செவ்வாய், 29 ஜனவரி, 2019

முதனிலைக் குணத் தீவகம்! - 1






   பாடலில் குணத்தைக் குறிக்கும் சொல்லானது முதற்சொல்லாக வந்து பாடல் முழுவதும் சென்று பாடலின் பல இடத்திலும் பொருந்தி வருவதுமுதனிலைக் குணத் தீவகம்ஆகும்.

உ. ம் 
கருத்தது வானம் கருமுகில் தோன்ற
பொருளற்றோன் வீட்டின் புறனாய்! – கருவற்ற
பெண்ணின் மனமாய்! பெரும்பொருள் இல்லாத
பண்ணாய்! இருளுள் பதைத்து!

பொருள்கருமுகில் தோன்றியதால் வானம் கருத்தது. அப்படிக் கருத்ததால் பொருள் அற்றவனின் வீடுகளின் புறமும் கருத்தது. குழந்தைப்பேறு இல்லாதவள் மனமும் கருத்தது. பொருள் இல்லாத பாடலும் கருத்தது இருளைக் கண்டு.
    பாடலில்கருத்ததுஎன்பது குணம் பற்றி வந்த பண்புச் சொல். முதலில் இருக்கும் அச்சொல் பாடலின் இருக்கும் வீடு, மனம், பாடல் ஆகிய சொற்களோடும் இயைந்து பொருளைத் தந்துள்ளதால் இதுமுதன்நிலைக் குணத் தீவகம்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
30.01.2019

வெள்ளி, 25 ஜனவரி, 2019

விரூபக உருவகம் – 8




    பாடலில் ஒரு பொருளுக்கு அதற்கு பொருந்தாத தன்மைகள் உள்ளவைகளைக் கூட்டி உருவகஞ்செய்வது “விரூபக உருவகம்“ எனப்படும்.

உ. ம்
தேயா நிலவழகு, தென்றல் கொடுந்தன்மை,
பாயா ஒளிவெள்ளம் பாவைமுகம்! – ஓயா(து)
உறங்கும் அலைகடலை ஒற்றொளிரும் வெண்மை
நிறமதிதான் என்பேன் நிறைந்து!

பொருள் – தேயாத நிலவின் அழகும், தென்றல் தரும் கொடுமையான தன்மையும், பாய்ச்சாத ஒளிவெள்ளமும், ஓயாமல் உறங்கும் அலைகடலின் மேல் தோன்றி ஒளிரும் வெண்மையான நிறமுடைய மதிதான் என்பேன் அவளின் முகம்.
    பாடலில் நிலவானது தேயும் தன்மையுள்ளது. தென்றல் இன்பம் தருவது. ஒளி என்பது எங்கும் பாய்ந்து வெளிச்சத்தைத் தருவது. கடல் ஓயாதது. இப்படிப் பொருந்தாத தன்மைகளை உருவகமாகக் கூட்டி அப்பெண்ணின் முகத்துக்கு உருவகஞ்செய்ததால் இது “விரூபக உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.01.2019

வியாழன், 24 ஜனவரி, 2019

சிறப்பு உருவகம் – 7




    பாடலில் ஒரு பொருளை எடுத்து அதற்கு சிறந்தவைகளை உருவகம் செய்து, பின்பு அவற்றாலேயே உருவகமாக்கி உரைப்பது “சிறப்பு உருவகம்“ எனப்படும்.
.
உ. ம்
பச்சைப் பசுமையைப் பட்டுடலில் போர்வையாய்
உச்சிநீர் வெள்ளி உருகோட – இச்சையற்றோர்
வாழும் குடிலாய் மலைக்கூடு எவ்வுயிர்க்கும்
சூழும் நலங்கள் சுடர்ந்து !

பொருள் – தனது பட்டுப்போன்ற உடலில் பச்சைப் பசுமையான மரம் செடிக்கொடிகளைப் போர்த்திக் கொண்டு, உச்சியிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சி வெள்ளியைப் போல் உருகியோட, இச்சையை அற்றவர்க்கு வாழும் இடமாகவும், மற்ற எல்லா உயிர்களுக்கும் நலம் தருவதாகவும் மலையாகிய கூடு இருக்கிறது.
    பாடலில் பச்சைப் போர்வை, உச்சிநீர் வெள்ளி, குடில் என்று மலையின் சிறப்புகளை உருவகம் செய்து வந்தும், அந்த மலையானது மற்ற உயிர்களுக்கு வாழும் இருப்பிடமாக இருக்கிறது என்று சிறப்புடன் உருவகிப்பதால் இது “சிறப்பு உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.01.2019

புதன், 23 ஜனவரி, 2019

வியநிலை உருவகம் – 6





    பாடலில் ஒரு பொருளின் அங்கங்களில் உள்ள பலவற்றினுள், சிலவற்றை மட்டும் உருவகம் செய்தும், சிலவற்றை உருவகம் செய்யாமல் விட்டும், கடைசியில் அந்தப் பொருளையே உருவகம் செய்து உரைப்பது “வியநிலை உருவகம்“ எனப்படும்.

உ. ம்
செங்கண் சிறியனவாய் செய்கை பெரியனவாய்
தொங்குகரப் பாறை துணையாக – எங்கும்
பதமின்றிப் பொங்கிப் பிளிர்கிறதே அந்த
மதங்கொண்ட யானை மலை!

பொருள் – செம்மையான கண்கள் சிறியதாகவும், அதனின் செயல்கள் பெரியதாகவும் தொங்கிடும் தும்பிக்கை என்னும் கரமாகிய கடின பாறை துணையாகவும் எங்கும் பக்குவம் இன்றிக் கோபமுடன் பொங்கிப் பிளிறுகிறது அந்த மதங்கொண்ட யானையாகிய மலை.
   பாடலில் கூறப்பட்ட பொருள் யானை. இவ்யானையின் கண், செயல், தும்பிக்கை ஆகிய மூன்றில் தும்பிக்கைக்குப் பாறையை உருவகப்படுத்தி விட்டு மீதியை உருவகப் படுத்தவில்லை. ஆனால் கடைசியில் இவ்வுறுப்பினை உடைய யானையை மட்டும் மலை என்று உருவகப்படுத்தி இருப்பதால் இது “வியநிலை உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்.
23.01.2019

செவ்வாய், 22 ஜனவரி, 2019

இயைபில் உருவகம் – 5




   பாடலில் பலபொருள்களைத் தம்முள் இயையாமை வைத்து உருவகஞ் செய்வது “இயைபிலுருவகம்“ எனப்படும். (இயைபு உருவகத்தில் உருவகமும் பொருளும் தம்மில் இயைபு உடையதாய் அமைப்பது. இது இயைபு இல்லாமல் உருவகஞ் செய்வது)

உ. ம்
தோளிரண்டும் தூணாகத் தொன்னிதழ் அம்பாக,
நீளிரங்கும் கைகள் நெடுங்கடல்! – கேளிரண்டு
காது பிறையெழில்! கந்தனின் நாமத்தை
ஓதுவதால் நல்லுயர்வு உண்டு!

பொருள் – கந்தனின் தோள்கள் இரண்டும் தூணாகத், தொன்மையான உதடுகள் அம்பாக, நீண்டு இறங்கி இருக்கும் கைகள் நெடிய கடலாக, கேட்கும் காது பிறையின் எழிலாக உள்ள கந்த பெருமானின் நாமத்தை ஓதுவதால் நல்ல உயர்வுகள் நமக்கு உண்டு.
   தோள்கள், உதடு, கைகள், காது என வந்திருக்கும் பொருட்களில் இயைபு வந்தும், இதற்கு உருவகமாக வந்த தூண், அம்பு, நெடுங்கடல், பிறை ஆகியவை தம்முள் இயைபு இல்லாதவனாக வந்துள்ளதால் இது “இயைபில் உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
23.01.2019

இயைபு உருவகம். – 4




   பாடலில் பல பொருட்களை உருவகம் செய்யும் போது, அவை தம்முள் இயைபு உடையதாக வைத்து உருவகம் செய்வது “இயைபு உருவகம்“ எனப்படும்.

உ. ம்
சீர்முகச் செம்பூவும், செவ்விதழ்ச் செங்கனியும்
கூர்மூக்கு மொட்டையும் கொண்டிருக்கும் – பார்வை
கொடுக்கும் கணிவுடன் கொஞ்சிடும் வஞ்சி
நெடுநெஞ்சுள் நிற்பாள் நிறைந்து!

பொருள் – சீர்முகமாகிய செம்பூவும், செம்மை இதழாகிய செங்கனியும், கூரிய மூக்காகிய மொட்டும், கொஞ்சிடும் பார்வைதரும் கணிவும் கொண்டிருக்கும் பெண்ணானவள் நீண்ட வாழ்நாளில் என் உள்ளத்துள் நிறைந்து நிற்பாள்.
    பாடலில் செம்பூவும், செங்கனியும், மொட்டும், என உருவகம் இயைபு உடையதாய் வந்துள்ளது. தவிர, முகம், உதடு. மூக்கு ஆகியவற்றுள் தம்முள் இயைபு உடையதாகிய பூ, கனி, மொட்டு என வந்துள்ளதாலும் இது “இயைபு உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
23.01.2019

வியாழன், 17 ஜனவரி, 2019

தொகைவிரி உருவகம்! – 3




பாடலில் ஆகிய என்ற மாட்டேற்றுச் சொல் தொகையாகவும், விரிந்தும் வருவது “தொகைவிரி உருவகம்“ எனப்படும்.

உ. ம்
பாம்பு படுக்கையா, பாய்அலை ஊஞ்சலா,
ஓம்புகரம் சாய்மரமாய், ஓய்வெழில் – மேம்படும்!
மேனிக் கரியவனின் மௌனமொழி மின்னுலகில்
வானின் மழையமுதின் வார்ப்பு!

பொருள் – பாம்பினைப் படுக்கையாகவும், பாயும் அலைகளை ஊஞ்சலாகவும், காத்திடும் கைகள் சாய்மரமாகவும், ஓய்வெடுக்கும் எழில் உயர்வானது. கருமை மேனியை உடைய திருமாலின் மௌனமாகிய மொழியானது வாழுலகில் வானிலிருந்துபெய்யும் மழையாகிய அமுதமாகும்.
   பாடலில் படுக்கையாக, ஊஞ்சலாக, சாய்மரமாக, என்பதில் ஆகிய, ஆ என விரிந்தும், மொனமொழி, மழையமுது என்பவை தொகையாகவும் உருவகம் வந்துள்ளதால் இது “தொகைவிரி உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
18.01.2019

விரி உருவகம் – 2




   பாடலில் “ஆகிய“ என்ற மாட்டேற்றுச் சொல் விரிந்து வருவது “விரி உருவகம்“ ஆகும். ஆகிய என்பது ஆக, ஆ… எனக்குறைந்து நின்றலும் உண்டு.

உ. ம்
புருவம் பிறையாகப், பூமேனிப் பொன்னா,
இருகண்கள் மீனாக, இன்பத் – திருமுகம்
வட்ட நிலவாக, வாயிதழ் கொவ்வையாகக்
கிட்டியதால் ஏதெனக்குக் கேடு ?

பொருள் – புருவம் பிறையாகவும், பூமேனிப் பொன்னாகவும், இரு விழியும் மீனாகவும், இன்பத்தை கொடுக்கும் அவளின் அழகிய முகமானது வட்ட நிலவாகவும், வாயின் இதழ்கள் கொவ்வைப் பழமாகவும் அவள் எனக்குக் கிடைத்துள்ளதால் இவ்வுலகில் எனக்கு எந்த கேடும் இல்லை. மகிழ்ந்திருக்கிறேன். என்பதாம்.
   பாடலில் பிறையாக, பொன்னாக, மீனாக, நிலவாக, கொவ்வையாக.. என்று மட்டேற்றுச்சொல் விரிந்து வந்துள்ளதால் இது “விரி உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
18.01.2019

செவ்வாய், 15 ஜனவரி, 2019

தொகை உருவகம் - 1





    பாடலில் “ஆகிய“ என்னும் மாட்டேற்றுச் சொல் தொகுத்து வருவது “தொகை உருவகம்“ ஆகும். மாட்டேற்றுச் சொல் என்பது பொருளில் உவமையை ஏற்றும் சொல் ஆகும்.
கண்வண்டு – இது கண்ணாகிய வண்டு என விரியாமல் ஆகிய என்ற சொல் மறைந்து வந்துள்ளது. இதில் கண் என்பது பொருள். வண்டு என்பது உவமை. பொருளில் உவமையாகிய வண்டை ஏற்றிச் சொல்லும் போது கண்ணாகிய வண்டு என்று விரிந்து வரும். அப்படி விரிந்து வராமல் தொகுத்து வருவது “தொகை உருவகம்“ ஆகும்.

உ. ம்
கண்கயல், கூந்தல் கருமேகம், கால்வாழைத்
தண்டு, கரம்செண்டு தாங்கிடும் – பெண்ணவளின்
மேனிச் சிலையென மேம்படுமென் வாழ்நெஞ்சம்
தேனின் சுவைத்தளும்பும் தேர்ந்து!

பொருள் – கண்ணாகிய கயலும், கூந்தலாகிய கருமேகமும், காலாகிய வாழைத்தண்டும், கரமாகிய பூச்செண்டும். தாங்கிக் கொண்டிருக்கும் பெண்ணவளின் உடல் செதுக்கி வைத்த சிலையென, உயர்வுகளை உடையவளுடன் வாழும் என் நெஞ்சம் தேர்ந்த தேனின் சுவையால் தளும்பிக் கொண்டிருக்கும்.

   பாடலில் கண்கயல், கூந்தல் கருமேகம், கால் வாழைத்தண்டு, கரம் செண்டு, மேனிச்சிலை… என்ற இடங்களில் “ஆகிய“ என்ற சொல் மறைந்து வந்துள்ளதால் இது “தொகை உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2019

திங்கள், 14 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்து!




இன்பம் பொங்கிடும்
   இனிமை சேர்த்திடும்
      இயற்கைத் திருநாளாம்!
நன்மை செய்திடும்
   நலங்கள் விளைத்திடும்
      நம்மோர் மகிழ்நாளாம்!
துன்பம் விலகிடும்
   துயரம் போக்கிடும்
      துணிவாய்த் திகழ்நாளாம்!
பொன்னாய்ப் பொங்கிடும்
   புதுமை புரிந்திடும்
      பொங்கல் திருநாளே!   

புதிய ஆண்டினுள்
   பழமைக் கழிவினைப்
      போக்கி வளம்பெறவே
முதிரா விடியலில்
   மூண்ட தீயினுள்
      முந்தி அதைப்போட்டோம்!
பொதியாய் நிறைந்தநம்
   புண்மைச் செயலையும்
      புரிந்தே எரித்திட்டால்
மதியின் ஒளியென
   மனமும் நிறைந்திடும்
      மகிழ்வைக் கண்டிடலாம் ! 

துள்ளி எழுப்பிடும்
   தூவும் பனிமழை
      தொடங்கும் சிறுகாலை!
புள்ளி வைத்துடன்
   பொலியும் நிறமுடன்
      புணையும் பூக்கோலம்!
கொள்ளை அழகதில்
   குலவும் உயிர்க்கெனக்
      கொஞ்சம் அதனுடனே
வெள்ளை அரிசிமா
   விரும்பிக் கலந்திட
      வேண்டும் வாழ்வதற்கே

விண்ணின் அமுதமாய்
   விளைந்த அரிசியை
      விரும்பிப் பொங்கலிட்டு
மண்ணில் விளைந்தநல்
   மஞ்சள் வாழையும்
      மலரும், செங்கரும்பும்
கண்ணாம் உழவனின்
   கனத்த உழைப்பினைக்
      கண்டு நன்றியுடன்
பெண்ணும் ஆணுமாய்ப்
   பெருமை பொங்கிடப்
      பிணைந்தே அதைஉண்போம்!  

தொழிலை விரும்பிநல்
   தொண்டாய்த் தொடர்கிற
      தூய உழவரையும்
மொழியும் தமிழினை
   முறையாய் உரைத்திடும்
      முதுமைக் கவிகளையும்
வழியில் நன்மையை
   வகுத்தே கொடுத்திடும்
      வாய்மை அறிஞரையும்
விழிபோல் எண்ணியே
   விந்தை உலகினில்
      விரைந்தே வணங்கிடுவோம்!  

வானில் நலங்களை
   வழங்கும் ஒளியையும்
      வளஞ்செய் மழையினையும்
மேனி உருப்பெறும்
   மேன்மைப் பலம்தரும்
      மேகம் காற்றினையும்
தீனித் தினம்தரும்
   தேர்ந்த நிலத்தையும்
      தெளிந்த நீரினையும்
தேனின் இனிமையாய்த்
   தெய்வப் பதமெனச்
      சேர்ந்து வாழ்த்திடுவோம்!  


உழைப்பின் உயர்வென
   உணர்த்தும் சொல்லினை
      உடையது மாடுஅன்றோ!
தழைக்கும் வயலினைத்
   தாங்கும் ஏருடன்
      தகவாய் உழுவுமன்றோ!
குழந்தை பசியினைக்
   கொடுக்கும் பாலினால்
      கோவே போக்குமன்றோ?
அழைத்தே இவைகளை
   அன்பாய் வணங்குதல்
      ஆன்றோர் வழியன்றோ!  

பொன்னும் புதுஉடை
   பூவும் அணிந்திடப்
      பூத்த மனத்துடனே
அன்பில் மூழ்கிடும்
   அறிஞர் முதியவர்
      அவரைத் தேடிநின்று
இன்பம் பொங்கிட
   இனிமை விளைந்திட
      இன்சொல் பேசிவந்தால்
என்றும் மகிழ்வுடன்
   எண்ணம் மிளிர்ந்திட
      ஏற்றம் பொங்கிடுமே!  

காணும் பொங்கலோ
   காளை அடக்குதல்
      கலைகள் உயர்வதற்கும்,
நாணும் பெண்களை
   நலமாய் மணஞ்செய
      நல்லோர் நடத்திவைத்தார்!
ஆணும் பெண்ணுமாய்
   அமைந்த வாழ்விலே
      ஆன்றோர் வகுத்துவைத்த
பேணும் நன்மையைப்
   பேசும் உலகெலாம்
      பெருமை தரும்செயலே!   


எங்கும் இன்பமே
   இளமை நிறைத்திடும்
      இனிமை தரும்நாளாம்!
பொங்கும் புன்னகை
   புதுமை விளைந்திடப்
      பொலியும் இந்நாளில்
திங்கள் ஒளியெனத்
   திகழும் மதியுடன்
      திண்மை பெற்றிடவும்
அங்கம் அழகுடன்
   ஆயுள் நீண்டிட
      அருணா வாழ்த்துகின்றேன்
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2019

வியாழன், 10 ஜனவரி, 2019

மாலை உவமை! - 24




   பாடலில் ஒரு பொருளுக்குப் பல உவமைகள் தொன்ற, அவை ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வந்து கடைசியில் பொருளைச் சொல்லி முடிப்பதாக வருவதுமாலை உவமைஆகும்.

உ. ம்
செம்பொன் நிலம்போல் செழுமையதில் நீர்வளத்தை
நம்பும் பசுங்கொடிபோல் நன்கது - கொம்பினைப்
பற்றாகப் பிடித்துப் பயன்தருதல் போன்றதே
கற்றோர் இடமிருக்கும் கல்வி!

