திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இத்தாலியில் சில நாட்கள்!! (1)



நட்பறவுகளுக்கு வணக்கம்.
    போனவாரம் இத்தாலி சென்று வந்தோம். அது குறித்த பணய அனுபவங்களை உங்களுடன் பகிர இருக்கிறேன். இத்தாலியில் பார்க்க வேண்டிய இடங்களைக் கேமராவில் படம் பிடித்தாலும், காட்சிகளைக் கண்களில் பிடித்து மனத்தில் வைத்திருப்பது ஏராளம். உண்மையில் பார்க்க வேண்டிய இடம். நான் கண்டவைகளை முழுமையாக சொல்ல முடியாது என்றாலும் ஓரளவிற்கு நான் தெரிந்துக் கொண்டதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

இத்தாலியில் சில நாட்கள்!!

    திங்கள் (4.8.2014) அன்று பிரான்சில் “புவ்வே“ என்ற சிறு ஊரிலிருந்த விமான நிலையத்திலிருந்து மதியம் 1.55 மணிக்கு விமானம் புறப்பட்டது.
   இங்கிருந்து விமானத்தில் இத்தாலியில் “பைசா“ செல்ல 1.30 மணி நேர பயணம் தான். ஆனால் விமான நிலையம் செல்ல... பரிசோதனை என்று புறப்படும் நேரத்திற்கு முன்பு இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிட வேண்டும். அதனால் நாங்கள் 11 மணிக்கே விமான நிலையம் சென்று விட்டோம்.
   பயணச்சீட்டின் விலை ஒருவருக்குப் போய் வர 180 யுரோக்கள். (ஒரு யுரோ நம் ஊர் ரூபாயில் கிட்டத்தட்ட 80 ரூபாய் ஆகிறது. மொத்தம் 14,400 ரூபாய்)
   இவ்வளவு பணம் கட்டியும் கையில் ஒரே ஒரு சிறிய பை அல்லது 50 க்கு 26 செண்டி மீட்டரில் ஒரு சிறிய பெட்டி மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். கையில் டிக்கெட் மற்றும் பணம் வைத்துக் கொள்ளும் அளவில் மிகச் சிறிய கைப்பை கொண்டு செல்லாம். மற்றபடி கையில் கேமராவோ மற்ற பொருட்களோ வைத்துக் கொள்ள கூடாது. அப்படி வைத்திருந்து கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதல் கிலோவிற்கு 15 யுரோவும் அதற்கு மேல் 20.. 25... என்று ஏற்றிக் கொண்டே செல்கிறார்கள்.
   திரும்ப வரும் போதும் இதே நிபந்தனைகள் தான். அதனால் மேற் கொண்டு பொருட்களை மிகவும் யோசித்து வாங்கும் படியாக இருந்தது.
  
   மாலை 3.25 க்கு விமானம் தரை இறங்கினாலும் வெளியில் வர மணி நான்கு ஆகிவிட்டது. ஏற்கனவே இணையத்தில் அனைத்தையும் சரிவர தெரிந்து வைத்திருந்ததால் அங்கிருந்த பேரூந்து நிலையம் சென்று, காத்திருந்து ஏறினோம். நாற்பது நிமிட பயணம். ஒருவருக்கு 1.50 யுரோ டிக்கெட். இந்த டிக்கெட்டை வாங்கினால் வாங்கியதில் இருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்யலாம். அதன் பிறகு அது செல்லாது. ஐந்து மணி அளவில் நாங்கள் தங்கும் விடுதியை அடைந்தோம். ஓட்டல் ஓர் இரவுக்கு ஒருவருக்கு 28 யுரோ. காலை உணவு கிடையாது. காலை 10 மணிக்கு காலி செய்துவிட வேண்டும்.
   ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு இத்தாலியின் உலகப் புகழ் வாய்ந்த “பைசா சாய் கோபுரத்தைப்“ பார்க்கச் சென்றோம். இந்த இடம் நாங்கள் தங்கிய ஓட்டலில் இருந்து இருபது நிமிட நடைப்பயணம் தான்.

