புதன், 2 ஜனவரி, 2019

நியம உவமை! - 9




பாடலில் ஒரு வரையறைப் படுத்தி இந்தப் பொருளுக்கு இந்தப் பொருள் தான் ஒப்பானது என்று தேற்றேகாரம் கொடுத்துத் துணிந்து சொல்வது நியம உவமைஎனப்படும். (தேற்றேகாரம் என்பதுஇதுவேஎன்பதில் உள்ள ஏகார அழுத்தமாகும்)

உ. ம்
அன்னை உதிர அமுதமே வான்மழை!
இன்னொன்றை ஒப்பிட இல்லையே! – நன்னிலத்தின்
பொன்னே மணிநெல்! புகழ்ந்திட வேறெது?
என்றே உரைப்பேன் எடுத்து!

பொருள்அன்னை மழலைக்குத் தரும் உதிரம் போன்ற பாலைப் போன்றதே வான் மழை. அதற்கு ஒப்பாக வேறு எதுவும் இல்லை. நன்னிலத்தில் விளைகின்ற மணியைப் போன்ற நெல்லானது மின்னும் பொன்னுக்கு ஒப்பானது. இதைவிட மழைக்கும் பொன்னிற்கும் ஒப்பிட்டுப் புகழ்ந்திட வேறு எது ? என்று உரைப்பேன்.
பாடலில் அன்னையின் பாலே மழை என்றும், நெற்பயிரே பொன்னென்றும் துணிந்து உரைத்ததினால் இது நியம உவமை ஆகியது.
அமுதமே, பொன்னே என்று தேற்றேகாரம் கொடுத்து வந்துள்ளது.
.
பாவலர் அருணா செல்வம்
02.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக