வெள்ளி, 10 அக்டோபர், 2014

வண்ண மீன்கள்!!



கண்ணைக் கவரும் தொட்டிக்குள்
   கருத்தைக் கவரும் வண்ணமீன்கள்!
பொன்னை நிகர்த்த பளபளப்பு
   பூவில் இருக்கும் நிறக்கலப்பு!
மண்ணை மறந்து நான்பார்த்தேன்
   மருண்ட மீனோ எனைப்பார்க்க
என்னை எழுத தூண்டியதே
   என்னில் இருந்த எண்ணமீன்கள்!

காலம் சுற்றும் வலைதன்னில்
   கவலை கயிறு மனமிறுக்க
ஓலம் இடவோ முடியாமல்
   ஓய்ந்தோ அமரக் கூடாமல்
மூலம் ஏதென்(று) அறியாமல்
   மௌனம் மட்டும் மொழியென்றே
ஞாலம் தன்னில் வாழ்கின்ற
   நங்கை நிலையில் அதைக்கண்டேன்!

அன்பு மொழியில் தேனுற்றி
   ஆசை வார்த்தை பலபேசி
கன்னம் சிவக்கும் பெண்ணிடத்தில்
   காதல் விதையை விதைத்திடுவார்!
இன்பம் எதுவோ அதுமுடிய
   இவளோ இனியேன்? சென்றுவிட
மின்னும் கண்ணீர் தண்ணீரில்
   மீறி தெரியா நிலைக்கண்டேன்!

கள்ளம் கொண்ட காளையரோ
   கவலை யின்றிப் பிறபெண்ணைத்
தெள்ளத் தெளிந்த மொழிபேசித்
    தின்று முடிக்க காத்திருப்பான்!
உள்ளம் திறந்து கேட்டாலோ
    உனக்கேன் பொறாமை எனக்கேட்பான்!
பள்ளம் தன்னில் விழுந்ததினால்
   பாவம் மீன்போல் பெண்வாழ்வாள்!

கண்கள் போன்ற மீன்களெல்லாம்
   கவிதை களாகத் தெரிகிறது!
பெண்ணின் உள்ளே பலகவிதை
   பின்னப் படாமல் இருக்கிறது!
விண்ணின் அளவு கற்பனைகள்
    வெளியில் கொட்டத் துடிக்கிறது!
வண்ண மீன்கள் சிறையிருக்க
   எண்ண மீன்கள் முடிக்கிறது!!


அருணா செல்வம்.


12 கருத்துகள்:

  1. பெண்ணின் மனதை கண்ணாடி போல காட்டும் அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  2. பெண்ணின் உள்ளே பலகவிதை
    பின்னப் படாமல் இருக்கிறது!
    விண்ணின் அளவு கற்பனைகள்
    வெளியில் கொட்டத் துடிக்கிறது!
    வண்ண மீன்கள் சிறையிருக்க
    எண்ண மீன்கள் முடிக்கிறது!!//

    அருமையான, உண்மையான உணர்வுகள் பின்னிப் பிணைந்த பெண்ணின் மனதை பிம்பமாக்கியக் கவிதை சகோதரி! மிகவும் ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
  3. உள்ளே முள் இருந்தும் மீன் இன்னொரு முள்ளில் சிக்கிக் கொள்வது பரிதாபம்தான் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  4. அட! மீன் கவிதையில் ஒரு மானின் இரு விழிகள்!!!
    கவிதையும், அதற்கு சேர்த்த படமும் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தோழி!

    எண்ணங்கள் வண்ண எழில்மிகு மீண்களாகக்
    கண்களூடே சேர்ந்த கவி!

    அற்புதமான கவிப் பொருள்!
    விருத்தம் மனதைக் கவர்ந்தது!..
    நல் வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் !

    மிகவும் ரசித்துப் படிக்க வைத்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் தோழி !த .ம .7

    பதிலளிநீக்கு
  7. கள்ளம் கொண்ட காளையரோ
    கவலை யின்றிப் பிறபெண்ணைத்
    தெள்ளத் தெளிந்த மொழிபேசித்
    தின்று முடிக்க காத்திருப்பான்!


    வெள்ளம் வருமுன் தடுப்பதுவே
    விவேகம்! முடிவும் எடுப்பதுவே
    உள்ளம் தன்னில் கொள்வீரே
    உணரப் பலரும் சொன்னீரே

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரி.!

    அருமையான கவிதை சகோதரி.! மிகவும் நன்றாகவிருந்தது.! பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு