திங்கள், 28 பிப்ரவரி, 2022

குடசம் பூ! (பூவரசம் பூ)


.

 

குடசம் தொழுநோய் குணமாக்கும் ! சாற்றைத்
தடவ சிரங்கு தணியும்! - உடம்புறுதி
காத்திடும்! பெண்கள் கருத்தடைக்குச் சேர்த்திடுவார்!
தேத்தும் மறதிநோயைத் தீர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
25.02.2022

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பலாசம்பூ! (புரச மரப்பூ)

 


காட்டுத்தீப் போல்பூத்துக் காய்க்கும் பலாசமரம்!
வீட்டுக் கழகாய் விளைகியது! - கூட்டிவைத்த
காய்ந்த மலர்களைக் காய்ச்சிக் குடித்துவர
நோய்பல ஓடும் நொடிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.02.2022

வியாழன், 24 பிப்ரவரி, 2022

உந்தூழ் மலர்! (மூங்கில்பூ)

 


மூங்கிலின் பூக்களே முன்னோரின் உந்தூழ்பூ!
ஓங்கும் மரம்பூக்க உண்டாகும் - மூங்கரிசி
உண்ணும் எலிகள் உழவினைப் பாழாக்கும்!
தண்டுதவும் சாரமெனத் தந்து!
.
பாவலர் அருணா செல்வம்
23.02.2022

புதன், 23 பிப்ரவரி, 2022

செருந்தி மலர்! (நெட்டுக் கோரை)

 


பொன்னெனக் கொத்தாகப் பூக்கும் செருந்தியில்
இன்றேன் மிகுந்துள ஏற்றமுண்டு! - நன்கமழ்
வாசத்தால் சூடிடும் வஞ்சியரைக் காளைமனம்
நேசத்தால் கூடும் நெகிழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
22.02.2022

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

குருக்கத்திப்பூ! (குருகு பூ)

 


கொத்தாகப் பூக்கும் குருக்கத்திப் பூவிதழ்
மெத்தென்று பஞ்சுபோல் மென்மைமிகும்! - பித்தநோய்
நீர்வேட்கை போக்கும்! நெடும்புண்ணை ஆற்றிடும்
சீர்க்கமழும் வாசம் சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
22.02.2022

திங்கள், 21 பிப்ரவரி, 2022

செம்மல் மலர்! (ஜாதிமல்லி)

 


செம்மலெனப் பாராட்டிச் சீராட்டிப் போற்றுவார்!
செம்மையின்றி வீழும்பூ செம்மலாம்! - நம்முன்னோர்
செம்மல் மலரென்று செப்பினார்! இன்றழைப்பார்
இம்மலரைச் சாதிப்பூ என்று!
.
பாவலர் அருணா செல்வம்
21.02.2022

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

நள்ளிருள்நாறி! (இருவாட்சிப் பூ)

 


இருவாட்சி என்ற இருள்நாறி ஆழ்ந்த
இருட்டில் மலரும் இனிதாய்! - அருந்தேனை
வண்டுகள் உண்டிட வாசமுடன் பூத்திடும்
வெண்ணிறப் பாலைப் பழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
20.02.2022

சனி, 19 பிப்ரவரி, 2022

பீரம் மலர்! (பீர்க்கம்பூ)

 


நார்ச்சத்து மிக்க நலந்தரும் பீர்க்கங்காய்
பார்வையை மேலும் பலப்படுத்தும்! - நீர்த்தன்மை
மிஞ்சும் உடலை மெலியவைக்கும் வாசமற்ற
மஞ்சள் நிறப்பூ மலர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.02.2022

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

கருவிளை மலர்! (நீலச் சங்குப்பூ)

 


கருவிளையின் பூக்களும் காய்விதை, வேரும்
மருந்தாகி நோயினை வாட்டும்! -  அருள்தரும்
ஈசனுக் கானது! எக்காலமும் பூத்திடும்
வாசமற்ற நீல மலர்!
.
பாவலர் அருணா செல்வம்
16.02.2022

வியாழன், 17 பிப்ரவரி, 2022

சூரல் மலர் !

 


காட்டுப் புதர்ச்செடி காவலுக்கு வேலியாம் !
நீட்டிருக்கும் முட்கள் நிறைந்திருக்கும் ! - பாட்டிற்கோ
உன்னதமாய்த் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை
சின்னமலர் சூரல் சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
17.02.2022

புதன், 16 பிப்ரவரி, 2022

புழகுப்பூ! (எருக்கம்பூ)

 


ஐந்திதழ்கள் கொண்டவிது ஐங்கரனுக் கானமலர்!
பைந்தமிழ்ப் போன்று பழமையாம்! - நைந்திடாக்
கற்பிளவில் கூடக் கடிதில் வளர்ந்திடுமே
பொற்பயன் மிக்க புழகு!
.
பாவலர் அருணா செல்வம்
15.02.2022

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

மௌவல் மலர்! (மரமல்லிப்பூ)

 


மரத்தில் மலர்ந்திடும் மௌவல் மலரோ
இரவில் மலரமணம் ஈர்க்கும்! - வரம்போல்
அலங்கார மாலைகளில் அங்கமிடும்! பல்லைப்
பலகாலம் ஒப்பினர் பார்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
15.02.2022

திங்கள், 14 பிப்ரவரி, 2022

பிடவம்பூ! (குட்டிப்பிடவம்)

 


புதர்செடியாய் முட்களுடன் பூக்கும் பிடவம்!
இதனின் மணம்இனிமை என்பார்! - முதல்மழையில்
மொட்டனைத்தும் பூத்து முடிந்திடும் வாழ்வாகும்!
குட்டிப் பிடவமெனல் கூற்று!
.
பாவலர் அருணா செல்வம்
12.02.2022

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

கோங்கம் மலர்! (கோங்கு)

 


கோங்கம் மலரைக் குயில்கள் விரும்பியுண்ணும்!
தேங்கும் மணமோ திளைக்கவைக்கும்! - வாங்கினர்
பொன்னிறப் பூக்களின் பூந்தாதை மட்டுமே
பொன்னின் நிகராய்ப் புகழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
11.02.2022

கூவிளம் பூ! (வில்வம்)

 


வில்வம் எனுங்கூ விளமரத்தின் பூ…தவிர
எல்லாம் பயனாகும் என்பார்கள்! - வல்ல
இறைவனின் பூகைக்(கு) இலையைப் படைப்பர்!
மறைபொருள் கண்டால் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
10.02.2022

வியாழன், 10 பிப்ரவரி, 2022

குல்லை மலர்!

 


நாய்துளசி போலிருக்கும் நல்லகஞ் சங்குல்லை
நோய்பல போக்கிடும் நுட்பமாய்! - ஆய்வாளர்
கேட்டை விளைத்திடும் கீழ்ப்பயிர் என்றனர்!
வாட்டும் முறையகன்றால் வாழ்வு!
.
பாவலர் அருணா செல்வம்
10.02.2022

.
(மேலே உள்ள படம் நாய்துளசி செடியின் படம். கஞ்சங்குல்லைச் செடியின் படம் வெளியிடத் தடையுள்ளது)

புதன், 9 பிப்ரவரி, 2022

வகுளம்பூ! (மகிழம்பூ)

 


வகுளம்பூ தேர்க்கால் வடிவில் இருக்கும்!
தொகுத்து முகர்ந்தாலே தூக்கம் - மிகுந்திடும்!
பல்வலியைப் போக்கும்! பலபயன் கொண்டமரம்!
சொல்லவிங்கே இல்லை இடம்!
.
பாவலர் அருணா செல்வம்
09.02.2022

காதல் என்பது…… !

 

.

