வெள்ளி, 28 ஜூன், 2019

ஏது அணி!



கரும காரகவேது !

கருமம் என்பதுகடமை, காரியம், கிரியை, செய்கை, முன்வினை, விதி,….

பாடலில் ஒரு கருமமே காரகமாகவும், அதுவே ஏதுவாகவும் வருவதுகரும காரகவேதுஎனப்படும்.  (ஒரு செயலின் செயல்பாட்டினைக் காட்டுவது)

. ம்
எத்தனை வேலை எடுத்ததைச் செய்தாலும்
அத்தனைக்கும் கை,கண்ணும் ஆழ்ந்திருக்கும் - பத்தியமாய்ப்
பெற்ற மனதெல்லாம் பிள்ளையை எண்ணுவதே
குற்றமற்ற அன்னை குணம்!

பொருள்ஒரு பெண்ணின் கைகளும் கண்களும் ஆழ்ந்து எத்தனை வேலைகளை எடுத்துச் செய்தாலும் அவளின் மனமானது தான் பெற்ற பிள்ளையையே எண்ணிக்கொண்டு இருக்கும். அதுவே தாய்மையின் குணம்.

பாடலில் கூறப்பட்ட கருமம் பெண்ணானவள் செய்யும் தொழில். அவளின் கையும் கண்ணும் தன் வேலையைச் செய்தாலும், மனமானது பத்தியம் இருந்து தான் பெற்ற பிள்ளையை எண்ணிடும் என்பது காரணமாவதால் இதுகரும காரகவேதுஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.06.2019

புதன், 26 ஜூன், 2019

ஒட்டணி! -





அடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்!

   பாடலில் தான் கருதிய பொருளுக்கும், அதனை மறைத்து அதற்கு ஒத்ததாகக் கூறப்படும் பொருளுக்கும் சில அடைமொழிகளை ஒத்ததாகக் கூறியும், சில அடைமொழிகளை ஒன்றிற்கு மட்டும் சிறப்பாகக் கூறியும், தான் கருதிய பொருளைச் சொல்லாமல் அதற்கு ஒப்பான வேறு பொருளைக் கூறுவதுஅடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்ஆகும்.

. ம் 
உடல்முழுதும் தந்தும், ஒதுங்கி அசைந்தும்,
மடத்தில் மடங்காதும் வாழும்! – வடம்சேரத்
தோட்டத்தில் கன்றுடன் துள்ளிடும்! நல்லுணவை 
ஈட்டிடும் வாழை இனிது!

பொருள்உடல் முழுவதையும் நமக்குத் தந்து உதவும். ஓரிடத்தில் நின்று அசைந்தாடும். கோவில் மற்றம் சுபநிகழ்வுகளில் முன் நிற்கும். மடங்காதது. இதைக் கயிறு சேர்த்துக் கட்டுவார்கள். தோட்டத்தில் கன்றுடன் இருந்து நமக்கு நல்ல உணவைத் தரும் வாழை மரம்.
    பாடலில் சொல்லக்கருதிய பொருள் பசு மாடு. பசுவானது பால் மற்றுமல்லாது இறைச்சி, தோல், சாணம் என்று உடல் முழுவதையும் நமக்குத் தந்து உதவும். உணவை வாயில் ஒதுக்கிப் பின்பு அசைபோடும். கோவில் மற்றும் சுபநிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லப்படும். அங்கே அது மடங்கி அமராது. கயிற்றால் கட்டப்படும். தோட்டத்தில் அதன் கன்றுடன் இருந்து நமக்கு நல்ல உணவான பாலைக் கொடுத்திடும்.
    பாடலில் சொல்லக்கருதிய பொருள் பசுவும் கன்றும் ஆகும். அதனைப் புலப்படுத்த அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் வாழை மரம். தன் உடல் முழுவதும் தந்தும், ஒதுங்கி அசைவதும், மடத்தில் மடங்காமல் நிற்பதும் கயிற்றுடன் இணைக்கப் படுவதும் பசுவுக்கும் வாழைக்கும் பொதுவான அடைமொழிகள் ஆகும். தோட்டத்தில் துள்ளிடும் கன்றுடன் நல்லுணவைத் தரும் என்னும் அடைமொழியானது பசுவுக்கு மட்டும் உரிய சிறப்பு அடைமொழியாகும். இப்படி இரண்டிற்கும் அடைமொழிகள் விரவி வந்தும், பசுவிற்கு மட்டும் சிறப்பான ஒரு அடைமொழியைக் கூறி இருப்பதாலும் இதுஅடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.06.2019

திங்கள், 24 ஜூன், 2019

ஐயவதிசயம்!



அதிசயவணி!

பாடலில் ஒரு பொருளை உலக நடையைக் கடந்து ஐயத்துடன் அதிசயத்துப் பாடுவதுஐய அதிசயம்ஆகும்.

உ ம்
செந்தமிழைத் தேவியவள் செப்பிடும் போதெல்லாம்
செந்தேன் குடித்த செயலானேன்! – முந்தும்
கவிதான் இனிப்போ! கருத்தைச் சுவைக்கும்
செவிகளுக்கும் வாயுண்டோ செப்பு!

பொருள்செம்மையான தமிழ் மொழியில் பெண்ணானவள் பேசிடும் பொழுதெல்லாம் நான் தேனைக்குடித்ததைப் போல் மயங்கினேன். இப்படி ஆவதற்கு காரணம் முந்திவந்து காதுக்குள் நுழையும் கவிதையில் உள்ள இனிப்பான சுவையோ. அப்படியென்றால் அந்தக் கவிதையில் உள்ள கருத்தின் சுவையை உண்பதற்கு செவிகளுக்கு வாய்தான் உண்டோ…. சொல்வாயாக.
   இப்பாடலில் கூறப்பட்ட பொருள் தமிழின் சுவை ஆகும். தமிழைக் காதால் கேட்டதும் மனமானது தேன் குடித்த நிலையை உணர்கிறது. அதற்கு காரணம் கவிதையில் உள்ள இனிப்பான சுவையோ. அப்படியானால் காதுகளுக்கு இனிப்பைச் சுவைக்க வாய் இருக்கிறதா ? என்று உலகநடையைக் கடந்து  ஐயமுடன் அதிசயத்துக் கூறியுள்ளதால் இதுஐயவதிசயம்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
25.06.2019

புதன், 19 ஜூன், 2019

கூடா உவமை!



உவமை அணி!
ஒரு பொருளுக்கு ஒப்பாகாத அல்லது கூடாத ஒன்றை அப்பொருளுக்கு உவமையாகக் கூறுவது கூடா உவமை“ எனப்படும்.

உ.ம்
மலர்ச்சொரியும் சூடும், வளர்தழலின் இன்பும்,
உலர்நிலத்தில் வாழும் உழவும், – நலமாய்
நடந்ததுபோல் உள்ளது நாதாநீ யின்றிக்
கடந்துவிட்ட காலப் பொழுது!

பொருள்அன்பனே! நீ என்னுடன் இல்லாமல், கடந்து போன காலங்கள், மலரில் உள்ள சூடும், வளர்ந்து எரியும் நெருப்பின் இன்பமும், ஈரமின்றி உலர்ந்து காய்ந்து போன நிலத்தில் செய்யும் பயிர்த்தொழிலும் நலமுடன் நடந்தது போல் உள்ளது. இது தலைவனிடத்தில் தலைவி சொல்லிய கூற்று.
    மலரானது சூட்டினைத் தராது, செந்தழலானது இன்பத்தைத் தராது, காய்ந்த நிலத்தில் பயிர் விளையாது. ஆனால் இவையெல்லாம் நடந்தது போல் உள்ளது என்று கூறியதால் இது கூடா உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.06.2019

வெள்ளி, 14 ஜூன், 2019

வன்சொல் விலக்கணி!



முன்ன விலக்கணி!

பாடலில் வன்சொல் சொல்லி ஒரு செயலை விலக்குவது வன்சொல் விலக்குஎனப்படும். பொதுவாக இதிலிருந்து தொடரும் எட்டு விலக்கும் தோழி கூற்றாகவே உதாரணப் பாடலைக் கொடுத்துள்ளார்கள்.

. ம்
கருவேல முட்களெல்லாம் கால்களில் குத்தும்
திருமேனி நோயால் துவளும்! – அருவுயிர்ப்
போகும்! புதுவிடம் போகா(து) இருதோழி!
போகுமுயிர் நிற்கும் பொலிந்து!

பொருள் புது இடத்திற்கு போனால் கருவேலம் முள் கால்களில் குத்தும். அதனால் நோய் உண்டாகும். அழகிய மேனி துவண்டு கடைசியில் அரிய உயிரும் போய்விடும். அவ்விடம் போகாது இருந்துவிட்டால் உயிரானது நின்று வாழும்.
   ஓர் இடத்திற்கு செல்லும் தன் தோழியை, அங்கே போனால் முட்கள் குத்தும். நோய் வந்து சேரும். உயிர் போகும் என்ற வன்சொற்களைச் சொல்லி அந்த செயலை விலக்குவதால் இது வன்சொல் விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2019

செவ்வாய், 11 ஜூன், 2019

ஒட்டணி!



அடையும் பொருளும் வேறுபட மொழிதல்!

