செவ்வாய், 1 அக்டோபர், 2013

கம்பனில் கருணை ஒளி!! (2)




விருத்தங்கள் செழித்திருக்கும் கம்பன் உள்ளே
   விளைந்திருக்கும் வர்ணனைகள் நெஞ்சை அள்ளும்!
கருத்துக்கள் பலபாடும் காவி யத்தில்
   கற்பனையின் வளங்காண மனமோ துள்ளும்!
பொருந்திவரும் பாத்திரத்தால் பேசும் சொல்லில்
   புகுந்திருக்கும் கருணையினைக் கண்டு நானோ
அருந்தமிழர் அமர்ந்திருக்கும் இவ்வி டத்தில்
   அறிந்தசில கருத்துகளை எடுத்து வந்தேன்!

தவமிருந்து பெற்றவனை விசுவா மித்ரர்
   தன்னுடனே அனுப்பிவைக்க கேட்டு நிற்கச்
சவமாகி விட்டதுபோல் உணர்வைக் கொண்ட
   தசரதனின் நிலையெண்ணி நம்மின் கண்கள்
கவலையினால் கரைபுரண்டு கண்ணீர் கொட்டும்!
   கதைக்குள்ளே தந்தைமகன் பிரிவின் துன்பம்
கவனமாக வடித்திட்ட கவியைக் கற்றால்
   கருணைபொங்கும் கருத்தினிலே மயங்கி நிற்போம்!

மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்து நின்று
   மாமுனிவ தவங்களைத் தடுத்து நின்றாள்!
கண்ணுக்குள் அடங்காத உருவம் கொண்டு
   கட்டழகன் இராமனையும் தாக்கி நின்றாள்!
பண்ணுக்குள் தாடகையின் கொடுமை தன்னைப்
   பண்பாகத் தலைமகனின் வாயால் சொன்னான்!
“பெண்ணவளை அழிப்பவோ இழுக்கே யாகும்!“
   பெருங்கருணை இதுவன்றோ! வேறெ தற்கோ?!

பொல்லாத இந்திரனின் செயலால், போற்றும்
   பொலிவுடைய அகலிகையோ பொலிவி ழந்து
கல்லாக உருமாறிக் கிடந்தாள்! ராமன்
   கால்பட்ட பொழுதினிலே சாபம் நீங்கிச்
சொல்லாலே சுடுகின்ற உலகைக் கண்டு
   சொல்லிழந்து இராமபதம் வணங்கி நின்றாள்!
இல்லத்தார் நெறிதனையே எடுத்தே ஓதும்
   இன்கருணை வார்த்தையெல்லாம் ஒளிர்ந்து மின்னும்!

(தொடரும்)
அருணா செல்வம்.

11 கருத்துகள்:

  1. கவிக்கு மிகப் பொருத்தமான படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கலாகுமரன்.

      நீக்கு
  2. /// கவனமாக வடித்திட்ட கவியைக் கற்றால்
    கருணைபொங்கும் கருத்தினிலே மயங்கி நிற்போம்...! ///

    நாங்களும் மயங்கினோம்... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    பதிலளிநீக்கு
  4. இல்லத்தார் நெறிதனையே எடுத்தே ஓதும்
    இன்கருணை வார்த்தையெல்லாம் ஒளிர்ந்து மின்னும்!//உண்மைதான்.நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  5. மிகமிக இலகு சொற்களால் அழகிய விருத்தம் தோழி!
    உங்கள் கவித்துவத்தைப் பார்த்து அதியசயித்து நிற்கின்றேன்...

    ரசிக்கின்றேன் தொடர்ந்து...
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. காவியத்தால் உயர்ந்தவனும் கம்பன் தானே-அவன்
    கருணைதனை வடித்திட்ட கவிதை தேனே
    ஓவியத்தில் காணுகின்ற எழிலும் கண்டேன்-சொற்கள்
    ஓடிவர படைக்கின்றீர் ! வாழ்த்து! விண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகிய வாழ்த்தை அளித்திட்ட ஐயா
      பழந்தமிழும் தங்களின் பாட்டால் எழுந்தாடும்!
      நானும் மகிழ்தாடி நன்றி உரைத்தேன்!நல்
      தேனும் அதனுள் தெளித்து.

      நீக்கு