   வழியில் நிறைய கடைகள். ஓட்டல்கள். டூரிஸ்ட் ப்லேஸ் என்பதால் அனைத்துமே விலை அதிகமாக இருந்தது. ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை நான்கு யுரோ. நாங்கள் சென்ற அன்று 29 டிகிரி அளவு வெய்யில். உஷ்ணம் உயிரைக் குடிப்பதற்கு முன்னால் ஒரு பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடித்தோம்.
   போகும் வழியில் பார்த்ததைச் சொல்ல வேண்டும் என்றால் இத்தாலி மக்கள் ஒல்லியான தேகம் உடையவர்களாக இருந்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கு அழகான உடலமைப்பு. முகத்தில் மூக்கு என்னமோ அனைவருக்குமே செதுக்கி வைத்தது போல் தான் இருந்தது. பொன்னிற முடி. அதைப் பலர் கலர் பூசி கெடுத்து இருந்தார்கள்.
   இத்தாலியில் இந்த இடம் உலகப் புகழ் வாய்ந்தது என்பதால் எல்லா நாட்டுக்காரர்களும் இருந்தார்கள். இதில் சீனா, ஜப்பான், ரஷ்யா, தாய்லாந்து காரர்களின் அளவே மிக அதிகமாக இருந்தது. மற்றபடி பாக்கிஸ்தான் காரர்கள் அதிகமாக சிறுசிறு கடைகள் வைத்திருந்தார்கள்.


   இவர்களின் முக்கிய உணவு பிட்ஸா, ஸ்பகத்தி என்னும் நூடூல்ஸ். பிட்ஸா நம்மூர் சப்பாத்தி போன்றும் நூடூல்ஸ் நம்மூர் அரிசி சாப்பாடு போன்றும் உள்ளது. இதில் ஆலிவ் காய்கள் ஆலிவ் எண்ணையும் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.


   ஒரு பிட்ஸாவின் குறைந்த விலை 9.90 யுரோ. ஸ்பகத்தியும் அவ்வளவே. இது ஒவ்வொன்றும் ஓட்டலின் தரத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. சில ஓட்டல்களில் ஒரு பிட்ஸாவின் விலை 30 யுரோ.

   இப்படியே ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு “பைசா“ கோபுரத்தின் அருகில் வந்து சேர்ந்தோம்.
   பைசா நகரத்தின் உலக அதிசயமான சாய்ந்த கோபுரத்தைப் பற்றிய விளக்கத்தையும் படங்களையும் அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்.

அன்புடன்

அருணா செல்வம்.

30 கருத்துகள்:

  1. இத்தாலி பற்றிய பயணக் கட்டுரை தொடர வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள பகிர்வு. இத்தாலியை இப்படியே பார்க்கலாம். அல்லவா...! பைசா கோபுரம் பார்க்க ஆவலாக இருக்கிறது. விளக்கங்கள் அருமை சகோதரி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  2. பல ஆண்டுகளுக்கு முன் சென்றேன். சந்தர்ப்பம் அமைந்தால் எல்லோரும் பார்க்க வேண்டிய இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அழகான இடம்!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி யோகன் ஐயா.

      நீக்கு
  3. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஊக்குவிப்பக்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  4. நல்ல அருமையான பயணக் கட்டுரை. விளக்கமும் தெளிவு. தொடர்கின்றோம் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  5. இத்தாலி பயண அனுபவம் சிறப்பாக செல்கிறது! தொடருங்கள்! 29 டிகிரி வெப்பத்தையே பெரிதாக சொல்கிறீர்கள்! சென்னையில் 40 டிகிரிக்கும் மேல் வெப்பத்தை அனுபவிக்கிறோம் நாங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 40 டிகிரியா.......???? யப்பா... என்னால தாங்க முடியாது.

