திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மோதல் கூட மோகம்தான்!! (கவிதை)



அறமும் அன்பும் இல்வாழ்வில்
    அமையும் அழகை எடுத்துரைத்தார்!
புறமும் பொறையும் பொதிந்துவிடப்
    புகழைப் பெறவே வழிசொன்னார்!
பிறனில் விழையாத் தன்மையினால்
    பெருகும் பேற்றை வகுத்திட்டார்!
துறவும் தவமும் துறந்தோர்க்கே
    பிறவும் சொன்னார் அறப்பாலில்!!

தெரிந்து தெளிதல் என்னென்றும்
    தெளிவு என்ப(து) என்னென்றும்
அறிவாம் உடைமை என்னென்றும்
    அரணும் என்ப(து) என்னென்றும்
குறிப்பும் அறிதல் என்னென்றும்
    குடிமைப் பெருமை என்னென்றும்
பெரியார் துணையும் வேண்டுமென்றும்
    பிரித்து உரைத்தார் பொருட்பாவில்!

மோதல் கூடக் காதலிலே
    மோகம் என்று மொழிந்திட்டார்!
மாதர் கொண்ட ஆசைகளை
    மனத்தில் கொண்டு வரைந்திட்டார்!
பாதல் படைக்கும் பாவலர்கள்
    படித்தால் கவிதை வளம்பெருகும்!
காதல் சிறப்பைக் கருத்துடனே
    கவிதை படைத்தார் இன்பத்தில்!!

அருளாய் நெறியாய் அமுதமாய்
    அழகாய் ஒழுங்காய் அறிவுடனும்
கருத்தாய் அமைந்த கவியமுதைக்
    கருத்தில் கொண்டு படித்திட்டால்
அருளும் பொருளும் என்னென்றும்
   அமைந்த வாழ்க்கை மெய்யென்றும்
உருளும் மனமும் பொய்யென்றும்
    உயர்ந்த கருத்தை அறிந்திடலாம்!!

அருணா செல்வம்

(தலைப்பைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் என்னைத் திட்டாதீர்கள். இப்படியெல்லாம் தலைப்புப் போட்டால் தான் என் வலையைத் திறக்கிறார்கள். அதனால் தான்! பெரியவர்கள் மன்னிக்கணும்)

சனி, 11 ஆகஸ்ட், 2012

இதயம் ஏந்தி வணங்குகிறேன்!!! (கவிதை)




திருக்குறள்.

சின்னச் சின்னச் சொல்லெடுத்துச்
    செந்தேன் கடலில் ஊறவைத்துக்
கன்னல் கொடியில் நாரெடுத்துக்
    கனியின் சாற்றில் நனைத்தெடுத்து
வண்ண வண்ணப் பூக்களினை
   வடிவாய்க் கைகள் தொடுப்பதுபோல்
கன்னித் தமிழைச் சேர்த்தெழுதிக்
    கவியில் கருத்தைத் தொடுத்தாரோ?

எண்ணம் எல்லாம் தமிழாகி
    எழுதும் எழுத்தில் கலந்துவிட
விண்ணில் பூத்த விண்மீனே
    வேண்டி வந்து விழுந்துவிடப்
பொன்னில் வார்த்த பொற்பூப்போல்
    பொலிந்து சொற்கள் மின்னிவிடக்
கண்ணில் இருக்கும் பாவையைப்போல்
    கருவை உருவாய்ச் சேர்த்தாரோ?

அருளும் பொருளும் இன்பமென
    அழகாய்ப் பிரித்தார் முப்பாலில்!
உருளும் மனத்தை நிலைநிறுத்த
    உயர்வாய்ச் சொன்னார் அறப்பாலில்!
இருளும் மனிதர் வாழ்வுயர
    ஏற்றம் மொழிந்தார் பொருட்பாலில்!
மருளும் மங்கை மனம்மகிழ
    மதுவைக் கலந்தார் இன்பத்தில்!

எதுதான் இல்லை திருக்குறளில்?
    எடுத்துப் புரட்டிப் பார்த்திட்டேன்!
மதுதான் குறள்கள் ஒவ்வொன்றும்
    மனத்தை நன்றே மயக்கிவிடும்!
அதுதான் அன்பும் அறத்தையும்
    அழியாப் புகழை அளிக்கிறது!
இதுதான் வாழ்க்கைத் தத்துவமே!
    இதயம் ஏந்தி வணங்க்கிறேன்!!


(குறளின் பெருமை தொடரும்)
அருணா செல்வம்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

இன்பத்தின் இருப்பிடமே...!!! (கவிதை)




சொல்லெல்லாம் உனைப்பாடச்
   சுகம்பெற்றுச் சுடருதடி!
பல்லெல்லாம் முத்தாகப்
   பளபளத்து மின்னுதடி!
புள்ளெல்லாம் பறப்பதுபோல்
   நற்புலமை சிறக்குதடி!
உள்ளெல்லாம் உன்நினைவு   
   ஊற்றாக ஊறுதடி!

அணைவிட்டு அடைத்தாலும்
   ஆசையலை அடங்கிடுமோ!
கணையிட்டு மன்மதனும்
   கால்வலிக்கக் காத்துள்ளான்!
உனைத்தொட்டுக் கவிபடைக்க
   உன்னருளே வேண்டுமடி!
இணையிட்டு எதைச்சொல்வேன்!
   இன்பத்தின் இருப்பிடமே!!


அருணா செல்வம்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தமிழ் அழகு!! (கவிதை)



 பதிற்றந்தாதி

எண்ணப் பறவை எழுந்துதன் வாய்திறந்து
சொன்ன சுவையினைச் சொல்லிடவா? – மின்னிடும்
வண்ண வடிவழகை வார்த்தையில் வார்த்திடும்
கன்னல் மொழியில் கலந்து!

கலந்து கிளர்ந்த களவை எழிலாய்
மலர்ந்து நிறைந்த மனத்தில் – நலமாய்
புலர்ந்து விடிந்த பொழுதின் அழகாய்
வளர்ந்த தமிழை வரைந்து!

வரைய அளைந்திடும் கோலம்! வளர
விரைய அழிந்திடும் காலம்! – விரைந்து
நிறைந்த தமிழழகு நீங்காமல் நிற்க
குறைந்து மறையுமா? கூறு!

கூறும் நலத்தால் குடிகள் மனத்திலே
ஏறும் வளமாய் எழில்தமிழாய்! – வீறுகொண்டு
சேரும் மனத்தில் செழித்திடும் செந்தமிழால்
பேரும் பெருமையும் பார்!

பாருங்கள் என்றதும் பாவலர் பாடிடுவார்!
பார்..எங்கள் பாக்களைப் பார்ப்பதனால் – சீராக்கும்!
ஏர்..எங்கள் எண்ணங்கள்! என்றும் தமிழழகைச்
சேருங்கள் செம்மை கொடுத்து!

கொடுத்து வளர்த்த கொடைகளைநாம் பாவில்
எடுத்து வடித்திடுவோம்! இன்பம் – அடுக்கித்
தொடுத்த கவித்தொடரில் துன்பமும் நன்றாய்
விடுக்கும் இனிய விருந்து!

விருந்தின் அறுசுவையை நாபெறும்! வேண்டும்
மருந்தின் தருசுவையை ஊனே – அருந்தும்!
கருத்தின் பெறுசுவையைக் கற்றோர்!சீர் உற்றோர்
பொருந்தப் பெறுவார் புகழ்ந்து!

புகழும் பணப்பெருக்கால் பூரிக்கும் நெஞ்சை
இகழும் இழிவென்றே! என்றும் – சுகமாய்த்
திகழும் தெளிதமிழ் இன்பத்தில் மூழ்க
மகிழும் மனங்கள் மலர்ந்து!

மலர்ந்து மணம்வீசும் மல்லிகை முல்லை
புலர்ந்த பொழுதிலே வாடும்! – பலமாய்
வளர்ந்து தவழ்ந்திடும் வண்டமிழ்ப் பெண்ணோ
நிலமென நிற்பாள் நெடிது!

நெடிதென்று வாழ்வை நினைத்து வருத்தும்
குடிகளில் கோமான் செயலைப் – பொடிக்கத்
துடிக்கும் இதயத்தில் தோன்றும் தமிழோ
இடிக்கும் இடியென எண்ணு!


 அருணா செல்வம்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகனும்...!! (1)


     இது ஒரு மொக்கை பதிவு. யாரும் வந்திடாதீங்க. அப்படியும் மீறி வந்துட்டீங்கன்னா.... அந்த உண்மையை மறைக்காமல் சொல்லிவிடனும். அதுக்கு பதிலா கல்லு கட்டையை எல்லாம் தூக்கக் கூடாது. ஆமா... சொல்லிட்டேன்.


    உங்கள் எல்லோருக்கும் பாட்டி வடை சுட்ட கதை தெரியும் இல்லையா....?
    நிச்சயமாக தெரிந்திருக்கும். அப்படி தெரியாமல் யாராவது இருந்தால் எந்தப் பாட்டி பக்கத்தில் இருக்கிறார்களோ.... (அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
    இப்போ... எனக்கு என்ன தெரியனும் என்றால்... இந்த கதையில் வடையைச் சுட்டது...

பாட்டியா....?
காக்காவா....?
நரியா....?


   இதற்கு பதில் தெரியாமல் நான் ரொம்பவும் குழம்பி போய்விட்டேன். இதே மாதிரி நிறைய உண்மைகள் எனக்கு தெரியாததால் உங்களிடம் இப்படி அடிக்கடி கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்ன்னு.... சரிசரி நிறுத்திக்கிறேன்.


கவிபாடும் கண்கள்!! (கவிதை)




கட்டி அணைக்கும் காதலனும்
    கண்ணே என்பான் கனிவாக!
தொட்டில் போடும் தாயவளும்
    தூக்கி மகிழ்வாள் கண்ணென்றே!
மொட்டில் இருக்கும் தேன்போல
    மூழ்கி இருக்கும் காட்சிகளைக்
கட்டும் பாட்டில் கட்டிவிட்டுக்
    கவிதை மொழியும் கருத்தாக!

விண்ணில் இருக்கும் விளக்கென்ற
    வியக்கும் கல்வி அறிவுதனை
மண்ணில் இருக்கும் மாந்தர்கள்
    மயக்கம் இன்றிக் கற்றுவந்தால்
கண்கள் பெற்ற பயன்தனையே
    கடைசி வரையில் பெற்றுவிடும்!
எண்ணும் செயலும் உயர்வாக
    என்றும் தொடர்ந்து புகழெடுக்கும்!

பார்க்கும் காட்சி பாரங்கள்!
    பசுமை நிறைந்த கூவங்கள்!
ஏற்கும் விதியின் விளையாட்டாய்!
    எதிர்க்க முடியாக் கண்மயங்கும்!
வேர்க்கும் உடலில் கண்ணிருந்தும்
    விருப்ப மின்றேல் கண்கலங்கும்!
தீர்க்கும் தெய்வம் வருமென்று
    தேடித் தேடிக் கண்ணுறங்கும்!!


அருணா செல்வம்.
 
( இன்று கவிமனத்தில் “போகப் போகத் தெரியும்“ தொடர் -20
தட்டுங்கள்..  http://kavimanam.blogspot.fr/ )

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கண்ணே... காதல் பிறப்பிடம்!! (கவிதை)



 
எண்ணப் பறவை சிறகுவிரித்(து)
    எழுந்து பறக்க உதவிவிடும்!
வண்ணம் என்ப(து) என்னவென
    வகையைப் பிரித்து உணர்த்திவிடும்!
உண்ணும் முறையும் உயிர்வாழ
    எண்ணும் மனித மனங்களுக்கு
கண்கள் என்ப(து) ஓருறுப்பு!
    காணும் செயலால் பேருறுப்பு!

