வெள்ளி, 3 மே, 2013

எழுத முடியுமா? (சுவையான நிகழ்வு)




நட்புறவுகளுக்கு வணக்கம்.
    மூன்று நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சுவையான நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
    அந்த வருடம் “கம்பன் விருத்த்த்தில் வைத்த விருந்து“ என்ற கவிதை நூலை வெளியிடுவதாக இருந்ததால் அதற்கு வாழ்த்துரை கேட்க என் ஆசிரியரின் ஆசிரியர் திரு. சித்தன் அவர்களைச் சந்திக்கச் சென்றேன்.
    தமிழ்மாமணி, பாவலர்மணி சித்தன் அவர்கள் பாவேந்தர் பாரதிதாசனின் நேரடி மாணவர். இப்பொழுது இவருக்கு வயது 93. (வயது தான் இவ்வளவு. ஆனால்... இவர் இன்றெழுதும் காதல் பாடல்களைப் படித்தாலும் மனம் சொக்கும்)
    இவரின் மாணவர்களில் ஒருவர் தான் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள். (இவரும் குருவிற்குத் தகுந்த மாணவர் தான் என்பதை இவரின் “காதல் ஆயிரம்“ “ஏக்கம் நூறு“ படித்தவர்களுக்குத் தெரியும்)
    இந்தக் கவிஞரிடம் பயின்ற மாணவி நான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

    இப்பொழுது விசயத்திற்கு வருகிறேன்.
    திரு. சித்தன் ஐயா அவர்களிடம் நான் என் புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து வாழ்த்துரை வழங்குமாறு அன்புடன் பணிந்து கேட்டேன்.
    அவரும் என் நூல்பிரதியை வாங்கி நோட்டம் விட்டுவிட்டு “நிறைய வெண்பா எழுதியிருக்கிறாய். படித்துப் பார்க்க வேண்டும். உனக்கு எப்பொழுது வாழ்த்துரை தர வேண்டும்?“ என்று கேட்டார்.
    “ஒரு வாரத்திற்குள் கொடுத்தால் நல்லது ஐயா“ என்றேன்.
    அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு “ம்... சரி தருகிறேன். ஆனால் அதற்கு முன்பு நான் ஒரு ஈற்றடி தருகிறேன். அதை வைத்து நாளைக்குள் ஒரு வெண்பா எழுதிவிட உன்னால் முடியுமா...? என்று கேட்டார்.
   (ஈற்றடி என்றால் வெண்பாவின் கடைசி வரி)
   நானும் இதற்கு முன் இலங்கை ஜெயராஜ் அவர்கள் தந்த “வித்தகர்க்கு வேண்டாமே வீம்பு“ “போதாது போதாது போ“ போன்ற ஈற்றடிகளுக்கு உடனடியாக வெண்பா எழுதி பழக்கமாகி விட்டதால்... வெண்பா தானே... அது என்ன பெரிய விசயம் என்று நினைத்தாலும் “கொடுங்கள் ஐயா. முயற்சிக்கிறேன்“ என்று பணிவாக கேட்டேன்.
    அவரும் உடனே, “சம்போடு ராமாநு சம்“ என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுதி வா“ என்றார்.
    “சம்போடு ராமாநு சம்“... நான் ஒருமுறை சொல்லிப்பார்த்தேன். இதில் ராமாநுசம் என்றால் ஒரு பெயர் என்று புரிகிறது. ஆனால் “சம்போடு“ என்றால் என்ன....? புரியவில்லை. அவரிடமே கேட்டேன்.
    “சம்போடு“ என்றால் என்ன ஐயா?“ கேட்டேன்.
    அவர் உடனே, “யாருக்குத் தெரியும்? நான் உன் வயதில் இருக்கும் பொழுது என் ஆசிரியர் கொடுத்த ஈற்றடி இது. ஆனால் நானும் உன்னைப் போல் குழம்பி கடைசியில் எழுதிவிட்டேன். நீயும் போய் எழுத முயற்சித்துப் பார்.“ என்றார்.
   அங்கேயே அமர்ந்து ரொம்ப நேரம் யோசித்தும் எதுவும் தெரியாததால் “ஐயா... யோசித்து எழுதி நாளை கொண்டு வருகிறேன்“ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
   வந்ததிலிருந்து எல்லா தமிழ் அகராதியையும் எடுத்துத் தேடினேன். அப்படி ஒரு வார்த்தையே இல்லை. நான் அப்பொழுது விடுமுறைக்கு இந்தியா வந்திருந்ததால் என் ஆசிரியரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனாலும் விடாமல் அன்றிரவு முழுவதும் யோசித்தேன்.
   நட்புறவுகளே.... இங்கே வெண்பா இலக்கணம் தெரிந்தவர்கள் இருந்தால் இந்த “சம்போடு ராமாநு சம்“ என்ற ஈற்றடிக்கு யோசிக்க அவகாசம் தருகிறேன்.
   யோசிக்க நேரமில்லாதவர்கள் தொடருங்கள்....
-


-


-


-


-


-


-


-


-


-
    யோசித்து... யோசித்து... கடைசியில் ஒரு வழி கிடைத்தது. இந்த வார்த்தை வகையொளி செய்து கொடுக்கப்பட்டாதாக இருக்குமோ... என்று யோசித்தேன்.
    வகையொளி என்பது மரபு இலக்கணத்தில் ஒரு சொல்லைப் பிரித்து எழுதுவதாகும். சங்க இலக்கியங்கள் அனைத்திலும் இந்த வகைதான் அதிகமாகக் கையாளப்பட்டு உள்ளது. இவ்விதம் படிப்பதற்கு மிகவும் கடினம் என்பதால் என் ஆசிரியர் முடிந்த வரையில் 99 விழுக்காடு வகையொளி செய்யாமல் தான் எழுத வேண்டும் என்றும் அப்படி முடியாத நேரத்தில் ஒரு விழுக்காடு வேண்டுமானால் இதனைக் கையாளலாம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
    அதனால் நான் வகையொளி படுத்தி கவிதைகள் எழுதுவதில்லை.
    ஆனால் இவ்விடத்தில் வேறு வழியில்லாமல் வகையொளி படுத்தி இரண்டு வெண்பா எழுதி கொண்டு போய் சித்தன் ஐயா அவர்களிடம் காட்டினேன்.
    அதைப் படித்து என்னை வியந்து பாராட்டியது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பின்பு உடனடியாக என் கவிதை நூலுக்கு “சாற்று கவி எழுதி தந்தார்.

இதோ அந்த வெண்பாக்கள்.


சம்பளம் வாங்கியதும் சட்டென்றே ஓடிவிடும்!
உம்பலம் கண்டதனால் கேட்கின்றேன்! – உம்மென்று
சும்மா தரவேண்டாம்! காசுக்கே கொஞ்சம்ர
சம்போடு ராமாநு சம்!

நாடிருக்கும் இந்நிலையில் நாமுயர நன்மைக்கும்
வீடிருந்தும் வேடிக்கைக் காட்டிடவும் – காடிருக்கும்
கொம்போடு கோடிட்டே ஆடும் புலிபோல்வே
சம்போடு ராமாநு சம்!



அதாவது 
“ரசம்போடு ராமாநு சம்“ என்றும்
புலிபோல் “வேசம்போடு ராமாநு சம்“ என்றும்

வகையொளி படுத்திய ஈற்றடியாய் முடித்துக் கொடுத்தேன்.

நட்புறவுகளே... இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்பதால் உங்களுடன் பகிர்ந்தேன்.

அன்புடன்
அருணா செல்வம்.
03.05.2013

28 கருத்துகள்:

  1. பிச்சு உதறிட்டீங்க!எனக்கும் வெண்பாவுக்கும் ரொம்...ப தூரம்!இது போல் எழுத அடுத்த பிறவியில் வேணா முயலலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் குட்டன் ஐயா.

