வெள்ளி, 2 மே, 2014

தாய் மனசு!! (நிமிடக்கதை)




   தொலைக்காட்சி தொடர்களில் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அம்பிகா, நாடகம் ஓடிக்கொண்டிருக்க ஏதோ யோசனையுடன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
   இதைப்பார்த்த முகிலன் பெருமூச்சு விட்டான். போன வாரம் நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு அவன் தாய் அம்பிகா பழைய அம்பிகாவாக இல்லை. தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோமோ... என்று மனம் உறுத்தியது.
   அருகில் அமர்ந்திருந்த கருணாகரன், “அம்பிகா.... முகிலன் வந்துவிட்டான். எழுந்து போய் அவனுக்குச் சாப்பாடு போடு“ என்றார்.
   அம்பிகா எழுந்து போய் சாப்பாட்டைத் தட்டில் போட்டு மேசையின் மீது வைத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்பவும் வந்து சோபாவில் அமர்ந்து விட்டாள்.
   முகிலனுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டும்...? என்று கேட்டு கேட்டு உபசரிக்கும் அம்பிகாவாக இவள் இல்லை. மனது நோக, போட்ட சாப்பட்டில் பாதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்து விட்டான். முதலில் என்றால்... ஏன் சாப்பாட்டை வச்சிட்ட? இது பிடிக்கலையா? வேற ஏதாவது செய்யட்டுமா...?“ என்று கேட்டே நச்சரிப்பாள். ஆனால் இன்று அவள்பாட்டுக்கு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
   முகிலன் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தன் அறைக்குள் சென்று விட்டான்.

   “அம்பிகா... உனக்கு என்னாச்சி? ஏன் முகிலனிடம் சரியா பேச மாட்டேங்கற? அவன் உயிர் பிழைச்சி வாழுறதே பெரிய விசயம். அப்படி இருக்கும் போது நீ இப்படி இருக்கலாமா...?“ கருணாகரன் மெதுவாக மனைவியிடம் கேட்டார்.
   அவள் பதில் சொல்லவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் ஆறாக வழிந்தது. அதைக்கண்டதும் அவள் தலையைத் தன் தோளில் சாய்த்து, “ஏன்ம்மா அழற? நம்ம பையன் தான் பெரிய கண்டத்திலேர்ந்து தப்பிச்சி வந்திட்டான் இல்ல...? பிறகு என்ன? எதுவா இருந்தாலும் மனசுலேயே வச்சிக்காமல் சொல்லுமா....“ என்றார் மிருதுவாக.
   “ஏங்க.... நமக்கு இருக்கிறதே ஒரே பையன்னு நான் எவ்வளவு செல்லமா வளர்த்தேன். இருவத்து அஞ்சி வருஷமா நான் பாசத்தைக் கொட்டி வளர்த்தது உங்களுக்குத் தெரியாதா...? அப்படிப்பட்ட என்னோட பாசத்தைக் கூட மறந்துட்டு ஏதோ ஆறு மாசம் பழகின காதலுக்காகத் தற்கொலை பண்ணிக்க முடிவு பண்ணிட்டானே.... என்னை ஒரு நிமிஷம் நினைச்சானா...?  அதை நினைக்க நினைக்க என்னால தாங்க முடியலைங்க.....“ என்று குரல் தழுதழுக்க சொன்னாள்..
    “சரிம்மா... அதுக்காக என்ன செய்ய முடியும்? காதல் அவன் கண்ணை மறச்சிடுச்சி. அந்தப்பொண்ணு இவனைப் பிடிக்கலைன்னு சொன்னதுக்காக இவன் இப்படியா செய்ய துணிவான்...? இதுக்குத் தான் புள்ளைங்க மேல அதிகமா பாசம் வைக்கக்கூடாதுன்னு சொல்லுறது. எனக்குக் கூட தான் அவன் மேல வெறுப்பா இருக்குது. அதுக்காக என்ன செய்ய முடியும்? பெத்துட்டோம். கடமையேன்னு இருப்போம்“ என்றார் கருணாகரன் சற்று தளர்வாக.
   அவர் அப்படி சொன்னதும் அம்பிகா சட்டென்று அவரை முறைத்தாள். “என்னது... ஏதோ அவன் இப்படி செஞ்சிட்டானேன்னு மனசு உடைஞ்சி பேசினா.... உடனே நீங்க வாய்க்கு வந்ததைப் பேசுறதா...? நான் என்ன அவனை கடமைக்காகவா பெத்தேன்? இனிமே இந்த மாதிரி பேசுற வேலை வச்சிக்காதீங்க. வெறுப்பா இருக்குதாமில்ல....? இருக்கும். இருக்கும். அவன் எவ்வளவு கவலைப்பட்டு இந்த முடிவுக்கு வந்தானோ.... அதை நினைக்காம.... பாவம் புள்ள. இப்பவெல்லாம் ஒழுங்கா சாப்பிடறது கூட இல்லை....“ என்று சொல்லியபடியே பாலைக் கலக்கிக்கொண்டு மகனின் அறையை நோக்கி நடந்தாள்.

   தன் குழந்தையை மற்றவர் கண்டிப்பதற்கு முன் கை ஓங்கி விடுவது தானே தாயின் மனசு.  இதில் என்ன வியப்பு இருக்கிறது என்று எண்ணியபடி தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தார் கருணாகரன்.

அருணா செல்வம்.
02.05.2014

25 கருத்துகள்:

  1. பிரமாதம். தாய்மையின் அடுத்தடுத்த இரண்டு உணர்ச்சிகள். அம்பிகா முதலில் சொல்லும் கருத்து நூற்றுக்கு நூறு சரி.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. தாய் மனதை அழகாகப் பதிவு செய்தீர்கள்.

    எல்லாக் குற்றங்களையும் மன்னிக்கும் ஒரே நீதிமன்றம் தாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கருத்து!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. தாய் மனசை எளிதில் புரிந்துகொள்ள முடியாததுதான்! ஆனால் நல்லதுதான் செய்யும்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தளிர்.

      நீக்கு
  6. பிள்ளைகளை மன்னிப்பதிலும் தாய் தான் உயர்ந்தவர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  8. குழந்தைகளை மிரட்ட ஒரு சின்ன குச்சியை வச்சிருந்தா கூட அடுத்த கணம் அதை ஒளித்து வைத்து விடுவது தாயின் மனசுதான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதை ஒடித்துவிடுவேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மனோ சார்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி அண்ணா.

      நீக்கு
  10. கடைசி பத்தி நச்! தாய்மனத்தின் இயல்பை இதைவிடவும் எளிதாய் விளக்கிவிட இயலாது. நல்ல கதை. பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதமஞ்சரி அக்கா.

      உங்களின் கருத்து மேலும் என்னை எழுதத் துர்ண்டுகிறது.
      வரவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. தாய் மனசு தங்கமென்றெல்லோ சொல்லியிருக்கிறாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் கருத்தும் உண்மைதான் சிட்டு.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆத்மா.

      நீக்கு
  12. அருமையான சிறுகதை! உணர்வை உரக்க உரைத்த பாங்கு மிகக் கவர்ந்தது. பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கணேஷ் ஐயா.

      நீக்கு
  13. தாய் மனது சொன்ன சிறப்பான சிறுகதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு