கும் ஏருடன்
தகவாய் உழுவுமன்றோ!
குழந்தை பசியினைக்
கொடுக்கும் பாலினால்
கோவே போக்குமன்றோ?
அழைத்தே இவைகளை
அன்பாய் வணங்குதல்
ஆன்றோர் வழியன்றோ!
தொழிலை விரும்பிநல்
தொண்டாய்த் தொடர்கிற
தூய உழவரையும்
மொழியும் தமிழினை
முறையாய் உரைத்திடும்
முதுமைக் கவிகளையும்
வழியில் நன்மையை
வகுத்தே கொடுத்திடும்
வாய்மை அறிஞரையும்
விழிபோல் எண்ணியே
விந்தை உலகினில்
விரைந்தே வணங்கிடுவோம்!
.
பாவலர் அருணா
செல்வம்
15.01.2021
(இயைபு வெண்பா)
.
தேக்கமாய்
நின்றிருந்தோம்! தேடியதன் கொற்றத்தைத்
தாக்கியுடன்
போக்கித் தழைத்திடும் – ஊக்கத்தை,
சிந்தையில்
இன்பத்தைச், செல்வத்தில் ஏற்றத்தைத்
தந்திட வந்தாளே தை!
பாவலர்
அருணா செல்வம்
14.01.2021
துள்ளி எழுப்பிடும்
தூவும் பனிமழை
தொடங்கும் சிறுகாலை!
புள்ளி வைத்துடன்
பொலியும் நிறமுடன்
புணையும் பூக்கோலம்!
கொள்ளை அழகதில்
குலவும் உயிர்க்கெனக்
கொஞ்சம் அதனுடனே
வெள்ளை அரிசிமா
விரும்பிக் கலந்திட
வேண்டும் வாழ்வதற்கே!
விண்ணின் அமுதமாய்
விளைந்த அரிசியை
விரும்பிப் பொங்கலிட்டு
மண்ணில் விளைந்தநல்
மஞ்சள் வாழையும்
மலரும், செங்கரும்பும்
கண்ணாம் உழவனின்
கனத்த உழைப்பினைக்
கண்டு நன்றியுடன்
பெண்ணும் ஆணுமாய்ப்
பெருமை பொங்கிடப்
பிணைந்தே அதைஉண்போம்!
வானில் நலங்களை
வழங்கும் ஒளியையும்
வளஞ்செய் மழையினையும்
மேனி உருப்பெறும்
மேன்மைப் பலம்தரும்
மேகம் காற்றினையும்
தீனித் தினம்தரும்
தேர்ந்த நிலத்தையும்
தெளிந்த நீரினையும்
தேனின் இனிமையாய்த்
தெய்வப் பதமெனச்
சேர்ந்து வாழ்த்திடுவோம்!
எங்கும் இன்பமே
இளமை நிறைத்திடும்
இனிமை தரும்நாளாம்!
பொங்கும் புன்னகை
புதுமை விளைந்திடப்
பொலியும் இந்நாளில்
திங்கள் ஒளியெனத்
திகழும் மதியுடன்
திண்மை பெற்றிடவும்
அங்கம் அழகுடன்
ஆயுள் நீண்டிட
அருணா வாழ்த்துகின்றேன்!
.
பாவலர் அருணா
செல்வம்
14.01.2021
இன்பம் பொங்கிடும்
இனிமை சேர்த்திடும்
இயற்கைத் திருநாளாம்!
நன்மை செய்திடும்
நலங்கள் விளைத்திடும்
நம்மின் மகிழ்நாளாம்!
துன்பம் விலகிடும்
துயரம் போக்கிடும்
துணிவாய்த் திகழ்நாளாம்!
பொன்னாய்ப்
பொங்கிடும்
புதுமை புரிந்திடும்
பொங்கல் திருநாளே!
புதிய ஆண்டினுள்
பழமைக் கழிவினைப்
போக்கி வளம்பெறவே
முதிரா விடியலில்
மூண்ட தீயினுள்
முந்தி அதைப்போட்டோம்!
பொதியாய் நிறைந்தநம்
புண்மைச் செயலையும்
புரிந்தே எரித்திட்டால்
மதியின் ஒளியென
மனமும் நிறைந்திடும்
மகிழ்வைக் கண்டிடலாம் !
.
பாவலர் அருணா
செல்வம்
13.01.2021