குறும்புப் பார்வை குத்திழுக்கும்!
    குவளை மலர்கள் மறைந்திருக்கும்!
கரும்புச் சாற்றின் சுவையிருக்கும்!
    காதல் அதிலே கமழ்ந்திருக்கும்!
அரும்பு போன்று கண்விரிய
    ஆசை வண்டாய் ஆடிவரும்!
இரும்பு உடலாய் இருந்தாலும்
    இலவம் பஞ்சாய் மிதக்கவிடும்!

பண்கள் படைக்கும் பாவலர்கள்
    பசுமைத் தமிழில் மைநிரப்பிப்
பெண்கள் கண்ணை வண்டென்றும்
    பிளக்கப் பாயும் அம்பென்றும்
விண்ணில் ஓடும் மீனென்றும்
    மண்ணில் வாடும் மலரென்றும்
தண்ணீர் வாழும் கயலென்றும்
    தாகத் துடனே எழுதிடுவார்!

பெண்ணின் கண்கள் போதைதரும்!
    பூத்த மலரால் பாதைதரும்!
கண்கள் பேசும் மொழியாலே
    காளை நெஞ்சம் சோலைபெறும்!
மண்ணில் மகத்தாய் வாழ்ந்தாலும்
    விண்ணில் மிதக்க விட்டுவிடும்!
கண்ணும் கண்ணும் கவ்வுவதால்
    கண்ணே காதல் பிறப்பிடமே!


(கண்கள் மேலும் கவியெழுதும்)
அருணா செல்வம்.


புதன், 1 ஆகஸ்ட், 2012

அன்பே அனைத்தும் !! (கவிதை - 3)





துன்பம் என்றே ஒன்றுவந்து
    துயரக் கடலில் ஆழ்த்துமிடம்
அன்பால் அவன்கண் துடைத்துவிட்டு
    ஆறு தலாகப் பேசிநின்றால்
அன்பில் கலந்த அவனுள்ளம்
    அமைதி கொஞ்சம் அடைந்துவிடும்!
முன்பின் காணாத் தெய்வத்தை
    முன்னே கண்ட நிறைவுவரும்!

கொடுக்கக் கொடுக்கக் குறையாமல்
    கொடுத்தப் பின்பும் நிறைந்திருக்கும்!
எடுத்தே அதனை வைப்பதற்கோர்
    இடத்தைத் தேடி அலையாமல்
அடுத்துக் காணும் அனைத்துயிர்க்கும்
    அள்ளி அள்ளிக் கொடுத்துவந்தால்
அடுத்தப் பிறவி ஒன்றிருந்தால்
    அதிலும் இன்பம் அடைந்திடலாம்!

தாவி யோடும் குரங்குபோலத்
    தாவும் மனத்தைக் கொண்டோரும்
பாவி இவன்தான் எனச்சொல்லும்
    பாவச் செயலைப் புரிவோரும்
காவி லிருக்கும் கசப்பாக
    கல்லாய் இதயம் கொண்டோரும்
ஆவி போகும் முன்னாலே
    அன்பிற் காக ஏங்கிடுவார்!

அன்னை கொடுத்த நல்லன்பு
    ஆயுள் வரையில் நிலைத்திருக்கும்!
கன்னி காட்டும் உள்ளன்பு
    காதல் களத்தில் பேரெடுக்கும்!
தன்னுள் இருக்கும் மென்னன்பைத்
    தர்மம் போலக் கொடுத்துவந்தால்
உன்னுள் இருக்கும் தெய்வத்தை
    ஒருநாள் நீயே அறிவாயே!!


அருணா செல்வம்