வெள்ளி, 15 ஏப்ரல், 2016

பருவ ஞாபகங்கள்!




மனமென்னும் தோட்டத்தில்
மலர்கின்ற மலர்களெல்லாம்
மாயனவன் செய்துவைத்த
மனம்நிறைந்த மதுக்குடங்கள்!

எத்தனையோ பூவினங்கள்!
எந்நாளும்   காய்த்தாலும்
காய்க்காமல் போனாலும்
காலத்தின் கவித்துவங்கள்!

இன்பங்கள் நிறைந்திருந்தால்
இனிக்கின்ற தேன்சுரந்து
இன்பமனம் வீசுகின்ற
எழுதாத வர்ணனைகள்!

பருவத்தில் உணர்வுகளைப்
படைத்திட்ட அருமைகளைப்
பளிங்காகக் காட்டிநம்மைப்
படபடக்க வைப்பவைகள்!

மாதங்கள் வருடமாகி
வடிவத்தில் முதுமையினைப்
பரிசாகத் தந்தாலும்
பாழ்மனத்தில் பதிந்தவைகள்!

தினமெழுந்து பார்த்தாலும்
தீதென்றே நினைத்தாலும்
இளம்வயதின் இன்பங்கள்
எந்நாளும் இனிப்பவைகள்!

மரணகனம் வந்தாலும்
மகிழ்வளிக்கும் ஞாபகங்கள்!
மனமதிலே வாடாமல்
மலர்ந்தாடும் சோலைகளே!


அருணா செல்வம்

வியாழன், 7 ஏப்ரல், 2016

கண்ணே கண்ணுறங்கு!!



கண்ணே! மணியே! கற்கண்டே!
       கறுத்த கூந்தல் நிறத்தழகே!
பொன்னே! பொருளே! பூஞ்சரமே!
       பொக்கை வாயால் சிரிப்பவளே!
முன்னே பின்னே பார்க்கின்ற
       முத்துப் போன்ற கண்ணழகே!
பெண்ணாய் உலகில் பிறந்தவளே
       பேசும் கிளியே கண்ணுறங்கு!

இன்றோ உனக்கு வேலையில்லை!
       இதுபோல் வாழ்நாள் கிடைப்பதில்லை!
தின்றால் உணவு தீருதல்போல்
       திரும்ப வராத நாளிதுவே!
அன்றோ எனக்கே அன்னைசொன்னாள்
       அதைநான் உனக்குப் பாடுகிறேன்!
என்றோ வருமா ஏங்காமல்
       இன்றே சேர்த்தே கண்ணுறங்கு!

காலை பூக்கள் மலர்ந்துவிடும்!
       காலம் விரைவில் கடந்துவிடும்!
வேலை போகும் வேளைவரும்!
       விருப்பம் பலவும் சேர்ந்துவரும்!
மாலைச் சூடும் மனம்வந்தால்
       மடியில் மழலை தவழ்ந்துவரும்!
நாளை என்போல் பாடவரும்
       நலமாய் இன்றே கண்ணுறங்கு!


அருணா செல்வம்