வியாழன், 16 டிசம்பர், 2021

வஞ்சி என்செய்வாள் ?

 

.
அன்பு நிறைந்த அன்னை உருவாக
      அன்று கண்டாள் அருமை மனத்தினிலே !
இன்பச் சொற்கள் இணைந்து குழைவாக
       என்றும் கேட்கும் என்றே நினைத்திருந்தாள்!
துன்பம் துயரம் எனுஞ்சொல் அவரிடையே
       துளியும் தொடுமா  என்றும் இறுமாந்தாள் !
வன்மைக் காலம் வந்தத் தடமில்லை !
       வகையாய் பிரிந்தார் ! வஞ்சி என்செய்வாள் ?
.
ஏக்கம் கொண்ட மனத்தை உள்மறைத்தே
       ஏதும் அறியா தவளாய் சிரித்திருப்பாள் !
தூக்கங் கெட்டுத் துவளும் உடல்வெளுத்தும்
       துணிவைப் போர்த்தி துள்ளி வலம்வருவாள் !
ஆக்கம் பொழியும் பண்ணில் பொருள்சேர்த்தே
      அமைதி யாகப் பாடி விழித்திருப்பாள் !
நோக்க மில்லாக் குருட்டு நெஞ்சுடையான்
       நூலில்  புழுவாய் புதைந்து மகிழ்ந்திருப்பான் !
.
தூது சொல்ல தோழி இல்லையென்று
       துணையாய்ப் பண்ணைத் தொடுத்துப் பறக்கவைப்பாள் !
ஏது மறியா தவன்போல் படித்தாலும்
       எழுத்த றிவற்ற மூடன் போலிருப்பான் !
ஓதும் பாடம் வேத மெனஒலிப்பான் !
       உய்யும் வாழ்வில் பேதம் காட்டிடுவான் !
மாது மயங்கி மாலை நினைத்தழுவாள்
      மயக்கும் கவியுள் அவனைப் பதிக்கவைத்தே !
.
(அரையடிக்கு மா + மா + மா + காய் என்ற சீரமைந்த எண்சீர் விருத்தம்)
.
பாவலர் அருணா செல்வம்
17.12.2021

2 கருத்துகள்:

  1. எழுத்தின் வண்ணத்தை மாற்றினால் ரசிப்பதற்கு எளிது...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தனபாலன் அண்ணா. வண்ணத்தை மாற்ற முடியவில்லை. அதனால் இப்பதிவை நீக்கலாம் என்று நினைக்கின்றேன்.
    அனைத்தப் பதிவுகளையும் படித்தி நீங்கள் கருத்திடுவது எனக்கு உர்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி,

    பதிலளிநீக்கு