சனி, 16 நவம்பர், 2013

தாய்ப்பாசம்!! (நிமிடக்கதை)



   சூர்யா நேரம் கழித்து வீட்டில் நுழைந்தபோது அவனின் அம்மா “ஏனப்பா இவ்வளவு நேரம்?“ கவலையுடன் கேட்டாள். “ஆபிஸ்ல இன்னைக்குக் கொஞ்சம் அதிக வேலை. அதனால் தான். அம்மா, எனக்கு ஒரு காப்பி போட்டு கொடு“ என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
   அவன் தன் அறைக்குள் சென்று உடைமாற்றிவிட்டு வந்த பிறகும் அவன் தாய் அவன் கேட்ட காப்பியைத் தராமல் எங்கோ அவசரமாக போக உடைமாற்றிக் கொண்டிருந்தாள்.
  அவனே அடுப்படிக்குச் சென்று காப்பிப் போட முனைந்த போது சத்தம் கேட்டு ஓடிவந்தாள். “சூரியா... காபி தானே... நகரு. நான் இதோ ஒரு நிமிஷத்தில் தர்ரேன்“ அவள் சொல்லவும் பக்கத்துத் தெரு மாமி வரவும் சரியாக இருந்தது.
   “கிளம்பித்தான் காத்திருந்தியா...? வா. கோவில் நடை சாத்திரதுக்குள்ள சீக்கிரம் போய் வந்திடலாம்.“ மாமி அழைக்க... “சூரியா... நீயே காப்பிப் போட்டுக்கோப்பா“ சொல்லிவிட்டு அவசரமாக கோவிலுக்கு ஓடினாள்.
   சூரியா காப்பியைக் கலக்கிக் கொண்டே யோசித்தான். வெளிநாட்டில் இருக்கும் அக்காவிற்கு பிரசவ நேரம். தனியாக இருக்கிறாள். வெளியூரில் வேலைசெய்யும் அண்ணனுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று போனில் இரும்பிக்கொண்டே சொன்னான்.
   இந்த இரண்டு விசயமும் தான் அம்மாவை இப்படிக் கோவில் குளம் என்று சுத்தவிட்டிருக்கிறது. இப்பொழுது மட்டுமல்ல. எப்பொழுதுமே அம்மாவிற்கு அவர்கள் இருவரின் நினைவு தான். கூடவே இருக்கும் நம்மைப் பற்றி கொஞ்சம் கூட அக்கரைக் காட்டுவதில்லையே... என்ற ஆதங்கம் அவனுக்குள் வந்தது.
   பேசாமல் நாமும் வேலையை வெளியூருக்கு மாற்றிக் கொண்டு சென்று விட்டால், அம்மா நம்மைப்பற்றியும் யோசிப்பாள் இல்லையா...? மனம் கணக்குப் போட அவனுக்கு அதுவே சரியென்று பட... அதை அம்மாவிடம் சொன்னான்.
   அவள் உடனே, “வேண்டாம்ப்பா. மற்ற பிள்ளைகள் கண்காணா தூரத்துல இருந்தாலும், நீ என் அருகிலேயே இருக்கிறதால தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறேன். நீயும் வெளியூருக்குப் போயிட்டா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்.“ என்றாள் அம்மா.
   “நான் உன் பக்கத்திலேயே இருக்கிறதால தான் நீ என்னை நினைக்கிறதே இல்லையே அம்மா“ தன் ஆதங்கத்தை வெளியிட்டான் குரல் கம்ம.
   “அப்படி சொல்லாதே சூரியா. இன்னைக்கு நீ எப்பொழுதும் போல வேலையை முடிச்சிட்டு நேரத்திற்கு வராததால் நான் எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா? மாமி கோவிலுக்குக் கிளம்பி இரு என்று சொல்லி இருந்தாள். ஆனால் நீ நேரத்துக்கு வராததால எனக்கு எதிலுமே மனசு போகவில்லை. நீ வந்ததும் தான் அப்பாடா.. நீ நல்லபடியா வந்திட்டியேன்னு மனசுல திருப்தி வந்தது. நேரமாகிவிட்டது கோவிலுக்குப் போக வேண்டாம் என்று தான் நினைச்சேன். ஆனால், நீ நல்லபடியா வந்திட்டதால அந்த கடவுளுக்கு நன்றியைச் சொல்லிடலாம்ன்னு ஓடினேன். நீ நல்லா இருந்தால் தான் நான் மற்ற பிள்ளைகளை நினைத்துக் கவலைப்பட முடியும் சூரியா.“
   அன்பு பொங்க சொன்னாள் அம்மா.
   தாய்ப்பாசத்தின் அளவை அறியமுடியாமல் கண்கலங்கி நின்றான் சூரியா.


அருணா செல்வம்.

20 கருத்துகள்:

  1. தாயின் பாசமன நிலையை ஒரு சிறு
    நிகழ்வின் முலம் சொல்லிப்போனது
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    தமிழ்மணம் 3

    தன்னலம் இல்லாத் தனிப்பெரும் அன்புடைய
    பொன்மனத் தாயினைப் போற்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  3. சூரிய மட்டும் இல்லைத் தோழி இந்தக் கதையை வாசித்ததில்
    எனது கண்களும் தான் கலங்கிவிட்டன .அருமையான படைப்பு
    மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. தாய்பாசத்தை சந்தேகித்த சூரியாவுக்கு அம்மாவின் பதில் சரியான சவுக்கடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  5. ஈடு இணை ஏது...? தொடர வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  7. அருமையான கதை!

    அலை கடலை அளந்தாலும்
    அளவிட முடிமோ தாய்ப்பாசத்தை...

    நல்ல பகிர்வு! நன்றி தோழி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. அம்மாவின் அன்புக்கு நிகர் ஏது...
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  9. அன்னைப் பாசம் அளவிட இயாலா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. எல்லாக் குழந்தைகளும் ஒன்றேதான் அன்னையிடம் மட்டுமே..அங்கு மாறுபாடே கிடையாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. நல்ல கதை....

    தாய்ப்பாசம் - எல்லாக் குழந்தைகளிடமும் ஒரே அளவு தான்!

    பதிலளிநீக்கு