வியாழன், 29 நவம்பர், 2018

எது சேவை?


எது சேவை?

வாழும் உலகம் எந்நாளும்
    வசந்தம் மட்டும் தருவதில்லை!
சூழும் இன்பத் துன்பங்கள்
    சொல்லி விட்டு வருவதில்லை!
தாழும் நிலையும் நிலைசரிந்து
    வீழும் நிலையும் வருவதெல்லாம்
ஊழின் வேலை என்றெண்ணி
    ஒடிந்தும் ஓய்ந்தும் வாழுகின்றோம்!

பிறந்து வளர்ந்த வாழ்வினிலே
    பிறருக் குதவி செய்துவந்தும்
அறத்தின் உயர்வை அறிந்துநன்றாய்
    அகத்தில் அன்பை விதைத்திருந்தால்
இறந்த பின்பும் வாழ்ந்திடுவோம்
    இறையின் நிலையை அடைந்திடுவோம்!
சிறந்த பிறப்பின் நிலையறிந்து
    செய்யும் செயலே உயர்வன்றோ!

கண்கள் போன்று பெற்றவரைக்
    காக்கும் செயலே சேவையாகும்!
மண்ணில் உழைக்கும் வர்க்கத்தை
    மதித்துப் போற்றல் சேவையாகும்!
உண்ணும் உணவைப் பசித்தவர்க்கும்
    உவந்தே அளித்தல் சேவையாகும்!
கண்முன் இருக்கும் எளியோரைக்
    கனிவாய்க் காத்தல் சேவையாகும்!

மெய்யை வளர்க்க நேர்மையெனும்
    மெய்யாய் இருத்தல் சேவையாகும்!
பொய்மை கண்டால் உடனதனைப்
    போக்கும் செயலும் சேவையாகும்!
உய்யும் உலகில் அடுத்தவர்க்கும்
    உதவி புரிதல் சேவையாகும்!
செய்யும் செயலைச் சரியாகச்
    செய்தால் அதுவே சேவையாகும்!

நாவை அடக்கல் உடலுக்கு
    நாமே செய்யும் சேவையாகும்!
பூவைப் போன்ற உள்ளமுடன்
    புரியும் நன்மை சேவையாகும்!
சேவை செய்தல் என்பதெல்லாம்
    சிலரே செய்வார் என்பதில்லை!
தேவை எதையும் எண்ணாமல்
    செய்யும் அனைத்தும் சேவையன்றோ!
.
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 27 நவம்பர், 2018

தன்மை அணி!





பொருள்தன்மை அணி (பொருட்டண்மை)
     ஒருவரிடம் உள்ள பொருள்களை அதன் தன்மை உடனே பாடுவது பொருட்டண்மை அணி எனப்படும்.

(ம்)
  
படர்ந்திருக்கும் காதுகளும், பானை வயிறும்,
உடனிருக்கும் தும்பிக்கை உந்த! – தொடர்ந்திருக்கும்
கண்கள், துணையாகும் கையும் விநாயகா
உன்தன்மை ஓத உயர்த்து!

பொருள் பெரியதாய் விரிந்து படர்ந்து இருக்கும் காதுகளும், பானையைப் போன்று பருத்த வயிறும், அதனுடன் இருக்கும் தும்பிக்கையும், அதை தொடர்ந்து இருக்கும் கண்களும், துணையாக இருக்கும் கைகளும் உள்ள விநாயகனே உன் தன்மையால் இப்பாடத்தை ஓதிட என்னை உயர்த்து.
    விநாயகரிடம் உள்ள பலவிதமான தன்மைகளை உள்ளது உள்ளவாறு உரைப்பதால் இது பொருட்டண்மை அணி ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
27.11.2018

சனி, 10 மார்ச், 2018

புதுமைப் பெண்!


புதுமைப்பெண்!!



தலைமுறைகள் பற்பலவும் கடந்தா யிற்று!
    தன்னிசையாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை!
சிலமுறைகள் கொஞ்சமேனும் மாறி வந்தும்
    சிலர்மட்டும் பெறமுடிந்த அளவே உண்டு!
பலமுறைகள் முயன்றுபார்த்தும் தோல்வி கண்டே
    பழங்கால பாழ்ங்கிணற்றில் நீந்து கின்றோம்!
அலைமுறையில் வந்துபோகும் உரிமை யைநாம்
    அடக்கிவைத்தல் என்பதுதான் புதுமை அன்றோ!
-
போராட்டம் என்பதுதான் வாழ்க்கை என்றால்
    புதுமுறையில் போராடி வெற்றி காண்போம்!
சீரோடும் சிறப்போடும் வாழ்வ தற்கு
    சிரிப்பொன்றை ஆயுதமாய் முகத்தில் கொள்வோம்!
நீரோடும் இடத்தில்வேர் ஓடும்! அன்பு
    நீங்காத இடத்தினிலே பகைமை ஓடும்!
கூரான வாள்கொண்டால் பயனோ இல்லை!
    குளிர்தமிழில் இவ்வாராய்ச் சொல்தல் நன்றே!
-
இதுதானே பண்பாடு என்று நம்பி
    இருந்திருந்தே பெண்களெல்லாம் அடிமை யானார்!
அதுவல்ல பெண்ணினத்தில் உரிமை காக்க
    ஆண்களிதைக் கையாண்டே அடக்கி விட்டார்!
முதுகவிகள் மூதாதை சொன்ன தெல்லாம்
    முதல்தெய்வம் என்றுபெண்ணை நினைத்த தாலே!
மதுகவியில் சொன்னதெல்லாம் உண்மை! உண்மை!
    மாறிவிட்ட நிலையிலது நன்மை இல்லை!
-
கற்களிலே உள்ளிருக்கும் சிலையைப் பார்க்கக்
    காலமெல்லாம் காத்திருக்கும் மூடன் போல
முற்களின்மேல் வாழ்க்கையென்றே கவலைப் பட்டு
    முயற்சியின்றிப் பயந்துநின்றே வீணாய்ப் போனோம்!
சொற்களிலே அன்புபூச மயங்கும் வார்த்தை!
    சூடேற்றி அச்சொல்லை உரக்கக் கூறு!
தற்காலப் பெண்ணென்போர் தாழ்வாய் இல்லை
    தரணிபோற்ற பிறந்தோமெனச் சொல்வாய்ப் பெண்ணே!
-
பெண்ணென்றால் பூப்போன்ற உள்ளம் என்று
    பொதுப்படையாய் பெரியோர்கள் சொல்லி வைத்தார்!
மண்ணென்ற பூமிதனில் பிறந்த பூவோ
    மல்லிகையாய்ப் பிறந்தவிட்டால் ஒருநாள் வாழ்வே!
உண்ணென்று உவந்தளிக்கும் கனிகள் எல்லாம்
    ஒருபூவில் பூத்துவந்த உயர்வைக் கண்டால்
கண்காணும் அழகையவர் சொல்ல வில்லை!
    கனிக்குள்ளே விதைக்கண்ட கருவைச் சொன்னார்!
-
சூழ்ச்சிகளில் நமைவீழ்த்தும் சதியை எல்லாம்
    சுயமாகச் சிந்தித்து அதனை வெல்வோம்!
வீழ்ச்சிஎன வீழ்ந்தாலும் அருவி நீராய்
    வீறுகொண்டே எழுந்தொடி நன்மை செய்வோம்!
தாழ்த்திநம்மை பேசுகின்ற கயவர் கண்டால்
    தடைகள்ளாய் அதைநினைத்துத் தாண்டிச் செல்வோம்!
ஆழ்த்துகின்ற மனக்கவலை யாருக் கில்லை
    அதைக்கூட அடிமையாக்கி புதுமைக் காண்போம்!
-
புதிதாகப் பூப்பதுதான் புதுமை என்றும்
    பொதுப்படையாய் யார்சொல்லும் நம்பி டாதே!
உதித்தெழுந்த சூரியனும் உதிப்பான் மீண்டும்!
    உனக்குள்ளே இருப்பவனோ உறங்கு கின்றான்!
மதிதிறந்து அவனைநீ விழிக்கச் செய்தால்
    மனப்பேயின் பயமெல்லாம் ஓடிப் போகும்!
பொதியல்ல நாம்வாழும் வாழ்க்கை! பெண்ணே
    புதியாகச் சிந்தித்தால் போதும் கண்ணே!
-
அருணா செல்வம்
25.06.2014 (மீள் பதிவு)

புதன், 7 மார்ச், 2018

மலர் மாலைப் பந்தம்! - சித்திர கவிதை!


மலர் மாலைப் பந்தம்!


தேர்ப் பந்தம்! - சித்திரகவிதை!

தேர்ப்பந்தம்!


சட்கோண பந்தம்! சித்திர கவிதை!

சட்கோண பந்தம்!


செவ்வாய், 23 ஜனவரி, 2018

நேற்று - இன்று – நாளை !




நேற்று !
-
நேற்று முடிந்த நிகழ்வே பழமையெனச்
சாற்றிடும் காலத்தின் சால்பு!
.
பழமைகள் என்றுமே பாழாவ தில்லை
பழத்தின் விதையாகும்! பற்று!
.
நல்வினை செய்திருந்தால் நாளெல்லாம் தேடிவரும்
பல்புகழ் மேலோங்கும் பார்!
.
கடந்துவிட்ட நாளின் கவலைகள் நேற்றே
கடந்ததெனப் பாடு கவி!
.
முடிந்ததாய் நம்பும் முடிந்திடாத் தோல்வி
கொடிதாகும் நெஞ்சுள் கொழித்து!
.
ஒருநாள் பயணம் ஒழுங்காய் முடிந்தால்
திரும்ப நினைக்காது ! தீர்ப்பு!
.
கற்றநற் கல்வி கலையாய் வளர்ந்திடும்
மற்றதெல்லாம் போகும் மறந்து!
.
நினைத்ததும் ஏங்கும் நிகழ்வோ இருந்தால்
அனைத்துலகின் மேலாம் அது!
.
கொடிய செயல்கள் கொடுத்திடும் தீர்வு
நெடிதாய் நெருக்கிடும்நன் னெஞ்சு!
.
காலத்தின் கோலத்தைக் கண்டுவிட்டோம் வாழ்விலே
ஞாலத்தின் ஓட்டம் நயம்!
.

இன்று!
.
இன்று நடக்கின்ற இன்ப நிகழ்வுகள்
என்றும் கிடைக்காதாம் எண்ணு!
.
நல்லதோ அல்லதோ நன்றாய் நடத்திடும்
வல்லமைக் காலமே வாழ்வு!
.
இன்றும் இருக்கின்றோம் என்று மகிழ்ந்தாலே
நன்றே நடக்கும் நமக்கு!
.
இன்றுநாம் செய்யும் இனிமையிடும் நன்மைகள்
என்றும் நிலைக்கும் இருந்து!
.
அன்பான வார்த்தை அகிலத்தை ஈர்த்திடும்
அன்னைபோல் என்றும் இயம்பு!
.
கற்றதை இன்றேநீ கற்பித்தால் என்றென்றும்
பெற்றிடுவாய் நல்லுயர்ந்த பேறு!
.
கருணைமிகு உள்ளங்கள் காலம் கடந்தும்
இருந்திடும் என்றும் இசைத்து!
.
கவலைகள் வந்தால் கலக்கட்டும் காற்றில்
தவணைமுறை வேண்டாம் தவிர்!
.
பொன்நகை வேண்டாமே! புன்னகை போதுமென்று
நன்மனம் கொள்வீர் நகைத்து!
.
இன்றே கொடுத்துதவ என்றும்நம் வாழ்விலே
நன்றே நடக்குமென நம்பு!
.
நாளை !

-
வரும்நாட்கள் நன்மைத் தருமென நெஞ்சே
திருநாளாய் எண்ணி இரு!
-
உனக்காய் வருவதே ஒவ்வொரு நாளும்
மனமகிழ்ந்து துன்பம் மற!
-
நினைத்ததைச் செய்ய நிலைவருங் காலம்
உனக்கென உண்டே! உணர்!
-
எண்ணிய தெல்லாம் எதிர்வரும் நாட்களிலே
உண்மை நிகழ்வாய் உறும்!
-
நல்லதை எண்ணிட நாளை வளர்ந்திடும்
வல்லமை கொண்டநல் வாழ்வு!
-
எதிர்காலம் உண்டெ னயிருந்தால் நம்மின்
புதிர்வாழ்வைக் கண்போம் புரிந்து!
-
காலம் மருந்தெனக் காத்திருந்தால்  துன்பத்தின்
கோலமும் மாறும் குளிர்ந்து!
-
எதிர்நோக்குப் பார்வை எழுத்தில் அமைந்தால்
நதிபோன்று நன்மைதரும் நாள்!
-
நல்வினைச் செய்தாலே நாளை யெனும்நாளில்
தொல்லை வருமோ தொடர்ந்து!
-
செந்தமிழைப் பாடிச் சிறப்பாய் எழுதிடும்
எந்நாளும் பொன்னாள் எனக்கு!
-
பாவலர் அருணா செல்வம்

20.01.2018