திங்கள், 6 அக்டோபர், 2014

ஆளுக்கொரு நீதி!!


முதல் இரவு!!!
    நித்தியாவிற்குப் புதுப் பெண்ணிற்கான பயமோ தயக்கமோ அல்லது மகிழ்ச்சியோ எதுவும் இல்லை. காரணம் அவளுக்கும் இது முதலிரவு கிடையாது!
    ஐந்து ஆண்டுகள் காதலித்து மணந்தவனை அவசரமாக வந்த லாரிக்குப் பலிகொடுத்து விட்டு இரண்டு வருடம் விதவைக் கோலம் பூண்டு.. அம்மா அப்பாவின் அடுத்தவளுக்கு வழிவிடாத சனியனே..’ என்ற திட்டுகளை வாங்கி வாங்கி… அவர்களுக்குப் பாரமாகக் கூடாது என்று வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் கொடுத்தால் இவர்களின் பாரம் குறையுமே என்று எண்ணிய பொழுது… இந்த வரன் வந்தது.
    ‘தோ பாரும்மா நித்தியா.. அந்தப் பாண்டியன் தம்பிக்கு நல்ல வேலை. கைநிறைய சம்பளம். வீட்டுலேயும் அவரோட அம்மாவும் அந்த கொழந்தையும் தான். போன வருசம் அவன் பொண்டாட்டி ஒரு விபத்துல செத்துட்டாளாம். கொழந்தைய வளக்குறதுக்காகத் தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க பெண் கேக்குறார். எந்தப் பிக்கல் பிடுங்களும் கெடையாது.
    நான் நம்ம தேவகிய வேணும்ன்னா கட்டித்தர்றேன்னு சொன்னேன். ஆனா அவரு வேணாம்ன்னுட்டார். வாழ்க்கையை இழந்து நிக்கிற உன்னமாதிரி விதவையாலத் தான் தன் மனநிலைய புரிஞ்சி நடக்க முடியும்ன்னு சொல்றார்.
    அதுமட்டுமில்ல.. உன்னையும் நா எவ்வளவு நாளைக்குத்தான் காப்பாத்தி பாதுகாக்க முடியும்நல்ல வாழ்க்கை உனக்குத் தானா வருது. வேணான்னு சொல்லாத. உனக்குப் பின்னாடி ரெண்டு பேரை நான் கரையேத்தியாகணும்.. எங்க எடத்துலேர்ந்து கொஞ்சம் யோசிச்சிபாரு. உன்னைக் காலமெல்லாம் வச்சி எங்களால காப்பாத முடியாது.
    நான் போயி நீ கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டதா மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடுறேன்.
    அவளின் சம்மந்தம் கேட்காமலேயே சம்மந்தம் முடிந்தது.

    விதியே என்று அறைக்குள் நுழைந்தாள்! ஆனால் பாண்டியன் சற்றுக் குதுகலமாகத்தான் இருந்தான். அவள் நுழைந்ததும் அவள் கையிலிருந்த பால் செம்பை வாங்கி வைத்துவிட்டு அருகில் அமரச் சொன்னான்.
    தலையணைக்குக் கீழ் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து நீட்டினான். வாங்கிப் பார்த்தாள்;. அது அவனின் திருமணப்படம்! அவன் முதல் மனைவி மிகவும் அழகாக இருந்தாள்;.
    ‘நித்தியா.. இவதான் உமாதேவி! என்னுடைய நல்ல வாழ்க்கைக்கு அச்சாரமாய் இருந்தாள்;. யார் கண் பட்டதோ.. இவ்வளவு சீக்கிரம் பிரிஞ்சி போயிட்டா.. ஆனாலும் அவ இன்னமும் என் மனசுல வாழ்ந்துக்கினு தான் இருக்கிறா.. எனக்கு எப்பவுமே துணையா இருக்கிறான்னு தான் நெனைக்கிறேன்;. நீயும் அப்படியே நெனச்சிக்கோ…”
    எதுவும் பேசாமல் இருந்த நித்தியாவைப் பார்த்தான். நித்தியா அவ நமக்குத் தெய்வம் மாதிரி. அவளை நீயும் மனசார கும்பிட்டுக்கோ. அவளுடைய ஆசிர்வாதத்தோட நம் வாழ்க்கையைத் தொடங்கலாம்…”
    அவள் கையிலிருந்த படத்தை வாங்கி அதில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்துவிட்டுத் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு விளக்கை அணைத்தான்.

   ‘கார்த்திக்அம்மா படத்தைக் கும்பிட்ட பிறகுதான் பள்ளிக்குப் போவணும்ன்னு எத்தனை முறை சொல்லுறதுஏய் நித்தியா… உமா படத்துல பூ வாடிப் போய் இருக்குது. இன்னைக்கு என்னோட உமா பிறந்தநாள். படத்தைத் தொடச்சிப் பூ போட்டுவை. நா ஆபிசு முடிஞ்சி வந்ததும் கோவிலுக்குப் போகலாம்…”
       வார்த்தையில் தெரிந்த அழுத்தமே அது உத்தரவு என்றது.
   அவன் போய்விட்டான்!
   நித்தியா படத்தைத் துடைக்கும் பொழுது பார்த்தாள். உமாதேவி பிறந்ததேதி… நித்தியாவின் முதல் திருமணநாள்.
   மனம் விரும்பிய காதலனையே கைபிடித்து வாழ்ந்த ஒருவருட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சொர்க்கமாய் இனித்த இன்பங்கள்..
   ‘நித்தியா கௌம்பு... கடைக்குப் போலாம்…”
   ‘கடைக்கா.. இன்னைக்கு எதுக்குக் கடைக்கு..?”
   ‘இன்னைக்கு ஐயாவோட சம்பளநாள்.. நேரா கடைக்குப் போறோம். ஒனக்குப் புடிச்ச பொடவ வாங்குறோம். அப்படியே ஓட்டல்ல சாப்பிட்டு வீட்டுக்கு வரலாம்…”
   ‘எதுக்குங்க அனாவசிய செலவு..அந்தச் காச சேர்த்து வைச்சா நாளைக்கு ஒதவுமில்ல..?’
   ‘நாளைக்குத் தேவப்படும் போது சம்பாதிச்சிக்கலாம். ஆனால் இன்னைய நாள் நாளைக்கு வராது.. இருக்கிற நாளெல்லாம் சந்தோசமா இருப்போமே.. போமா.. போய்க் கிளம்பி வா.
   அவள் அவனுடன் இருந்த நாளெல்லாம் சந்தோசமாகவே இருந்தாள்.
   மனத்திற்கு மட்டும் எத்தனை சிறகுகள்... நினைத்த போதெல்லாம் இழந்த இன்பங்களைத் தூக்கிக் கொண்டு அதனால் பறக்க முடிகின்றதே...!
   “நித்தியா குட்டி.. எனக்கு உன்னமாதிரியே ஒரு சின்ன நித்தியா குட்டி வேணும். அந்தச் சின்ன நித்தியாவுக்காக நாம காலமெல்லாம் வாழணும்..
   அவள் வயிற்றைத் தடவியபடி சொன்ன வார்த்தைகள்
   “உன்னைப் பெத்ததுக்காக உனக்கு வேணா சோறு போடலாம். செத்துப் போனவன் குழந்தை இனியெதற்கு?” என்று இரக்கமின்றி மூன்று மாதத்தில் கட்டாயப் படுத்தி கலைத்த போதே மீதியிருந்த நித்தியாவின் காதல் கனவுகளும் கதையும் கலைந்துபோனது.
    இன்று ஏதோ வாழ்க்கை வாழ்கிறோம் என்று வாழ்ந்தாலும் இதயம் இழந்ததை மறக்கவில்லையே..!!
   கைப்பையில் மறைத்து வைத்திருந்த இனியனின் பாஸ்போட் சைஸ் படத்தை எடுத்துப் பார்த்தாள். அழுகை அடக்க முடியாமல் பீரிட்டு வந்தது. வாய்விட்டு அழமுடியாமல் மனதிற்குள் அழுதாள்.
   என்ன வாழ்க்கையிது..இறந்தவனுக்காக வாய்விட்டுக்கூட அழமுடிவதில்லை.. மனம் விம்மியது.
   மாமியார் அழைக்க.. படத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வேலையைக் கவனித்தாள்.

   ‘நித்தியா.. காலையில ஏதோ படத்தைப் பார்த்து அழுதியாம்.. அம்மா சொன்னாங்க. உண்மையா..
   தலையை வருடியபடி பாண்டியன் கேட்டான். அவள் பேசாமல் இருந்தாள். அவனே தொடர்ந்தான்.
   ‘நித்தியா.. நாம புது வாழ்வைத் தொடங்கி வாழ்கிறோம்.. நீ பழையதையே நெனச்சிக்கினு இருந்தா.. ஒங்கூட நான் எப்படி சகசமாய் இருக்க முடியும்… பழசயெல்லாம் மறந்துடு. போய் அந்தப் படத்தைக் கொண்டு வா.
   அவள் தயக்கத்துடன் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி சிகரெட் லைட்டரால் கொளுத்தித் தூக்கி எறிந்தான்.
   ‘என்னைத் தப்பாய் நெனைக்காத நித்தியா.. இந்தப் படமே நம்மைப் பிரிச்சிடும்ன்னு தான் அதை நான் கொளுத்தினேன். இனி உனக்கு நான் எனக்கு நீன்னு வாழலாம்.. என்ன நான் சொல்றது புரியுதா..?”
   சொல்லிக்கொண்டே தன் மார்பில் சாய்த்தான்.

   மறுநாள்..
   ‘நித்தியா.. இங்கிருந்த உமாதேவி படம் எங்கே..?”
   ‘நான்தாங்க பழைய சாமான் போட்டு வைக்கிற அறையில கொண்டு போயி வச்சேன்.
   ‘ஏன்..?’
   ‘நீங்க தானே சொன்னீங்க.. பழசயெல்லாம் மறந்து வாழலாம்ன்னு.. நாம இதையெல்லாம் மறந்து புது வாழ்க்கை வாழலாம்ன்னு தான் படத்தை அந்த அறையில வைச்சேன்.
   ‘அறிவிருக்குதா…? மூதேவி. அவ எனக்குத் தெய்வம்டீ.. ஏற்கனவே ஒன்ன முழுங்கிட்டுத் தான் இங்க வந்திருக்கிற. உம்மொகத்துல முழிச்சிட்டுப் போனா போரக் காரியம் உருப்படுமா..அவ மொகத்துல முழிச்சிட்டுப் போனத்தான் எந்தக் காரியமும் உருப்படும். போ.. போயி அந்தப் படத்தை ஒடனே கொண்டாந்து மாட்டு…’
   அவள் அதிர்ச்சியில் பேசாமலிருக்க அவனே சென்று அந்தப் படத்தைக் கொண்டு வந்து மாட்டினான்.
       ‘அப்போ நானும் இந்திரன் படத்தை இங்க மாட்டலாமா..?” அவள் சொல்லி முடிக்கவில்லை... கன்னம் எறிந்தது அவன் விட்ட அறையில்!
    ‘இதோ பார்.. இந்த மாதிரி ஏட்டிக்குப் போட்டியெல்லாம் இங்க நடக்காது. நான் உனக்கு வேணும்ன்னா... நான் சொல்றபடி கேட்டு நடந்துக்கோ. செத்தவனையே மனசுல நெனச்சிக்கினு தான் இருப்பேன்னா... நீ தாராளமா உன் அம்மா வீட்டுக்குப் போயிடு..
   ஒரு விரலைக் காட்டி எச்சரித்து விட்டுச் சென்றான்.
   உமாதேவி பூவோடும் பொட்டோடும் படத்தில் சிரித்தாள்.
   அவளுக்கு புரிந்தது. ஆணுக்கும் பெண்ணிற்கும் மனம் ஒரே மாதிரி அமைந்திருந்தாலும் ஆளுக்கொரு நீதிதான்.
   நித்தியா பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் தாய்விட்டை நோக்கி நடந்தாள். அவளுக்குத் தெரியும் பின் வரும் பிரச்சனைகள் என்னவென்று! இருந்தாலும் தனக்கென்று இருக்கும் நீதியைத் தேடி நடந்தாள்.

அருணா செல்வம்

27 கருத்துகள்:

  1. நித்தியா நீதியைத் தேடி நடக்கவில்லை... நீதியை நிலை நாட்டிச் சென்றாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னால் சரியானதாகத்தான் இருக்கும் “உண்மைகள்“

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உணர்வுகளைத் தட்டி எழுப்பிய மிகச் சிறந்த கதை !
    வாழ்த்துக்கள் என் தோழியே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. மாற்றம் வர வேண்டும்.
      மாற வேண்டும்...... இல்லாங்க....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  5. ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதிதான் இன்று வரை. காலம் மாறும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறும் வரை காத்திருக்க வேண்டாம்.
      நாமே மாற்றுவோம்....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  6. அருமையாக எழுதியுள்ளீர்கள் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.இந்த நிலைப்பாடு ஏன் இப்படி அடக்குமுறை இது தேவையா. சா என்ன உலகம் என்று எண்ணத் தோன்றுகிறது.
    அருமை அருமை தொடர வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக்கு முறைகள் இன்னும் நிறைய இருக்கத்தான் செய்கிறது...
      நம் நாட்டில் மட்டுமல்ல.... வெளி மேலை நாடுகளிலும் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. என்னதான் விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தை எட்டிய காலத்தில் வாழ்ந்தாலும், மனம் என்பது முழுமையான வளர்ச்சியைக் கண்டுள்ளதா என்பது சந்தேகமே
    ஆளுக்கொரு நீதி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வார்த்தை உண்மையானது தான் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. நீதி தனித்தனியாகத்தான் ! கதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஆளுக்கொரு நீதி!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  9. சகோதரி! சத்தியமாக முதலில் மனம் மிகவும் கனத்து விட்டது! சே என்ன ஒரு ஆண் வர்க்கம்! இந்த நித்தியா ஏன் இன்னும் வெளியேற வில்லை என்று! தன் உரிமையை, சுய மரியாதையை ஏன் நிலைநாட்ட வில்லை என்று தோன்றியது!

    //நித்தியா பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் தாய்விட்டை நோக்கி நடந்தாள். அவளுக்குத் தெரியும் பின் வரும் பிரச்சனைகள் என்னவென்று! இருந்தாலும் தனக்கென்று இருக்கும் நீதியைத் தேடி நடந்தாள்.//

    ஹப்பா அந்த இறுதி வரிகளைப் படித்த பின்னர்தான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது! அருமையான முடிவு! பெண்ணின் சுயமரியாதையை நிலைநாட்டியதற்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களின் சுயமறியாதையை இப்படி எழுத்திலாவது நிலை நாட்டித்தான் ஆக வேண்டும்(

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. நாம் தான் மாற்ற வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி.!

    நல்லதோர் கதை! படித்து முடிப்பதற்குள் படபடப்பாக இருந்தது. தனக்கோர் நீதி, பிறருக்கோர் நீதி என்ற இந்த சமுதாயம் என்றுதான் மாறப்போகிறதோ? தாங்கள் கதையை முடித்த விதம் அருமை!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. படித்து முடித்ததும் என்னை அறியாமலே மனதில் ஒரு விசனம். என்னடா இது உலகம் என்று. அருமையான பதுவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ.... இந்தக் கதையால் நிறைப்பேரைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
      நான் முதலில் மாற வேண்டும் போல் இருக்கிறது.....)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி விசு ஐயா.

      நீக்கு
  13. பைத்தியங்களும் முட்டாள்களும் சேர்ந்த உலகம்....

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி வருண் சார்.

    பதிலளிநீக்கு