வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

வெண்ணைப் புட்டு செய்முறை!



தேவையான பொருட்கள்

பச்சரிசி -  2 டம்ளர்
சர்க்கரை - 2 டம்ளர்
தேங்காய் - 1
முந்திரி பயிர் - கொஞ்சம்
ஏலக்காய் - 10

செய்முறை


அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.




தேங்காயைத் துறுவி வைத்துக்கொள்ள வேண்டும். ( சிலர் பாலாகவும் பிழிந்து கொள்வார்கள்) முந்திரியை உடைத்துக்கொள்ள வேண்டும். (சிலர் முந்திரிக்குப் பதில் கடலை பயிர் சேர்ப்பார்கள்) ஏலக்காயை நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.



அடுத்து அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எட்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். கொதித்ததும் உடைத்த முந்திரி பருப்புகளைக் கொட்டி பாதி வேக விடவும்.



பிறகு தீயை மிகவும் சின்னதாக்கி.... அரைத்த மாவை மெதுவாகவும் அதே சமயம் தண்ணீரைக் கிளறிக்கொண்டே ஊற்ற வேண்டும். சீக்கிரத்தில் அடி பிடித்துவிடும்.  அதனால் சற்று வேகமாகக் கிளறிக்கொண்டே மாவை ஊற்ற வேண்டும்.



மாவை அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே நன்றாக வேகவிடவேண்டும்.


வெந்தமாவில் சர்க்கரை, நசுக்கிய ஏலக்காய் சேர்த்து கிளறி... மேலும்



துறுவிய தேங்காய் சேர்த்து கிளறி நன்கு வேகவிடவேண்டும். 



 மாவு வாசனை போனதும் மாவு நன்கு கெட்டிப் பட்டு வந்ததும் இறக்கி, சின்னச் சின்ன கிண்ணங்களில் ஊற்றி ஆற விட வேண்டும்.



வெண்ணைப் புட்டு

சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்
12.02.2016

வியாழன், 11 பிப்ரவரி, 2016

மாற்றான் தொட்டத்து மரிக்கொழுந்து ! – 3

   



    முரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா !‘ என்று தோன்றியது.
    ஆறடிக்குக் குறையாத உயரமும், அதற்கேற்ற மாதிரி உடலமைப்பும், தூக்கி வாரின முடியும், எதையும் உன்னிப்பாய்ப் பார்க்கும் கண்களும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லும் முகமும் அமைந்த முரளிதரனைப் பார்த்த பொழுது, பண்ணையார் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்ததற்கு மாறான உருவ அமைப்பு இருந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
    இவன் இப்படி இருக்க திலகவதி… ?
    இப்படி ஓர் அழகா… ! இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே ! எங்கே ? சற்று நேரத்திற்கு பிறகு ஞாபகத்தில் வந்தது, தன் வீட்டில் தேதி கிழிக்கும் காலண்டரில் உள்ள லட்சுமியின் முகம். ஆமாம்… அதில் இருக்கிற தெய்வீக முக அமைப்பு அப்படியே…
    அவளுடைய முகத்தில் பிரகாசிக்கும் ஒளி ? அவள் இரு பக்க மூக்கிலும் அணிந்திருக்கும் மூன்று மூன்று வைரக்கல் பதித்த மூக்குத்தியினால் வந்த ஒளியா… ?
    இல்லைஎன்றால் தானாகவே முகம் இப்படி ஜொலிக்கிறதா… ? என்னவென்றே சொல்ல முடியாத நினைக்க முடியாத ஓர் உன்னத அமைப்பு அவளிடம் இருந்தது.
    இந்த அழகு, அவளைப் பார்த்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றும் காந்தர்வ அழகு கிடையாது. அவளைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் உன்னதமான தெய்வீக அழகு !
    இந்த அழகைக் கண்டு மறிக்கொழுந்து மயங்கிவிட்டாலும் அவளுடைய அன்பைக் கண்டு, அவளுக்குப் பணிவிடை செய்வதே பெருமை என நினைக்க ஆரம்பித்தாள்.
   அன்புக்கு அடிபணிவது ஆனந்தமாயிற்றே!
   அப்படி ஓர் அழகும் குணமும் வாய்த்த ஒரு பெண்ணை இனி எப்போது பார்ப்போம்…. ?
    மரிக்கொழுந்தின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.
    ‘‘க்ரீச்…க்ரீச்…‘‘
    கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்.
    பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. பெரிய வீட்டின் கொள்ளைப்புரத்துக் கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்தான் அது. எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.
    பெரிய வீட்டின் அதாவது மூரளீதரன் வீட்டிற்கும் அவளுடைய குடிசைக்கும் இடையே ஒன்பது தென்னை மரம், ஆறு வாழை மரம், ஒரு சில பூஞ்செடிகள் தான் இருக்கும்.
    மரிக்கொழுந்து கல்யாணமாகி வந்த சில நாட்களில் சின்னய்யா தன்னுடைய வீட்டின் தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அதில்  வேலுவையும் மரிக்கொழுந்துவையும் குடித்தனம் வைத்தான்.
    குடிசையிலிருந்து பெரிய வீட்டின் தோட்டத்தைப் பார்த்தால் மரங்களுக்கும் வாழைகளுக்கும் நடுவில் அவ்வளவாக எதுவும் தெரியாது.
    இருந்தாலும் அங்கிருந்து வரும் சத்தமும் அடுப்பின் புகையையும் வைத்து எல்லோரும் எழுந்து விட்டார்கள் என்பதை யூகித்துக்கொண்டாள்.
    மரிக்கொழுந்து எழுந்து போய் பல்விளக்கி முகம் கழுவி தலைவாரி பின்னி தன் குடிசையில் இருந்த சின்ன கண்ணாடியை எடுத்து பார்த்துப் பொட்டு வைக்கும் போது சின்னம்மா திலகவதியின் ஞாபகம் வந்தது.

    ல்யாணமாகி வந்த மறுநாள் விடியகாலை…
    ‘‘ஏய் மரிக்கொழுந்து இன்னுமா தூங்குற… எழுந்திரு, சின்னம்மா இந்நேரம் எழுந்திருப்பாங்க. சீக்கிரம் எழுந்து போய் அவுங்க இன்னா வேல செய்ய சொல்றாங்களோ அத செய்யி ?‘‘
    வேலு அவளை உலுக்கி எழுப்பினான்.
    மரிக்கொழுந்து அவசர அவசரமாக எழுந்து சடையைத் தூக்கி கொண்டையாகப் போட்டுக்கொண்டு சேலையைச் சரிசெய்து கொண்டு ஓடினாள்.
    அதற்குள் திலகவதி எழுந்துவிட்டிருந்தாள். அவள் முன்னால் போய் நின்று ‘‘நா என்ன செய்யணும் சின்னம்மா… ?‘‘ என்று கேட்டாள்.
    அவள் இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு…
    ‘‘மரிக்கொழுந்து நீ போயி பல்லை வெளக்கி மொகத்த கழுவி பொட்டு இட்டுக்குனு, தலைவாரி பின்னிக்கினு, பொடவைய ஒழுங்கா கட்டிக்கினு வா. அப்புறம் சொல்லுறேன் நீ இன்னா வேல செய்யனுங்கிறத.‘‘
    மரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் அவள் சொன்னதைத் தட்டாமல், உடனே கொள்ளைப்புரம் நோக்கிப் போனாள்.
    போகும் போது தான் வேலைசெய்த வீட்டின் ஞாபகம் வந்தது.
    என்றாவது ஒருநாள் நேரமிருந்தால் தலைவாரி சடை பின்னி முகத்தில் பெளடர் பூசி பொட்டு வைத்துக்கொண்டால் போதும், அன்று முதலாளியின் மகளுக்குப் பொறுக்காது.
    ‘‘ஏண்டி காலையிலேயே ஒனக்கு என்ன மேக்கப் வேண்டி கெடக்குது. ஒரு காபிய ஒழுங்கா போடத் தெரியல, மேக்கப் போட்டுக்கினா… அதுவும் காலையில….‘‘
    பத்து மணியளவில் தூங்கி எழுந்து வந்தவள் இந்த வார்த்தையை சொல்லுவாள். அன்றைக்கு என்று பார்த்து இஸ்திரி மடிப்பு கலையாத துணிகளைக் கொண்டுவந்து போடுவாள்.
    ‘‘இதெல்லாம் ஒழுங்கா தொவைக்கல. நல்லா தொவச்சி அயன் பண்ணி வை‘‘
    இப்படி ஏதாவது ஒரு வேலையை வேண்டுமென்றே அதிகப் படுத்தி விடுவாள்.
    இதையெல்லாம் நினைத்துக்கொண்டே திலகவதி சொன்னது போல் செய்து முடித்து அவள் எதிரில் வந்து நின்றாள்.
    ‘‘இதோ பாரு மரிக்கொழுந்து… இன்னைக்கு மட்டுமில்லை. என்னைக்குமே நீ இதுமாதிரி தான் வரணும். புரியுதா… ?‘‘ என்றாள்.
    ‘‘சரிங்க சின்னம்மா‘‘
    ‘‘என்ன சொன்னே ?‘‘
    ‘‘சரிங்க சின்னம்மான்னுதாங்க…‘‘
    ‘‘ம்…. இதையும் மாத்தணும் நீ. ஒனக்கு நா சின்னம்மாவா… ?‘‘
    புரியாமல் விழித்தாள். மாமா அப்படித்தானே சொன்னது…. வேற என்னன்னு கூப்பிடணும் ? மனதுக்குள்ளேயே எண்ணிப் பார்த்தாள். கேட்க வாய் வரவில்லை. பேசாமல் அவளைப் பார்த்தாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து பயந்துட்டியா… ?‘‘
    இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள்.
    ‘‘பின்னே… ?‘‘
    ‘‘சின்னம்மான்னு இல்லையின்னா… வேற என்னன்னு கூப்பிடறது ?‘‘
    ‘‘ம்… அப்படி கேளு. எல்லாரும் என்னை சின்னம்மான்னு தான் கூப்பிடுறாங்க. ஆனா நீ அப்படி கூப்பிடாத. நீ இனிமே என்னை அக்கான்னு தான் கூப்பிடணும். என்ன சரியா… ?‘‘
    தலையாட்டினாள்.
    ‘‘வாயைத் தொறந்து சொல்லு‘‘
    ‘‘சரிக்கா !‘‘
    ‘‘ம்… போயி வாசல தெளிச்சி கோலம் போடு…‘‘  இப்படி அன்பாக வேலை வங்கினாள். அதுவும் முழுநேர வேலை கிடையாது.
    காலையில் வாசல் தெளித்துக் கோலம் போடணும். இரவு போட்ட பாத்திரங்களைக் கழுவி வைக்கணும், எப்போதாவது கடைக்குப் போய் காய்கறி வாங்கணும், வீட்டைப் பெருக்கணும். மாவை மசினில் அரைக்கணும், இவை எல்லாவற்றையும் விட நான்கு வயது சத்தியாவைக் கவனிக்கணும்.
    இதுதான் வேலை. இதெல்லாம் வேலை என்பது போல் தெரியாமல் ஒரு பொழுது போக்கு போல் இருந்தது மரிக்கொழுந்துவிற்கு.
    எவ்வளவு சந்தோசமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது !
    இத்தனை நாட்களிலும் மரிக்கொழுந்து திலகவதி சொன்னதை மறக்கவில்லை. அன்றாடும் முகம் கழுவி பொட்டு வைத்த பின்னரே பெரிய வீட்டிற்குள் நுழைவாள்.
    மரிக்கொழுந்துவிற்கு மனது வெம்பியது. சத்தம் போட்டு அழுதால் குழந்தைகள் எங்கே விழித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் கவலையை அப்படியே விழுங்கினாள். அடுத்தவர் நலனுக்காக அழுகையை அடக்குவதில் இருக்கும் வலி…. பெரிய பாத்திரத்தில் பொங்கி வர முடியாத பாலைப் போன்று உள்ளேயே கொதிப்பது. அதைவிட அழுது விடலாம்.
    கையில் இருந்த சாந்து குமிழில் ஒரு குச்சால் ஒரு புள்ளியளவு பொட்டு வைத்துக்கொண்டு குடிசையின் கதவை மெதுவாக சாத்திவிட்டு, பெரிய வீட்டின் கொள்ளைப் புரத்தை நோக்கி நடந்தாள்.
    ஏதோ வேலையாக இருந்த காமாட்சி அவளைக் கவனித்துவிட்டாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து… ? நீ எதுக்கு இங்க வந்த ?‘‘
    ‘‘ஏதாவது வேல இருந்தா செய்யலாம்ன்னு வந்தேன் ஆத்தா…‘‘
    ‘‘வேலையா ? அதெல்லாம் ஒன்னும் வேணாம். இங்க சொந்தக்காரங்க எல்லாம் இருக்கிறாங்க இல்ல ? அவங்க செஞ்சிக்குவாங்க. நீ போயி கொழந்தைகள கவனிச்சிக்கோ. அது போதும். போ‘‘
    அதிகாரம் நிறைந்த குரலில் சொன்னாள் காமாட்சி. அவளுடைய சொல்லுக்கு மறுப்பேது… ?
    ‘‘சரி ஆத்தா….‘‘ என்று சொல்லிவிட்டு திரும்பவும் வந்த வழியிலேயே நடந்தாள்.
    குடிசையின் அருகில் நெருங்கிய போது தான் குழந்தையின் அழுகை ஒலி காதில் விழுந்தது.
    அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.
    அவளுடைய குழந்தைதான் அழுதுகொண்டிருந்தது. படுக்கையை ஈரமாக்கி வைத்திருந்தான்.
    குழந்தையைத் தூக்கி படுக்கையைச் சரிபடுத்தி விட்டு அதனை பசியாற்றி விட்டு கிடத்தினாள்.
    பசி போனதும் தூங்காமல் நன்றாக விழித்துக்கொண்டு கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டிருந்தான்.
    கண்கள் இரண்டும் மொச்சைக் கொட்டைகள் போல் இருந்தது.
    அந்தக் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தாள். அவளுக்குச் சாதாரண குழந்தையின் கண்களாகத்தான் தெரிந்தது. திலகவதி சொன்னது போல எந்த ஒளியும் அதில் தெரியவில்லை.


(தொடரும்)

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழ்ப்பெண்!




இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

(சிந்து)
அருணா செல்வம் 
09.02.2016

புதன், 3 பிப்ரவரி, 2016

ஜவ்வரிசி உருண்டை!



தேவையான பொருட்கள்
---------------------------------------

ஜவ்வரிசி - 500 கிராம்
தேங்காய் - ஒன்று
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 8

செய்முறை
------------------


ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி அது மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும்.



தேங்காயைத் துறுவி ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு வதக்கி.... 



வதக்கிய தேங்காய்த் துறுவலுடன் சர்க்கரை, கொஞ்சமாக உப்பு,  நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 


இப்போது ஊறிய ஜவ்வரிசியைக் கொஞ்சம் எடுத்து உருண்டையாகப் பிடித்து, லேசாகத் தட்டி (படத்தில் காட்டியது போல ) செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து இன்னும் கொஞ்ச மாவால் மூடி....



இப்படி உண்டையாக செய்துக்கொள்ள வேண்டும்.
எல்லா மாவையும் இப்படி உருண்டை பிடித்து விட்டு...



இட்லி பாத்திரத்தில் இட்லி மாவு ஊற்றும் இடத்தில் ஒவ்வொரு உருண்டையாக வைத்து பாத்திரத்தைப் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் வேகவிட வேண்டும்.



 ஜவ்வரிசி வெந்ததும் கண்ணாடி போல பளபளப்பாகப் படத்தில் உள்ளது போல் இருக்கும்.


 சற்று ஆறியதும் இட்லி தட்டிலிருந்து எடுத்து விடலாம்.


ஜவ்வரிசி உருண்டை

இந்தச் சிற்றுண்டி உருண்டைப் பிடிக்கச் சற்று சிரமாக இருந்தாலும்  சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

நன்றியுடன்
அருணா செல்வம்

வியாழன், 28 ஜனவரி, 2016

கணவாய் மீன் வறுவல்!


கணவாய் மீன் வறுவல்

தேவையான பொருட்கள்

கணவாய் மீன்   - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
நெல் சீரகத் துர்ள் - 2 தே க
எண்ணை 
கடுகு உளுத்தம் பயிர்
கருவேப்பிள்ளை கொத்துமல்லி தழை.

(காரம், தொக்கு அதிகமாக வேண்டுமென்றால்  மேற்கொண்டு சேர்த்தக் கொள்ளங்கள்.)



முட்டை கணவா மீன்


நன்றாக ஆய்ந்து கழுவி எடுத்தக்கொள்ளுங்கள்.



ஒரு வாணலில் தலைகளை மட்டும் எடுத்து இரண்டாக வெட்டி (அப்படியே கூட போடலாம். எனக்கு பார்க்க பயமாக இருப்பதால் இப்படி இரண்டாக வெட்டிவிடுவேன்.... ) அதனுடன் கொஞ்சம் உப்பு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். 
      கனவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டிவிட வேண்டும். இப்படிக் கொட்டிவிடுவதால் கானவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விடும்.
      பிறகு இதைத் தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.


வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை வெட்டி.... பின்பு


வாணலியை அடுப்பிலேற்றி காய்ந்ததும் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பயிரு போட்டுத் தாளித்துப்.... பின்பு


வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி... பின்பு


தக்காளி, பூண்டு விழுது, கறிவேப்பிள்ளை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து....


நன்றாக வதக்கியப் பின்பு...


அதில் கனவாய் மீன், ஏற்கனவே வேகவைத்த கனவா மீன் தலை, மிளகாய்த்துாள், நெல் சீரகப்பொடி, சேர்த்து....


நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும். இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும்.


நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழையைக் கிள்ளி போட்டு இறக்கி விட வேண்டும்.


கணவாய் மீன் வறுவல் ரெடி!

இதுவே கணவாய் மீன் வறுவல் செய்முறை. இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.
(மற்றபடி நல்ல சுவையான சைடிஷ்)
         நான் ஏன் இவ்வளவு விளக்கமாகச் சொன்னேன் என்றால்...... எனக்கு யாரும் இவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. .....(

நட்புடன்
அருணா செல்வம்.

திங்கள், 25 ஜனவரி, 2016

பண்பு இல்லாதவனைப் பாராட்டினால்…..



    நல்ல பண்புகள் கொண்டவனை யாரும் எவ்வளவு உயர்வாகப் பேசியும் பாராட்டலாம். அவன் பாராட்டியவருக்கு எதுவும் தரவில்லை என்றாலும் பாராட்டி பேசியவருக்கு மனமகிழ்ச்சியாவது கிடைக்கும்.
    ஆனால் நல்ல பண்புகள் இல்லாத, அமையப்பெறாத ஒருவனை ஒருபோதும் உயர்வாகப் பாராட்டக்கூடாது. அப்படி உயர்வாக அவனைப் பாராட்டினாலும் அந்த பாராட்டுக்கு உரியவன் தான் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்து தான் இருக்கும்.
     அப்படித்தான் ஔவையார் ஒருநாள் செல்வந்தன் ஒருவனிடம் சென்று பரிசு பெறுவதற்காக அவனை உயர்த்திப் பாடிவிட்டு காத்திருந்தார். அந்தச் செல்வந்தனோ ஔவைக்குப் பரிசு எதுவும் தராமலேயே அனுப்பி விட்டான்.
    நொந்து போய் வந்த ஔவ்வையாரை மற்றொரு புலவர் பார்க்க நேர்ந்தது. ‘போயும் போயும் அவனிடமா பரிசு பெற போனீர்கள் ? போகட்டும்…. அவன் உங்களுக்குப் பரிசு ஏதும் தந்தானா… ?‘ என்று விசாரித்தார் அந்தப் புலவர்.
    ஔவையார் அதற்கு பதிலாகத் தந்த பாடல் தான் இது.

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்.
    காடேறித் திரிந்தவனை நாடா என்றேன்.
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்.
    போர்முகத்துக் கோழையைப் புலியே என்றேன்.
மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை.
    வழங்காத கையனையான் வள்ளல் என்றேன்.
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்.
    யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே !

என்று தன் நிலையை விளக்கிச் சொன்னார் ஔவையார்.
    ‘அந்த செல்வந்தனிடம் இல்லாதவைகளை நான் இருப்பனவாகச் சொன்னேன். இல்லாததை எல்லாம் நான் சொன்னதால், அவனும் எனக்கு எதுவும் இல்லை என்றான் போலும். ஆகவே தான் என் குற்றத்தை உணர்ந்த நானும் எதுவும் பேறாமல் போகிறேன்‘ என்றார் ஔவையார்.

பாடலின் பொருள் -  கல்வி கற்றாதவனைக் கல்விமான் என்றேன். காட்டில் வாழ்பவனை நாட்டு மனிதன் என்றேன். பொல்லாதவனை நான் நல்லவன் என்றேன். போரைக் கண்டு அஞ்சும் கொழையைப் புலி என்றேன். மெலிந்த தோள்களை மற்போர் செய்யும் வலிமையானத் தோள் என்றேன். அடுத்தவருக்குக் கொடுத்து உதவாதவனை வள்ளல் என்றேன். இல்லாததைச் சொன்ன எனக்கு, அவனும் இல்லை என்றான். தகாதவனைப் பாராட்டிய குற்றத்திற்காக நானும் எதையும் பெறாமல் போகிறேன்.

அதனால்

    பாராட்டத் தகுதி அற்றவனைப் பாராட்டுவதும் குற்றம்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

எங்களுக்கும் காலம் வரும் !




நட்புறவுகளுக்கு வணக்கம்.
     போன ஞாயிறு அன்று எங்கள் ஊரில் தமிழர்த் திருநாள் தைப்பொங்கல் விழாவைச் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினோம்.
     எப்போதும் போல அந்த விழாவில் பாட பொங்கல் பாடல் கேட்டார்கள். உடன், பாச மலர் படத்தில் வரும் ’எங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் வாழ்வு வரும்‘ என்ற பாடலைப் பொங்கலுக்கா மாற்றி எழுதிக் கொடுத்தால் அனைவரும் சேர்ந்து பாட ஏதுவாக இருக்கும் என்றார்கள்.
    நானும் அதன்படி மாற்றி எழுதிக் கொடுத்தேன். அனைவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தார்கள். நீங்களும் பாடிப்பாருங்கள் தோழ தோழியர்களே !


பொங்கல் பாடல் !  2016

மங்கலமாய்ப் பொங்கல் வரும்
பொங்கல் வந்தால் இன்பம் வரும்
இன்பம் வந்தால் அனைவருடன் சேர்ந்திருப்போமே !

துன்பம் துன்பம் என்றே நலிந்திருந்தோம் !
மலரும் இன்பம் என்றே காத்திருந்தோம் ! - 2
துன்பமெல்லாம் வடிந்து விடும்
வடிந்தவுடன் மனம் மகிழும்
மனம் மகிழ்ந்தால் ஒன்று கூடி
தினம் மகிழ்வோமே !                     (மங்கலமாய்)

அன்பும் நட்பும் சேர அகம் மகிழும் !
ஒன்றாய்ச் சேர்ந்தே என்றும் நாம் வளர்ப்போம் !
இனிக்கின்ற பொங்கலைப் போல்
வாழ்வினிமை நாம் பெறுவோம்
கூடி நன்றாய்ச் சேர்ந்திருந்து வாழ்ந்திருப்போமே !   (மங்கலமாய்)

நட்பில் ஒரு கலங்கமில்லை !
நாளும் அதில் தீமையில்லை !
கள்ளமில்லா வாழ்வினிலே தோல்வியுமில்லை ! – 2  (மங்கலமாய்)

அன்புடன் 
அருணா செல்வம்.

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல் வாழ்த்து !



அன்பு விளக்கில் அகமிருக்க,
    அனைத்துச் சொந்தம் சேர்ந்திருக்க,
இன்பம் எல்லாம் நிலைத்திருக்க,
    ஏற்றம் கூடி வலுத்திருக்க,
நன்மை மட்டும் சூழ்ந்திருக்க,
    நாளும் எண்ணம் உயர்ந்திருக்க
என்றும் கிடைக்க வழிசெய்வாள்
    இன்று பிறக்கும் தைமகளே !


நட்புறவுகள் அனைவருக்கும் 
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் 
அருணா செல்வம்.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாக்கடை நீராய்ப் போனதடி!

கொட்டோ  கொட்டுனு
கொட்டுதடி  வானம்! - மனம்
தொட்டோ  விட்டுடுன்னு
முட்டுதடி  பாவம்!

சின்னச்  சின்னத்  துளியெல்லாம்
சேர்ந்து  தேங்கி  போனதடி!
சின்ன  எறும்பாய்ச் சேர்த்ததெல்லாம்
சேர்ந்தே பாழாய்ப் போனதடி!

கடனோ உடனே வாங்கிநாங்கள்
கஷ்டப்  பட்டு  வைத்தததைத்
தடமே  எதுவும்  காட்டாமல்
இஷ்டம் போல  போனதடி!

பயிர்கள்  செழிக்க  மழைவேண்ட
பன்னீர்ப்  போலத்  தெளிக்காமல்
உயிர்கள்  அலற  வைத்துவிட்டு
உதவா வண்ணம்  போகுதடி!

அளவாய்க்  கிடைத்தால்  அமிர்தம்தான்!
அளவோ  மிஞ்ச  விஷமாகி
வளமாய்  இருந்த  மக்களையும்
வாழ்வைச்  சிதைத்து  விட்டதடி!

தாகம்  எடுத்தால்  உதவுவதே
தண்ணீர்  கொண்ட  பயனாகும்!
சாகும்  தருவில்  உதவாத
சாக்கடை  நீராய்ப்  போனதடி!!


கவிஞர்  அருணா  செல்வம்
05.11.2015 

செவ்வாய், 1 டிசம்பர், 2015

மணமகள் மறுவீடு அழைப்பு பாடல்!


 


புத்தம்  புதிய  புதுமலரே!
புதுத்தாலி   அணிந்த  மணமகளே!
நித்தம் இன்பம்  பெருகிடவே
நெஞ்சம்  நிறைந்து  வாழ்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே!  - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                            (புத்தம் புதிய )

அம்மி  மிதித்த  அருந்ததியே
அன்பால் மலர்ந்த  நறும்பூவே!
கம்பர்  பாடிய  நாயகியே
காதல்  நிறைந்து  வாழ்ந்திடவே 
வலது  காலை  வைத்து  வருகவே! - நல் 
வாழ்வு  மலர  வாழ்கவே!                          (புத்தம் புதிய )

தேடி  உன்னை  மணந்தவனே
தெய்வம்  தந்த  துணையவனே!
கூடி  இன்பம்  களித்திடவே
குலமும்  தழைத்துப் பெருகிடவே
வலது காலை  வைத்து வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                        (புத்தம் புதிய )

பிறந்த  வீடு  மகிழ்ந்தடவே
புகுந்த  வீடு  மதித்திடவே
சிறந்த  பெருமை  காத்திடவே 
செல்வம்  எல்லாம்  சேர்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர வாழ்கவே!                         (புத்தம்  புதிய ) 

அத்தை  மாமன்  மனம்நிறைய
அன்பு  கணவன்  அகம்மகிழ
அங்கே  வாழ்ந்த லட்சுமியும்
ஆசை பொங்கி  உனைஅழைக்க
வலது  காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!!                             (புத்தம் புதிய) 


கவிஞர்  அருணா செல்வம்
19.10.2015