செவ்வாய், 13 டிசம்பர், 2022

மகிழ்ந்தே பயில்வோம்!

 



(சந்த கலிவிருத்தம்)
.
உணவே மருந்தாய்! உழவே தொழிலாய்! 
உணர்வே கலையாய்! உடலே மலராய்!
குணமே உயர்வாய்! குவிந்தே தலைமேல்
பணமே இருந்தால் பயமே வருமே!

மலையாய் விரைந்தே மலிவாய் பொருளால்,
அலையாய் விழுமே அறியா தெதுமே!
நிலையாய் அமர்ந்தே நெடிதாய் வரைவே
கலையாய் எழுமே கவியாய் வருமே!

மனமே அதைநாம் மதியா திருந்தால்
கனமாய் அதுவே கடிதா கிடுமே!
கனவே எனநாம் கனிந்தே இருந்தால்
தினமே வருமே திறனோ டிடுமே!
 .
முதிரா வயதோ முளையாப் பயிராம்!
கதிராய் வளர்ந்தால் கடிதோ இலையாம்!
விதியால் நடந்தால் வியந்தே அறிவோம்!
மதியால் புரிந்தால் மகிழ்ந்தே பயில்வோம்!
.
பாவலர் அருணா செல்வம்
14.12.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக