திங்கள், 4 நவம்பர், 2013

பிறந்த நாள் பரிசு! (நிமிடக்கதை)


   காலையில் வேலைக்கு அவசரமாகக் கிளம்பும் பொழுது தான் மேசையின் மீதிருந்த படங்களைப் பார்த்தான். குழந்தைகள் இருவரும் தன் கைகளால் படம் வரைந்து அதனடியில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி எழுதி இருந்தார்கள்.
   அப்பொழுது தான் இன்று அவனுக்குப் பிறந்த நாள் என்ற நினைவே வந்தது. அன்று பிறந்த நாள் என்றதும் சற்று மகிழ்ச்சியும் அதே சமயம் தன் மீது கொஞ்சம் வெறுப்பும் வந்தது.
   நாம் பிறந்து என்ன பெரியாக சாதித்து விட்டோம்...? அம்மா அப்பாவை எதிர்த்துக் காதலிச்சவளைக் கல்யாணம் செய்து கொண்டதால் பெற்றவர்களின் பாசத்தை இழந்தாகிவிட்டது. பிறந்த நாள் அன்று அம்மாவின் அன்பு கலந்த பார்வை, அவளின் கைமணக்கும் பச்சணங்கள்... பாசம் எல்லாம் இழந்து இதோ பத்து வருடங்கள் ஆகிவிட்டது.
   இனி அவையெல்லாம் திரும்பவும் கிடைக்குமா? ஏக்கம் நெஞ்சை அழுத்த, தன் மணிபர்சை எடுத்துப் பிரித்தான். அதில் இருந்த தன் அப்பா அம்மா படத்தைச் சற்று நேரம் பார்த்து விட்டு ஏக்கப் பெருமூச்சு விட்டு மூடினான்..
   தொலைபேசி ஒலித்தது. வேலையிலிருந்து அவனின் காதல் மனைவி. பிறந்த நாள் வாழ்த்துக் கூறி விட்டு அவசரமாக டெலிபோனுக்கு நான்கு ஐந்து முத்தமிட்டு விட்டு வைத்துவிட்டாள்.
   குழந்தைகள் அவன் வரும் வேலை அனேகமாகத் தூங்கிவிட்டு இருப்பார்கள்.
   மன அழுத்தத்துடன் வேலைக்குக் கிளம்பினான். புது கம்பெனி. அவர்களுக்கு இவனை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் கணினி மூலம் முகமே அறியாத முகநூல் நண்பர்கள் பலபேர் வாழ்த்துத் தெரிவித்து இருந்தார்கள். இது கொஞ்சம் இறுக்கத்தைத் தளர்த்தியது.
   சற்று நேரத்தில் வேலையைத் துவங்கவும் அதில் மூழ்கியதும் உள்மனத்தின் இன்ப துன்பங்கள் மறந்து போனது.

   இரவு வீட்டிற்கு வந்ததும், குழந்தைகள் ஓடிவந்து முத்தமிட்டபோது தான் பிறந்த நாள் ஞாபகம் வந்தது. மனைவி செய்த கேக்கை வெட்டி அவர்களுக்குள் கொண்டாடினாலும் மனம் வெறுமையாக இருப்பதைத் தான் உணர்த்தியது.
   மனைவி பரிசாக கொடுத்த கைகடிகாரம் அழகாக இருந்தாலும், அதை அவன் பெரியாதாக எடுத்துக் கொள்ளாதது முகத்தில் தெரிந்தது. கோபத்துடன் அவள் எழுந்து போய்விட்டாள்.
   ஆனால், சற்று நேரத்தில் குழந்தைகளைப் படுக்க வைத்துவிட்டு அவன் அருகில் வந்தாள். அவன் கவலையுடனே இருந்தான். “என்ன ஒரு மாதிரியா இருக்கிறீர்கள்? உடம்பு சரியில்லையா?“ அன்புடன் விசாரித்தாள்.
  “அதெல்லாம் ஒன்றுமில்லை“
  “பிறகென்ன...? உங்க ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் போன் செய்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்களா...?“ கேட்டாள்.
   உண்மையில் இன்று ஒருவரிடமும் ஒரு போன்கால் கூட வரவில்லை. இது தான் அவனின் கவலைக்குக் காரணமே! இருந்தாலும் தன் ஏமாற்றத்தைக் காட்டாமல், “ம்... சொன்னார்கள்“ என்றான்.
   மனம் கனத்துப் போய் இருந்தது. ஒருத்தருக்குக் கூடவா தன் ஞாபகம் வரவில்லை?
   “உங்க வீட்டிலிருந்து போன் வந்துச்சா...?“
   “ம்... எப்பவும் போல அக்காவும் தம்பியும் பேசினார்கள்“
   “உண்மையாவா?“
   அவன் பதில் சொல்லாமல் இருக்கவும், “நீங்கள் யாரிடமும் பேசவில்லை என்பது எனக்குத் தெரியும்“ என்றாள் அலட்சியமாக.
   “எப்படி...?“ அவன், அவளை யோசனையுடன் கேட்டான்.
   “பின்னே... செல்போனை நிறுத்தி வீட்டிலேயே வச்சிட்டு போனால் எப்படி பேசுவார்களாம்...?“ என்று சொன்னவளைக் கண்கள் அகல விரித்துப் பார்த்தான். “இல்லையே... போன் எங்கிட்ட தானே இருந்தது“
   “அது என்னுடைய செல் போன். ஒரே மாதிரி வாங்காதீங்கன்னு அப்பவே சொன்னேன். கேட்டீங்களா...? இப்ப பாருங்கள். அனேகமா உங்க ஃபிரெண்ட் எல்லாம் உங்களைத் திட்டி தான் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்“ என்று சொல்லியபடி கைப்பேசியை நீட்டினாள்.
   அவசரமாக வாங்கிப் பார்த்தான். கிட்டத்தட்ட அனைவருமே வாழ்த்துடன் திட்டையும் சேர்த்தே அனுப்பியிருந்தாலும் அதைப் படிக்கவும், கேட்கவும் அவனுக்கு ஆனந்தமாகவே இருந்தது. 

அருணா செல்வம்.

04.11.2013

30 கருத்துகள்:

  1. அட்டகாசமான பதிவு!
    அதற்காகவே பிளஸ் + 1 வோட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  2. மிகவும் ரசித்தேன்
    எதிர்பார்க்கும் மன நிலை கொண்டவன் நானும்
    என்பதால் இந்தக் கதை கூடுதலாக என் மனம்
    கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி.
    அடப்பாவமே! பிறந்த நாளும் அதுமா கவனக்குறைவால் மொத்த நாளும் சோகமாகியது வேதனை தான், இருப்பினும் இறுதியில் சோகத்திற்கு விடைக் கொடுத்தது மகிழ்ச்சி. நல்ல சிந்தனை. அருமையான கதையோட்டம். பகிர்வுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  4. எதிர்பாரா முடிவு....

    நல்ல கதை பகிர்வுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  5. நிமிடக் கதையென்றாலும் நினைவில் நிற்கும் ! நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. எதிர்பாராத முடிவு, கதை சூப்பர். அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. சிலநேரங்களில் இப்படியும் சம்பவிக்கும்...
    ஒரே மாதிரி இரண்டு இருந்தாலே தொல்லைதான் ...
    நல்ல கதை சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி மகி அண்ணா.

      நீக்கு
  8. துன்பத்திலும் ஒரு இன்பம் இதுவல்லவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதாங்க...!!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  9. மனைவியின் செல்ஃபோனுக்கு ஒரு கால் கூட வரவில்லை என்பதுதான் ஆச்சர்யம். மற்றபடி கதை நன்றாக உள்ளது திருப்பத்துடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இல்ல.... ஆச்சர்யம் தான்!! (நான் எப்படி இதை மறந்து போனேன்? அவளையும் என்னைப் போல் நினைத்துவிட்டேன். காரணம், எனக்கு யாருமே அவ்வளவாக போன் பண்ண மாட்டார்கள்.
      போன் நம்பரைக் கொடுத்தால் தானே.... ஹி ஹி ஹி)

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  10. தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

    தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

    வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  11. எதிர்பாரா ட்விஸ்ட் இறுதியில்! அருமையான கதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  12. குட்டிக்கதைகளில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை அருணா.. கலக்குங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போங்க தோழி.... என்னை ரொம்ப புகழுறீங்க.
      எனக்கு வெக்க வெக்கமா வருது.

      நன்றி தோழி.

      நீக்கு
  13. ஹஹா நல்லா இருக்கு கதை.. சில நேரங்கள்ல இப்படியும் நடக்குறதுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  14. ரசிக்க வைத்த அருமையான கதை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சோகத்திலும் இறுதியில் மகிழ்ச்சி வந்தது.

    பதிலளிநீக்கு

  16. வணக்கம்!

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    அருணா பிறந்தநாள்! நல்லழகாய் ஆடும்
    திருநாள் இனிமை திரளும்! - வரும்நாள்கள்
    யாவும் தமிழிசை யாழின் சுவைதரும்!
    கூவும் குயிலெனக் கூவு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    பதிலளிநீக்கு
  17. PIRANTHAL PARISU ரசிக்க வைத்த அருமையான கதை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு