வியாழன், 22 செப்டம்பர், 2016

வேற்று நாட்டவரின் பழமொழிகள் !





1 கண் உள்ளவனைக் காட்டிலும் குருடன் குறைவாகவே தடுக்கி விழுகிறான் !  - ஜெர்மன்

2. சாட்டையை இழந்து விட்டால் அதில் தங்கப்பிடி இருந்தது என்பான் மனிதன் !  - சீனா

3 .குளிர் வந்துவிட்டால் அழுக்குத் துணியும் அவசியமாகும் !  - ஜப்பான்

4. குணமில்லாத அழகு மணம் அற்ற மலர் ! – பிரான்ஸ்

5. அகம்பாவன் ஒரு பொல்லாத குதிரை. அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது ! – ஸ்காட்லாந்து

6. அதிஷ்டமில்லாத காலத்தில் உங்கள் கைத்தடி கூட பாம்பாகி விடும் ! – இங்கிலாந்து.

7. கனவுகள் நனவாக வேண்டும் என்றால் முதலில் துாக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும் ! – ரஷ்யா

8. குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர் ! – டென்மார்க்

9. தாழ்வது வெட்கப்படத்தக்கது அல்ல. தாழ்ந்தே கிடப்பது தான் வெட்கப்படத் தக்கது ! – சுவீடன்


10. கடவுள் எல்லாப் பறவைகளுக்கும் உணவைக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் உணவைக் கூட்டுக்குள் எறிவதில்லை ! - ஹாலந்து
-

வியாழன், 15 செப்டம்பர், 2016

தமிழ்ப்பெண்!



இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

கவிஞர் அருணா செல்வம்
04.02.2016