ஒவ்வொரு பெண்ணும் அடுத்த ஜென்மத்திலாவது
ஆணாகப் பிறந்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையில் பெண்களுக்கு வரும்
உடல்ரீதியான பிரச்சனைகளால் நூற்றுக்குத் தொண்ணூறு சதம் பெண்கள் இப்படி நினைப்பது
உண்டு.
இப்படி இருக்க....
நேற்று நானும் என் கணவரும் ஒரு முக்கிய
விசயமாக பாரீஸ் சென்றோம். ஒரு சிக்னலில் கார் நின்ற போது ஒரு பிரென்சு இளைஞன்,
வயது இருபதிலிருந்து இருபத்தைந்துக்குள் தான் இருக்கும். அவன் எங்கள் வண்டியின்
அருகில் வந்து ”எனக்குப் பணமாவது சிகரெட்டாவது கொடுங்கள்” என்று கேட்டான். உடனே என் கணவர்
இரண்டு யுரோவை எடுத்துக் கொடுத்தார்.
அதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்து
விட்டது. நான் தானம் பண்ணக்கூடாது என்று சொல்லும் கருமி கிடையாது. சென்னை பித்தன்
ஐயா சொன்னது போல் அட்சய திருதையை அன்று மட்டும் அல்லாமல் மற்ற நாட்களிலும் நம்மால்
முடிந்ததை யாருக்காவது கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் தான்.
ஆனால்.... இல்லாதவர்களுக்கும்,
இயலாதவர்களுக்கும் தான் நாம் உதவ வேண்டும் என்று நினைப்பவள். அந்த வெள்ளைக்கார இளைஞனைப்
பார்த்தால் நல்லா கடோர்கஜன் போன்று இருந்தான். அவன் பிச்சை எடுப்பதே அவனுக்கு
அவமானமாக இருக்க வேண்டும். அப்படி அவமானப்படாமல் அவன் பிச்சை எடுக்க, என் கணவரும்
பணத்தைக் கொடுத்ததும் நான் கோபமாக, “அவன் நல்லா தானே இருக்கிறான்? போயி வேலை
செய்து சாப்பிடுன்னு சொல்லாமல் காசு கொடுக்கிறீங்களே...“ என்றேன்.
அதற்கு என் கணவர், “பாவம் அவன். ஆண்பிள்ளையா
போறந்திட்டான். விடு அருணா“ என்றார்.
எனக்கோ ஆச்சர்யம்! “என்னங்க நீங்க? ஆம்பளையா
பொறந்ததுக்குப் போயி இப்படி சொல்லுறீங்களே....“ என்றேன்.
“பின்ன
என்ன? இந்த நாட்டுல இதுவே ஒரு பொண்ணா இருந்தால் உடம்பைக் காட்டியாவது
பொழைச்சிக்கினு போயிடும். பாவம் ஆம்பள, என்ன செய்வான்? வேலைன்னு கிடைக்கிற
வரைக்கும் இப்படி தான் பொழைக்கனும்“ என்றார்.
எனக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கத்
தோன்றவில்லை. பேசாமல் வாய் அடைத்தது போல் இருந்தாலும், ”அவன் ஆண்பிள்ளை எப்படியாவது
பொழைச்சிக்குவான்...” என்று நம் நாட்டவர் சொல்வது இந்நாட்டில் எப்படி தலைகீழாக மாறியுள்ளது என்பதை
நினைத்து வருந்தியபடி வீடு வந்து சேர்ந்தேன்.
“நாகரிகம் என்பது கீழிந்து மேலே வளருவதில்லை.
மேலிருந்து கீழே இறங்குவது தான்“ என்பதே இங்கே நான் கண்ட உண்மை.
அருணா செல்வம்
09.05.2014