புதன், 9 பிப்ரவரி, 2022

காதல் என்பது…… !

 

.

காதல் என்பது காமத்தில் முடிவது
ஓதும் பொருளை உணர்ந்தால் தெரிந்திடும்!
சாதல் போன்று சமமாய் அனைவரும்
பேதம் இன்றிப் பிறப்பினில் வருவது!
ஏதோ இன்பம் எழிலைக் கூட்டும்
தீதோ சரியோ திரும்பி ராதது!
இளமை ஊஞ்சலை இயற்கை ஆட்டிட
வளமை நெஞ்சில் வலிமை கொடுக்கும்!
சின்னப் பேச்சும் சிலிர்ப்பைக் கொடுக்கும்
கன்னம் கனிந்திட கவியில் உழலும்!
வண்டு தேனை வகையுடன் உண்ண
மண்டு மலரோ மயங்கியே இருக்கும்!
இந்த நாடகம் இணையும் வரையில்
அந்த உணர்வுக ளடங்கி முடிந்ததும்
கண்டதற் கெல்லாம் கடிதினில் சண்டையே!
சிண்டு முடிந்திடும் சின்னத் தவறும்!
உணவின் சுவையே உண்ட பிறகு
மணத்தை விலக்கி மறுத்தல் போலே
பதுங்க நினைத்துப் பாச மற்றே
ஒதுங்கி நின்று ஓதும் வேதம்!
இந்த உண்மையை இளையோர் மறுப்பர்!
பிந்தி அறிவார் பெரியோர் மொழியே!
.
பாவலர் அருணா செல்வம்
09.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக