புதன், 22 பிப்ரவரி, 2012

பெண்ணின் காதல் வெறுப்பு!! (கவிதை)



கட்டி கரும்பே என்றாயே
     கடித்தே கன்னம் சிவந்ததுவே!
கொட்டிக் கிழங்கே என்றாயே
     கொடுத்த இதழை விட்டாயா?
எட்டி போக நினைத்தாலும்
     எட்டிப் பிடித்து விட்டாயே!
தட்டி போக எண்ணவில்லை
     தவியாய்த் தவித்தேன் உன்னிடத்தில்!
  
ஆசை வார்த்தை பேசியென்னை
     அணைத்த உடம்பு துவண்டுவிட
மீசை முள்ளாய்க் குத்திவிட
     முகமும் எல்லாம் சிவந்ததுவே!
ஓசை எழுந்த கால்கொலுசை
     உதறி தள்ளி விட்டாயே!
காசைப் போட்டு வாங்கினேனே
     கடனை உடனே தந்துவிடு!

தீயாய் உடம்பு கொதித்தாலும்
     திட்டம் போட்டே நெருங்கிடுவாய்!
நோயால் மேனி வலித்தாலும்
     நோக்கம் தீர அணைத்திடுவாய்!
சேயாய் இன்றும் இருக்கின்றேன்
     செத்த நேரம் ஓய்வெடுக்க
தாயின் வீடு போகின்றேன்!
     தனிமை எனக்கு வேண்டுமடா!


அருணா செல்வம்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஆணின் காதல் தவிப்பு! (கவிதை)




கொள்ளைப் புறத்து மரங்களிலே
     கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
     முத்துப் பல்லை ஒத்திருக்க  
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
     காற்றில் இராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
     சொக்கிப் போனேன் இவைகண்டு!!

காற்றில் வந்த நறுமணத்தில
     காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
     சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
     இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டீ என்மேலே
     சின்னக் கிளியே செங்கனியே!

வீட்டில் பாயில் படுத்தாலும்
     விடியக் கண்கள் மூடவில்லை!
காட்டிக் கொடுக்கும் கண்ணிரண்டும்
     காதல் தவிப்பைத் தாயிடத்தில்!
கூட்டிக் கேட்டால் என்சொல்வேன்?
     கொடுத்த ஏக்கத் தவிப்பைநான்!  
வாட்டி வதைக்கும் வடிவழகே
     வாடி என்தன் பக்கத்தில்!

சொட்டும் தேனை இதழினிலே
     சொக்க எனக்குத் தந்தவளே!
கட்டும் குழலைப் பாயாக்கிக்
     காதல் களிப்பைத் தந்தவளே!
திட்டும் போதும் பல்காட்டித்
     திகட்டா இன்பம் தந்தவளே!
தொட்டுப் பேச அழைக்கின்றேன்
     தொடுத்த சரமே அருகேவா!!

வட்ட நிலவு வானத்திலே
     வந்த உடனே உன்நினைப்பே!
சிட்டு போலப் பறப்பவளே
     சிந்தை முழுதும் உன்நினைப்பே!
சட்டம் போட்டுச் சண்டையிட்டுத்
     தனியே தாயின் வீட்டிற்குத்
திட்டம் போட்டுப் போனவளே
     திட்ட மாட்டேன் வந்துவிடு!

முன்னே தெரியும் முகமெல்லாம்
     முத்துப் பெண்ணே உன்முகமாய்
என்னே அழகாயத் தெரியுதடி!
     ஏங்கிக் கிடக்கும் என்னைப்பார்!
கண்ணே! மணியே! கற்கண்டே!
     கட்டி அணைக்க வந்துவிடு!
சொன்னேன் கவியில் இனிப்பாக
     சுவைக்க இதழைத் தந்துவிடு!!

(அறுசீர் விருத்தம்)

வியாழன், 16 பிப்ரவரி, 2012

காக்காய் குணம் (கவிதை)



காகம் கறுப்பாய்

இருந்தாலும்
கருத்தால் குணத்தால்
கவர்ந்துவிடும்!

கா..கா.. என்று
பக்தியுடன்
கடவுள் உணவை
அதற்களிப்பர்!

காகம் கூட
சிலநேரம்
கண்ட பொருளை
விரும்பிஉண்ணும்!

தேகம் கறுப்பாய்
இருந்தாலும்
தேய்வ குணமே
சிறப்பன்றோ!

(அறுசீர் விருத்தம்)

புதன், 8 பிப்ரவரி, 2012

பருவ வயது (கவிதை)


                                                                  

பருவ வயதிலே                    
    பாவையின் நெஞ்சமோ
        பறந்திடும் காற்றாடி!


உருவ வடிவிலே
    காளையர் மனத்தினை
        உடைத்திடும் கண்ணாடி!


அரும்பு மனத்திலே
    ஆசையும் வளருதே
        அதிசயம் என்னாடி?


கரும்புக் கணையிலே
    காமனும் துறத்தவே
        காதலின் வண்ணமடி!!

(அறுசீர் விருத்தம்)

திங்கள், 6 பிப்ரவரி, 2012

அகலிகை செய்தது சரியே!! (கவிதை)


இராமன் தொட்டதில் என்னைத் தொட்டது 'கல்'
(20.11.2009 - கம்பன் விழாவில் வாசித்தக் கவிதை)               
             
அகலிகை கல்லாய்க் கிடந்தாள்; ஆனால்
சுகத்தை இழந்து சோகம் தாங்கி
அகத்தில் இருளை அடைந்தது யாரெனத்
தகவல் அறிய தாள்களைத் திருப்பினேன்.            
கவிதைக் கடலாம் கம்பனின் கருத்தோ
புவியில் புதைந்த பொன்துகள் போன்றதே!!
கம்பனின் சூத்திரம் கதையில் இருக்கும்
தெம்புடன் அதைத்தான் தேடிப் பார்த்தால்
உண்மை அங்கே ஒளிந்தே இருக்கும்
கண்டு பிடித்தால் கண்டதே சூத்திரம்!!

ஆண்கள் என்றால் அவைமுன் உரைப்பர்!
பெண்ணாய் இருப்பதால் பேசவும் கூசுதே!
தண்டனை பெற்றது தலைவனா? தாரமா?
உண்மையை உரைக்க உருவம் சாபமா?
இருப்பினும் என்னால் இயன்றதை உரைப்பேன்!
இருட்டினில் கண்கள் குருடு இல்லையே!
துன்பம் வருவதைத் தூயவள் அறியாள்.
கண்பல சாபம் காமுகன் பெறவே
பொய்யாய்க் கூவிடப் புலராப் பொழுதில்
பொய்யறி யாமல் போனார் மாமுனி!

கணவன் உருவில் கட்டி அணைத்தவன்
கணவனே என்ற கருத்துடன் கலந்தாள்!
இடையினில் தெரிந்தது இந்திரன் என்று!               
தடையாய் நிறுத்தித் தடுத்திட முடியுமா?
நஞ்சினை உண்டதை நங்கை உணர்ந்ததும்
வஞ்சியின் நெஞ்சம் வாதமா புரியும்?
முடிந்து போனது மோகன ராகம்!
படிந்து போனதோ பாழும் தேகம்!
காமம் என்பது கனிந்தே அணைவது!
பாமரன் அறிவான். படிக்கவும் வேண்டுமோ?

பிரசவ நேரம் பிறக்கும் தருணம்
அரசக் கட்டளை அடக்கிட வேண்டுமாம்!
முரசு கொட்டியே முயற்சித் தாலும்
அரசனுக் காக அடக்கிட முடியுமா?
முடியும் என்றால் முனிவரின் பத்தினி
கடிந்து சாபம் கணத்தினில் தருவாள்!
அந்த நிலைதான் அகலிகை நிலையும்
எந்த மனிதரும் எளிதினில் உணருவர்!

தாரம் செய்தது தவறிய நிலைதான்
காரணம் புரிந்த கௌதம முனிவர்
பொல்லா உலகம் பொதுமை பாராது
சொல்லால் கணைபோல் சொறுகிச் சாய்க்கும்!
கல்லா மனிதன் கலங்குதல் போலே
இல்லால் இதயம் இருக்க லாகுமோ!
விலைமகள் மனம்போல் கல்லாய் விதித்தால்
கலைமகன் 'கழல்துகல் கதுவ" எழுவாள்.

என்றே நினைத்தே ஏவினார் சாபம்!               
அன்றே கல்லாய் அகலிகை ஆனாள்!
அவராய்ச் சபிக்கவில் லையெனில் அதுமுதல்
சவம்போல் இருப்பாள்! சத்தியம் அதுதான்!
தவம்பல செய்தும் தண்டனைக் குரியவன்
தவறிய தானே என்பதை உணர்ந்ததும்
இல்லால் இல்லாத இல்லில் இன்பம்
இல்லை என்றே இமயம் சென்றார்!

அரக்கியைப் பெண்னென அறிந்ததும் தயங்கி
இரக்கப் பட்டான் இராமன். இருந்தும்
பெண்ணாய்ப் பிறந்தும் பேய்க்குணம் அறிந்து
மண்ணில் சாய்த்தான். மாமுனி சொல்லத்
தூயவள் அடைந்த துன்பக் கதையைத்
தூயவன் கேட்டுத் துயரம் கொண்டான்!
மாறு வடிவம் மனிதன் பூண்டால்
மாறும் உலகினில் மகளீர் அனைவரும்
கற்பினைத் தொலைத்துக் கல்லாய்க் கிடப்பர்.
கற்பனை செய்தால் கவலைதான் மிஞ்சும்!

விளக்கம் வேண்டாம். விரும்பியே இந்திரன்                
விளக்கினில் விழுந்தான் விட்டில் பூச்சியாய்!  
தயங்கிய பெண்ணைத் தாயாய் நினைத்தே                 
உயர்ந்தவள் இவளென உண்மையை உரைத்தான்!
இருவரின் தவற்றை இயம்பினும் பெண்ணின்
அருமையை உணர்ந்த அயோத்தி இராமன்
தொட்டதில் என்னைத் தொட்டது - தொட்டதும்
சட்டெனச் சாபம் விலகிய கல்லே!!

(அகவல்)

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கணினி..நீ எங்களின் கலியுகக் கணபதியோ! (கவிதை)



கலக நாரதர் கடனைச் செய்யவும்
உலக நாதனை உமையுடன் சுற்றியும்
அன்னை தந்தைதாம் அகிலம் என்று
முன்னை கணபதி பெற்றது மாங்கனி!

உலக மக்கள் உறவு கொள்ளவும்
பலவும் கற்றுப் பயன்தனைப் பெறவும்
வையகம் அறிந்திட வைத்த இடத்தில்
கையகம் பற்றிடக் காட்டிடும் கணிணி!

தும்பிக் கைதான் துயரம் தீர்க்கும்!
நம்பிக் கையோ நான்கும் நல்கும்!
தூரித வேலை தொட்டதும் துளிர்க்கும்!
காரியச் சித்திநீ! கவிஞரின் சிந்தனை!

வெட்டியும் ஒட்டிய விந்தைதான் உன்முகம்!
எட்டுத் திக்கிலும் ஏற்கும்! இயந்திரம்
வெட்டியும் ஒட்டியும் வேண்டிய வேலையும்
தொட்டதும் முடியும் தோனிதான் உன்நயம்!

காலம் காலமாய் கவிஞர் போற்றினர்!
காலம் மாறினும் கவிதையும் மாறுமா?              
எலியுடன் இருக்கும் இருவரும் இணையா?
கலியுகக் கணினி..நீ! கணபதி தானோ!!

(அகவல்)