சனி, 27 ஏப்ரல், 2013

கலங்காதே கண்மணியே !!






கலங்காதே கண்மணியே!
காதலென்ற போதையினால்
காலமெல்லாம் அழுதழுது
கண்டெடுத்தப் பயனென்ன?

நன்றிகெட்ட உலகத்தில்
நயவஞ்ச நரிகளினால்
ஏமாற்றம் காண்பதென்ன
இன்றுமட்டும் நடப்பதுவா?

நட்பென்று நலம்பேசி
நாளெல்லாம் நினைக்கவைத்து
நட்பில்லை காதலென்று
நன்னெஞ்சில் விதைவிதைப்பார்!

காதல்மொழி பேசியுடன்
கனவுகாண வைத்துவிட்டு
காதலிக்கத் துவங்கியதும்
கத்தரித்தே ஓடிடுவார்!

உடல்காயம் என்றிருந்தால்
உடனுடனே ஆறிவிடும்!
மனக்காயம் காய்வதற்கு
மருந்தின்றி அலைகின்றாய்!

கள்வடியும் பூவானல்
காய்காய்த்து விதைகொடுக்கும்!
கற்பென்றே நினைப்பதனால்
காலமெல்லாம் துளைத்தெடுக்கும்!

நல்லவனாய் இருந்திருந்தால்
நன்னெஞ்சில் நிறைத்துவிடு!
நம்பிக்கைத் துரோகத்தை
நஞ்சென்றே எறிந்துவிடு!

காதலது வெறுங்கவிதை!
காவியத்தில் அழகுண்டு!
கட்டுடலாய் உள்ளவரைக்
கனிபோலே இனிப்பதுண்டு!

நேரான வாழ்வினிலே
நெடுதூரம் தான்நடக்கக்
கடந்ததையே நினைத்தேங்கி
கலங்காதே கண்மணியே!

(காதலென்ற பெயரில் ஏமார்ந்த பெண்களுக்கு
இந்தக் கவிதை சமர்ப்பணம்)
அருணா செல்வம்.
27.04.2013

24 கருத்துகள்:

  1. //////////
    உடல்காயம் என்றிருந்தால்
    உடனுடனே ஆறிவிடும்!
    மனக்காயம் காய்வதற்கு
    மருந்தின்றி அலைகின்றாய்!/////////


    இன்றைக்கு அதிகம் பெண்கள் இந்த மனகாயத்தோடே வாழ்கின்றனர்...

    இந்த கவிதை அவர்களுக்கு ஆறுதல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவிதை வீதி செளந்தர்.

      நீக்கு
  2. \\ கள்வடியும் பூவானல்
    காய்காய்த்து விதைகொடுக்கும்!
    கற்பென்றே நினைப்பதனால்
    காலமெல்லாம் துளைத்தெடுக்கும்!//

    நல்ல அறிவுரை.

    கவிதை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  3. அருமை!... அருமை அற்புதமான மருந்து
    ஒவ்வொரு வரிகளிலும் எதார்த்தமான சிந்தனை !...
    மிக்க நன்றி தோழி அருமையான கவிதை வரிகள்
    இதற்க்கு .மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. \\நேரான வாழ்வினிலே
    நெடுதூரம் தான்நடக்கக்
    கடந்ததையே நினைத்தேங்கி
    கலங்காதே கண்மணியே!//உண்மைதான் நன்மணியே

    பதிலளிநீக்கு
  5. மனக்காயத்திற்கும் மருந்திட்டாலும் அது வடுவாகிவிடுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஐயா.
      எந்த ஏமாற்றம் என்றாலும்
      அதை அழிக்க முற்படும் போது
      இன்னும் அதிக வலியை ஏற்படுத்தும்....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. அருமை. மனக் காயத்தோடு பல பெண்கள் இன்றைய நாட்களில்.. அவர்களுக்கு நல்ல வழி சொல்லும் கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  7. காதல் மயக்கத்தில் இதுவெல்லாம் புரிவதில்லை! ஆனாலும் நல்ல ஆலோசனை! அருமையான படைப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  8. கலங்காதே கண்மணியே என்று துவங்கி அதே வரிகளின் ஆறுதலோடு முடித்த கவிதையின் கருப்பொருளும் கவிவரிகளும் மனந்தொட்டன. காதல் நினைவில் தவித்தழும் பெண்ணின் மனவோட்டத்தை அறிந்து அவளைத் தேற்றும் அற்புத வரிகள். பாராட்டுகள் அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  9. நல்லவனாய் இருந்திருந்தால்
    நன்னெஞ்சில் நிறைத்துவிடு!
    நம்பிக்கைத் துரோகத்தை
    நஞ்சென்றே எறிந்துவிடு!//



    இது அழகு அருமை நன்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  10. இன்றைய நிலைமை... உண்மை வரிகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  11. அழகான, இன்றைய கவிதை...

    உண்மை வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி இரவின் புன்னகை.

      நீக்கு
  12. அழகான அறிவுரையாய் ஓர் கவிதை... ! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. "நேரான வாழ்வினிலே நெடும் தூரம் "... நிமிர்ந்து நடந்திடு கண்மணி.

    பதிலளிநீக்கு
  14. சமீபத்தில் செய்தித்தாளில் படித்த ஜீவா நாயர் தற்கொலை நினைவுக்கு வருகிறது. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே.

      நீக்கு