செவ்வாய், 24 டிசம்பர், 2019

அரசின் கனவு!



.
எத்தனை சாதிகள் இருந்தாலும்
    …..எத்தனை பேதமும் இருந்தாலும்
பித்தென அவைகளைப் பிடித்தாலும்
    …..பிழையென அவைகளை விட்டாலும்,
இத்தரை மீதினில் பிறந்ததினால்
    …..இணையென ஒன்றிய உறவுகளை
முத்திரை ஆணைகள் விட்டதனை
    …..முடித்திட முயல்வது வெறுங்கனவே!
.
பாவலர் அருணா செல்வம்
24.12.2019

வியாழன், 19 டிசம்பர், 2019

தன்மேம்பாட்டுரை அணி!






ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதுதன்மேம்பாட்டுரை அணிஎனப்படும்.

.ம்
என்னிகர் ஆடுவோர் இங்குண்டோ? என்நடனம்
மின்னல்போல் கண்ணுள் விரைந்திடும்! – என்விரல்
காட்டிடும் ஆடல் கலைநயம் வேறெந்த
நாட்டிலும் இல்லையென்பேன் நான்!

பொருள்எனக்கு நிகராக நாட்டியம் ஆடுபவர் இங்கு இருக்கின்றனரா ? நான் ஆடும் நடனம் வானத்தில் தோன்றிடும் மின்னலைப் பார்ப்பது போல் விரைவாக நடந்து கண்ணுக்குள் கமழும். என் விரல் காட்டும் கலைநயம் மிக்க நாட்டிய பாவனைகள் வேறெந்த நாட்டிலும் காட்டுவதற்கு எவரும் இல்லை என்பேன் நான்.
     பாடலில் தனக்கு நிகர் நாட்டியம் ஆடிட வேறு எவரும் இல்லை என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுவதால் இதுதன்மேம்பாட்டுரை அணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019

கரகாட்டம்!



.
தலையிலே சுமைசுமந்து
தளராமல் ஆடிடுவார்!
கலையிலே பண்பாடாய்
காட்டிவிட்ட ஆட்டமிது!

ஒலிக்கின்ற ஓசைக்கே
உணர்வளித்து ஆடிடுவார்!
கலிகால நடப்புகளைக்
ஆட்டத்தில் காட்டிடுவார்!

கிராமத்துக் கலையுணர்வு
கவிஞனையும் பாடவைக்கும்!
இராக்கால வேளையிலும்
இயல்பாக பார்க்கவைக்கும்!

எத்தனையோ இன்னல்கள்
எல்லோருக்கும் உண்டன்றோ!
அத்தனையும் தலைசுமந்து
இத்தரையில் வாழ்கின்றார்!

என்றான உணர்வுகளை
எடுத்தோதும் ஆட்டமிது!
நன்றான கலையாகும்
நம்நாட்டின் அடையாளமே!
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019

இகழ்ச்சி விலக்கணி! (அணி இலக்கணம்)





    பாடலில் ஒரு செயலை விலக்குவதற்கான காரணத்தை இகழ்ந்து கூறி விலக்குவது இகழ்ச்சி விலக்குஎனப்படும்.

. ம்
தொடர்ந்துவந்து வாழ்வில் துயரமிடும்! நாளைக்
கடத்தும் தொலைக்காட்சித் தொல்லை! – நடத்திடும்
நாடகங்கள் உண்டாக்கும் நன்மையெனும் தீமையாம்
ஊடகம் வேண்டாம் ஒழி!

பொருள் தொலைக்காட்சியில் நடக்கும் நாடகங்களால் வாழ்வு துயரம் தரும். நாட்களைக் காரணமின்றிக் கடத்திவிடும். அதில் கிடைக்கும் இன்பங்கள் நன்மை போன்று தீமை பயக்கும். அதனால் ஊடகம் என்னும் தொலைக்காட்சிப் பெட்டியை வேண்டாம் என்று ஒழிப்போம்.
    பாடலில் விலக்குவதற்கான தொலைக்காட்சிப் பெட்டியை இகழ்ந்து கூறி விலக்குவதால் இது இகழ்ச்சி விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019

வெள்ளி, 13 டிசம்பர், 2019

உதாத்தவணி – 22




வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்.   ----- 73

பொருள்ஓர் இடத்தில் உள்ள செல்வத்தின் உயர்ச்சியையும், உயர்ந்த உள்ளத்தில் ஏற்கப்பட்ட உயர்ந்த உணர்ச்சியையும் மிகுத்து அழகு பொருந்தக் கூறுவதுஉதாத்தவணிஎனப்படும்.