      வெண்பா கற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய கடினமான செயல் கிடையாது.
      நீங்கள் இந்தப் பிறவியிலேயே கற்றுக் கொண்டு
      எங்களுடன் சேர்ந்து பிச்சு உதறுங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  2. அருமை... அருமை... வகையொளி விளக்கமும் அருமை... பாராட்டுக்கள்...

    வெண்பாக்கள் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    திரு. சித்தன் ஐயா அவர்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. கவிஞர் பாரதிதாசன் ஐயாவினதும் உங்களினதும் கவித்திறமைக்கு ஒப்பீடே இல்லை தோழி!
    வாழ்த்துக்கள்!
    மிக மிக அருமை. உங்கள் பதிவையும் வெண்பாக்களையும் ரசித்தேன். அற்புதம். அமோகம்!

    இப்போதுதான் நானும் எனதும் குருவாக விளங்கும் கவிஞர் பாரதிதாசன் ஐயாவிடம் எழுத்துக்கள் பார்த்து படிக்க ஆரம்பித்த இவ்வேளையில் - அதுவும் எனக்கிருக்கும் நேரப்பற்றாக் குறையால் தொடக்கநிலைதான் உள்ளது - அந்நிலையில் இங்கு இப்படி எழுதுவது முறையல்ல இருப்பினும் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அவ்வகையாய்.... என்பதுபோல,
    எனக்குள்ளிருக்கும் ஆர்வம் உந்தியதால் சும்மா எழுதிப்பார்த்ததை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
    சிரித்தோ திட்டியோ விடாதீர்கள். வெளியில் பிரசுரிக்க வேண்டுமென்றில்லை தோழி... மிக்கநன்றி!

    காசேதான் வாழ்வில் கடவுளென்று சொல்லும்
    நீசர் வாழுகிறார் நிறைந்தே - இவ்வுலகில்
    வேசம் நீயும்போட்டு வித்தை காட்டாமல்பா
    சம்போடு ராமனு சம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புத் தோழி இளமதிக்கு வணக்கம்.

      உங்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
      தொடர்ந்து எழுதுங்கள்.

      ஆர்வம் அளித்த அழகிய முத்துக்கள்
      கோர்வையாய்ச் சேர்த்தாய் இளமதி! - கூர்மையாய்
      நேர்மை நிறைவுடன் நிற்கின்ற கற்சிலைபோல்
      சீர்மையுடன் வெண்பா செதுக்கு!

      தங்களின் வருகைக்கும் அழகிய கருத்துடன் கூடிய பாடலுக்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  4. எந்த தமிழறிவும் இல்லாத நானெல்லாம் இதற்கு பதிலளிப்பதா.... அது தமிழுக்கே களங்கம்.... அருமையான இரு வெண்பாக்களைப் படித்து ரசித்தேன் என்னால் முடிந்தது அதுதானே...வாழ்த்துக்கள் தோழி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புத் தோழி எழில்...

      “எந்தத் தமிழறிவும் இல்லாத“ என்ற வார்த்தையை, நீங்கள்
      ஒரு தமிழ்ப்பெண்ணாக இருந்துக் கொண்டு சொல்வதை
      நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உங்களின் தமிழறிவு உங்களின் பணிவான பதிலிலேயே தெரிகிறது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.







      நீக்கு
  5. முறையான இலக்கணம் படித்து முழுமையாக கருத்தை உணர்ந்து 'சம்போடு ராமநனு சம்' எழுதிவிட்டீங்கள்.அதுபோல் உங்களின் ஆசிரியரை மறக்காமல் அவர்களோடு தொடர்பில் உள்ளமை பாராட்டப் படவேண்டிய விஷயம்.தொடர்ந்து நல்ல கவி நாளும் பகிருங்கள்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் ஊக்குவிப்பிற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  6. எழில் சொன்ன மாதிரி எந்த தமிழறிவும் இல்லாத நானெல்லாம் இதற்கு பதிலளிப்பதா.... அது தமிழுக்கே களங்கம்...

    இந்த பதிவை படித்த பின் தமிழ் அறிஞர் ஏதோ ஒரு பதிவை எழுதி வெளியிட்டு இருக்கிறார் என்று எனக்கு தோன்றியது ஆனால் அதை கொள்ளும் தமிழ்அறிவு எனக்கு இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் “உண்மைகள்“.

      உண்மையைச் சொல்லுங்கள்....
      அசத்தல் பதிவுகளைத் தமிழில்
      எழுதி நாளொரு பொழுதும்
      பொழுதொரு வண்ணமுமாக மின்னுகிறீர்கள்....
      நீங்கள் போய் இப்படியெல்லாம் சொல்லலாமா...?

      தங்களின் வருகைக்கும் தன்னடக்கமான பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  7. அருணான்னா சும்மாவா.அசத்தீட்டீங்க.உங்க குருநாதரைப் போல நீங்களும் சட்டெனக் கவி பாடும ஆற்றல பெற்றிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். நானும் முயற்சி செய்திருக்கிறேன். அடிக்க வாராதீர்கள்

    இலையைப் போட்டுவிட்டு நிற்காதே சும்மா
    விலையிலா அன்போ டழைக்கவே வந்துநான்
    தெம்போ டமர்ந்தேன்; முதலில் துளிபாய
    சம்போடு ராமாநு சம்

    கணித மேதை ராமானுஜத்திற்கு உதவிய பேராசிரியர் ஹார்டி ஆங்கிலம் கலந்து ராமானுஜத்திடம் சொல்வதுபோல் ஒரு வெண்பா தீவிர தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.

    ஹார்டிநான் நம்புகிறேன் உன்னை; கணிதத்தில்
    ஹார்டென்று ஏதுமில்லை; உன்திறமை நம்பாதோர்
    'கம்'போட்டு மூடுவார் அவர்வாயை; இப்போதே
    'சம்'போடு ராமானு சம்

    ஹார்ட்-கடினம்
    கம்--GUM
    சம்-SUM-கணக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மூங்கில் காற்று.

      திரு. சித்தன் ஐயா அவர்களும், நான் பாடலைக் காட்டிவிட்டப் பிறகு அவர் கவிதையைச் சொன்னார். அது முழுமையாக ஞாபகம் இல்லை என்றாலும் கடைசி வரி “ஒருகைபா யாசம்போடு ராமாநு சம்“ என்று முடித்ததாகச் சொன்னார்.
      நீங்களும் அந்த வகையில் எழுதியுள்ளது சிறப்பு. கருத்துக்களும் அருமை. நன்றி. (ஒரு சிறு குறை... மோனை களில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தவறெனில் மன்னிக்கவும்.)
      தங்களின் வருகைக்கும் அழகிய கருத்துடன் கூடிய இரண்டு இன்னிசை வெண்பாவிற்கும் மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
    2. ஆலோசனைக்கு நன்றி அருணா! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இக்குறையை சரி செய்ய முயல்கிறேன். நான் யாப்பிலக்கணம் முழுமையாக அறிந்தவன் அல்ல. பாரதிதாசன் அவர்களின் காதல் ஆயிரம் வெண்பாக்களை சில முறை படித்தாலே நிறைய தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
      நன்றி

      நீக்கு

  8. பாராட்டுக்கள்....பராட்டுக்கள்..... பாராட்டுக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  9. உங்களது அருமையான அனுபவம் ஒன்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    எனக்கும் வெண்பாவைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால் நீங்கள் எழுதும் வெண்பாக்களை வாசிப்பது ஒரு அலாதியான அனுபவமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் தங்களின் கருத்துக்களைப்
      பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி கனகலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. அரிதாரம் பூசாமல்
    அழகாக் கவிதையிலே
    நவர சம்போடு ராமாநு சம் !
    நான் கேட்டு மகிழ்ந்திடவே

    போதுமா?.... :) அந்த ஐயாவிடம் சொல்லி
    இந்த அம்பாளடியாளுக்கும் ஒரு சாற்றுக் கவி
    புனைந்து வாருங்கள் தோழி அது போதும் எனக்கு :)
    வாழ்த்துக்கள் என் தோழியின் கவிதை வளம்
    மேலும் பெருகிட இங்கே ................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவரச நாயகி அம்பாள் அடியாள்!
      அவசர பாவும் அழகு! - இவரெழுதும்
      போற்றுக் கவியெல்லாம் நற்புகழ் பெற்றாலும்
      சாற்றுகவி கேட்பதேனோ? சாற்று!

      தங்களின் வருகைக்கும் அழகிய கவிதையுடன் கொடுத்தக் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. படிக்க படிக்க மனம் இனிக்கிறது சகோதரி...
    முதலில் அத்தகைய பெருந்தகைக்கு மாணவி என்ற உங்கள் நிலைக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இன்று மரபுக் கவிதைகள் எழுதுபவர்கள் வெகு சிலரே.
    அதில் உங்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
    ===

    ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்’
    என்ற தெய்வப் புலவரின் திருமொழிதான்
    நினைவுக்கு வருகிறது.
    அப்படி.. உங்களால் முடியும் என்று மனதிற்கொண்டு
    அதற்கான வினையை உங்களிடம் கொடுத்தார் ஆசிரியர்
    அதனை செவ்வனே முடித்திருக்கிறீர்கள்.
    ===
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மனம் நிறைந்த வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மகி அண்ணா.

      நீக்கு
  12. அட, அசத்தல் வெண்பா... உண்மையிலேயே நீங்கள் வெண்பா எழுதுவதில் வல்லவர்தானா என்று தானும் சோதித்தே வாழ்த்துரை வழங்க விழைந்திருக்கிறார் பாவலர்மணி சித்தன் ஐயா அவர்கள். ஐயாவுக்கு என் வந்தனம்.

    ஈற்றடி கொண்டு படைத்த இருவெண்பாக்களுமே அற்புதம். பாராட்டுகள் அருணாசெல்வம்.

    இங்கே உங்கள் ஊக்கத்தால் நானுமொன்று முயன்றிருக்கிறேன். சரிதானா என்று சொல்லுங்கள்.

    அன்பும் அதட்டலுமாய் எப்பாடு பட்டுமே
    வம்பாய் ழகரம் வரவழைக்கா நாக்கண்டு
    கம்பைக் கடாசிவிட்டு வந்தாரே கையில்வ
    சம்போடு ராமாநு சம்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி அக்கா.

      உங்களின் இன்னிசை வெண்பா அருமையோ... அருமை.
      கருத்து மிக மிக அருமை. வாழ்த்துக்கள். தொடர்ந்து கவி தாருங்கள்.
      என் உடல்நிலை சற்று சரியில்லாததால் வலைபக்கம் அதிகமாக வரமுடியவில்லை. உங்களின் வலையை நான் முயற்சித்து இருந்தால் தேடி கண்டுபிடித்து விட்டிருப்பேன். ஆனால் முயற்சிக்கவில்லை. மன்னிக்கவும்.
      (எதுகையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அன்பு, வம்பு)

      தங்களின் வருகைக்கும் அழகிய பாடலுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.


      நீக்கு
  13. கீதமஞ்சரி! மிக அருமை பொருள் நிறைந்த வெண்பா-நாக்கில் வசம்பு தடவ வேண்டும் என்பார்களே அது இதற்குத்தானா?

    பதிலளிநீக்கு
  14. தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

    பதிலளிநீக்கு