படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி வாழ்த்து !





வண்ண வண்ணப் புத்தாடை !
    வாசல் மின்னும் கோலங்கள் !
கண்ணைப் பறிக்கும் மத்தாப்பு !
    கருத்தைக் கவரும் புஸ்வானம் !
விண்ணில் வெடிக்கும் பட்டாசு !
    விஞ்சி சேர்ந்த பலகாரம் !
எண்ணம் மகிழும் இந்நாளில்
    இனிதாய் வாழ வாழ்த்துகிறேன் !

பாவலர் அருணா செல்வம்
29.10.2016

வியாழன், 15 செப்டம்பர், 2016

தமிழ்ப்பெண்!



இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

கவிஞர் அருணா செல்வம்
04.02.2016

ஞாயிறு, 24 ஜூலை, 2016

செங்கழுநீர் அம்மா !





செங்கழுநீர் அம்மா, செழிக்கின்ற வாழ்வினை
எங்களுக்குத் தந்தருள் என்னாளும்! – மங்கையர்
குங்குமத்தின் உள்ளே குடிகொண்ட தேவியே!
பொங்கல் படைப்போம் புகழ்ந்து!

வேப்பிள்ளை ஆடை விரும்பிடும் வித்தகியே!
கூப்பிட வந்தருளும் கோமதியே! – காப்பாய்!
வருத்திடும் அம்மை வடிந்தோடச் செய்யும்
மருந்தைக் கொடுத்ததுன் மாண்பு!

அலைதொடரும் வாழ்வும் அடங்காத் துயரும்
நிலையிலா வேலை நிலத்தில்! – தலைமகள்
உன்முகம் கண்டால் உயர்ந்தோங்கும் வாழ்வு!நல்
பொன்னென மின்னும் பொலிந்து!

தளிர்இலைப் பந்தலிட்டுத் தண்ணீர் தருவார்!
குளிர்மோர் கஞ்சியுடன் கூழும் - அளிப்போர்க்குச்
செங்கேண் அம்மா சிறப்பெலாம் தந்திடுவாள்
அங்கம் குளிர அறிந்து!

ஆடிவரும் தேரில் அமர்ந்து மகிழ்பவள்!
கோடி நலத்துச்செங் கேணியவள்! – தேடியே
ஓடிவந்து காப்பாள்! உளமொன்றித் தாய்பாதம்
கூடிடும் நெஞ்சம் குளிர்ந்து!

(கட்டளை வெண்பா)
கவிஞர் அருணா செல்வம்

22.07.2016

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

பருவ ஞாபகங்கள்!




மனமென்னும் தோட்டத்தில்
மலர்கின்ற மலர்களெல்லாம்
மாயனவன் செய்துவைத்த
மனம்நிறைந்த மதுக்குடங்கள்!

எத்தனையோ பூவினங்கள்!
எந்நாளும்   காய்த்தாலும்
காய்க்காமல் போனாலும்
காலத்தின் கவித்துவங்கள்!

இன்பங்கள் நிறைந்திருந்தால்
இனிக்கின்ற தேன்சுரந்து
இன்பமனம் வீசுகின்ற
எழுதாத வர்ணனைகள்!

பருவத்தில் உணர்வுகளைப்
படைத்திட்ட அருமைகளைப்
பளிங்காகக் காட்டிநம்மைப்
படபடக்க வைப்பவைகள்!

மாதங்கள் வருடமாகி
வடிவத்தில் முதுமையினைப்
பரிசாகத் தந்தாலும்
பாழ்மனத்தில் பதிந்தவைகள்!

தினமெழுந்து பார்த்தாலும்
தீதென்றே நினைத்தாலும்
இளம்வயதின் இன்பங்கள்
எந்நாளும் இனிப்பவைகள்!

மரணகனம் வந்தாலும்
மகிழ்வளிக்கும் ஞாபகங்கள்!
மனமதிலே வாடாமல்
மலர்ந்தாடும் சோலைகளே!


அருணா செல்வம்

வியாழன், 18 பிப்ரவரி, 2016

இவளும் அம்மா தான்! (நிமிடக்கதை)



    கதவைத் தட்டியதும் உடனே திறந்த ரேவதியைப் பார்த்த குமரனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
    இத்தனை நாள் வேலை முடித்துவிட்டு அசதியாக வந்து பலமுறை கதவைத் தட்டிய பிறகே மெதுவாக வந்து கதவைத் திறக்கும் ரேவதி, இன்று ஒருமுறை கதவைத் தட்டியவுடன் ஓடிவந்து திறந்துவிட்டாளே....
   குமரன் கையிலிருந்த மாலையைப் பார்த்ததும் கற்றுக் கவலையாக இன்றோடு உங்களுக்கு வேலை முடிந்துவிட்டது இல்லையா.... இனிமேல் வீட்டில் என்ன செய்யப் போறீங்களோ... பாவம் தான் நீங்கள்...‘‘ என்று வார்த்தையிலும் கவலை தோய்த்துச் சொல்லிவிட்டு, மாலையை வாங்கிக்கொண்டு போய் சாமி முன் வைத்து மனத்திற்குள் வேண்டிவிட்டு வந்தாள்.
    ‘‘சூடா காபி குடிக்கிறீங்களா...?‘‘ கேட்டாள்.
    இவ்வளவு தணிவாக எல்லாம் அவள் கேட்டது இல்லை. அதிலும் இந்தப் பொழுது சாய்ந்த நேரத்தில் கண்கள் தொலைக்காட்சியை விட்டு அகலாது.
   இன்றும் தொலைகாட்சியில் நாடகம் ஓடிக்கொண்டு இருந்தாலும் அவளின் மனம் அதில் லயிக்கவில்லை என்பது அவள் நடந்துக்கொண்ட விதத்திலேயே புரிந்தது.
   ‘‘வேண்டாம் ரேவதி, வழியனுப்பு விழாவில் டீ குடித்துவிட்டேன். கொஞ்சம் பொறுத்து சாப்பாடு போடு‘‘ என்றான் குமரன்.
   ‘‘சரிங்க நீங்கபோய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க....‘‘ கடிகாரத்தைப் பார்த்தபடியே சொன்னாள்.
    இந்த வார்த்தையைக் கேட்டதும் குமரனுக்கு அவன் அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மா எப்பவுமே இப்படித்தான். வேலைவிட்டு இவன் வரும் வரையில் காத்திருப்பாள். வந்ததும், சாப்பிட்டியா, ஏதாவது சாப்பிடுகிறாயா?, எடுத்துக்கொண்டு வரட்டுமா? என்ற இதிலொன்று தான் அவளின் முதல் வார்த்தையாக இருக்கும். அது முடிந்ததும் போய் கொஞ்சம் ஓய்வெடு‘‘ என்பாள்.
    இந்த சுகமெல்லாம் அம்மாவோடு போய்விட்டது.
    ரேவதியும் துவக்கத்தில் வேலைக்குச் சென்றவள் தான். குழந்தை குரு பிறந்ததும் வேலையை விட்டுவிட்டாள். அதன் பிறகும் ரேவதி அம்மாவைப் போல் இவனை இப்படி கவனித்தது இல்லை.
    ‘‘இவ்வளவு நேரமாகக் கதவைத் தட்டுகிறேனே... கொஞ்சம் சீக்கிரம் வந்து திறந்தால் என்ன?‘‘ என்று கேட்டால்.... ‘‘முட்டி வலிக்கிறது. உடனே எழுந்து ஓடிவர முடியாது‘‘ என்றாள்.
    ‘‘தலைவலிக்கிறது. கொஞ்சம் சூடா காப்பி போட்டு தா...‘‘ என்றால், ‘‘சீரியலில் முக்கியமான இடம். நீங்களே போட்டுக்கோங்க‘‘ என்பாள்.
    சற்று நேரம்கழித்து வந்தால்.... ‘‘சாப்பாடு டேபிளில் வச்சிருக்கேன். நீங்களே போட்டு சாப்பிடுங்க‘‘ என்பாள். இதெல்லாமே தொடக்கத்திலேயே... பிறகு இதுவே பழகிவிட்டது. இப்போது அவனாக எதுவும் கேட்பதில்லை.
   ஆனால் இன்று.... ரேவதியின் செய்கைகள் அம்மாவை ஞாபகப் படுத்தவும்.... அந்த நினைவிலேயே நேரம் ஓடியது தெரியவில்லை. பசித்தது. எழுந்து வந்து டேபிளைப் பார்த்தான். எதுவுமில்லை.
   ரேவதி ஏதோ யோசனையில் ஷாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டு இருந்தாள். முகம் சற்று வாடி இருந்தது.
   என்ன ஆச்சு இவளுக்கு...? நாம் ரிட்டையர்ட் வாங்கியதால் கவலையாக இருக்கிறாளா...?
   ‘‘ரேவதி....‘‘‘ கூப்பிட்டான்.
   இரண்டாவது முறை கூப்பிட ‘‘என்ன?‘‘ என்றாள்.
  ‘‘ஏன் ஒரு மாதிரியா இருக்கிற ? என்ன யோசனை ?‘‘ என்று கேட்டான்.
‘‘ப்ச்சி… ஒன்றுமில்லை‘‘ என்றாள்.
‘‘சரி. சாப்பாடு செய்தியா… ?‘‘
‘‘ஓ செஞ்சேனே…. அடடா…. நம்ம குருவோட யோசனையில சாப்பாட கொண்டுவந்து டேபிலில் வைக்க மறந்துட்டேன். நீங்களே கிச்சன்ல போய் போட்டுக்கோங்க….‘‘
   ‘‘ஏன் நம்ம குருவுக்கு என்ன ?‘‘ சற்று அவசரமாக கேட்டான் குமரன்.
   ‘‘குரு…. இன்னைக்குத் தான் முதன்முதலா வேலைக்குப் போய் இருக்கிறான். வீட்டில் இருந்தால் வேலாவேலைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுத்துடுவேன். வேலைக்கு சாப்பாடு கட்டி கொடுத்டதேன் தான். அது ஆறி போய்யிருக்கும். புள்ள சாப்பிட்டானோ இல்லையோன்னு தெரியல…‘‘ அவள் கவலையோடு சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கதவு தட்டும் ஓசை கேட்டது. ஓடி போய் கதவைத் திறந்தாள்.
   குரு வீட்டின் உள்ளே நுழைந்ததும்…, ‘‘ ஏம்பா… முகம் வாடி இருக்குது ? நிறைய வேலையா ? சாப்பிட்டியா….
   அவள் கேள்விகள் தொடர்ந்து கொண்டே போனது.
   குமரனுக்குப் புரிந்தது. இவளும் அம்மா தான் என்பது.


அருணா செல்வம் 
19.02.2016

வியாழன், 11 பிப்ரவரி, 2016

மாற்றான் தொட்டத்து மரிக்கொழுந்து ! – 3

   



    முரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா !‘ என்று தோன்றியது.
    ஆறடிக்குக் குறையாத உயரமும், அதற்கேற்ற மாதிரி உடலமைப்பும், தூக்கி வாரின முடியும், எதையும் உன்னிப்பாய்ப் பார்க்கும் கண்களும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லும் முகமும் அமைந்த முரளிதரனைப் பார்த்த பொழுது, பண்ணையார் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்ததற்கு மாறான உருவ அமைப்பு இருந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
    இவன் இப்படி இருக்க திலகவதி… ?
    இப்படி ஓர் அழகா… ! இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே ! எங்கே ? சற்று நேரத்திற்கு பிறகு ஞாபகத்தில் வந்தது, தன் வீட்டில் தேதி கிழிக்கும் காலண்டரில் உள்ள லட்சுமியின் முகம். ஆமாம்… அதில் இருக்கிற தெய்வீக முக அமைப்பு அப்படியே…
    அவளுடைய முகத்தில் பிரகாசிக்கும் ஒளி ? அவள் இரு பக்க மூக்கிலும் அணிந்திருக்கும் மூன்று மூன்று வைரக்கல் பதித்த மூக்குத்தியினால் வந்த ஒளியா… ?
    இல்லைஎன்றால் தானாகவே முகம் இப்படி ஜொலிக்கிறதா… ? என்னவென்றே சொல்ல முடியாத நினைக்க முடியாத ஓர் உன்னத அமைப்பு அவளிடம் இருந்தது.
    இந்த அழகு, அவளைப் பார்த்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றும் காந்தர்வ அழகு கிடையாது. அவளைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் உன்னதமான தெய்வீக அழகு !
    இந்த அழகைக் கண்டு மறிக்கொழுந்து மயங்கிவிட்டாலும் அவளுடைய அன்பைக் கண்டு, அவளுக்குப் பணிவிடை செய்வதே பெருமை என நினைக்க ஆரம்பித்தாள்.
   அன்புக்கு அடிபணிவது ஆனந்தமாயிற்றே!
   அப்படி ஓர் அழகும் குணமும் வாய்த்த ஒரு பெண்ணை இனி எப்போது பார்ப்போம்…. ?
    மரிக்கொழுந்தின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.
    ‘‘க்ரீச்…க்ரீச்…‘‘
    கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்.
    பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. பெரிய வீட்டின் கொள்ளைப்புரத்துக் கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்தான் அது. எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.
    பெரிய வீட்டின் அதாவது மூரளீதரன் வீட்டிற்கும் அவளுடைய குடிசைக்கும் இடையே ஒன்பது தென்னை மரம், ஆறு வாழை மரம், ஒரு சில பூஞ்செடிகள் தான் இருக்கும்.
    மரிக்கொழுந்து கல்யாணமாகி வந்த சில நாட்களில் சின்னய்யா தன்னுடைய வீட்டின் தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அதில்  வேலுவையும் மரிக்கொழுந்துவையும் குடித்தனம் வைத்தான்.
    குடிசையிலிருந்து பெரிய வீட்டின் தோட்டத்தைப் பார்த்தால் மரங்களுக்கும் வாழைகளுக்கும் நடுவில் அவ்வளவாக எதுவும் தெரியாது.
    இருந்தாலும் அங்கிருந்து வரும் சத்தமும் அடுப்பின் புகையையும் வைத்து எல்லோரும் எழுந்து விட்டார்கள் என்பதை யூகித்துக்கொண்டாள்.
    மரிக்கொழுந்து எழுந்து போய் பல்விளக்கி முகம் கழுவி தலைவாரி பின்னி தன் குடிசையில் இருந்த சின்ன கண்ணாடியை எடுத்து பார்த்துப் பொட்டு வைக்கும் போது சின்னம்மா திலகவதியின் ஞாபகம் வந்தது.

    ல்யாணமாகி வந்த மறுநாள் விடியகாலை…
    ‘‘ஏய் மரிக்கொழுந்து இன்னுமா தூங்குற… எழுந்திரு, சின்னம்மா இந்நேரம் எழுந்திருப்பாங்க. சீக்கிரம் எழுந்து போய் அவுங்க இன்னா வேல செய்ய சொல்றாங்களோ அத செய்யி ?‘‘
    வேலு அவளை உலுக்கி எழுப்பினான்.
    மரிக்கொழுந்து அவசர அவசரமாக எழுந்து சடையைத் தூக்கி கொண்டையாகப் போட்டுக்கொண்டு சேலையைச் சரிசெய்து கொண்டு ஓடினாள்.
    அதற்குள் திலகவதி எழுந்துவிட்டிருந்தாள். அவள் முன்னால் போய் நின்று ‘‘நா என்ன செய்யணும் சின்னம்மா… ?‘‘ என்று கேட்டாள்.
    அவள் இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு…
    ‘‘மரிக்கொழுந்து நீ போயி பல்லை வெளக்கி மொகத்த கழுவி பொட்டு இட்டுக்குனு, தலைவாரி பின்னிக்கினு, பொடவைய ஒழுங்கா கட்டிக்கினு வா. அப்புறம் சொல்லுறேன் நீ இன்னா வேல செய்யனுங்கிறத.‘‘
    மரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் அவள் சொன்னதைத் தட்டாமல், உடனே கொள்ளைப்புரம் நோக்கிப் போனாள்.
    போகும் போது தான் வேலைசெய்த வீட்டின் ஞாபகம் வந்தது.
    என்றாவது ஒருநாள் நேரமிருந்தால் தலைவாரி சடை பின்னி முகத்தில் பெளடர் பூசி பொட்டு வைத்துக்கொண்டால் போதும், அன்று முதலாளியின் மகளுக்குப் பொறுக்காது.
    ‘‘ஏண்டி காலையிலேயே ஒனக்கு என்ன மேக்கப் வேண்டி கெடக்குது. ஒரு காபிய ஒழுங்கா போடத் தெரியல, மேக்கப் போட்டுக்கினா… அதுவும் காலையில….‘‘
    பத்து மணியளவில் தூங்கி எழுந்து வந்தவள் இந்த வார்த்தையை சொல்லுவாள். அன்றைக்கு என்று பார்த்து இஸ்திரி மடிப்பு கலையாத துணிகளைக் கொண்டுவந்து போடுவாள்.
    ‘‘இதெல்லாம் ஒழுங்கா தொவைக்கல. நல்லா தொவச்சி அயன் பண்ணி வை‘‘
    இப்படி ஏதாவது ஒரு வேலையை வேண்டுமென்றே அதிகப் படுத்தி விடுவாள்.
    இதையெல்லாம் நினைத்துக்கொண்டே திலகவதி சொன்னது போல் செய்து முடித்து அவள் எதிரில் வந்து நின்றாள்.
    ‘‘இதோ பாரு மரிக்கொழுந்து… இன்னைக்கு மட்டுமில்லை. என்னைக்குமே நீ இதுமாதிரி தான் வரணும். புரியுதா… ?‘‘ என்றாள்.
    ‘‘சரிங்க சின்னம்மா‘‘
    ‘‘என்ன சொன்னே ?‘‘
    ‘‘சரிங்க சின்னம்மான்னுதாங்க…‘‘
    ‘‘ம்…. இதையும் மாத்தணும் நீ. ஒனக்கு நா சின்னம்மாவா… ?‘‘
    புரியாமல் விழித்தாள். மாமா அப்படித்தானே சொன்னது…. வேற என்னன்னு கூப்பிடணும் ? மனதுக்குள்ளேயே எண்ணிப் பார்த்தாள். கேட்க வாய் வரவில்லை. பேசாமல் அவளைப் பார்த்தாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து பயந்துட்டியா… ?‘‘
    இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள்.
    ‘‘பின்னே… ?‘‘
    ‘‘சின்னம்மான்னு இல்லையின்னா… வேற என்னன்னு கூப்பிடறது ?‘‘
    ‘‘ம்… அப்படி கேளு. எல்லாரும் என்னை சின்னம்மான்னு தான் கூப்பிடுறாங்க. ஆனா நீ அப்படி கூப்பிடாத. நீ இனிமே என்னை அக்கான்னு தான் கூப்பிடணும். என்ன சரியா… ?‘‘
    தலையாட்டினாள்.
    ‘‘வாயைத் தொறந்து சொல்லு‘‘
    ‘‘சரிக்கா !‘‘
    ‘‘ம்… போயி வாசல தெளிச்சி கோலம் போடு…‘‘  இப்படி அன்பாக வேலை வங்கினாள். அதுவும் முழுநேர வேலை கிடையாது.
    காலையில் வாசல் தெளித்துக் கோலம் போடணும். இரவு போட்ட பாத்திரங்களைக் கழுவி வைக்கணும், எப்போதாவது கடைக்குப் போய் காய்கறி வாங்கணும், வீட்டைப் பெருக்கணும். மாவை மசினில் அரைக்கணும், இவை எல்லாவற்றையும் விட நான்கு வயது சத்தியாவைக் கவனிக்கணும்.
    இதுதான் வேலை. இதெல்லாம் வேலை என்பது போல் தெரியாமல் ஒரு பொழுது போக்கு போல் இருந்தது மரிக்கொழுந்துவிற்கு.
    எவ்வளவு சந்தோசமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது !
    இத்தனை நாட்களிலும் மரிக்கொழுந்து திலகவதி சொன்னதை மறக்கவில்லை. அன்றாடும் முகம் கழுவி பொட்டு வைத்த பின்னரே பெரிய வீட்டிற்குள் நுழைவாள்.
    மரிக்கொழுந்துவிற்கு மனது வெம்பியது. சத்தம் போட்டு அழுதால் குழந்தைகள் எங்கே விழித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் கவலையை அப்படியே விழுங்கினாள். அடுத்தவர் நலனுக்காக அழுகையை அடக்குவதில் இருக்கும் வலி…. பெரிய பாத்திரத்தில் பொங்கி வர முடியாத பாலைப் போன்று உள்ளேயே கொதிப்பது. அதைவிட அழுது விடலாம்.
    கையில் இருந்த சாந்து குமிழில் ஒரு குச்சால் ஒரு புள்ளியளவு பொட்டு வைத்துக்கொண்டு குடிசையின் கதவை மெதுவாக சாத்திவிட்டு, பெரிய வீட்டின் கொள்ளைப் புரத்தை நோக்கி நடந்தாள்.
    ஏதோ வேலையாக இருந்த காமாட்சி அவளைக் கவனித்துவிட்டாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து… ? நீ எதுக்கு இங்க வந்த ?‘‘
    ‘‘ஏதாவது வேல இருந்தா செய்யலாம்ன்னு வந்தேன் ஆத்தா…‘‘
    ‘‘வேலையா ? அதெல்லாம் ஒன்னும் வேணாம். இங்க சொந்தக்காரங்க எல்லாம் இருக்கிறாங்க இல்ல ? அவங்க செஞ்சிக்குவாங்க. நீ போயி கொழந்தைகள கவனிச்சிக்கோ. அது போதும். போ‘‘
    அதிகாரம் நிறைந்த குரலில் சொன்னாள் காமாட்சி. அவளுடைய சொல்லுக்கு மறுப்பேது… ?
    ‘‘சரி ஆத்தா….‘‘ என்று சொல்லிவிட்டு திரும்பவும் வந்த வழியிலேயே நடந்தாள்.
    குடிசையின் அருகில் நெருங்கிய போது தான் குழந்தையின் அழுகை ஒலி காதில் விழுந்தது.
    அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.
    அவளுடைய குழந்தைதான் அழுதுகொண்டிருந்தது. படுக்கையை ஈரமாக்கி வைத்திருந்தான்.
    குழந்தையைத் தூக்கி படுக்கையைச் சரிபடுத்தி விட்டு அதனை பசியாற்றி விட்டு கிடத்தினாள்.
    பசி போனதும் தூங்காமல் நன்றாக விழித்துக்கொண்டு கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டிருந்தான்.
    கண்கள் இரண்டும் மொச்சைக் கொட்டைகள் போல் இருந்தது.
    அந்தக் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தாள். அவளுக்குச் சாதாரண குழந்தையின் கண்களாகத்தான் தெரிந்தது. திலகவதி சொன்னது போல எந்த ஒளியும் அதில் தெரியவில்லை.


(தொடரும்)

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழ்ப்பெண்!




இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

(சிந்து)
அருணா செல்வம் 
09.02.2016

செவ்வாய், 1 டிசம்பர், 2015

மணமகள் மறுவீடு அழைப்பு பாடல்!


 


புத்தம்  புதிய  புதுமலரே!
புதுத்தாலி   அணிந்த  மணமகளே!
நித்தம் இன்பம்  பெருகிடவே
நெஞ்சம்  நிறைந்து  வாழ்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே!  - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                            (புத்தம் புதிய )

அம்மி  மிதித்த  அருந்ததியே
அன்பால் மலர்ந்த  நறும்பூவே!
கம்பர்  பாடிய  நாயகியே
காதல்  நிறைந்து  வாழ்ந்திடவே 
வலது  காலை  வைத்து  வருகவே! - நல் 
வாழ்வு  மலர  வாழ்கவே!                          (புத்தம் புதிய )

தேடி  உன்னை  மணந்தவனே
தெய்வம்  தந்த  துணையவனே!
கூடி  இன்பம்  களித்திடவே
குலமும்  தழைத்துப் பெருகிடவே
வலது காலை  வைத்து வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                        (புத்தம் புதிய )

பிறந்த  வீடு  மகிழ்ந்தடவே
புகுந்த  வீடு  மதித்திடவே
சிறந்த  பெருமை  காத்திடவே 
செல்வம்  எல்லாம்  சேர்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர வாழ்கவே!                         (புத்தம்  புதிய ) 

அத்தை  மாமன்  மனம்நிறைய
அன்பு  கணவன்  அகம்மகிழ
அங்கே  வாழ்ந்த லட்சுமியும்
ஆசை பொங்கி  உனைஅழைக்க
வலது  காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!!                             (புத்தம் புதிய) 


கவிஞர்  அருணா செல்வம்
19.10.2015

சனி, 14 நவம்பர், 2015

யாரையெல்லாம் பாராட்டலாம் ?



    பாராட்டு என்பது எந்த ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. ஒருவரின் கலைத் திறமையைப் பாராட்டாமல் ஒரு பரிசை மட்டும் கொடுத்தால் அவர் செய்த வேலைக்குக் கூலி கொடுத்தது போல் ஆகும்.
    பணம் கொடுக்கும் இன்பத்தை விட ஒரு கலைஞனுக்குப் பாராட்டு அதிக இன்பத்தைக் கொடுக்கும். நீங்கள் ஒருவரைப் பாராட்டும் போது அவர் மனத்தில் நீங்கள் உயர்வாக அமர்த்தப் படுகிறீர்கள்.
   பாராட்டு என்பது ஒருவரின் திறமைக்காக என்பது மட்டுமின்றி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் ஏதுவாகிறது.
    ஒன்றுமே அறியாமல் எதோ ஒரு நல்ல செயலைச் செய்யும் குழந்தையையும் பாராட்டலாம். அதே சமயம் ஒரு கலையில் மூழ்கி அனைத்தும் கற்றவரின் திறமையையும் பாராட்டலாம்.
    ஒரு குழந்தையைப் பாராட்டுவது ஊக்குவிப்பு ஆகும். ஆனால் ஒரு கலையைக் கற்று புகழின் உச்சத்தில் இருப்பவரை ஏதும் அறியாதவர் பாராட்டலாமா ? என்று கேட்டால்…. பாராட்டலாம். பாராட்ட வேண்டும்.
    நான் அனுபவத்தில் கண்டதைச் சொல்கிறேன்.
   போன முறை இந்தியா சென்றிருந்த போது ஒரு திருமண விழாவில் தவில் வித்துவான் வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பரமணியன் ஐயா அவர்களின் கச்சேரி கேட்க நேர்ந்தது. எனக்கு பொதுவாக அதிக சத்தம் இருந்தால் பிடிக்காது. ஆனால் அன்று இந்த வித்தவானின் திறமையை வெகுவாக இரசித்தேன். எனக்கு அவரிடம் சென்று அவரைப் பாராட்டி இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது.


   ஆனால்…
   எனக்கு தவிலைப்பற்றியோ, அவர் வாசித்த இசை குறிப்புகள் பற்றியோ ஒன்றுமே தெரியாது. கேட்க நன்றாக இருந்தது. இரசித்தேன். அவ்வளவு தான். இருந்தாலும் அவரிடத்தில் அவர் திறமையால் நான் கேட்டு மகிழ்ந்ததைச் சொல்ல வேண்டும் என்றே தோன்றியதால்…. கச்சேரி முடிந்ததும் தயங்கித் தயங்கி அவரிடம் போய் என்னை அறிமுகப் படுத்திவிட்டு ‘ஐயா எனக்கு தவில் கலையைப் பற்றியெல்லாம் தெரியாது. அதனால் எதைச் சொல்லி எப்படி பாராட்டவது என்று தெரியவில்லை. ஆனால் நான் உங்கள் கச்சேரியை விரும்பி ரசித்தேன் ஐயா‘ என்றேன்.
   அவர், ‘ஏதோ விழாவிற்கு வந்தோம், கேட்டோம். சென்றோம் என்றில்லாமல், காத்திருந்து இந்த ஒரு வார்த்தையைச் சொன்னதே போதும். ஒரு கலைஞனை இப்படித்தான் பாராட்ட வேண்டும் என்ற வகை அறிந்து பாராட்டுவதை விட மனதில் பட்ட மகிழ்ச்சியுடன் பாராட்டுவது தான் எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி. நன்றாக இருமா‘ என்று அவர் என்னை வாழ்த்தி அனுப்பினார்.
   இதே போலதான் ஆச்சி மனோரம்மாவைச் சந்தித்து, கொண்டு சென்ற அன்பளிப்பைக் கொடுத்த போது ‘எதுக்குமா இதெல்லாம். என் நடிப்பை ரசிச்சி என்னைப் பார்க்க வந்து பாராட்டியதே எனக்கு பெரிய சந்தோசம்…’ என்று அருகில் இருந்த தன் உதவிப்பெண்ணைப் பார்த்து பயந்த படியே( ?) சொன்னார்.
   ஆச்சியம்மாவிற்கு இல்லாத ரசிகர்களா… ? அவர்களுக்குக் கிடைக்காத பாராட்டா…. ? இருந்தாலும் என் பாராட்டையும் விரும்பினார்கள்.
   ஆக, அனைத்து உள்ளங்களுமே தான் செய்யும் காரியங்களுக்கான உரிய பாராட்டை விரும்புகிறது. திறமை உள்ள அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது பாராட்டிவிடுங்கள்.
   இவரின் திறமையைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளே இல்லை என்று நினைத்து, அவரைப் பாராட்டாமல் இருந்தால் நம் மனத்தில் கொண்ட மகிழ்ச்சி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.
   சரியான திறமையை வாய்விட்டு பாராட்டுங்கள். ஆஹா, அருமை, நன்றாக இருக்கிறது, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், சூப்பர், எக்ஸலன்ட், இப்படி ஏதாவது சொல்லி பாராட்டுங்கள்.
   கற்றுத் தரும்போது அவனும் கற்றுக் கொள்கிறான் என்பது போல ஒருவரைப் பாராட்டும் போது பாராட்டுபவனும் உயர்ந்தவனாகிறான்.

அன்புடன்
அருணா செல்வம்.
14.11.2015


வெள்ளி, 6 நவம்பர், 2015

மணமகள் வரவேற்பு பாடல்!





மஞ்சள் பூசிய மலர்க்கொடியே ! – நல்
மணமேடை காண வருகவே !
கொஞ்சும் அழகுத் தமிழ்மகளே ! – நம்
குலம்வாழக் குளிர்ந்து வருகவே !

அன்னை ஊட்டிய அன்பினையும் – உன்
தந்தை காட்டிய அறவழியும்
ஆசான் தீட்டிய அறிவினையும் – உடன்
ஆண்டான் ஈட்டிய நன்னிலையும்
சீராய்க் கொண்டு வருகவே ! – அதை
ஊரார் கண்டு மகிழவே !                               (மஞ்சள்)

பிரம்மன் படைத்த அழகினையும் – நிதம்
பேணிக் காத்த கற்பினையும்
தரமாய்ப் பேசும் தமிழ்மொழியும் – மனம்
தளரா உழைப்பின் உயர்வினையும்
சீராய்க் கொண்டு வருகவே ! – அதை
ஊரார் கண்டு மகிழவே !                             (மஞ்சள்)   

உடன் பிறந்தோர் பாசத்தையும் – உண்மை
உற்றோர் காட்டிய உணர்வலையும்
ஆடிப் பாடிய தோழியரும் – அன்று
அவர்கள் பேசிய கேலியையும்
மனத்தில் நிறைத்து வருகவே ! – நல்ல
குணமாய் நினைத்து மகிழவே !                  (மஞ்சள்)

உலகம் போற்றும் சீரனைத்தும் – உன்னில்
உயர்வாய் ஒளியாய் மின்னுதடி !
குலமும் தழைக்க வேண்டுமடி ! - கை
கோர்த்து இணைய வேண்டுமடி !
மணமகன் காத்தி ருப்பானே – அவன்
மனம்குளிரக் கண்டு மகிழவே !                   (மஞ்சள்)

இசைப்பாடல்
கவிஞர் அருணா செல்வம்

07.11.2015