செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழ்ப்பெண்!




இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

(சிந்து)
அருணா செல்வம் 
09.02.2016

3 கருத்துகள்: