திங்கள், 3 ஜூன், 2013

பாம்பின் கால் பாம்பறியும்!! (நிமிடக்கதை)





   “அம்மா... அவர் இன்னைக்குச் சாய்ந்திர பஸ்சுலேயே கிளம்பனும்ன்னு சொல்லுறார்ம்மா.... தங்கிட்டு போங்கன்னு சொன்னதற்கு காலையிலேயே கடையைத் திறக்கனுமாம்.... சரிபடாது. இன்னைக்கே கிளம்பனும்ன்னு சொல்லுறார்ம்மா. என்னம்மா செய்யிறது?“ என்று தன் தாயைப் பார்த்துக் கவலையுடன் சொன்னாள் திவ்யா.
    துளசி பெருமூச்சு விட்டாள். திவ்யா திருமணமாகிப் போய் மூன்று மாதங்கள் தான் ஆகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன் திவ்யாவின் அப்பாவிற்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்துவிட... அவசரமாக வெளியுரிலிருந்த மகளை அழைத்தாள் துளசி. அவளுக்கு வேறு யாரையும் தெரியாது.
    ஆனால் சொன்னதும் மகளும் மருமகனும் ஓடி வந்து விட்டார்கள். அவருக்கு உடனடி அறுவை சிகிட்சை செய்த பிறகு, அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொன்ன பிறகு மருமகன் திவ்யாவை மட்டும் விட்டுவிட்டு ரெண்டு மூனு நாளில் வந்திடச் சொல்லிவிட்டுச் சென்றான்.
    ஆனால் திவ்யாவால் அவளின் தந்தையை இந்த நிலையில் விட்டுச்செல்ல விருப்பம் இல்லை. அதனால் தொலைபேசியில் தன் கணவனிடம் ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு தன் அப்பாவைக் கவனித்துக் கொண்டாள். அவர் இப்பொழுது சற்று தேறி இருந்தாலும் முழுமையாக பழையபடி இருக்க முடியவில்லை.
    துளசி, அவர் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வரும் வரையிலாவது தன் மகளைத் தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் கல்யாணம் செய்து கொடுத்து விட்ட பிறகு அதுவும் மூன்று மாத காலமே ஆகும் நேரத்தில் மகளைத் தன்னுடனே வைத்திருப்பதும் சரியில்லை என்று தெரிந்து அவளே தன் மகளைக் கணவன் வீட்டிற்குக் கிளம்பச் சொன்னாலும் திவ்யா தன் தந்தையை விட்டு போக மனமில்லாதவளாக இருந்தாள்.
    மூன்று வாரங்கள் ஓடிவிட்டது. மருத்துவமனையும் வீடுமாகத் தான் இரண்டு பேரும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதோ... அவள் கணவனே மருத்துவமனைக்கு வந்து தன் மாமனாரைப் பார்த்து விட்டு கையோடு தன் மனைவியையும் தன் வீட்டிற்கு அழைக்கிறான். அதை மகள் வந்து கவலையுடன் சொல்கிறாள்.
   என்ன செய்வது...? யோசித்தவள்... “திவ்யா... சாய்ந்திரம் தானே கிளம்புறீங்க...? அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயிட்டு அப்படியே வீட்டுக்குப் போயி அப்பாவுக்கு ஒரு மாத்து டிரெஸ் கொண்டு வா.“ என்றாள் தன் மகளிடம்.
    “டிரெஸ்சா.... காலையில தானே மாத்திவிட்டோம்.... இப்போ எதுக்கு...?“ கேள்வியுடன் அம்மாவைப் பார்க்க... “திவ்யா நான் சொல்லுறதைச் செய். சாய்ந்திரம் டிரெசை எடுத்து வந்து இங்க கொடுத்திட்டு நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க“ என்றாள் கொஞ்சம் அதட்டலாக.
    திவ்யாவும் சாவியை வாங்கிக் கொண்டு தன் கணவனுடன் கிளம்பிச் சென்றாள்.

    சாய்ந்திரம் இருவரும் முகம் மலர வந்தார்கள். திவ்யா அம்மாவிடம் சாவியையும் அப்பாவின் உடையையும் கொடுத்தாள். “சரிங்க மாப்பிள்ளை... கௌம்புறதுன்னா பொழுதோடவே கிளம்புங்க. என்ன.. திவ்யா என் கூட இருந்தா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்ன்னு தான்... பரவாயில்லை மாப்பிள்ளை. ரெண்டு பேரும் போய் வாங்க.“ என்றாள் துளசி முகத்தைக் கவலையுடன் வைத்துக்கொண்டு.
    “பரவாயில்லை அத்தை. மாமா வீட்டுக்கு வர்ற வரைக்கும் திவ்யா இங்க இருந்துட்டு வரட்டும். நான் கிளம்புறேன்“ என்று சொன்னவன் குறும்புடன் தன் மனைவியைப் பார்த்துக் கண்ணடித்து விட்டுக் கிளம்பிப் போனான்.
    திவ்யாவிற்கு தன் அம்மாவின் புத்திசாளித்தனம் அப்பொழுது தான் புரிந்தது. வெளிக்காட்ட வெட்கப் பட்டுக்கொண்டு தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள்.

அருணா செல்வம்.
04.06.2013



    

26 கருத்துகள்:

  1. என்ன தான் இருந்தாலும் அம்மா பொண்ணு பாசத்தைப் பிரிக்க முடியாதில்லையோ அதுதான் வந்த வினை .கிடைத்த சந்தர்ப்பத்தைக் கைவிடுவான் ஏன் நீங்களும் மாமியாரானால் புரியும் தோழி மருமகன எப்படி விரட்டுவது என்று :)))) சும்மா சும்மா :))) வாழ்த்துக்கள் தோழி மிகவும் ரசித்தேன் கதை இயல்பாய் இருந்தது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரசிக்கும்படியான பின்னோட்டம்...!!!

      (மருமகனை விரட்டிவிட்டு மகளை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவதாம்...? ஏதோ... சூழ்நிலைக்காக அம்மா இப்படி செய்திருக்கிறாள் தோழி)

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  2. தலைப்பும் கதையின் கருவும்
    சொல்லிச் சென்றவிதமும் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. சில விசயங்களைச் சொல்லிப் புரியவைப்பதில்லை நல்ல பெற்றோர்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஆண்களுக்கு இந்த சூட்சமம் எல்லாம் வயதானாலும்
      புரியாது என்று என் அம்மா சொல்லக்
      கேட்டிருக்கிறேன்.

      வருகைக்கு மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  5. அனுபவமும் ஆசைமும் மகளை சந்தோசப்படுத்தும் கூடவே தங்கி நிற்கும் .அருமையானக் கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  6. ஹிஹி... ரெண்டாவது தடவை படிச்சப்பறம்தான் எனக்குப் புரிந்தது....

    ஒருவேளை நானும் உங்களுடைய தோழியரைப் போல தத்தியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சே...சே... அப்படியெல்லாம் நீங்கள் இல்லை.
      அதைவிட அதிகம் என்று நினைக்கிறேன்.))

      சில கதைகளில் நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல்
      விட்டுவிட்டால் தான் அவரவர்கள் கற்பனைக்கு எட்டியதை நினைத்து மகிழ்கிறார்கள். இந்தக் கதை அந்த ரகம்.

      நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  7. பல சூட்சமங்கள் அறிந்தவள் தாய் நல்ல கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  8. //திவ்யாவிற்கு தன் அம்மாவின் புத்திசாளித்தனம் அப்பொழுது தான் புரிந்தது.//

    இங்கிதம் தெரிந்த தாய். ;) நல்ல படைப்பு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கிதம் என்பதை விட அனுபவம் என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி கொபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  9. ஆண்கள் பெண்களுக்கு என்றும் அடிமை! பொண்ணு tube லைட் போல!
    புதுமொழி...குட்டி எட்டடி பாய்ந்தால் தாய் பதினாறடி பாயும்.


    அம்மா, "மாத்து டிரெஷ்" கொண்டு வா என்று இரண்டு வார்த்தைகளையும் பிரித்து....அழுத்தமா..சொன்னதைக் கூட புரிந்து கொள்ளாத மகள் என்று கதையை முடித்திருக்கலாம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களெல்லாம் இந்த மாதிரி முடிவு சொல்வீர்கள்
      என்று தான் நான் எழுதவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  10. ஒகோ!பேஷ்,பேஷ்!
    கெட்டிக்கார மாமியார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  11. இள மனசை புரிந்து கொண்ட நல்ல அம்மா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் யாரும் புரிந்துகொள்ளவில்லை...
      என்று நினைக்கிறேன் தோழி.
      நன்றி.

      நீக்கு
  12. நல்ல சூட்சுமம்.....

    முதியவர் அல்லவா.... அதனால் தான் நிலைமையை சமாளித்திருக்கிறார்....

    பதிலளிநீக்கு