திங்கள், 5 நவம்பர், 2012

என்னைத் தொட்டக் 'கல்'

          இராமன் தொட்டதில் 
           என்னைத் தொட்டது 'கல்'
 
         
              

அகலிகை கல்லாய்க் கிடந்தாள்; ஆனால்
சுகத்தை இழந்து சோகம் தாங்கி
அகத்தில் இருளை அடைந்தது யாரெனத்
தகவல் அறிய தாள்களைத் திருப்பினேன்.            
கவிதைக் கடலாம் கம்பனின் கருத்தோ
புவியில் புதைந்த பொன்துகள் போன்றதே!!
கம்பனின் சூத்திரம் கதையில் இருக்கும்
தெம்புடன் அதைத்தான் தேடிப் பார்த்தால்
உண்மை அங்கே ஒளிந்தே இருக்கும்
கண்டு பிடித்தால் கண்டதே சூத்திரம்!!

ஆண்கள் என்றால் அவைமுன் உரைப்பர்!
பெண்ணாய் இருப்பதால் பேசவும் கூசுதே!
தண்டனை பெற்றது தலைவனா? தாரமா?
உண்மையை உரைக்க உருவம் சாபமா?
இருப்பினும் என்னால் இயன்றதை உரைப்பேன்!
இருட்டினில் கண்கள் குருடு இல்லையே!
துன்பம் வருவதைத் தூயவள் அறியாள்.
கண்பல சாபம் காமுகன் பெறவே
பொய்யாய்க் கூவிடப் புலராப் பொழுதில்
பொய்யறி யாமல் போனார் மாமுனி!

கணவன் உருவில் கட்டி அணைத்தவன்
கணவனே என்ற கருத்துடன் கலந்தாள்!
இடையினில் தெரிந்தது இந்திரன் என்று!               
தடையாய் நிறுத்தித் தடுத்திட முடியுமா?
நஞ்சினை உண்டதை நங்கை உணர்ந்ததும்
வஞ்சியின் நெஞ்சம் வாதமா புரியும்?
முடிந்து போனது மோகன ராகம்!
படிந்து போனதோ பாழும் தேகம்!
காமம் என்பது கனிந்தே அணைவது!
பாமரன் அறிவான். படிக்கவும் வேண்டுமோ?

பிரசவ நேரம் பிறக்கும் தருணம்
அரசக் கட்டளை அடக்கிட வேண்டுமாம்!
முரசு கொட்டியே முயற்சித் தாலும்
அரசனுக் காக அடக்கிட முடியுமா?
முடியும் என்றால் முனிவரின் பத்தினி
கடிந்து சாபம் கணத்தினில் தருவாள்!
அந்த நிலைதான் அகலிகை நிலையும்
எந்த மனிதரும் எளிதினில் உணருவர்!

தாரம் செய்தது தவறிய நிலைதான்
காரணம் புரிந்த கௌதம முனிவர்
பொல்லா உலகம் பொதுமை பாராது
சொல்லால் கணைபோல் சொறுகிச் சாய்க்கும்!
கல்லா மனிதன் கலங்குதல் போலே
இல்லால் இதயம் இருக்க லாகுமோ!
விலைமகள் மனம்போல் கல்லாய் விதித்தால்
கலைமகன் 'கழல்துகல் கதுவ" எழுவாள்.

என்றே நினைத்தே ஏவினார் சாபம்!               
அன்றே கல்லாய் அகலிகை ஆனாள்!
அவராய்ச் சபிக்கவில் லையெனில் அதுமுதல்
சவம்போல் இருப்பாள்! சத்தியம் அதுதான்!
தவம்பல செய்தும் தண்டனைக் குரியவன்
தவறிய தானே என்பதை உணர்ந்ததும்
இல்லால் இல்லாத இல்லில் இன்பம்
இல்லை என்றே இமயம் சென்றார்!

அரக்கியைப் பெண்னென அறிந்ததும் தயங்கி
இரக்கப் பட்டான் இராமன். இருந்தும்
பெண்ணாய்ப் பிறந்தும் பேய்க்குணம் அறிந்து
மண்ணில் சாய்த்தான். மாமுனி சொல்லத்
தூயவள் அடைந்த துன்பக் கதையைத்
தூயவன் கேட்டுத் துயரம் கொண்டான்!
மாறு வடிவம் மனிதன் பூண்டால்
மாறும் உலகினில் மகளீர் அனைவரும்
கற்பினைத் தொலைத்துக் கல்லாய்க் கிடப்பர்.
கற்பனை செய்தால் கவலைதான் மிஞ்சும்!

விளக்கம் வேண்டாம். விரும்பியே இந்திரன்                
விளக்கினில் விழுந்தான் விட்டில் பூச்சியாய்!  
தயங்கிய பெண்ணைத் தாயாய் நினைத்தே                 
உயர்ந்தவள் இவளென உண்மையை உரைத்தான்!
இருவரின் தவற்றை இயம்பினும் பெண்ணின்
அருமையை உணர்ந்த அயோத்தி இராமன்
தொட்டதில் என்னைத் தொட்டது - தொட்டதும்
சட்டெனச் சாபம் விலகிய கல்லே!!



(20.11.2009 - கம்பன் விழாவில் வாசித்த அகவல்)      
அருணா செல்வம்.

23 கருத்துகள்:

  1. பெண் ”பெண்ணாய்” நடந்து கொண்டால் சிறிதும் தீங்கு நேராதுன்னு உங்க கவிதையை படிச்சா தோணுது சகோ

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அப்படிங்களா... உங்களுக்குக் கேட்டதா...?

      நன்றி முத்தரசு மனசாட்சி.

      நீக்கு
  3. அருமையான விளக்கம்! சிறப்பான பார்வை!

    பதிலளிநீக்கு
  4. விளக்கம் வேண்டாம். விரும்பியே இந்திரன்
    விளக்கினில் விழுந்தான் விட்டில் பூச்சியாய்!
    superb

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பி படித்து நான்கு முறை கருத்திட்டு
      இருக்கிறீர்கள்....!!!!

      மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமை அருமை. சரளமாய் வருகிறது உங்களுக்கு கவிதை. அகலிகை கதையை உங்கள் பார்வையில் நல்ல கவிதை ஆக்கி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  6. வணக்கம் நண்பரே
    நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்தேன்
    அழகிய மொழி நடையில்
    அகலிகைக்கு ஒரு காவியக் கவிதையைக் கண்டேன்
    அவள் நிலையில் இருந்து கூறப்பட நியாயங்கள்
    சற்றே சிந்திக்கவும் வைக்கின்றன....
    அருமை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே.
      அகலிகையின் பக்க நியாயத்தைத் தான் கூறினேன்.

      தங்களின் வருகைக்கும் புரிதலான கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. நல்ல வரிகள்... அருமை...

    வாழ்த்துக்கள்...
    tm5

    பதிலளிநீக்கு
  8. வந்திட்டேன் வந்திட்டேன்.சுகம்தானே அருணா !

    பெண்களுக்கே உண்டான நீதி சொல்லும் கவிதை.கனக்க கவிதைகள் தவறியிருக்கு.வாசிக்க நேரம் ஒதுக்கிறேன்.

    அன்பான தீபத் திருநாள் வாழ்த்துகள் அருணா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க... வாங்க... என் இனிய தோழி ஹேமா...

      வணக்கம். நலமே விளையட்டும்.

      நேரம் கிடைக்கும் பொழுது வாசியுங்கள். தங்களின் வருகை எனக்கு மகிழ்வுட்டுகிறது். மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
  10. உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு