ஞாயிறு, 14 ஜனவரி, 2024

தைப்பொங்கல் வாழ்த்து ! 2024

 


தைப்பிறந்து வந்து விட்டாள் - இனி
    தழைப்பாகும் உலக மெல்லாம் !
கைப்பிடித்த துணைவ ருடனே - உயர்
    காதலுடன் இணைந்தி ருப்பார் !
மெய்ப்பிடித்த நோய்க ளெல்லாம் - உடன்
    மிரட்சியுடன் விலகி யோடும் !
மைப்பிடித்த வார்த்தை யெல்லாம் - நல்ல
    மங்கலமாய் வாழ்த்திப் பாடும் !
.
உண்ணுகின்ற பொருள்க ளெல்லாம் - ஓர்
    உழவனவன் உழைப்பே ஆகும் !
மண்ணோடு மனத்தை ஊன்றி - உயர்
    மனிதவுயிர் வாழ வேண்டி
கண்ணினிமைப் போன்றே காத்து - வயிறு
    காயாமல் காக்கும் தெய்வம் !
பெண்ணென்னும் அன்னை போன்று - நிற்கும்
    பெருமையுள்ள உழவர் வாழ்க !
..
ஓரிடத்தில் நின்று கொண்டே - இந்த
    உலகத்தை ஒளிர வைக்கும் !
காரிடரும் காலை யாகும் - கனல்
    கதிரென்ற பொழிலைச் சேர்க்கும் !
மாரியுடன் மண்ணின் ஊடே - சேர்ந்து
    மகத்தான மகசூல் தாரும் !
சூரியனின் தன்மை கண்டு - போற்றித்
    தொழுதிடுவோம் நாளும் நன்றாய் !
.
நன்றாக வாழ வேண்டும் - மனம்
   நலமாக உயர வேண்டும் !
ஒன்றாகச் சேர வேண்டும் - பெயர்
    உயர்கின்ற நோக்கம் வேண்டும் !
பொன்னாக மின்ன வேண்டும் - நிறை
    பொதுவுடமை எண்ணம் வேண்டும் !
அன்பாக இருக்க வேண்டும் - அதில்
    ஆண்டவனே அடங்க வேண்டும் !
.
பச்சரிசி வெல்லம் சேர்த்துச் - நல்ல
    பசுநெய்யில் பொங்கல் செய்து
இச்சையுடன் கரும்பு மஞ்சள் - துண்டு
    இஞ்சியுடன் கோல மிட்டும்
கச்சிதமாய் படைத்தெ டுத்தே - உயர்
    கதிரோனை வணங்கி என்றும்
அச்சமின்றி வாழ்க வென்று - நானும்
    அன்புடனே வாழ்த்து கின்றேன் !
 
தோழ தோழியருக்குத் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக