செவ்வாய், 17 நவம்பர், 2015

பள்ளியறைப் பாடல் !


படிப்போமா…  பள்ளியறை
பாடத்தைச் சேர்ந்து
படிப்போம் வா.

பருவத்தில் படித்த படிப்பெல்லாம் – அந்தப்
பள்ளியறை கற்றுத் தந்த பாடங்கள் !
இருவரும் சேர்ந்து படிப்பதெல்லாம் – இந்தப்
பள்ளியறை கற்றுத் தரும் பாடங்கள் !         

ஒன்றும் ஒன்றும் இரண்டென்று – அங்கே
ஓதிய பாடம் சொல்லித் தரும் !
ஒன்றும் ஒன்றும் ஒன்றென்றே – இங்கே
உணர்ந்த நெஞ்சம் துள்ளி வரும் !          (படிப்போமா… )        

ஆக்கம் அழிவு எனவுணர்த்தும் – நல்
ஆற்றல் கொண்டது விஞ்ஞானம் !
ஏக்கம் போக்கி ஆக்கங்களை – உடன்
இயற்கை யாக்கும் மெய்ஞானம் !            

யாரோ வாழ்ந்த வரலாற்றை - நாம்
ஏட்டில் என்றோ படித்துவிட்டோம் !
ஊரே போற்ற வாழ்ந்திடுவோம் ! – அதை
உலகம் படிக்க வைத்திடுவோம் !            (படிப்போமா… )           

தொட்டால் சுடுமெனக் கற்றாலும் – தீ
சுட்டபின் உண்மை வலியறிவோம் !
எட்டி இருந்தே விட்டாலும் – வலி
இதயத்துள் இருப்பதை உடனறிவோம் !       

ஏட்டில் படித்த அறிவெல்லாம் – நம்
இளமைப் பருவ அறவழிகள் !
கூட்டில் படிக்கும் படிப்பினையால் – இன்பம்
கூடும் வாழ்வின் பிறவாழிகள் !              (படிப்போமா… )        


அருணா செல்வம். 
18.11.2015

10 கருத்துகள்:

  1. [[[ஒன்றும் ஒன்றும் இரண்டென்று – அங்கே
    ஓதிய பாடம் சொல்லித் தரும் !
    ஒன்றும் ஒன்றும் ஒன்றென்றே – இங்கே
    உணர்ந்த நெஞ்சம் துள்ளி வரும் ! ]]

    ------------------------------------
    பள்ளியறைப் பாடல் வேற!
    கொஞ்சம் நம் தமிழ் இங்கே!

    ----ஒன்றும் ஒன்றும் இரண்டென்று – அங்கே
    ஓதிய பாடம் சொல்லித் தரும் !
    ஒன்றும் ஒன்றும் மூன்றன்றே--மூன்றாவது
    பத்து மாதத்தில் துள்ளி வரும் !
    ______________
    இது எப்படி இருக்கு? புலவர் அருணா அவர்களே!

    பதிலளிநீக்கு

  2. யாரோ வாழ்ந்த வரலாற்றை - நாம்
    ஏட்டில் என்றோ படித்துவிட்டோம் !
    ஊரே போற்ற வாழ்ந்திடுவோம் ! – அதை
    உலகம் படிக்க வைத்திடுவோம் !

    /////////
    பாடம் படிச்சதுக்கான முழு பலனும் இப்படி வாழ்ந்தாதான் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. தொட்டால் சுடுமெனக் கற்றாலும் – தீ
    சுட்டபின் உண்மை வலியறிவோம் !
    எட்டி இருந்தே விட்டாலும் – வலி
    இதயத்துள் இருப்பதை உடனறிவோம் !/////
    இந்த மழையில் இப்படி ஒரு கவிதையா...?இசையோடு பாட நன்று....இணையோடு பாட இன்னும் நன்று...

    பதிலளிநீக்கு
  4. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு