சனி, 12 மார்ச், 2016

நினைவுகள்!!






இன்று வாழும் வாழ்க்கையிலே
       இனிய வைகள் இருந்தாலும்
அன்று வாழ்ந்த வாழ்வுதனின்
       அழிக்க முடியா நினைவுகளே!
நன்று, அல்ல என்றாலும்
       நாமே விலக்க நினைத்தாலும்
என்றும் இதயம் உள்புகுந்தே
       இயங்க வைக்கும் நினைவுகளே!

பிள்ளை நெஞ்சம் புதுவகையைப்
       பிறித்து அறிந்த பொழுதினையும்
உள்ளம் உவகை கொண்டவுடன்
       கொள்ளைச் சிரிப்பாய்ச் சிரித்ததையும்
கள்ளம் இல்லா அவ்வயதில்
       காதல் வந்த பொழுதினையும்
தள்ளி விடவே முடியாத
       தழைத்து வளர்ந்த நினைவுகளே!

சொல்லிக் கொடுத்த ஆசானும்
       சொக்க வைத்தச் செந்தமிழும்
வல்லப் புகழின் முதலடியாய்
       வாய்க்கப் படைத்த நற்கதையும்
மெல்ல நினைக்க முகஞ்சிவக்கும்
       மேனி தொட்ட அந்நாளும்
நல்ல வையாய் முன்வந்து
       நடன மாடும் நினைவுகளே!

நல்லார் என்று நினைத்தவரோ
       நயமாய்த் துரோகம் செய்ததையும்
கல்லாய் இதயம் கொண்டவர்கள்
       கருணை அற்று நடந்ததையும்
பொல்லா பழியைப் பிறர்சுமக்க
       பொய்மேல் பொய்யாய்ச் சொன்னதையும்
நில்லா காலச் சுவடுகளாய்
       நெஞ்சில் பதிந்த நினைவுகளே!

மண்ணில் பிறந்த மாந்தர்க்கு
       மறத்தல் என்ற ஒன்றிருந்தும்
எண்ணிப் பார்க்க எழுந்துவரும்
       எண்ணில் அடங்கா நினைவுகளே!
உண்மை மட்டும் அதில்காட்டி
       உலகிற் கதனைக் காட்டாமல்
விண்ணில் மறையும் நாள்வரையில்
      கண்ணுள் மின்னும் நினைவுகளே!


அருணா செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக