வெள்ளி, 4 மே, 2012

நேற்று நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி..




தோழர்களே தோழியர்களே...
   நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. நீங்களும் படித்து மகிழுங்கள்.


   நேற்று நான் விரும்பும் பெண்ணும் அவளுடன் இன்னொரு பெண்ணும் ஒரு குட்டிப் பையனும் (வயது ஐந்து இருக்கும்) கே. எப். ஸி க்குள் நுழைந்தார்கள்.
   அவர்களைப் பார்த்ததும் நானும் உள்ளே போனேன். அவர்கள் சாப்பிட ஒர் இடம் பார்த்து அமர்ந்ததும் அந்தப் பையன் விளையாட போனான். நானும் அவனுடன் கொஞ்ச நேரம் விளையாடி மனத்தில் இடம் பிடித்துவிட்டு (சினிமா கதாநாயகன் போல் அந்தப் பையனின் கெச்சப் வாயெல்லாம் துடைத்துவிட்டு...உவ்வே...)
   அந்தப் பெண்ணைக் காட்டி “அவள் பெயர் என்ன?“ என்று கேட்டேன். (அத்தை மகளிடம் பலமுறை கேட்டும் அவள் சொல்லவில்லை. கேட்டால் முறைக்கிறாள்) அந்தப் பையனும் திரும்பி அவளைப் பார்த்தவிட்டு “பேயம்மாஎன்றான். எனக்கோ அதிர்ச்சி!!!
   குழந்தைத் தானே... மழலையில் சொல்கிறான் என்று நினைத்து இன்னும் சற்று நேரம் விளையாடி விட்டு திரும்பவும் கேட்டேன். அவன் “அதான் சொன்னேனே.. பேயம்மா என்று என்றான் கடுப்பாக.
பேயம்மாவா...!!! என்னால் ஜிரணிக்க முடியவில்லை.
    சற்று நேரத்தில் அந்த இன்னொரு பெண் வந்தாள்... “ராஜி... பேயம்மா கூப்பிடுகிறாள்.. வா போகலாம்“ என்று அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.
   
    “சே.. என்ன பேரு இது...?“
    நான் யோசித்தக் கொண்டே கவலையுடன் வீட்டிற்கு வந்தேன். அத்தை மகள் இருந்தாள். நான் அவளிடம் “உன் தோழிக்கு யார் பேர் வைச்சது... இப்படி கூட பேர் வைப்பாங்களா... நீயெல்லாம் எப்படி கூப்பிடுவே...“ என்றேன் சற்று கோபமாக.
   அவள் என்னை ஒரு மாதிரி முறைத்துவிட்டு... “ஆமா.. அதுங்க சரியான பட்டிக்காடு. அவ இங்கேயே பொறந்து வளந்தவ. அவளுக்குப் போய் இந்த பேரு...“ என்றாள் சலிப்புடன்.
   அவள் கொஞ்சம் சமாதானமாகப் பேசியதால் அவள் அருகில் போய் “ஏம்மா... நீயெல்லாம் எப்படி அவ பேரை சுறுக்கிக் கூப்பிடுவே...?“ என்று கேட்டேன். ஒரு முறை முறைத்தாள். “உங்களுக்கு அவ பேச்சை பேசலன்னா துர்க்கம் வராதா... எந்த நேரமும் அவ நெனப்புதான்... போங்க... வீணா எங்கிட்ட திட்டு வாங்காதீங்க...“ என்று கத்தியதால் நான் பேசாமல் இருந்துவிட்டேன்.

     இரவு முழுவதும் துர்க்கமில்லை!
     அந்தப் பெயரையே யோசித்துக் கொண்டே இருந்தேன்.
     “பேயம்மா“  இப்படி கூடப் பெயர் வைப்பார்களா... ஒரு சமயம் பழைய கால புதத்தாழ்வார் பேயாழ்வார் மாதிரி இப்படி வைப்பது உண்டா... ஏன் நம்ம வைரமுத்து எழுதிய நாவலில் கூட “பேயத் தேவர் “ என்று பெயர் வருமே... அப்போ இப்படி வைப்பது வழக்கம் தான் போல என்று நினைத்து பெருமூச்சி விட்டுக்கொண்டேன்.
    இருந்தாலும் இன்று தான் அவள் பெயர் தெரிந்தது. சொல்லிப்பார்த்தேன்.
    “பேயம்மா...“
    “பேயம்மா... 
    என்னம்மோ மனத்தை நசுக்கியது.
    சரி அவளை விரும்பியாகி விட்டது... அவள் பெயரையும் விரும்பித்தான் ஆகவேண்டும் என்று முடிவிற்கு வந்து அவள் பெயரை வைத்து நேரிசை வெண்பாவில் ஒரு பாடல் எழுதினேன்.

பேயம்மா என்ற பெயரறிந்தும் பாடுகிறேன்!
தாயம்மா நீயெனக்கு! தாலாட்டும் – சேயம்மா!
நோயம்மா நீநகர்ந்தால்! நுண்தமிழ் பா..சிறக்க
வா..யம்மா என்னில் வளர்ந்து!

எழுதிவிட்டு படுத்துவிட்டேன். ஆனால் துர்ங்கவே இல்லை.

    காலையில் அத்தை மகள் வந்தாள். என் முகத்தைப் பார்த்ததும் “என்ன மாமா.. உடம்பு சரியில்லையா....என்று சொல்லிக் கொண்டே நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். “என்ன உடம்புக்கு...?என்றாள்.
    “ நான் நல்லா தான் இருக்கேன்... உன் தோழி யோட பேரைக் கேட்டதிலிருந்து அதே யோசனை... இவ்வளவு அழகான பொண்ணுக்கு இப்படி ஒரு பெயர் வைப்பார்களா...?என்றேன்.
    அவள் முகம் மாறியது. அவளை அழகின்னு சொன்னேன் இல்லையா...?
    “காலையிலேயே தொடங்கிட்டீங்களா...? உங்களுக்கு வேற வேலையே இல்லையா... “ சொல்லிக்கொண்டே மேசையில் இருந்த பாட்டைப் படித்தாள். நான் சட்டென்று பிடுங்கிக் கொண்டேன். அது அவள் மட்டும் தான் படிக்க வேண்டும்... இல்லையா....?
     இருந்தாலும் முதல் வரியைப் படித்துவிட்டிருந்தாள். “என்ன பாட்டு இது... பேயம்மான்னு ஒரு பேரா...?“ என்றாள்.
     எனக்குச் சட்டென்று ஒரு சந்தோச உணர்வு...
     “அப்படின்னா அவ பேர் பேயம்மா இல்லையா..என்றேன் கொஞ்சம் அசடுவழிய...
      “பேயம்மாவா....அவள் சிரிக்க ஆரம்பித்தாள்... சிரித்தாள்... சிரித்தாள்... ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
      எனக்குச் சிரிப்பெல்லாம் வரவில்லை. அப்பாடா.. இந்தப் பெயர் இல்லையே... அதுவே போதும் என்றிருந்தது.
      சிரிப்பினுடே சொன்னாள். அந்தக் குட்டி பையன் அவளின் தங்கைமுறை வேண்டிய பெண்ணின் பையனாம். அவளைப் “பெரியம்மா“ன்னு கூப்பிட வராமல் “பேயம்மா“ன்னு கூப்பிடுவானாம். இவளுக்குக் கொஞ்சம் (?????) பிடிவாத குணம் இருப்பதால் மற்றவர்களும் அவளைக் கலாட்டா பண்ண அந்தப் பையனைப் போலவே பேயம்மா என்பார்களாம்.
    இதைக் கேட்டதும் எனக்கு அப்பாடா.. என்றிருந்தது. இருந்தாலும் இவளிடம் அவள் பெயரைச் சிரிப்பினுடே கேட்டும் கிடைக்கவில்லை. அழுத்தக்காரி.
    சற்று கோபம் வந்தாலும் அவளுக்கு அந்தப் பெயர் இல்லை என்பதில் படுசந்தோசம் எனக்கு. உங்களுக்கு....?

17 கருத்துகள்:

  1. Ha... Ha... நல்ல டமாசு. பெரியம்மா பேயம்மா ஆயிட்டாங்களா... நான் கூட சின்ன வயசுல சரியா உச்சரிக்காம எங்கத்தைய கலவாணின்னு கூப்ட்டு அழவிட்ருக்கேன்லோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழலை மொழி எவ்வளவு தவறாகப் பேசினாலும் அழகு தாங்க நிரஞ்சனா...

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க நிரஞ்சனா.

      நீக்கு
  2. சகோ பெயரில் என்ன இருக்கிறது குணத்தைப் பாருங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்குமாம்.
      புரியுதுங்க சசிகலா.
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க சசிகலா.

      நீக்கு
  3. படிக்க ஆரம்பித்ததுமே புரிந்து விட்டது. என் உறவுக்காரப் பையன் என்னை பேயப்பா என்று தான் சிறுவயதில் கூப்பிடுவான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ... ???

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க சிவகுமாரன்.

      நீக்கு
  4. பெரியம்மா பேயம்மா ஆனது நல்ல நகைச்சுவைதான். சரி, அப்படியே பேயம்மாவாய் இருந்தால்தான் என்ன? ஊரைக் கேட்டு, பேரைக்கேட்டா காதல் வருகிறது. சசி சொல்வது போல் குணம்தானே பெரியது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க கீதமஞ்சரி அக்கா....
      இந்தப் பெயரே இருந்திருந்தால்....
      நான் அவ பெயரைச் சுறுக்கிக் கூப்பிடனும்ன்னா எப்படி கூப்பிடுவது...?
      ஆசையாக பெயரைச் சொல்லி கொஞ்ச முடியுமா....?
      கடவுளே... அந்தப் பெயர் இல்லையாம் அது போதும்.
      அப்படி இருந்திருந்தால் கோபத்துல திட்டினாக்கூட மாட்டிக்க மாட்டேன் இல்லைங்க...

      தங்களின் வருகைக்கும் அருமையான ஆலோசனைக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  5. பேயம்மா ன்ற பெயர் உள்ளவர்கள் சாந்தமா(அமைதி) இருக்கலாம் .அதுபோல சாந்தம்மா என்ற பெயர் உள்ளவர்கள் பேயம்மாவாக இருப்பர்கள்.


    ஆனால் கல்யாணம் ஆன பல ஆண்டுகள் கழித்து எல்லா அம்மாக்களும் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பேயம்மாவாக மாறிவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவமாங்க...?
      ஏங்க இந்தச் சின்னப் புள்ளைய பயமுறுத்துறீங்க...

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  6. வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
    vanakkam plz add your post in http://www.valaiyakam.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வலைஞன் அவர்களே!
      அழைப்பிர்க்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க அருள்.

      நீக்கு
  8. எங்க வீட்ல தங்கச்சி ‘ஆச்சி’யா மாறினமாதிரி பெரியம்மா ‘பேயம்மா’வா மாறிட்டாங்களா !

    பதிலளிநீக்கு