      தொடர்ந்து வெய்யிலிலேயே வாழ்ந்து விட்டால் வெப்பம் பெரியதாக தெரியாது என்றே நினைக்கிறேன்.
      இங்கே நாங்கள் சில நேரங்களில் மைனஸ் டிகிரிகளுடன் வாழ்ந்து பழகி விட்டதால் கொஞ்சம் அதிக மான வெய்யிலையும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  6. ஆரம்பமே அருமை சகோதரியாரே
    பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம் படத்தில் தொலைவில் தெரிகிறது,
    நடந்து நெருங்குவதற்கும் தொடரும் போட்டுவிட்டீர்கள்
    காத்திருக்கிறேன் சகோதரியாரே
    அருமை
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவில் கிட்டே சென்று பார்த்துவிட வைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. நானும் தொடர்கிறேன் சகோதரி எனது பதிவு Fantastic France காண்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகிறேன் கில்லர் ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  8. பயணக் கட்டுரை....
    தொடருங்கள்... நாங்களும் பயணிக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  9. சாய்ந்த கோபுரத்தைப் பார்த்ததும் சோனியாஜி நினைவில் வந்தார் !
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தாலி என்றால் சோனியா ஞாபகம் வரும். உங்களுக்குச் சாய்ந்த கோபுரத்தைப் பார்த்ததும் சோனியா நினைவு வந்ததா....
      நல்ல நகைச்சுவை....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  10. ஹலோ தனியா டிரிப் போயிட்டு வந்துட்டு இப்ப கட்டுரை எழுத ஆரம்பிச்சிட்டிங்களா? போகும் போது எங்களுக்கும் டிக்கெட் எடுத்து தந்து அழைச்சிட்டு போயிருக்கலாம்ல சரி விடுங்க இந்த ஏழையை கூப்பிட்டு போய் உங்களுக்கு என்ன ஆகப் போது???? ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ தனியா டிரிப் போயிட்டு வந்துட்டு இப்ப கட்டுரை எழுத ஆரம்பிச்சிட்டிங்களா?

      தனியாகப் போகவில்லை. துணையுடன் தான் சென்றேன்.

      போகும் போது எங்களுக்கும் டிக்கெட் எடுத்து தந்து அழைச்சிட்டு போயிருக்கலாம்ல

      இவ்வளவு பேரையும் அழைத்துச் செல்ல முடியாது என்றதால் தான் நான் போய் பார்த்துவிட்டு உங்கள் அனைவருக்கும் அதை விவரித்துப் பதிவாக வெளியிடுகிறேன்.

      ஆமாம்.... ஏழை என்றால் என்ன?

      தங்களின் வருகைக்கும் புலம்பலுக்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
    2. ஏழை என்பவன் என்னை மாதிரி புலம்புவன் பணக்காரன் என்பவன் உங்களை மாதிரி ஊரைஸ் சுற்றி வந்து பயணக்கட்டுரைகள் எழுதுபவன்

      நீக்கு
  11. சுவையான தகவல்களுடன் இத்தாலி பயணக் கட்டுரை படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது..
    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு

  12. வணக்கம்!

    தமிழ்மணம் 7

    இத்தாலி நாட்டை எழுதும் எழுத்தெல்லாம்
    முத்தாகி மின்னும்! முகம்மலர்ந்து - பித்தாகும்!
    சுற்றுலாச் சென்ற தொடரைப் படித்துமனம்
    பற்றுலாக் கொள்ளும் பறந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  13. ஆஹா, பயனக்கட்டுரையா..... அசத்துங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  14. தகவல்களைச் சுவைபடத் தந்திருக்கிறீர்கள்.

    இத்தாலி பற்றி நிறையத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம். விரிவாகவே எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தெரிந்துக் கொண்டதை அவசியம் தெரிவிக்கிறேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பி ஐயா.

      நீக்கு