வியாழன், 18 பிப்ரவரி, 2016

இவளும் அம்மா தான்! (நிமிடக்கதை)



    கதவைத் தட்டியதும் உடனே திறந்த ரேவதியைப் பார்த்த குமரனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
    இத்தனை நாள் வேலை முடித்துவிட்டு அசதியாக வந்து பலமுறை கதவைத் தட்டிய பிறகே மெதுவாக வந்து கதவைத் திறக்கும் ரேவதி, இன்று ஒருமுறை கதவைத் தட்டியவுடன் ஓடிவந்து திறந்துவிட்டாளே....
   குமரன் கையிலிருந்த மாலையைப் பார்த்ததும் கற்றுக் கவலையாக இன்றோடு உங்களுக்கு வேலை முடிந்துவிட்டது இல்லையா.... இனிமேல் வீட்டில் என்ன செய்யப் போறீங்களோ... பாவம் தான் நீங்கள்...‘‘ என்று வார்த்தையிலும் கவலை தோய்த்துச் சொல்லிவிட்டு, மாலையை வாங்கிக்கொண்டு போய் சாமி முன் வைத்து மனத்திற்குள் வேண்டிவிட்டு வந்தாள்.
    ‘‘சூடா காபி குடிக்கிறீங்களா...?‘‘ கேட்டாள்.
    இவ்வளவு தணிவாக எல்லாம் அவள் கேட்டது இல்லை. அதிலும் இந்தப் பொழுது சாய்ந்த நேரத்தில் கண்கள் தொலைக்காட்சியை விட்டு அகலாது.
   இன்றும் தொலைகாட்சியில் நாடகம் ஓடிக்கொண்டு இருந்தாலும் அவளின் மனம் அதில் லயிக்கவில்லை என்பது அவள் நடந்துக்கொண்ட விதத்திலேயே புரிந்தது.
   ‘‘வேண்டாம் ரேவதி, வழியனுப்பு விழாவில் டீ குடித்துவிட்டேன். கொஞ்சம் பொறுத்து சாப்பாடு போடு‘‘ என்றான் குமரன்.
   ‘‘சரிங்க நீங்கபோய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க....‘‘ கடிகாரத்தைப் பார்த்தபடியே சொன்னாள்.
    இந்த வார்த்தையைக் கேட்டதும் குமரனுக்கு அவன் அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மா எப்பவுமே இப்படித்தான். வேலைவிட்டு இவன் வரும் வரையில் காத்திருப்பாள். வந்ததும், சாப்பிட்டியா, ஏதாவது சாப்பிடுகிறாயா?, எடுத்துக்கொண்டு வரட்டுமா? என்ற இதிலொன்று தான் அவளின் முதல் வார்த்தையாக இருக்கும். அது முடிந்ததும் போய் கொஞ்சம் ஓய்வெடு‘‘ என்பாள்.
    இந்த சுகமெல்லாம் அம்மாவோடு போய்விட்டது.
    ரேவதியும் துவக்கத்தில் வேலைக்குச் சென்றவள் தான். குழந்தை குரு பிறந்ததும் வேலையை விட்டுவிட்டாள். அதன் பிறகும் ரேவதி அம்மாவைப் போல் இவனை இப்படி கவனித்தது இல்லை.
    ‘‘இவ்வளவு நேரமாகக் கதவைத் தட்டுகிறேனே... கொஞ்சம் சீக்கிரம் வந்து திறந்தால் என்ன?‘‘ என்று கேட்டால்.... ‘‘முட்டி வலிக்கிறது. உடனே எழுந்து ஓடிவர முடியாது‘‘ என்றாள்.
    ‘‘தலைவலிக்கிறது. கொஞ்சம் சூடா காப்பி போட்டு தா...‘‘ என்றால், ‘‘சீரியலில் முக்கியமான இடம். நீங்களே போட்டுக்கோங்க‘‘ என்பாள்.
    சற்று நேரம்கழித்து வந்தால்.... ‘‘சாப்பாடு டேபிளில் வச்சிருக்கேன். நீங்களே போட்டு சாப்பிடுங்க‘‘ என்பாள். இதெல்லாமே தொடக்கத்திலேயே... பிறகு இதுவே பழகிவிட்டது. இப்போது அவனாக எதுவும் கேட்பதில்லை.
   ஆனால் இன்று.... ரேவதியின் செய்கைகள் அம்மாவை ஞாபகப் படுத்தவும்.... அந்த நினைவிலேயே நேரம் ஓடியது தெரியவில்லை. பசித்தது. எழுந்து வந்து டேபிளைப் பார்த்தான். எதுவுமில்லை.
   ரேவதி ஏதோ யோசனையில் ஷாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டு இருந்தாள். முகம் சற்று வாடி இருந்தது.
   என்ன ஆச்சு இவளுக்கு...? நாம் ரிட்டையர்ட் வாங்கியதால் கவலையாக இருக்கிறாளா...?
   ‘‘ரேவதி....‘‘‘ கூப்பிட்டான்.
   இரண்டாவது முறை கூப்பிட ‘‘என்ன?‘‘ என்றாள்.
  ‘‘ஏன் ஒரு மாதிரியா இருக்கிற ? என்ன யோசனை ?‘‘ என்று கேட்டான்.
‘‘ப்ச்சி… ஒன்றுமில்லை‘‘ என்றாள்.
‘‘சரி. சாப்பாடு செய்தியா… ?‘‘
‘‘ஓ செஞ்சேனே…. அடடா…. நம்ம குருவோட யோசனையில சாப்பாட கொண்டுவந்து டேபிலில் வைக்க மறந்துட்டேன். நீங்களே கிச்சன்ல போய் போட்டுக்கோங்க….‘‘
   ‘‘ஏன் நம்ம குருவுக்கு என்ன ?‘‘ சற்று அவசரமாக கேட்டான் குமரன்.
   ‘‘குரு…. இன்னைக்குத் தான் முதன்முதலா வேலைக்குப் போய் இருக்கிறான். வீட்டில் இருந்தால் வேலாவேலைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுத்துடுவேன். வேலைக்கு சாப்பாடு கட்டி கொடுத்டதேன் தான். அது ஆறி போய்யிருக்கும். புள்ள சாப்பிட்டானோ இல்லையோன்னு தெரியல…‘‘ அவள் கவலையோடு சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கதவு தட்டும் ஓசை கேட்டது. ஓடி போய் கதவைத் திறந்தாள்.
   குரு வீட்டின் உள்ளே நுழைந்ததும்…, ‘‘ ஏம்பா… முகம் வாடி இருக்குது ? நிறைய வேலையா ? சாப்பிட்டியா….
   அவள் கேள்விகள் தொடர்ந்து கொண்டே போனது.
   குமரனுக்குப் புரிந்தது. இவளும் அம்மா தான் என்பது.


அருணா செல்வம் 
19.02.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக