புதன், 30 அக்டோபர், 2019

புல்வெளியில் பூஞ்சிலை!



.
கயலெடுத்து வைத்தானோ
  காரிகையின் கண்ணென்றே!
அயலிருக்கும் மூக்கென்ன
  ஆழ்ந்தெடுத்த சிப்பிதானோ!

கார்கூந்தல் வண்ணத்தைக்
   கண்ணனவன் தந்தானோ!
நேர்வகிட்டுக் கோலமதை
   நெடுநேரம் அளந்தானோ!

தேன்மொழியும் வாயழகைத்
  தெளிதமிழால் செய்தானோ!
கூன்பிறையைக் காதாக்கிக்
  கழுத்தருகில் வைத்தானோ!

வெண்ணிலவைப் பொடியாக்கிப்
  பெண்வாயில் புதைத்தானோ!
பண்ணொலியைக் குரலாக்கிப்
  பைந்தமிழைக் கலந்தானோ!

கல்லெடுத்துச் செய்தானோ
  கட்டழகின் மேனியினை!
வில்லெடுத்து வரைந்தானோ
  வேல்விழியாள் புருவமதை!

என்னவென்று பாடிடுவேன்
  எடுத்தெழுத வார்த்தையில்லை!
பொன்னழகே! என்னவளே!
  புல்வெளியில் பூஞ்சிலையே!
.
பாவலர் அருணா செல்வம்
30.10.2019

செவ்வாய், 29 அக்டோபர், 2019

முட்டுக்கட்டை!




ஊரே கூடிச் சேர்ந்திழுக்க
   ஓடும் அழகாய் ஊர்வலமாய்!
ஈரேழ் உலகத் தலைவியவள்
   இன்பம் பொங்க அமர்ந்திருப்பாள்!
பாரே பக்திப் பரவசமாய்ப்
   பார்த்தும் பணிந்தும் வணங்கிடவே
தேரே நகரும் அழகுடனே
   தேனாய் நன்மை செய்திடவே!

இழுத்த இழுப்புக்(கு) அதுவோடும்!
   என்றே இருந்தால் என்னாகும்?
தொழுத உயிர்க்கும் தொடர்பவர்க்கும்
   தொல்லைக் கண்டே துவண்டிடுமே!
நழுவி யோடா திருந்திடவும்
   நடக்கும் செயலை நிறுத்திடவும்  
பொழுதில் வைப்பார் காலின்கீழ்
   பொதிக்கும் முட்டுக் கட்டையாகும்!

முட்டுக் கட்டை எடுத்தாலே
   முறையாய்ச் செல்ல முடிந்தாலும் ,
தட்டுத் தவறும் நேரத்தில்
   கட்டிப் போட்டு விடுவதற்கே
முட்டுக் கட்டைப் போட்டிடுவார்!
   முந்திச் செல்ல் மட்டுமின்றிக்
கட்டுக் கொப்பாய்ச் செல்வதற்கும்
   முட்டுக் கட்டைத் தேவையன்றோ! 

ஒருவர் செய்யும் செயலுக்கோ
   உந்தும் திறனே உயர்த்திவிடும்!
கருத்தில் தொண்டாய்ச் சேர்ந்தோர்க்கோ
   கருத்தும் பலவும் நின்றாடும்!
ஒருசொல் முட்டுக் கட்டையாக
   ஒடுக்க வந்து நின்றாலும்
பொருத்தே அதனின் இடம்நகர்த்த
   பொதுமை தேரோ நகர்ந்திடுமே!
.
பாவலர் அருணா செல்வம்
28.10.2019

வியாழன், 17 அக்டோபர், 2019

தரணி யாளும் தமிழ்!



(கும்மி)

பண்டைய மாந்தர்கள் பேசிய தேஉயர்
    பண்பினில் மின்னிடும் செந்தமி ழே!
விண்ணவர் எழுதி விட்டுச்சென் றனரோ
    வியக்க வைத்திடும் செம்மொழி யே!

இன்பத்தின் சாற்றினில் ஊறிய தால்பேச
    இனிப்பை உண்கின்ற சுவையன் றோ! 
பின்னிடும் பாக்களின் பொருளைக் கேட்டிட
    பெருமை பெற்றிடும் செவியன் றோ!

செம்மையாய் மொழியின் இலக்க ணத்தைமுன்
    செய்துவைத் தவர்தொல் காப்பிய ரே!
மும்மொழி வாழ்வதன் விளக்க மதைத்தன்
    முப்பாலில் செய்தவர் வள்ளுவ ரே!

பற்பல வளமை பெற்றதி னால்நலம்
    பயக்கின் றநூல்கள் பலபெற் றோம்!
கற்சிலை அழகாய்ச் செதுக்கி யதால்முற்
    காலமும் வாழும்நல் வரம்பெற் றோம்!

எண்ணத்தில் தோன்றிடும் கருத்தை எல்லாம்நல்
    இசையின் வண்ணத்தில் பாடிடு வோம்!
பெண்னெனும் சக்திகள் வட்டமிட் டேஅதைப்
    பெற்றதோர் பேறென்றே ஆடிடு வோம்!

ஆதியில் தோன்றிய அந்தமிழ் மொழியை
    அனைவ ரும்கற்றால் பலனுண் டே!
ஓதிடும் ஆசானின் புகழிவ் உலகில்
    உயர்ந்தி டும்வண்ணம் நலனுண் டே!

தேனுக்கு மட்டும்இ னிப்பில்லை நமது
   தெள்ளுத மிழ்ச்சுவை இனிப்பா கும்!
வானுக்கு மட்டும்ம ழையினைப் போல்சுய
   வளமே தமிழில் தனியா கும்!

நாட்டினில் செல்வங்கள் பலவுண் டேஅதில்
    நற்றமிழ்ப் போலொரு செல்வமுண் டோ!
ஊட்டிடும் தாய்போல்உ றவென்றே மொழியை
    உலகில் எங்கேனும் சொல்வதுண் டோ!
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2019