செவ்வாய், 14 ஜூன், 2022

தோழ தோழியருக்கு வணக்கம் !

 



     கடந்த சில நாட்களாக கி.பி மூன்றாம் நுற்றாண்டில் பத்துப்பாட்டுத் தொகுப்பில் அடங்கிய கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு என்ற நுலில் இருந்த 99 மலர்களின், அவர் அக்காலத்தில் குறிப்பிட்ட பெயரையும். அதையே நாம் இக்காலத்தில் அறிந்திருக்கும் பெயருடன், அம்மலரின் அல்லது அம்மரத்தின் பயனையும் நேரிசை வெண்பாவாக எழுதிப் பதித்திருந்தேன். இதில் “வாரம்“ என்ற மலரைப்பற்றி இணையத்தில் தேடியும் தெரிந்தவர்களிடம் கேட்டும் என்னால் அறியமுடியவில்லை. அதனால் அம்மலரை மட்டும் நான் எழுதவில்லை.
    மற்ற 98 மலர்களை அனேகமாகச் சரியாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறு இருப்பின் மன்னித்துச் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
     தவிர, என் பாடல்களைப் படித்து அதற்கு விருப்பக் குறியிட்டும் கருத்துக்கள் எழுதியும் என்னை ஊக்குவித்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
நன்றியுடன்
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

99. தாழை! (தென்னந்தாழை)

 


.
தென்னை மரம்முழுதும் சீராய் பயன்தரும்!
தென்னம்பூ பாளை தேடியதைத் - தின்னக்
குடலிறக்கம் பேதி குணமாகும்! சூட்டின்
உடலெரிச்சல் போக்கும் உணவு!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022
 

(கைதை என்பது தாழம்பூ
தாழை என்பது தென்னந்தாழை)

நெய்தல் மலர்! (வெள்ளாம்பல்)

 


நெய்தல் மலர்உவர் நீரில் மலர்ந்திடும்!
தெய்வத்தின் மேல்சாற்றார்! தேனெடுக்க _ மொய்த்திடும்
வண்டு மதிமயங்கும்! வைகறையில் பூக்குமிதன்
தண்டுமிகக் குட்டையான தாம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

 
(குறிஞ்சிப்பாட்டில் இரண்டு நெய்தல் மலர்கள் உள்ளன.
நீள்நறு நெய்தல் என்பது நீலாம்பல்
மணிக்குலைக் கள்கமழ் நெய்தல் என்பது வெள்ளாம்பல்)
 
(நெய்தல் நிலப் பூக்களாக அடும்பு, புன்னை, ஞாழல், கோங்கு, தாழை, தும்பை, நெய்தல் ஆகும்)
 
(ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்ற பெயர்களைக் கொண்ட நீர் மலர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையாகும்)

வியாழன், 9 ஜூன், 2022

வடவனம்! (கருந்துளசி)

 


வாய்நாற்றம் போக்கும் வடவனம்! கண்புரை
நோய்,சளி தொல்லை நொடிந்தோடும்! - மாய்ந்த
கருவை வெளியேற்றும்! காய்,தண்டு, பூவும்
தரும்பயன் என்றும் தழைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

 

(துழாய் என்பது செந்துளசி

வடவனம் என்பது கருந்துளசி.

சிலர் ஆலமரம் என்றும். ஒருசிலர் திருநீற்றுப் பச்சிலை என்றும்

சொல்கிறார்கள்)

வேங்கை மலர்! (வேங்க மரம்)

 



விலையுயர்ந்த கட்டையில் வேங்கையும் ஒன்று!
மலையோரம் நன்றாய் வளரும்! - இலை,ஐந்து
கூட்டிலைக் காணும்! குளிர்ச்சியைத் தந்திடும்!
ஓட்டும் பலநோய் ஒழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

பிண்டி மலர்! (அசோக மரம்)

 


குட்டைமரப் பிண்டியில் கொத்தாய் மலர்மலரும்!
கட்டுக் குழலிலும் காதிலும் - கட்டிவைப்பார்!
அன்றைய மக்கள் அசோகமரம் என்றார்கள்!
இன்றும் அதுவே இருப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

செவ்வாய், 7 ஜூன், 2022

93. குளவி மலர்! (மலை மல்லிகை)

 


குளவிமலர் பூக்கும் குறிஞ்சி நிலமோ
அளவிலா வாசத்தில் ஆழ்த்தும்! - வளரும்
மலையின் பெயரை மல்லியாகப் பெறும்
தலையிலும் வைக்கத் தகைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

 
(மௌவல் என்பது மரமல்லி
குளவி என்பது மலைமல்லிகை)

தோன்றி மலர்! (இருநிறக் காந்தள்)


 


.
சீர்ச்சுடர்போல் தோன்றிச் சிறப்புறும் தோன்றிமலர்
கார்காலம் வந்திடக் காத்திருக்கும்  வேர்மண்ணில்!
செவ்விதழ்கள் மேல்நோக்கச் சேவலின் கொண்டைபோல்
கவ்விடும் நெஞ்சைக் கவர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

 

(காந்தள் என்பது செங்காந்தள்

கோடல் என்பது வெண்காந்தள்

தோன்றி என்பது இருநிறமும் கொண்ட காந்தள்)

மராஅம் மரம் ! (வெண் கடம்பு)

 


திருமால் முருகனுக்குத் தேவையான பூவாய்
அருமைமராம் பூக்கள் அமையும்! - பெருமரம்
கட்டிடச் சாரமிடக், காகிதம், தீக்குச்சி,
பெட்டியெனச் செய்வதும் பேறு!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

வெள்ளி, 3 ஜூன், 2022

வள்ளிப்பூ! (வள்ளிக்கிழங்கு கொடி)

 


வள்ளிக் கிழங்கானது வாதநோயைச் சீராக்கும்!
உள்ளுறுப்பின் புத்துணர்வை ஊட்டிடும்! - வள்ளல்போல்
நன்மை கொடுத்திடும் நார்ச்சத்து மிக்கது!
இன்சுலின்சீர் செய்யும் இனிது!
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2022

மருதம் ! (மருத மரம்)

 


பெரும்பாட்டைச் சீராக்கிப் பெண்களைக் காக்க
மருதமரப் பட்டை  மருந்து! - கருப்பைநோய்,
தூக்கவின்மை, காதுவலி, சுக்கிலசு ரப்பியின்
வீக்கமும் போக்கும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2022

பாங்கர்! (உகாய் மரம்)

 


பாங்கரின் குச்சிகளில் பற்கள் துலக்கலாம்!
பூங்கொத்துகள் காய்க்கும் பொலிவுடன்! - தீங்கின்றி
வீழ்ந்திடும் கார விதையை பறவையுண்ணும்!
ஆழ்நிற வண்ணம் அழகு!
.
பாவலர் அருணா செல்வம்
03.04.2022

புதன், 1 ஜூன், 2022

ஞாழல் மலர் ! (புலிநகக் கொன்றை )

 



.
தங்கம்போல் மின்னித் தனியழகு கொண்டதால்
நங்கையரை ஈர்த்திடும் ஞாழலாம் ! - பொங்கிடும்
மஞ்சளும் செந்நிறமும் மாற்றமிட்டும், காற்றினில்
மிஞ்சிடும் வாசமே மேல்!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

முல்லை மலர்!

 



கல்லிவர் முல்லைமலர் கண்பார்வை கூட்டிடும்!
சொல்லில்லா ஆசையைத் தூண்டிடும்! - மெல்ல
மனம்மயக்கும் வாசமுல்லை மாலையில் பூக்கும்!
மனநோயைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

வஞ்சி மலர் ! (இலுப்பை மரம்)

 



தழை,விதை,பூ, பட்டை, தகுந்த மருந்தாம் !
மழையை வரவழிக்கும் வஞ்சி ! - பழையோர்
இனிப்புக்குப் பூவும் இருளோட எண்ணை
கனிமதுவும் உண்டார் களித்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022