பொருள்செம்மையான பொன் நிறைந்த நிலம்போல, செழிப்பான அதனுள் அமைந்த நீர்வளத்தை நம்பிடும் கொடி போல, அக்கொடியானது நன்கு படர்ந்து வளர அருகிலிருக்கும் கொம்பினைப் பற்றாகப் பிடித்துப் பயன் தருதல் போல நன்மைதரும் கற்றவர் இடத்தில் இருக்கும் கல்வி.
     செம்பொன்போல் செழுமையும், நீர்வளத்தை நம்பும் பசுமையான கொடி போலும், அது அதன் அருகில் இருக்கும் கொம்பினைப் பற்றாகப் பிடிப்பது போல் என்று பாடலில் உவமையாது எங்கும் முற்றுப் பெறாமல் வந்து கடைசியில் கற்றோர் இடமிருக்கும் கல்வி என்று முடிந்துள்ளதால் இது மாலை உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

இதன்பிறகு, உவமை பிற அணிகளுடக் கூடி வரும் எட்டு உவமை அணிகளும், மேலும் வேறுபாடாக வரும் மூன்று அணிகளும் உள்ளன.

பொது நீங்கு உவமை! - 23





   ஒரு பொருளுக்கு உவமையைக் கூறிப், பின்பு அதனை மறுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பொருளையே தனக்குத் தானே உவமையாகக் கூறுவதுபொது நீங்கு உவமைஎனப்படும்.
(உண்மை உவமை என்பது உவமையைக் கூறிப் பின்பு மறுத்து அது பொருள்தான் எனக்கூறுவது. ஆனால் இது, பொருளைக் கூறி பின்பு மறுத்து அந்தப் பொருளையே தனக்குத் தானே உவமையாகக் கூறுவது)

உ. ம்
உடலுக்குத் தேக்கும் உறுதிக்கு அதனின்
திடமும் குறைதான்! தெளிந்துதொடர்உயர்
ஏறும் உனக்குவமை நீயே நிறையென்று
கூறுவேன் உள்ளம் குளிர்ந்து!

பொருள்தேக்கு மரத்தைப் போன்ற உடலும், அதன் திடமான தன்மையைப் போன்ற உறுதியும் என்று உன்னைக் கூறுவது குறைதான். உன் தெளிந்த அறிவால் தொடர்ந்து உயர்வுகளைத் தொட்டிடும் உனக்கு உவமை நீயே என்று நிறையோடு உள்ளம் குளிர்ந்து கூறிடுவேன்.
    உடலுக்கு மரத்தையும், உறுதிக்கு அதன் திடத்தையும் உவமைக் கூறிப் பின்பு அது குறைதான் என்றும், ஒரு மரத்தினால் தெளிவான உயர்வுகளைப் பெற முடியாது என்ற காரணத்தினால் அதைவிட உனக்கு நீயே உவமை என்று கூறியதால் இது பொது நீங்கு உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

கூடா உவமை! - 22





   ஒரு பொருளுக்கு ஒப்பாகாத அல்லது கூடாத ஒன்றை அப்பொருளுக்கு உவமையாகக் கூறுவது கூடா உவமைஆகும்.

உ. ம் 
மலர்தரும் சூடும், வளர்தழலின் இன்பும்,
உலர்நிலத்தில் வாழும் உழவும்நலமாய்
நடந்ததுபோல் உள்ளது நாதாநீ யின்றிக்
கடந்துவிட்ட காலப் பொழுது!

பொருள்அன்பனே! நீ என்னுடன் இல்லாமல் இருந்த கடந்து போன காலங்கள், மலர் தரும் சூடும், வளர்ந்து எரியும் நெருப்பின் இன்பமும், ஈரமின்றி உலர்ந்து காய்ந்து போன நிலத்தில் செய்யும் பயிர்த்தொழிலும் நலமுடன் நடந்தது போல் உள்ளது. இது தலைவனிடத்தில் தலைவி சொல்லிய கூற்று.
     மலரானது சூட்டினைத் தராது, செந்தழலானது இன்பத்தைத் தராது, காய்ந்த நிலத்தில் பயிர் விளையாது. ஆனால் இவையெல்லாம் நடந்தது போல் உள்ளது என்று கூறியதால் இது கூடா உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019