சனி, 31 டிசம்பர், 2022

புத்தாண்டு வாழ்த்து ! 2023

 

.

அன்பைக் கொட்டும் அன்னையைப்போல்
        அறிவைக் காட்டும் தந்தையைப்போல்
இன்பங் கூட்டும் நட்பைப்போல்
       எழுமை ஊட்டும் கல்வியைப்போல்
நன்மை பயக்கும் செல்வம்போல்
       நல்ல துணையின் உறவைப்போல்
இன்று பிறக்கும் புத்தாண்டு
      இணைந்து வளமாய் வரவேண்டும்!
 
வருக வருக புத்தாண்டே !
       வாழ்வும் வளமும் கொடுத்தருள்க !
தருக தருக புகழ்யாவும்
      தமிழைப் போன்று உயர்ந்தோங்க !
உருகி யாடும் மனம்யாவும்
      உயர்ந்து நிறைந்து மகிழ்வோங்க !
அருமை ஆண்டாய் இருந்திடவே
       ஆசை கொண்டு அழைக்கின்றோம் !
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2023

 
தோழ தோழியர் அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

வியாழன், 29 டிசம்பர், 2022

இனிமை கொடுக்க நீவேண்டும்!

 

.   

கருத்தில் கல்வி ஒளியிருந்தும்
       கண்ணில் குருடாய் நடந்துவந்தோம்!
மருட்டும் வழியில் மாவிடர்கள்
      மறைந்தும் தெரிந்தும் கடந்துவிட்டோம்!
இருட்டைக் கிழித்த ஒளிவிளக்காய்
       இனிமை கொடுக்க நீவேண்டும்!
உருண்ட உலகோர் மகிழ்வுறவே
      உயர்த்தும் ஆண்டாய் வரவேண்டும்!
.
பாவலர் அருணா செல்வம்
30.12.2022

செவ்வாய், 13 டிசம்பர், 2022

மகிழ்ந்தே பயில்வோம்!

 



(சந்த கலிவிருத்தம்)
.
உணவே மருந்தாய்! உழவே தொழிலாய்! 
உணர்வே கலையாய்! உடலே மலராய்!
குணமே உயர்வாய்! குவிந்தே தலைமேல்
பணமே இருந்தால் பயமே வருமே!

மலையாய் விரைந்தே மலிவாய் பொருளால்,
அலையாய் விழுமே அறியா தெதுமே!
நிலையாய் அமர்ந்தே நெடிதாய் வரைவே
கலையாய் எழுமே கவியாய் வருமே!

மனமே அதைநாம் மதியா திருந்தால்
கனமாய் அதுவே கடிதா கிடுமே!
கனவே எனநாம் கனிந்தே இருந்தால்
தினமே வருமே திறனோ டிடுமே!
 .
முதிரா வயதோ முளையாப் பயிராம்!
கதிராய் வளர்ந்தால் கடிதோ இலையாம்!
விதியால் நடந்தால் வியந்தே அறிவோம்!
மதியால் புரிந்தால் மகிழ்ந்தே பயில்வோம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.12.2022

செவ்வாய், 6 டிசம்பர், 2022

அண்ணாமலையாரே!

 




(பிரிந்திசை வண்ணம்)

.
தன்னாதன தனதன
தன்னாதன தனதன
தன்னாதன தனதன தனதான (அரையடிக்கு)
 
அண்ணாமலை யுறைகிற
    பொன்மேனியி லொளியிடு
    மன்பாய்நல மருளிடு மனலோனே!
அஞ்ஞானமொ டலைகிற
    சந்தானிகை மனமுட
    னன்றாடஉ மதுமலை நினைந்தேனே!
 
பெண்ணாகிய வடிவுற
    பண்பாகிய குணநிலை
    பெம்மானென மழலையு மடைந்தேனே!
பின்னாளினி லுளமுனை
    நெஞ்சோடெனை அடைகிற
    பிண்டீதக மணநிலை எதனாலே!
 
விண்மோதும லையழகு
   செந்தீபமொ ளியழகு
   விண்ணோரும தனழகி லுழல்வாரே!
விஞ்ஞானவி வரமொடு
   பஞ்சானனு ருமறைய
   மெய்ஞ்ஞானமு ருவடிவி லருள்வாயே!
 
பண்பாடுட னசைபொரு
    ளொன்றோடிட இசையொடு
    பண்பாடிட வருமெனை மனதாலே
பஞ்சீகர அருளொடுஉ
    டம்போடுயிர் நலமொடு
    பண்ணோதிட அருளிடு பெருமானே!
.
பாவலர் அருணா செல்வம்
06.12.2022

 
சந்தானிகை - பாலேடு
சந்தாபம் - துன்பம்
பிண்டீதகம் - மருக்கொழுந்து
பஞ்சானன் - சிவன்
பஞ்சீகரம் - ஐம்பூதங்களும்

வெள்ளி, 25 நவம்பர், 2022

திரையிசைப் பாடலில் “நேரொன்றாசியத் தளை“!

 



.
     திரையிசைப் பாடலில் “நேரொன்றாசியத் தளை“ யின் இலக்கணத்தில் வந்த அழகிய பாடல் இந்தப் பாடல்.
    நேரொன்றாசியத் தளை என்பது நேர் முன் நேர் வருவதாகும். ஆனால் இப்பாடலில் வெகு சில இடங்களில் நிரை அசை அருகி வந்திருந்தாலும் பாடலின் இசையில் எந்தக் குறையும் தெரியவில்லை.
.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள (கண்ணன்)
.
தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக் கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன (கண்ணன்)
.
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சைச் சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம் (கண்ணன்)
.
பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
படம் வெண்ணிற ஆடை (1965)

செவ்வாய், 15 நவம்பர், 2022

பெண்ணின் உள்மனப் பேறு !

 


(கலிவிருத்தம்)

.
அன்பாய் பேசிய அன்றைய நினைவெல்லாம்
இன்றும் நெஞ்சினுள் இருந்தே இனித்திருக்கும்!
துன்பப் பொழுது தோழியர்ச் சூழ்ந்துவர
நின்று போயிடும் நெகிழ்ந்த கனவலைகள்!
.
சொல்லச் சொக்கிடும் சுவையாய்க் கவிகளையும்
மெல்லப் பேசிடும் மென்மொழி இனிமையையும்
நல்ல நேரமும் நிறைந்து கிடைத்தாலும்
மல்லுக் கட்டிடும் மனத்தைக் குழப்பிவிடும்!
.
கற்றோர் காட்டிய காலமெ னும்நிகழ்வோ
உற்றுக் கடக்கும் ஊழ்வினை என்றரிந்து
பற்று வைத்தலே படைப்பின் நிறைவென்றே
முற்றும் அன்பினால் முயன்று நெகிழ்ந்துவிடும்!
.
பெண்ணின் உள்மனப் பேற்றினைக் கண்டவளின்
கண்கள் நோக்கிடக் கவிகள் பிறந்துவிடும்!
வண்ணங் கூட்டிடும் வடிவில் கலந்துவிட்டால்
எண்ணந் தீட்டிடும் இதயம் இனிதுறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2022

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

தீபாவளி வாழ்த்து!

 



.
பட்டாசின் ஒளியில் மின்ன,
     பலகாரச் சுவையைத் தின்ன,
பட்டாடை கட்டிக் கொள்ள,
   பகட்டாக உள்ளஞ் செல்ல,
ஒட்டாத உறவுஞ் சேர
     ஒன்றாக தீபா வளியை
இட்டாட வேண்டும் என்றே
     இன்போடு வாழ்த்து கின்றேன்!
.
தோழ தோழியர் அனைவருக்கும் என்
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
24.10.2022

 
(அனைவருக்கும் பலகாரம் அனுப்பி இருக்கிறேன்.
“சும்மா“ எடுத்துச் சாப்பிட்டு மகிழுங்கள்)

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

மயூர வெண்பா!

 


.

அமுது கொடுக்கும் அழகும் அறிவும்  8
குமுத மலர்போல் குளிர்ந்து கமழ்ந்தும்  8
வரைந்து வகுக்கும் வளமை புரிந்தும்  7
விரைந்தறிவார் நம்மொழியுள் வீழ்ந்து!  10
.
பாவலர் அருணா செல்வம்
02.08.2022

 
(மற்ற அடிகளைவிட ஈற்றடி எழுத்துக்கள் மிக்கு வரவேண்டும். புள்ளியும், ஆய்தமும், குற்றுகரமும் நீக்கி எழுத்தெண்ண வேண்டும்.(குற்றுகரம் என்பது கு சு டு து பு று ஆகும்)


சனி, 23 ஜூலை, 2022

தாப்பிசைப் பொருள்கோள் வெண்பா!

 


குற்றமும் இல்லை! குறையும் இதிலில்லை!
முற்றும் அறிய முடியாது! - நற்றமிழில்
கற்றோர் களிப்படைவார்! காதல் உணர்வறிவார்!
பற்றுடையோர் காண்பார் பயன்!

.
பாவலர் அருணா செல்வம்
24.07.2022

வியாழன், 21 ஜூலை, 2022

விற்பூட்டுப் பொருள்கோள் வெண்பா !

 


குடியுயர்த்தும் போதை குலமழிக்கும் நேர்மை
படியளக்கும் பொய்மை பகைவளர்க்கும் சான்றோர்
வழியுயர்த்தும் தீமை மதியழிக்கும் வாய்மை
அழியா உயர்த்திடும் அன்பு!
.
பாவலர் அருணா செல்வம்
22.07.2022

 
விற்பூட்டுதல்!
.
அன்பு குடியுயர்த்தும்
போதை குலமழிக்கும்
நேர்மை படியளக்கும்
பொய்மை பகைவளர்க்கும்
சான்றோர் வழியுயர்த்தும்
தீமை மதியழிக்கும்
வாய்மை அழியா உயர்த்திடும்.

புதன், 20 ஜூலை, 2022

ஏனிப்படி ஆனாள் ?

 


ஆனிப்பொன் தேர்போல் அசையுங் கொடியிடை!
தேனிக்கள் மொய்த்திடும் தேனரும்பும் பூவிதழ்!
வானிருக்கும் மீன்போல வண்ணமிடுங் கண்ணுடையாள்!
ஏனிப் படியானாள்? என்றுரைப்பாய் தோழியே!
.
பாவலர் அருணா செல்வம்
20.07.2022

(வெண்டளையால் அமைந்த கலிவிருத்தம்)


செவ்வாய், 12 ஜூலை, 2022

எளியோர்க்கு ஈதல் !

 


ஞான முள்ள மனிதரெல்லாம்
        ஞாலந் தன்னில் பிறந்தாலும்
ஈனப் பிறவி நம்பிறப்பில்
       இனிமை கொஞ்சம் சேர்வதற்கு
தானம் செய்தால் பலநன்மை
      தானாய் வந்து சேருமென்று
வானம் சென்ற முன்னோர்கள்
     வாழ்வின் வகையாய்ச் சொன்னார்கள்!
 
உண்டு நன்றாய் உடல்வளர்த்தோம்!
      உதவி செய்தார் உரியோர்கள்!
கண்டு கேட்டும் உயிர்வளர்த்தோம்!
      கருத்தாய்ச் சொன்னார் உயர்ந்தோர்கள்!
பண்பு கொண்ட மனமிருந்தும்
      பாவம் விதியாய் நுழைந்துவிட்டால்
தொண்டு செய்த உன்னுடனே
      துணையாய் வந்து தலைக்காக்கும்!
 
பணமும் பொருளும் நிறைந்திருக்க
       பாலும் பழமும் மிகுந்திருக்க
உணவோ உண்ண அழைத்திருக்க
       உன்னைப் பசித்தோன் பார்த்திருக்க
குணமாய்க் கொஞ்சம் கொடுத்திட்டால்
       குறைந்தி டாமல் பெருகிவிடும்!
கணக்காய் எண்ண முடியாமல்
       கடிதில் கூடும் மனநிறைவு!
 
பதவி பெயரும் புகழெல்லாம்
       பகட்டாய் நம்மைக் காட்டிவிடும்!
நிதமும் தேவை எனச்சேர்த்தால்
       நெஞ்சோ பயமாய் அதைக்காக்கும்!
முதலும் முடிவும் அறியாத
        மோகம் கொண்ட வாழ்வினிலே
உதவி செய்ய பழகிவிட்டால்
        உன்னை அதுவே காத்துநிற்கும்!
  
இல்லை என்று கேட்காமல்
        ஏங்கி பார்க்கும் சிலவிழிகள்!
தொல்லை என்றே எண்ணாமல்
        துளியாய்க் கொஞ்சம் கொடுத்துப்பார்!
சொல்லில் சொல்ல முடியாமல்
        சொல்லும் பார்வை உன்னுருவைக்
கல்லில் இல்லாத் தெய்வமெனக்
       கண்முன் கண்ட மனம்நெகிழ்வார்!
    
தெய்வம் எங்கே எங்கென்று
       தேடித் தேடி அலைகின்றார்!
உய்யும் வாழ்வில் உன்னெதிரில்
       ஒளியைப் பொங்கி வரமாட்டார்!
மெய்யும் மனமும் வாடிவிட்ட
       மெலியோக் கொஞ்சம் கொடுத்துப்பார்!
வைய்யம் நிறைந்த தெய்வமெல்லாம்
       வந்தே அமர்வார் உன்னுருவில்!
 
எடுக்க எடுக்கக் குறைந்துவிடும்
        ஏற்ற மில்லாப் பெருஞ்செல்வம்!
அடுக்க அடுக்க ஏக்கந்தரும்
        ஆசை அடங்காத் துயர்வெள்ளம்!
கொடுக்கக் கொடுக்க வளர்கின்ற
        குணமே உயிரின் மனநிறைவு!
தடுக்கத் தடுக்க எவர்வந்தும்
        தகர்க்க முடியா நிறைவன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
13.07.2022

செவ்வாய், 5 ஜூலை, 2022

ஒன்றில் ஐந்து!



பாடி அழைத்தால்!
அறுசீர் விருத்தம்!

.
பாடி அழைத்தால் பணிந்தே
    பண்பாய் முந்தி வெறுப்பின்றி
ஓடி வருவாள் உடனே! 
         ஒன்ற உள்ளம் விருப்பின்றி
மூடி மறைத்தால் முகத்தை
    முற்றும் தீபோல் அடர்வின்றி
ஊடி நகர்வாள் ஒதுங்கி
    ஓய்ந்தே நன்றே மகிழ்வின்றி! 
.
கலித்துறை!
.
பாடி அழைத்தால் பணிந்தே பண்பாய் முந்தி
ஓடி வருவாள் உடனே ஒன்ற உள்ளம்!
மூடி மறைத்தால் முகத்தை முற்றும் தீபோல்
ஊடி நகர்வாள் ஒதுங்கி ஓய்ந்தே நன்றே!
.
கலிவிருத்தம்!
.
பாடி அழைத்தால் பணிந்தே பண்பாய்
ஓடி வருவாள் உடனே ஒன்ற!
மூடி மறைத்தால் முகத்தை முற்றும்
ஊடி நகர்வாள் ஒதுங்கி ஓய்ந்தே!
.
வஞ்சி விருத்தம்!
.
பாடி அழைத்தால் பணிந்தே
ஓடி வருவாள் உடனே!
மூடி மறைத்தால் முகத்தை
ஊடி நகர்வாள் ஒதுங்கி!
.
வஞ்சித்துறை!
.
பாடி அழைத்தால்
ஓடி வருவாள்!
மூடி மறைத்தால்
ஊடி நகர்வாள்!
.
பாவலர் அருணா செல்வம்
06.07.2022

ஞாயிறு, 3 ஜூலை, 2022

கடவுள் வணக்கம்! (கலிவிருத்தம் 1)

 



(கலிவிருத்தம் 1)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
உலகம் பாடிடும் ஓமெனும் நாதமும்
புலரும் காலையின் பூவதன் வாசமும்
உனது நல்லருள் உற்றிடும் நன்மையில்
எனது பண்ணிலும் இன்பினை நல்கவே!
.
(கலிவிருத்தம் 2)
(விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம்)
.
கற்றவர் கூடிடும் காலம் மின்னிடும்!
பற்றினை விட்டவர் பாதை பண்பிடம்!
பெற்றவர் கூறிடும் பெருமை ஏற்றிடும்!
உற்றிடும் அன்பினில் உயிரைச் சேர்த்திடு!

.
(கலிவிருத்தம் 3)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
மானின் துள்ளலாய் மாதவள் ஓடவும்
மீனின் மேனியாய் மெல்லிடை ஆடவும்
தேனின் இன்புடன் செவ்விதழ் பேசவும்
வானின் தூரலாய் வஞ்சியோ பாடினாள்!

.
பாவலர் அருணா செல்வம்
04.07.2022

செவ்வாய், 14 ஜூன், 2022

தோழ தோழியருக்கு வணக்கம் !

 



     கடந்த சில நாட்களாக கி.பி மூன்றாம் நுற்றாண்டில் பத்துப்பாட்டுத் தொகுப்பில் அடங்கிய கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு என்ற நுலில் இருந்த 99 மலர்களின், அவர் அக்காலத்தில் குறிப்பிட்ட பெயரையும். அதையே நாம் இக்காலத்தில் அறிந்திருக்கும் பெயருடன், அம்மலரின் அல்லது அம்மரத்தின் பயனையும் நேரிசை வெண்பாவாக எழுதிப் பதித்திருந்தேன். இதில் “வாரம்“ என்ற மலரைப்பற்றி இணையத்தில் தேடியும் தெரிந்தவர்களிடம் கேட்டும் என்னால் அறியமுடியவில்லை. அதனால் அம்மலரை மட்டும் நான் எழுதவில்லை.
    மற்ற 98 மலர்களை அனேகமாகச் சரியாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறு இருப்பின் மன்னித்துச் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
     தவிர, என் பாடல்களைப் படித்து அதற்கு விருப்பக் குறியிட்டும் கருத்துக்கள் எழுதியும் என்னை ஊக்குவித்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
நன்றியுடன்
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

99. தாழை! (தென்னந்தாழை)

 


.
தென்னை மரம்முழுதும் சீராய் பயன்தரும்!
தென்னம்பூ பாளை தேடியதைத் - தின்னக்
குடலிறக்கம் பேதி குணமாகும்! சூட்டின்
உடலெரிச்சல் போக்கும் உணவு!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022
 

(கைதை என்பது தாழம்பூ
தாழை என்பது தென்னந்தாழை)

நெய்தல் மலர்! (வெள்ளாம்பல்)

 


நெய்தல் மலர்உவர் நீரில் மலர்ந்திடும்!
தெய்வத்தின் மேல்சாற்றார்! தேனெடுக்க _ மொய்த்திடும்
வண்டு மதிமயங்கும்! வைகறையில் பூக்குமிதன்
தண்டுமிகக் குட்டையான தாம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

 
(குறிஞ்சிப்பாட்டில் இரண்டு நெய்தல் மலர்கள் உள்ளன.
நீள்நறு நெய்தல் என்பது நீலாம்பல்
மணிக்குலைக் கள்கமழ் நெய்தல் என்பது வெள்ளாம்பல்)
 
(நெய்தல் நிலப் பூக்களாக அடும்பு, புன்னை, ஞாழல், கோங்கு, தாழை, தும்பை, நெய்தல் ஆகும்)
 
(ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்ற பெயர்களைக் கொண்ட நீர் மலர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையாகும்)

வியாழன், 9 ஜூன், 2022

வடவனம்! (கருந்துளசி)

 


வாய்நாற்றம் போக்கும் வடவனம்! கண்புரை
நோய்,சளி தொல்லை நொடிந்தோடும்! - மாய்ந்த
கருவை வெளியேற்றும்! காய்,தண்டு, பூவும்
தரும்பயன் என்றும் தழைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

 

(துழாய் என்பது செந்துளசி

வடவனம் என்பது கருந்துளசி.

சிலர் ஆலமரம் என்றும். ஒருசிலர் திருநீற்றுப் பச்சிலை என்றும்

சொல்கிறார்கள்)

வேங்கை மலர்! (வேங்க மரம்)

 



விலையுயர்ந்த கட்டையில் வேங்கையும் ஒன்று!
மலையோரம் நன்றாய் வளரும்! - இலை,ஐந்து
கூட்டிலைக் காணும்! குளிர்ச்சியைத் தந்திடும்!
ஓட்டும் பலநோய் ஒழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

பிண்டி மலர்! (அசோக மரம்)

 


குட்டைமரப் பிண்டியில் கொத்தாய் மலர்மலரும்!
கட்டுக் குழலிலும் காதிலும் - கட்டிவைப்பார்!
அன்றைய மக்கள் அசோகமரம் என்றார்கள்!
இன்றும் அதுவே இருப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

செவ்வாய், 7 ஜூன், 2022

93. குளவி மலர்! (மலை மல்லிகை)

 


குளவிமலர் பூக்கும் குறிஞ்சி நிலமோ
அளவிலா வாசத்தில் ஆழ்த்தும்! - வளரும்
மலையின் பெயரை மல்லியாகப் பெறும்
தலையிலும் வைக்கத் தகைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

 
(மௌவல் என்பது மரமல்லி
குளவி என்பது மலைமல்லிகை)

தோன்றி மலர்! (இருநிறக் காந்தள்)


 


.
சீர்ச்சுடர்போல் தோன்றிச் சிறப்புறும் தோன்றிமலர்
கார்காலம் வந்திடக் காத்திருக்கும்  வேர்மண்ணில்!
செவ்விதழ்கள் மேல்நோக்கச் சேவலின் கொண்டைபோல்
கவ்விடும் நெஞ்சைக் கவர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

 

(காந்தள் என்பது செங்காந்தள்

கோடல் என்பது வெண்காந்தள்

தோன்றி என்பது இருநிறமும் கொண்ட காந்தள்)

மராஅம் மரம் ! (வெண் கடம்பு)

 


திருமால் முருகனுக்குத் தேவையான பூவாய்
அருமைமராம் பூக்கள் அமையும்! - பெருமரம்
கட்டிடச் சாரமிடக், காகிதம், தீக்குச்சி,
பெட்டியெனச் செய்வதும் பேறு!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022

வெள்ளி, 3 ஜூன், 2022

வள்ளிப்பூ! (வள்ளிக்கிழங்கு கொடி)

 


வள்ளிக் கிழங்கானது வாதநோயைச் சீராக்கும்!
உள்ளுறுப்பின் புத்துணர்வை ஊட்டிடும்! - வள்ளல்போல்
நன்மை கொடுத்திடும் நார்ச்சத்து மிக்கது!
இன்சுலின்சீர் செய்யும் இனிது!
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2022

மருதம் ! (மருத மரம்)

 


பெரும்பாட்டைச் சீராக்கிப் பெண்களைக் காக்க
மருதமரப் பட்டை  மருந்து! - கருப்பைநோய்,
தூக்கவின்மை, காதுவலி, சுக்கிலசு ரப்பியின்
வீக்கமும் போக்கும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2022

பாங்கர்! (உகாய் மரம்)

 


பாங்கரின் குச்சிகளில் பற்கள் துலக்கலாம்!
பூங்கொத்துகள் காய்க்கும் பொலிவுடன்! - தீங்கின்றி
வீழ்ந்திடும் கார விதையை பறவையுண்ணும்!
ஆழ்நிற வண்ணம் அழகு!
.
பாவலர் அருணா செல்வம்
03.04.2022

புதன், 1 ஜூன், 2022

ஞாழல் மலர் ! (புலிநகக் கொன்றை )

 



.
தங்கம்போல் மின்னித் தனியழகு கொண்டதால்
நங்கையரை ஈர்த்திடும் ஞாழலாம் ! - பொங்கிடும்
மஞ்சளும் செந்நிறமும் மாற்றமிட்டும், காற்றினில்
மிஞ்சிடும் வாசமே மேல்!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

முல்லை மலர்!

 



கல்லிவர் முல்லைமலர் கண்பார்வை கூட்டிடும்!
சொல்லில்லா ஆசையைத் தூண்டிடும்! - மெல்ல
மனம்மயக்கும் வாசமுல்லை மாலையில் பூக்கும்!
மனநோயைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

வஞ்சி மலர் ! (இலுப்பை மரம்)

 



தழை,விதை,பூ, பட்டை, தகுந்த மருந்தாம் !
மழையை வரவழிக்கும் வஞ்சி ! - பழையோர்
இனிப்புக்குப் பூவும் இருளோட எண்ணை
கனிமதுவும் உண்டார் களித்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

திங்கள், 30 மே, 2022

ஈங்கை மலர் !

 



.
இயற்கை எழிலாக ஈங்கை மலரும்!
வயல்வெளியில் பூக்கும் வளமாய்! - பயனெதும்
இல்லையிதில்! முட்செடி ஈங்கையின் பூமழை
நல்லின்பம் என்பார் நவின்று!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022

மாரோடம்! (செங்கருங்காலி மரம்)

 



முதிர்ந்தமரக் கட்டையில் கைப்பிடிகள் செய்வர்!
கதிர்வீச்சு நம்முடலைக் காக்கும்! - அதிக
மருத்துவ தன்மையுள்ள மாரோடம் நீரை
அருந்த உடலுறுதி யாம்!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2022