செவ்வாய், 24 நவம்பர், 2020

கணபதியாரே !

 

..

தும்பிக் கரமுடன் தொந்தி பெருகிய
    தொன்மை நிறைந்திடும் கணபதியாரே!
எம்பிக் குதித்தினும் எண்ணும் பொருளினுள்
    இன்பம் கிடைப்பது விதியெனுமாயே!
நம்பி வருமெனை நல்கும் அறிவினை
    நன்மை பெருகிட அருளிடுவாயே!
தெம்பு துணைவரத் தென்னி மரமெனத்
    திண்மை முழுவதும் வழங்கிடுவாயே!
 
விந்தை உலகிது வெல்ல நினைப்பதை
     விண்ணின் உயர்வென வியந்திருந்தேனே!
எந்தன் மனமதில் என்றும் உறைந்துடன்
     இன்ப மருளிடும் பெருவிறைநீயே!
முந்தி இருத்திட முந்தன் வரந்தர
     முன்னை செயலினைத் தொடங்கிடுவேனே!
சிந்தை செயற்படச் செம்மை முறையுடன்
     சென்று நலமுடன் முடிப்பதுநீயே!
 
அன்னை மனமுடன் அந்தம் வியந்திடும்
    அன்பின் கருவறை உனதுளம்தானே!
மின்னும் மலரினுள் மெல்ல மணத்திடும்
    மென்மைக் குணமென நிறைந்திடுந்தேனே!
சொன்ன கவிதனில் சொக்கும் பொருளினில்
    தொன்மை இறையுனைக் கலப்பதனாலே
நன்மை பலமிகும் நஞ்சு அழிந்திடும்
    நன்றி யுடனுனை வணங்கிடுவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
24.11.2020

வெள்ளி, 20 நவம்பர், 2020

இதுவும் கடந்து போகும்!!


.
நிலையாய் இருக்கும் என்றேநாம்
   …..நெடிய வாழ்வை எண்ணுகிறோம்!
வலையைப் போட்டே இழுக்கின்றான்!
  ….. வகையாய் மாட்டி விடுகின்றோம்!
அலையாய் இன்பம் அடித்திருக்க
 …..  அமைதி யான வாழ்க்கையினைக்
கலைத்துப் போட்ட கோலத்தைக்
 …..   கண்டு நானும் துடித்திட்டேன்
.
காதல் கொண்ட வாழ்வினிலே
 …..  கணவன் என்றும் தெய்வம்தான்!
சேதம் இல்லா வாழ்வினிலே
 …..  சேர்ந்த துன்பம் என்சொல்வேன்?
சாதல் என்றும் பழையதுதான் !
…..   சகித்துப் போகச் சொன்னாலும்
பூத மனமோ மறக்காத
…..   பொல்லா நிலைதான் என்சொல்வேன்?
.
அந்த செய்தி நானென்றும்
…..   அறியா மலேயே இருந்திருந்தால்
சொந்தம் கண்ட அனாதைபோல்
 …..  சுடரும் முகமாய் இருந்திருப்பேன்!
வந்த செய்தி இதயத்தை
…..   வலிக்கச் செய்து விட்டதினால்
சிந்தை முழுதும் அவள்நினைவாய்
…..   சின்னத் தனமாய் அழுகின்றேன்!
.
என்ன சொல்வேன் ஆறுதலாய்?
  ….. எதைதான் சொன்னால் ஆறிவிடும்?
இன்ன வார்த்தை என்றிருந்தால்
…..   இதயம் ஏந்தி சொல்லிடுவேன்!
துன்பம் துடைக்க வார்த்தையில்லை!
…..   துணிவாய் முன்னோர் சொன்னஉரை!
என்றும் மனத்தில் வைத்துவிடு!
…..   இதுவும் கடந்து போகுமென்றே!
.
பாவலர் அருணா செல்வம்
20.11.2020

செவ்வாய், 17 நவம்பர், 2020

ஊழியி னொளியாய் வருவாயே!



தானன தனனா தானன தனனா
தானன தனனா தனதானா !  (அரையடிக்கு)
 .
மாரியி னருளே! மாமணி நிழலே!
….மார்கழி எழிலே யதனோடே
..மாதவ முனியே சீரிய உயர்வே
……..மாந்தரின் நினைவாய் நிறைந்தோனே!
.
வீரிய முதிர்வாய் வாடிய உயிரோ
…….வேதனை படுதே பெருநோயால்!
..வீதலி லழுதோர் வீரிடுங் குரலோ
……..வேசடை வலியோ கடல்போலே!
.
ஊரினி லுழல்வோர் வேறுயிர் மறந்தே
…….ஓதிய பொருளாய் யுறைவோனே
..ஊடுறு வினையோ ஓடிய ழியவே
……ஊழியி னொளியாய் வருவாயே!
.
சேரிட முணர்ந்தே சேனையை யறிந்தே
…….சேவடி யுனதே பணிந்தோமே!
..சீயெனும் பிணியோ மாயென மறைந்தே
…….சீவனு யரவே அருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
18.11.2020

 
வேசடை – துக்கம் கவலை
வீதல் – சாதல், கெடுதல்

தீபாவளி பாசம்

 

  அமுதன் ரகுவின் வீட்டில் நுழைந்த போது அவனின் மகள் புவனா, புது கவுன் போட்டுக்கொண்டு தெரு வாசலிலேயே நின்று கொண்டு மற்றவர்கள் பட்டாசு கொளுத்துவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

   “அவளிடம் இவன் புவனா.... இந்த கவுன் திபாவளிக்கு எடுத்ததா...?“ என்று அன்பாகக் கேட்டான்.

   அவள் இவனை முறைத்துவிட்டு, “இல்ல. இந்த கவுன் எனக்கு எடுத்ததுஎன்றாள்.

   உள்ளே போகும் போதே இப்படியா... என்ற யோசனையுடன் நுழைந்தவனை ரகு பெரியதாக வரவேற்காமல் வாடா...என்று மட்டும் சொன்னது இவனுக்கு மேலும் என்னவோ போல் ஆகிவிட்டது.

   என்ன செய்வது?  உதவி என்று கேட்க போகும் இடத்தில் மரியாதையை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா....? மனத்தைத் திடமாக்கிக் கொண்டான்.

   “என்னடா ரகு! இன்னைக்கு மழை வரும்ன்னு ரேடியோவில சொன்னாங்க. நீ கேட்டியா...?“

   “நான் கேக்கலைடா. அவங்களாத்தான் சொன்னாங்க.முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சொன்னான் ரகு. அமுதன் ஐயோஎன்று தலையைப் பிடித்துக்கொண்டான்.

   “என்னண்ணா... தலைவலியா...? அவர்கிட்ட பேசினாலே தலை வலிக்கும் தான். தலைவலி மருந்து வேணுமா...?“ பாசத்துடன் கேட்டபடி வந்தாள் ரகுவின் மனைவி.

   “வேண்டாம்மா. கொஞ்சம் சூட காப்பி இருந்தா கொடுஎன்றான்.

   “க்கும். ரெண்டும் ஒன்னு தான். எதை சாப்பிட்டால் என்ன?“ ரகு முணுமுணுத்தது அவள் காதிலும் விழுந்தது.

   “இதோ பாருங்க... ரெண்டு நாளா சண்டை போட்டது போதும். இன்னைக்கு நல்ல நாளும் அதுவுமா எங்கிட்ட சண்டைக்கு வர்றாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வந்திடும்... ஆமா...

   “உனக்கு நல்ல கோபம் கூட வருமா...? போ... போயி அந்த கஷாயத்தைப் போட்டு இவனுக்குக் கொடு.என்றான் ரகு எரிச்சலுடன்.

   அவள் முறைத்துவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள்.

   ரகு அமுதன் கொண்டு வந்த பலகாரப்பையைத் திறந்து அதிலிருந்த அதிரசத்தை எடுத்துச் சாப்பிட்டான். அதிரசம் சூப்பர்டா. வீட்டுல செஞ்சிதா?“

   “ஆமாம். ஆமா... நீங்க எதுவும் பலகாரம் செய்யலையா...?“ இவன் கேட்கும் பொழுதே.... காபியைக் கொண்டு வந்தவள், “ஆமா... நாளும் கெழமையுமா உங்க பிரெண்ட் நாளு பலகாரம் செய்யவிடுறாரா?“ மூக்கைச் சிந்தாத குறையதாக இழுத்தாள்.

   “ஏன்டா... என்ன ஆச்சி? ஏன்ம்மா புது டிரெஸ் வாங்கலையா...?“

   “நான் எனக்கு ஒரு புடவை வாங்கினேன்

   “நீ என்னடா வாங்கினே...?“

   “நான் கடன் வாங்கினேன்டா.

   “ஐயோ... என்னச்சி உனக்கு?“ அவன் பேசாமல் இருக்கவும் இவன், அவனின் மனைவியிடம் என்னதான்மா ஆச்சி?“ கேட்டான்.

   “அது ஒன்னும் இல்லையண்ணா. இந்த வருடம் அவருடைய தங்கைக்கு தலைதீபாவளி இல்லையா...? அவுங்க அம்மா பணம் கேட்டு போன் பண்ணினாங்க. இவரும் இந்த வருஷம் நாம தீபாவளியை சிக்கனமா கொண்டாடிடலாம்ன்னு சொல்லிட்டு எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம இருந்த பணத்தை ஊருக்கு அனுப்பிட்டாரு. கேட்டதுக்குத் தான் இவ்வளவு கோபம்.என்றாள்.

   “உங்கிட்ட சொல்லி இருந்தா நீ பணத்தை அனுப்பவா விட்டிருப்பே? எனக்கு அது வேணும் இது வேணும்ன்னு பணத்தைக் காலி பண்ணி இருக்க மாட்டே...கோபத்துடன் ரகு சொன்னான்.

   “ஆமா... அப்படியே நீங்க வாங்கி கொடுத்திட்டாலும்.... இப்ப கூட பாருங்ண்ணா. என் அண்ணன் தீபாவளிக்கு புவனாவிற்கு கவுன் வாங்க சொல்லி பணம் கொடுத்தது. அதுல சிக்கனமா எனக்கு ஒரு புடவையும் அவளுக்கு ஒரு கவுனும் எடுத்தேன். எங்களுக்குன்னு இவரு என்ன பெரிசா செய்திட்டாரு? நமக்கும் பொண்டாட்டி குழந்தைன்னு இருக்கிற எண்ணமே கொஞ்சம் கூட இவருகிட்ட இல்லண்ணா...குரல் தழுதழுத்தது.

   “சரி விடும்மா. இதையெல்லாம பெரிசா நினைச்சி கண் கலங்கிட்டு. ஏதோ நம்ம வசதிக்கு நம் தங்கைக்கு நம்மால முடிஞ்சதை செய்தோமே... என்ற திருப்தியாவது அவனுக்கு இருக்கட்டும். ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியில கிளம்பி போயிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

   வாசல் வரையில் வந்த ரகு அமுதனின் பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாயைச் செறுகினான்.

   “ஏதுடா இது?“

   “எனக்குத் தெரியும்டா. உன் தங்கைக்கும் இந்த வருடம் தலை தீபாவளி என்று. நான் கடன்வாங்கும் பொழுதே உனக்கும் சேர்த்து தான்டா வாங்கினேன். என் பொண்டாட்டிக்கு அவ அண்ணன் கொடுத்தான். நம்ம தங்கச்சிக்கு நாம தானே கொடுக்கனும். இதுவே தீபாவளி கொண்டாடின திருப்தியை நமக்கு கொடுத்திடும்டா... ம்.. கிளம்பு

   அமுதன் நன்றி சொல்லமுடியாத நிலையில் ரகுவைப் பார்த்துவிட்டு நடந்தான்.

 .

அருணா செல்வம்


வெள்ளி, 13 நவம்பர், 2020

தீபாவளி வாழ்த்து!

 


புத்தம் புதிய பட்டாடை,
   பொன்னால் செய்த அணிகலமும்
சத்தங் கூட்டும் பட்டாசும்
   சத்து நிறைந்த பலகாரம்
நித்தம் நினைக்கும் நல்லன்பும்
   நிறைந்த தீப நன்னாளில்
மொத்தம் கிடைக்க வாழ்த்துகிறேன் 
   முன்னைத் தெய்வ மொழியாலே!

.
தோழ தோழியர் அனைவருக்கும் இனிய தீபவொளி வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
14.11.2020

வியாழன், 12 நவம்பர், 2020

காலம் வரையும் கோலம்!

 


என்றுமில்லாமல்
இவ்வருடம் ஆசைப்பட்ட
பட்டுப்புடவை
வாங்கியாச்சு.
மஞ்சள் நிறத்தில்
மரகத பச்சை இலையழகு!
பண்டிகைகளில்
நான் பார்க்கவே
பகட்டாகப் பண்டத்துடன்
வந்து பேசும்
அடுத்த தெரு
கவிதாவிடம் மிடுக்காகக்
காட்டிவிட வேண்டும்.
பணமின்றி நின்ற
பண்டிகையில்
பிள்ளைகளைத் தேடி
பலகாரம் தந்திடும்
பால்யதோழிக்கு நிறைய
பலகாரம் தரவேண்டும்.
பகல் பொழுதில்
பக்கத்து ஊரில்
அம்மாவுக்கு வாயல் புடவை
அப்பாவுக்கு கதர் வேட்டி
கூடவே ஆயாவுக்குப்
பிடித்த அதிரசம்….
கணவன் வந்ததும்
கிளம்பவேண்டியது தான்
மடியில் மாஸ்க்
விற்ற பணம்
பத்திரமாக இருந்தது.
வந்து சொன்னான்
வெளியில் போக முடியாது
ஊரடங்கு என்று!
.
பாவலர் அருணா செல்வம்
13.11.2020

திங்கள், 9 நவம்பர், 2020

குட்டி!!

 


 
குட்டி என்றே தலைப்பிட்டுக்
   ….. கொஞ்சும் தமிழில் பாடவந்தேன்!
மெட்டி போடும் பெண்நானோ
   ….. மெல்ல எண்ணிப் பார்க்கின்றேன்!
புட்டி குட்டி ஆசைகளைப்
   ….. போற்றி மகிழ்வர் ஆண்கள்தான்!
கொட்டி வளரும் கற்பனையில்
   ….. குட்டி என்றே எதையெடுப்பேன்?
 .
கட்டிப் போட்ட கன்றினையும்
  …..  காலைச் சுற்றும் பூனையையும்
விட்டே அகலா நாயினையும்
   ….. வெறுத்துத் துறத்தும் எலியினையும்
தொட்டால் சிலிர்க்கும் முயலினையும்
   ….. துள்ளி ஓடும் மானினையும்
குட்டி என்றே அழகாகக்
  …..  கொஞ்சும் கவியில் காட்டிடலாம்!
.
பிறந்து சிலநாள் ஆனவுடன்
  …..  பெரிய உருவாய் இவைமாறும்!
கறந்த பாலாய் இருந்தகுணம்
  …..  கரடு முரடாய் மாறிவிடும்!
சிறந்த சொல்தான் குட்டி!அது
   ….. சீக்கி ரத்தில் வளர்கிறதே!
புறத்தைக் கண்டே சொல்கின்றோம்!
  …..  பொதுவில் இவைதாம் குட்டியென்றே!
.
பாவலர் அருணா செல்வம்.