1, செல்வ மிகுதி

    பாடலில் ஓர் இடத்தில் அல்லது ஒருவரிடத்தில் உள்ள செல்வத்தின் மிகுதியை அல்லது அதன் பெருமையை அழகு பொருந்தப் பாடுவது செல்வ மிகுதி உதாத்தம் எனப்படும்.

. ம்
மண்வளமும் இன்ப மழைவளமும் உள்ளுயர்
பெண்வளமும் வீரப் புகழ்வளமும்தண்டமிழ்
ஊட்டிடும் சொல்வளமும் ஒன்றாக எங்களின்
நாட்டிலுண்டே செல்வ நயம்!

பொருள்செல்வங்கள் எனச்சொல்லும் மண்ணின் வளமும், இன்பத்தை நல்கும் மழைவளமும், உயர்ந்த உள்ளத்தைக் கொண்டிருக்கும் பெண்களும், வீரம் கொண்ட ஆண்களால் புகழ்வளமும், தாய்த்தமிழால் எங்களிடம் உள்ள மொழிவளமும் ஒன்றாக எங்களின் நாட்டினில் நிறைய உண்டு.
    ஓர் இடத்தில் இருக்கும் செல்வ மிகுதியைப் பாடி இருப்பதால் இதுசெல்வ மிகுதி உதாத்த அணிஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
13.12.2019

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாரதியைப் போற்றுவோம்!





பூட்டில்லா வீட்டில் நுழைவதுபோல்வந்து
புண்ணிய பூமியில் வாழ்ந்தவரை - வாலை
ஆட்டியே நம்மை அடிமைசெய்துவேற்று
நாட்டவர் எம்மை ஆளுவதோ?

காட்டுக்கே அரசன் சிங்கமன்றோஅதைக்
காப்பதே அதனின் திறனன்றோ - சின்னக்
கூட்டுப் புழுவாக இருந்தாலும்தம்மின்
கூண்டினில் வாழ்வதே நன்றாகும்!

வாட்டிய கொடுமை வஞ்சனைங்கள்கண்டு
வாடி வதங்கிய பாரதியேதீமை
ஓட்டிட வேண்டும் என்றெண்ணியேநாளும்
ஓதிய தெல்லாம் உயர்வாகும்!

நாட்டுக்கு நன்மையைச் செய்திடவேநல்ல
பாட்டினில் கருவைச் சேர்த்துவைத்தான் ! – கவி
தீட்டிய தெல்லாமே உயர்வாகும்வீரம்
ஊட்டிய சுவை உணர்வாகும்!

மூட்டிய வீரச் சொற்களாலேநெஞ்சை
மூடி நடுக்கிய பயமெல்லாம்தீயில்
காட்டிய பஞ்சாய் மறைந்ததுவேஉடன்
கடமை சூட்டை ஏற்றியதே!

ஏட்டினில் உள்ள இலக்கணத்தையாரும்
ஏற்றிடும் வண்ணம் எளிமையாக்கிப்புதுப்
பாட்டென்ற எண்ணம் ஏற்றிவைத்தஉயர்
பாரதியை நாம் போற்றிடுவோம்!
.
(கும்மி)
பாவலர் அருணா செல்வம்
11.12.2019

சனி, 7 டிசம்பர், 2019

தூது போ வண்ணமலரே !



.
அல்லி குளத்தில்
நீராடுகிறாள் என்
நெஞ்சிற்கினியாள்!
ஆம்பலும் அவள் முகத்தைக்
காண நாணும்!
கயல்களும் அவள் கண்ணழகில்
மயக்கம் கொள்ளும்!

நீரைவிட்டு வெளிவரும்
நிலா போன்ற அவளின்
உருவைக் காண அன்னங்கள்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்!

அவளின் மேனியைத்
தொட்டிடும்
குளத்து நீருக்கும் குளிரெடுக்கும்!

அவள் முகத்தைக் கண்ட
வண்டுகள் பூந்தாதின்
மதுவருந்த வட்டமிடும்!

இயற்கை அவளைத்
தொட்டே தழுவினாலும்
சிணுங்காத சின்னவள்
என்பார்வை பட்டதும்
நாணங்கொள்வாள்!

வண்ணமலரே….
நானும் உங்களைப் போலவே
அவளிடம் மயங்கி இருப்பதைத்
தூதாக போய் சொல்லிவிடு!
உன்னிடத்தில் நான்
கொடுத்த முத்தத்தை
உனைத் தூக்கி அவள் முகரும் போது
நீ கொடுத்து,
என் நினைவைக் காட்டிவிடு!
.
பாவலர் அருணா செல்வம்
07.12.2019