காதல் என்பது காமத்தில் முடிவது
ஓதும் பொருளை உணர்ந்தால் தெரிந்திடும்!
சாதல் போன்று சமமாய் அனைவரும்
பேதம் இன்றிப் பிறப்பினில் வருவது!
ஏதோ இன்பம் எழிலைக் கூட்டும்
தீதோ சரியோ திரும்பி ராதது!
இளமை ஊஞ்சலை இயற்கை ஆட்டிட
வளமை நெஞ்சில் வலிமை கொடுக்கும்!
சின்னப் பேச்சும் சிலிர்ப்பைக் கொடுக்கும்
கன்னம் கனிந்திட கவியில் உழலும்!
வண்டு தேனை வகையுடன் உண்ண
மண்டு மலரோ மயங்கியே இருக்கும்!
இந்த நாடகம் இணையும் வரையில்
அந்த உணர்வுக ளடங்கி முடிந்ததும்
கண்டதற் கெல்லாம் கடிதினில் சண்டையே!
சிண்டு முடிந்திடும் சின்னத் தவறும்!
உணவின் சுவையே உண்ட பிறகு
மணத்தை விலக்கி மறுத்தல் போலே
பதுங்க நினைத்துப் பாச மற்றே
ஒதுங்கி நின்று ஓதும் வேதம்!
இந்த உண்மையை இளையோர் மறுப்பர்!
பிந்தி அறிவார் பெரியோர் மொழியே!
.
பாவலர் அருணா செல்வம்
09.02.2022

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

பித்திகம் (பிச்சிப்பூ)

 


இரவில் மலரும் இனியமலர்! பூக்கப்
பரப்பும் மனம்நம்மைப் பற்றும்! - சரஞ்சரமாய்க்
கட்டிய பித்திகத்தைக் கன்னியருஞ் சூடுவர்!
ஒட்டிடும் ஊடல் ஒழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.02.2022

சனி, 5 பிப்ரவரி, 2022

காயா மலர் !

 


தேயாத நல்லுருதி தேகத்தில் கொண்டிருக்கும்!
காயாத வண்ணமுள்ள காயாமரம்! - பாயா
மயில்கூட்டம் போலே மலர்ந்திடும்! வாசம்
உயிர்த்தொட வைக்கும் உணர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
05.02.2022

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

பகன்றை மலர் !

 


அகன்ற இலையுடன் ஆழ்ந்தவெண்மை வண்ணப்
பகன்றை மலரும் பனியில்! - முகர்ந்திடக்
கள்மணம் கொண்டது! காடுகளில் பூத்திடும்
உள்ளநிறை வண்ணமட்டும் உண்டு!
.
பாவலர் அருணா செல்வம்
04.02.2022

வியாழன், 3 பிப்ரவரி, 2022

வாகை மலர்!

 


பெரும்பஞ்ச மூலத்தில் பேரிடம் கொண்டு
மருந்துக் குதவுவது வாகை! - அருந்தமிழர்
வெற்றிக்கு மாலையாக வேந்தனுக்குச் சூடினார்!
கற்றறிந்து கொண்டால் களிப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
03.02.2022

புதன், 2 பிப்ரவரி, 2022

குறிஞ்சிப்பூ! (நீலக்குறிஞ்சி)

 


உயர்ந்த மலைதனில் உன்னதமாய்ப் பூக்கும்!
நயந்தருந் தேனினை நல்கும்! - வியப்பாகப்
பன்னிரெண்டு ஆண்டுகள் பார்க்க முடியாது!
சின்னக் குறிஞ்சி சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2022

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

காந்தள் மலர்! (கார்த்திகைப் பூ)

 


சுடர்மலர் காந்தளெனச் சொல்லுமிதன் வேரில்
அடர்துயர் புற்றை அழிக்குந் தொடர்புண்டு!
செம்மையுற வைத்தியத்தில் சேர்த்தாலே நன்மைதரும்!
நம்நாட்டின் மாநிலப்பூ நன்று!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2022