 அடை என்பது பொருளைச் சிறப்பிக்கும் அடைமொழி ஆகும்.
பாடலில் ஒரு பொருளைச் சிறப்பிக்க வந்த அடைமொழிகளையும், அவற்றால் சிறப்பிக்கப்படும் பொருளையும் வேறாகக் கூறி, அவற்றால் தன் உள்ளத்தின் கருத்தைச் சொல்வதுஅடையும் பொருளும் வேறுபட மொழிதல்எனப்படும்.

. ம்
சிறகில்லாப் புள்லெல்லாம் சேர்ந்தந்தக் கூட்டில்
இறவா திருக்க இரையைத்திறத்துடன்
கொண்டுவந்து ஊட்டும்! குவிந்திருக்கும் தாய்மையைப்
பெண்பறவை கொண்டிருக்கும் பேறு!

பொருள்சிறகில்லாத சின்னச்சின்னக் குஞ்சுகள் கூட்டில் சேர்ந்திருக்க, அக்குஞ்சுகள் இறவாமல் இருக்க தாய் பறவை உணவைக் கொண்டுவந்து ஊட்டும். இப்படி செய்வது உள்ளத்தில் குவிந்திருக்கும் தாய்மை  குணத்தைக் கொண்டிருக்கும் பெண்பறவைகளுக்கு உரிய தகுதி.

பாடலில் வீட்டில் குழந்தைகள் இருக்கின்றனர். வெளியில் சென்ற பெண்ணானவள் எங்கிருந்தாலும் வந்து அக்குழந்தைகளின் பசியைப் போக்குவாள் என்பது சொல்லக்கருதிய பொருளாகும்.  ஆனால் அதனை மறைத்து அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் பறவையும் அதன் குஞ்சுகளும். கூட்டில் வாழும் தன் குஞ்சுகளுக்கு இரையைத் தாய் பறவை கொண்டுவந்து கொடுக்கும் என்பது. இவ்வாறு தான்கருதிய பொருளை மறைத்து அதனை வெளிப்படுத்த வேறொன்றினைச் சொன்னதால் இதுஒட்டணிஆகியது.
   தான் சொல்லக்கருதிய பொருள் அன்னையாக இருக்க அதற்கு நிகராக பறவையைச் சொல்லி அதற்கு ஏற்றார் போல் அடைமொழிகளைச் சொல்லியுள்ளதால் இதுஅடையும் பொருளும் அயல்பட மொழிதல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.06.2019

திங்கள், 10 ஜூன், 2019

விபாவனை அணி!



வினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்!

இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வின் உலகறிந்த பொருளைக் கூறாமல் அவ்வினை அந்தப் பொருளுக்கானது அல்ல என்று இவ்வினையை மறுத்து அதற்கு எதிரான வேறு ஒரு நிகழ்வைக் கூறுவதுவினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்எனப்படும்.

. ம்
தேயாத வெண்ணிலவில் தேர்ந்த இருளான
வேயாத கூறை விரிந்திடப்பாயாத
கூர்வேலால் தாக்கக் கொடியில்லாப் பூவிதழாள்
சேர்க்காமல் சென்றதேன் செப்பு!

பொருள்தேயாத வெண்ணிலவில் (பெண்ணின் முகம்) மிகவும் அடர்ந்த இருளான வேயாத கூறை விரிந்திட (தலையில் உள்ள கற்றைக் குழல் விரிந்திட), பாயாத கூர்வேல் தாக்க (கண்கள் தாக்க) கொடியில்லா பூவிதழாள் (செவ்விதழ்வாய்) தன்னைச் சேர்த்து அணைக்காமல் சென்றது ஏன் ? இது தலைவனின் கூற்று இயல்பாக வந்துள்ளது.
    தேய்ந்து வளரும் தன்மையுள்ளது வெண்ணிலவு. இங்கே தேயாத நிலவு என்றதால் இது அந்த மங்கையின் முகத்தைக் குறிக்கிறது. குடிசைகளில் கீற்றோலையால் அடுக்கப்படுவது. இங்கே வேயாத கூறை என்றதால் இது அவளின் தலை முடியைக் குறிக்கிறது. வேல் பாய்ந்து தாக்கும். இங்கே பாயாத கூர் வேல் என்றதால் இது அவளின் கண்களைக் குறிக்கிறது. பூக்கள் கொடியில் பூக்கும். இங்கே கொடியில்லாப் பூ இதழ் என்பதால் இது அவளின் வாயைக் குறிக்கிறது.
   தேய்ந்து வளருதற்கு வெண்ணிலவும், குடிசைக்குக் கீற்று வெய்யப்படுவதும், வேல் பாய்வதும், பூக்கள் கொடியில் இருப்பதும் அதன் அதன் வினைகள். இவ்வினைகளை மறுத்து, முகம், தலைமுடி, கண்கள், வாய் என்று பி பொருட்கள் புலப்படுத்துவதாக வந்துள்ளதால் இதுவினையெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
10.06.2019