வியாழன், 25 அக்டோபர், 2012

வரலாற்றுச் சுவடே... வருக! வருக!




 வருக வருக வரலாறே
   வந்து நிறையப் பதிவிடுக!
பெருகப் பெருக என்றெண்ணிப்
   புதுமை வரவைத் தந்திடுக!
சிறுகச் சிறுக விஞ்ஞானம்
   சிறந்த வழியைக் காட்டிடுக!
பருகப் பருக இனிக்கின்ற
   பழமைத் தமிழ்போல் உயர்ந்திடுக!  

பெருமை சேர்க்கும் பதிவுகளைப்
   பெயருக்(கு) ஏற்ப தந்திடுவார்.
திருவைப் போன்ற கருத்துகளைத்
   தினமும் நமக்கு அளித்திடுவார்!
கருமைக் கண்ணுக்(கு) அழகாகும்!
   கலைஞன் வரவோ நிறைவாகும்!
அருமை நண்பர் வரலாற்றை
   அருணா அன்பாய் வரவேற்றேன்!


அருணா செல்வம்.
  

(
நிறைய நாள் கழித்து வந்திருக்கிறேன், ஸ்பெஷல் வரவேற்பு ஏதும் கிடையாதா? :) :)....)

வரவேற்றது போதுங்களா வசு..?

புதன், 24 அக்டோபர், 2012

வேண்டாம்... வேண்டாம்...!!



தேனமுதச் செந்தமிழும் வேண்டாம்! நல்ல
     தெளிவான கருத்ததிலே இல்லை என்றால்!
 வானமுத மழைக்கூட வேண்டாம்! நெல்லு
     வளமாக வளர்ந்திருக்கும் நிலத்தில் என்றால்!
 கானமழை பொழிந்தாலும் வேண்டாம்! அங்கே
     காதடைத்துக் கவியறியாச் செவிடர் என்றால்!
 தானழைத்தே வந்தாலும் வேண்டாம்! மங்கை
     தானிறைந்த தாகமுடன் இல்லை என்றால்!

அருணா செல்வம்

திங்கள், 22 அக்டோபர், 2012

நாற்பது வயதில் நாய் குணம்!! (சிறு விளக்கம்)





   பொதுவாகவே மனிதர்களுக்கு நாற்பது வயது வந்த உடன் அவர்கள் கொஞ்சம் சிடுசிடு என்று பேசினாலும் உடனே வீட்டிலிருப்பவர்கள் “அவர்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது இல்லையா...? அதனால் நாய் குணம் வந்து விட்டது... அப்படித்தான் இருப்பார்கள்...என்று சொல்லி மேலும் அவர்களை கோபப் படுத்துவார்கள்... இது நம் வீடுகளிலேயே கண்கூடாகக் கண்பது தான்.
   ஆனால் இதில் உண்மையும் இருக்கிறது தான். அதனால் தான் இந்தப் பழமொழியை நம் முன்னோர்கள் காரணமாகவே சொல்லி இருக்கிறார்கள் என்பது இந்த விளக்கத்தைப் படித்தால் உங்களுக்கும் விளங்கும்.

பொதுவாக நாயின் குணங்கள் என்று பார்த்தால்
- நாய் நன்றி உள்ளது.
- நாய் வீட்டைக் காக்கும்.
- நாய் அன்பானது... இப்படி நிறைய நல்ல விசயங்கள் நாயிடம் இருக்கிறது.

   ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும் இருக்கிறது. அது என்ன வென்றால்... நாய் தான் உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால் அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து) திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து உண்ணும். இப்படி செய்வது நம் யாருக்கும் பிடிக்க வில்லையென்றாலும் இதுவும் நாயின் குணங்களில் ஒன்றே.

    அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத் தோன்றுமாம். அப்படி கிடைக்காத பச்சத்தில் அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும் இருப்பார்களாம்.
   அதனால் தான் மனிதனுக்கு “நாற்பது வயதில் நாய் குணம்“ வரும் என்று பழமொழியாக வழங்கப்படுகிறது.

    இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒருசிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம் நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.
இதுவும் என் தாத்தா சொன்னது தான்.
நன்றி.


அருணா செல்வம்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மாமா பிடித்த ஆவி !! (நகைச்சுவை)





    காலையில் எழுந்ததிலிருந்து காவியாவைக் காணாத்தால் தன் தங்கையிடம் விசாரித்தார் மாமா.
    “என்னன்னு தெரியலை... நேத்து ஸ்கூல் விட்டு வந்த ஊடனே படுத்திட்டாள். சாப்பிடவும் இல்லை. நைட் ஏதேதோ பிதற்றிக் கொண்டே இருந்தாள். ஜீரம் வேற லைட்டா அடிக்குது. மருந்து கொடுத்தேன். ஆனால் அறையிலேயே இருக்கிறாள்.“ என்றாள் தங்கை.
    “ச்சோ... நான் இன்னைக்கு காந்தி ஜெயந்தியாச்சே... அவளைச் கூட்டிக்கொண்டு வெளியே போகலாம் என்று தான் வந்தேன். சரி நானே பார்க்கிறேன்“ என்று சொல்லிவிட்டு காவியா அறைக்குள் நுழைந்து நெற்றியைத் தொட்டுப்பார்த்தார்.
   காவியா கண்விழித்தது தான் தாமதம்.... “அம்மா... அம்மா... இங்க வாயேன்... என்று கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். ஓடி வந்த அம்மா மகளைத் தூக்கிக் கொண்டாள்.
   “அம்மா எனக்கு பயமா இருக்குது... இந்த மந்திரவாதிய வெளியே போகச்சொல்லு...“ கண்களை மூடிக்கொண்டு கத்தினாள் காவியா.
    “ஏய் காவியா.... நல்லா பாரு... மந்திரவாதியில்ல. நம்ம மாமாடீ.. கண்ணைத் தொறந்து பாருமா...என்றாள் அம்மா.
    “இல்ல... இவரு மந்திரவாதிதான். மொதல்ல போவச்சொல்லு...“ மேலும் அழுதாள் கவியா.
    மாமா ஒன்றும் புரியாதவராக வெளியில் வந்தார்.

      மூன்று மணி அளவில் காவியா தோழன் சதீஷ் வந்தான். மாமாவைப் பார்த்ததும் அவருக்கு ஒரு முத்தமிட்டுவிட்டு “மாமா காவியா சொன்னா... நீங்க சொன்னதால தான் இன்னைக்கு எங்க ஸ்கூல்ல லீவு விட்டாங்க. தெங்க்ஸ் மாமா... “ என்றான்.
    மாமா ஒரு பெருமூச்சி விட்டுவிட்டு... “சதிஷ்... நீ போயி காவியாவைக் கிளம்ப சொல்லு. நம்மா மூனு பேரும் பைக்குல பீச்சிக்கு போயிட்டு ஐஸ் வாங்கி சாப்பிட்டுட்டு வரலாம்.. என்ன? போயி காவியாவைக் கூப்பிடு....என்று சொல்லிவிட்டு அவன் பின்னாலே சென்று அறையின் வெளியிலேயே நின்று கொண்டார்.
    சதிஷ், காவியாவை எழுப்பி விசயத்தைச் சொன்னான். அவள் “வேண்டாம் சதிஷ்... மாமா ஒரு மந்திரவாதி. நீ அவருக்கூட போவாத... போனாக்கா... அப்புறம்  உன்மேலேயும் ஆவி ஏறிடும்... “ என்றாள் கண்களைப் பெரியதாக விரித்து.
    உடனே சதீஷ் பயந்தவனாக “என்ன சொல்லுற நீ... என்றான்.
    மாமாவும் காதை நன்றாக தீட்டிக்கொண்டார்.
    “ஆமாம் சதிஷ்.... நான் நேத்து பாத்ததைச் சொல்லுறேன் கேளேன்... நேத்து ஸ்கூல் முடிச்சிட்டு.. டியூசன் முடிச்சிட்டு மாமா கூட விளையாடலாம்ன்னு வீட்டுக்கு ஓடியாந்தேன். அப்போ எங்க வீட்டு ஹாலுல ஒரு துணிமூட்டை பெரிசா ஆடிக்கினு இருந்துச்சி. பெரிசா மூச்சை இழுத்து இழுத்து விடுற மாதிரி சத்தம் கேட்டுச்சு... நான் பயந்து போயி அம்மாகிட்ட ஓடினேன். அம்மா சமைச்சிக்கினு இருந்தாங்க. நான் அம்மாவைச் கூப்பிட்டேன். “ஹால்ல வந்து பாருன்னு... “ அவுங்க அத காதுலே வாங்களை. சரி மாமாவிடம் சொல்லலாம்ன்னு “மாமா மாமா... “ன்னு கூப்பிட்டேன்.
    அப்போ அம்மா சொன்னாங்க... “மாமா ஹாலுல ஆவி பிடிக்கிறார். நீ போயி அவரை டிஸ்டப் பண்ணாதே... போ.. போயி படி..“ ன்னாங்க. நான் பயந்து போயிட்டேன். திரும்பவும் ஹாலுக்கு வந்தேன். அப்போ அந்தத் துணி மூட்டை ஒரு மாதிரி ஆடி கொஞ்ச நேரத்துல மாமா அந்த துணி மூட்டையில இருந்து வெளிய வந்தார். அப்போ அப்போ நிறைய வேர்த்துப் போய் பயங்கரமா இருந்தாரு. பாக்கவே பயமா இருந்துச்சி.
    அப்பறம் அவரு நேரா அம்மாகிட்ட போயி... “ஆவிய நல்லா புடிச்சிட்டேன். இனிமேல பிரட்சனை இருக்காது...“ அப்படின்னு சொன்னாரு. “ என்றாள் காவியா.
    சதிஷ் பயந்தவனாக அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். “நிஜமாவா காவியா... அப்போ... நானும் அவர் கூட வெளிய போவமாட்டேன்.“ என்றான் சதிஷ் பயந்தவனாக.
    வெளியே இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மாமா நேற்று சளி பிடித்துக்கொண்டு தலை பாரமாக இருந்ததால் சுடு தண்ணீரில் விக்ஸ் போட்டு ஆவி பிடித்ததை நினைத்துச் சிரித்தார்.
   இனி இந்த ஆறு வயது பிள்ளைகளை என்ன சொல்லி சமாதானப் படுத்தவது என்றும் தெரியாமல் விழித்தார்.


அருணா செல்வம்.