நட்புறவுகளுக்கு வணக்கம்!
இந்த ஜனவரி மாதம் பிரான்ஸ்
குறளரங்கத்தில் கொடுக்கப்பட்டத் தலைப்பு ”நம்பிக்கை“
நான்,
மற்றவிடத்தில் வைக்கும் நம்பிக்கையை விட தன்மேல் நம்பிக்கை வைத்தால் எதையும்
அடையலாம் என்னும் பொருளில், கவிதை
எழுதினேன். இந்தக் கவிதையின் உட்பொருள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற “தன்னம்பிக்கை“
யுடன் உங்களுக்குப் படைக்கிறேன்.
நம்பிக்கை !!
நமக்கோ ஏதும்
வேண்டுமென்றால்
நம்பி கேட்போம் கடவுளிடம்!
தமக்கோ இதுதான்
வேண்டுமென்று
தானாய்க் கடவுள் கேட்டதில்லை!
எமக்கோ இதைநீ
செய்துவிட்டால்
இதனை உனக்கு தருவதுவாய்
நமக்கே கொடுக்கும்
கடவுளுக்கே
நாமாய்த் தருவோம் இலஞ்சத்தை!
நம்மின் மீதே முழுதான
நம்பிக் கையை அற்றதினால்
எம்மண் காக்கும்
கடவுளிடம்
எளிதில் பேரம் பேசுகிறோம்!
வம்பில் மாட்டிக்
கொண்டாலோ
வகையாய் வெளியே வருவதற்கு
தம்மின் திறத்தை ஆராய
நம்மின் அறிவால் யோசிப்போம்!
அன்பை, அறிவை, ஆற்றலையும்
அன்னை தந்தை பாசத்தையும்
பொன்னைப், பொருளைப், பணத்தினையும்
பொளிரும் அழகாய்ப் பூவுடலும்
இன்மை மறுமை
வாழ்விற்கும்
இயன்ற பெருமை பெற்றிருந்தும்
தன்மேல் நம்பிக்
கையிழந்தால்
நாளும் வாழ்வில் துன்பம்தான்!
எம்பி குதித்தும்
கிடைக்காமல்
இந்தப் பழமோ புளிக்குமென்று
வெம்பி போன நரிகதையோ
விவேகம் அற்ற நீதியது!
நம்மின் பிள்ளை
தன்மேலே
நம்பிக் கையை வளரவைத்தால்
அம்மை அப்பன்
அளித்திட்ட
அறிய சொத்தாய் அதைநினைப்பான்!
தன்..கை தானே
எப்பொழுதும்
தனக்கே உதவி என்பார்கள்!
முன்னால் கையைக்
மூடிவிட்டு
முயற்சி இன்றி நின்றிருந்தால்
என்றும் முடிவை அறியாதே!
எதையும் முயன்றால் முடித்திடலாம்
என்றே நம்பிக்
கைவைத்தால்
இமயம் கூட தொட்டிடலாம்!
அருணா செல்வம்.


